அசல் இந்துத்துவமும் அசட்டு இந்துத்துவமும்
குஜராத் தேர்தல் முடிவுகள் மதவாதச் சிந்தனைக்கு எதிரானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது. அந்த நம்பிக்கை என்பது பல சிக்கல்களையும் கொண்டுள்ளது. இந்துத்துவ எதிர்ப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தச் சிக்கல்களைப் பூசிமொழுகி மறைப்பது அரசியல்வாதிகளின் பணி. சிக்கல்களை ஒளிவுமறைவின்றிப் பிரச்சனைப்படுத்துவதே நமது நோக்கம். காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பொருளாதாரக் கொள்கையில் வேறுபாடு இல்லை. பணமதிப்பு நீக்கம் தவிர இன்று பாஜக செய்வது காங்கிரசின் நீட்சி. நாளை காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் பாஜகவின் இன்றைய பொருளாதார முயற்சிகளையே முன்னெடுக்கும். காங்கிரசால் குஜராத்தில் இந்துத்துவத்தை நேரடியாகக் களத்தில் சந்திக்க முடியவில்லை. மோடி இன்று எடுத்துவிடும் அடவுகள் பலவும் இந்திரா காந்தியிடமும் கற்றவை. தேர்தல் காலத்தில் கட்சிக்கு நெருக்கடி தோன்றுகையில் அந்நிய அரசைப் பயங்காட்டுவது, இந்து உணர்வைத் தூண்டிவிடுவது எல்லாம் இந்திராவின் நடைமுறைகள். அவரது மகன்கள் சஞ்சய் காந்தி அவசரநிலை காலத்தில் தனது சிறுபான்மை எதிர்ப்பு உணர்வுகளைக் கடுமையாக வெளிப்படுத்தியவர்.(மேனகாவும் வருண் காந்தியும் பாஜகவில் இருப்பது சஞ்சயின் பார்வைத் தொடர்ச்சிதான்) ராஜீவ் காந்தி ராமஜென்ம பூமியிலும் ஷா பானோ விவகாரத்திலும் விளையாடிய மதவாத விளையாட்டுகள் ஒரு வரலாறு. பெரும் மரம் விழுந்த ரத்தக்கறை படிந்த வரலாறும் மறக்க முடியாதது. இருப்பினும் நேற்றுவரை காங்கிரஸ் மதச்சார்பின்மைக்குச் சாதகமான அடையாள அரசியலில் ஈடுபட்டுவந்தது.
ராகுல் காந்தி இந்த குஜராத் தேர்தலில் அதையும் கைவிட்டார். குஜராத்தில் தன்னை இந்துவாக முன்னிறுத்தியே களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோயில் கோயிலாகச் சென்று நாமங்கள் அணிந்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் இந்துத்துவத்தின் வரையறையை ஏற்றுக்கொண்டு, அதன் எல்லைகளுக்கு உட்பட்டே கதையாடினார். முஸ்லிம்கள் பிரச்சனைகள் பற்றி எங்கும் வாய்திறக்கவில்லை. குஜராத் கலவரம் பற்றிக் குறிப்பிடவே இல்லை. இந்துத்துவ அரசியலின் குறியீடுகளில் ஒன்றான சோம்நாத் கோயிலுக்குச் சென்று தொழுதார். அங்கு மோடியால் அணியமுடியாத பூணூலை ராகுல் அணிந்ததை காங்கிரஸ் உலகுக்கு அறிவித்தது.
தேர்தல் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள காங்கிரஸ் மோசமான சமரசங்களில் ஈடுபட்டது. பெரும்பான்மை ஆதிக்கச் சாதியான படேல்களின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை ஆதரித்தது. அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதாக சாத்தியமற்ற வாக்குறுதியை வழங்கியது. இந்நிலையில் குறைந்த பெரும்பான்மையோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் ஆறு மாதத்தில் அது சீரழிந்திருக்கும். 2019 இல் மோடியை எதிர்கொள்ளும் கனவுத்திட்டம் 2018ஆம் ஆண்டிலேயே காலாவதி ஆகியிருக்கும்.
குஜராத்தில் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கையை முன்னெடுக்க காங்கிரஸ் தனது கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை மேற்கொண்டு புதிய சாத்தியங்களோடு மக்களை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அணுக வேண்டும். குடும்பக் கட்சிகளின் காலம் முடிந்தது. ராகுல் தன்னை தலைமைப் பொறுப்பிலிருந்து விலக்கிக் கொண்டு கூட்டுத்தலைமைக்குத் தயாராக வேண்டும். இந்திராவுக்கு முந்திய காங்கிரசின் கூட்டுத் தலைமைப் பண்பை அதிகாரப்பகிர்வு அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.
நமக்குத் தேவை அசலான மாற்று அரசியல். காங்கிரசின் அசட்டு இந்துத்துவ அணுகுமுறை அசல் இந்துத்துவமே மேல் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்துவிடக்கூடும்.