சவக்குழி
பிரேத பரிசோதனை அறையில் அந்தப் பிணம் கிடந்தது. துர்நாற்றம் நூறு அடி தூரம் தள்ளியிருந்தவர்களையும் விரட்டி அடித்தது. இது பிணவாடை அல்ல. நாள் கழிந்த பிணம்தான் நாறும். இப்போதுதான் சில நிமிடங்களுக்கு முன் வந்துசேர்ந்த பிணம் இது. பிணத்தின் மீதிருந்து வந்த நாற்றம் மனிதக் கழிவில் இருந்துவந்த வீச்சம். பிணமான பிறகு மனிதனே கழிவுதானே! இந்த நாற்றம் அந்த வகையில்லை. அரசாங்க இன்ஜினீயர்கள் இதை திடக்கழிவு என்று எழுதுவார்கள். கொஞ்சம் நாசூக்கானவர்கள் மனித மலத்தின் வாடை எனச் சொல்வார்கள். மலக்குழிக்குள் இறங்குவோருக்கு இது பீ நாத்தம். ஒரேயொரு காக்கிநிற அரைக்கால் சட்டை, இடுப்பில் இற்றுப்போயிருந்த கறுப்பு அரைஞாண் கயிறு, அதன் ஓரிடத்தில் நெளிந்துகிடந்த ஈயத் தாயத்து தவிர வேறெதுவும் அணியாத வெற்றுடம்பு. தோல் இறுக்கமாகி ஒட்டியிருந்த எலும்பு எளிதாக வெளியே வந்துவிடும் மெலிந்த உடலில் அங்கங்கே மஞ்சளும் கறுப்புமாக மனிதக் கழிவும் மற