உச்சம் இனியும் உச்சமல்ல
பலவீனமான நீதித்துறை என்பது அரசமைப்பு ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
‘வாளோ பணமோ’ தனது கைகளில் இல்லாத நிலையில் நீதித்துறையானது எந்தப் பிரச்னையிலும் அது சிவிலோ குற்றவியலோ, அரசமைப்பு தொடர்பானதோ, எந்தப் பக்கமும் சாராது சுதந்திரமாக நடுநிலையுடன் செயல்படுவதற்கு அது எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்கப்படுவதைச் சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் அது தான் நடந்துகொள்ளும் விதத்தை வலுப்படுத்துவதன் மூலமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. நீதிமன்றத்தின் கண்ணியம் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் போன்ற அதன் அதிகாரங்களிலோ அல்லது அதன் புறவய அலுவலக அலங்காரங்களிலோ இல்லை. மாறாக வெளியிலிருந்து நெருக்கடிகள் வருகிறபோது நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள், நீதித்துறை நிறுவனத்தை எப்படி உயர்த்திப்பிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நீதித்துறையின் இந்த அம்சத்தின் காரணமாகவே அரசு அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விட நீதிபதிகளிடம் அதிகத் தரம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தரத்திலிருந்து வழுவுகிறபோது நீதித்துறை பாதிப்பிற்குள்ளாகிறது.
இந்தியாவின் தலைமை நீதிபதியின், சில நீதிபதிகளின், பார் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரின் செயல்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நேர்மையை அதலபாதளத்திற்கு இட்டுச்சென்றுள்ளன. ஒரே வாரத்தில் நீதித்துறையின் உயர்மட்டங்களில் நிலவும் ஊழல் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது; நீதித்துறையின் ஒழுக்கங்கள் நீதிபதிகளால் மீறப்பட்டுள்ளன; தான் தொடர்புடைய வழக்கில் தானே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற கொள்கை தலைமை நீதிபதியால் கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது; நீதிமன்றத்தில் தங்கள் செயல்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டவர்களை வழக்கறிஞர்கள் அச்சுறுத்தியது, இறுதியாக மொத்த விஷயத்தையும் மௌனமாக்குவது என்ற பெயரில் புலனாய்வு நடந்துகொண்டிருந்தபோதே குறுக்கிடும் விதமாக களங்கத்திற்குரிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். உச்ச நீதிமன்றம் என்ற நிறுவனம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று சொல்வதைத் தவிர இதை வேறெப்படியும் சொல்ல முடியாது.
நவம்பர் 14ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்திரவு சொல்லவரும் கருத்திற்கு மாறாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்துத் தீர்ப்பளித்த வழக்குகளின் பின்னணியில் இந்திய மருத்துவக் கழகத்தின் ஊழல் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைமீது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. மத்திய புலனாய்வுக் கழகத்தின் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒருபக்கச் சார்பான விசாரணை, மோசமான விசாரணை என அவமானகரமான கடந்த காலச் செயல்பாடுகளைக் கொண்ட இந்தப் புலனாய்வுக் கழகம் இந்த விஷயத்தை ஒழுங்காக ஆராயுமா என்பது பொதுமக்களின் நலன் கருதித் தெரிந்தாக வேண்டும். இந்த விசாரணை நீதிபதிகளுக்கு நெருக்குதல் தரவோ களங்கம் ஏற்படுத்தவோ பயன்படுத்தப்படக் கூடிய வாய்ப்பு இருப்பது பற்றி நீதித்துறையின் பதில் சொல்லும் பொறுப்பும் நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம் என்ற அமைப்பும் தொடக்கத்தில் தொடுத்த மனுவை எடுத்துக்காட்டி நீதிமன்ற உத்தரவின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டுமென கோரியிருந்தது.
அதைத் தொடர்ந்து நடந்தது என்னவெனில் பல தவறுகள். சில சிறியவை, சில பெரியவை. இந்தத் தவறுகள் இந்த வழக்கை ஒரு கோரக் காட்சியாக ஆக்கிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தை நிரந்தரமாக, மீட்க முடியாதபடிக்குக் கெடுத்துவிட்டது. காமினி ஜெய்ஸ்வால் சமர்ப்பித்த இரண்டாவது மனு எந்த அளவிற்குக் கேள்விக்குரியதோ, இந்த வழக்கை அரசமைப்பு அமர்விற்கு அனுப்ப நீதிபதி ஜெ. செலாம்ஸ்வர் இட்ட உத்தரவு எந்த அளவிற்கு விவாதத்திற்குரியதோ அவற்றையெல்லாம் தலைமை நீதிபதியின் பிரச்னைக்குரிய செயல்கள் ஒன்றுமில்லாது ஆக்கிவிட்டன. எந்த வழக்கை எந்த நீதிபதியின் அமர்விற்கு அனுப்புவது என்பதை முடிவு செய்யும் தனது அதிகாரத்தை இயற்கையான, மிக அடிப்படையான நீதிக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டுத் தலைமை நீதிபதி பயன்படுத்தியுள்ளார். தலைமை நீதிபதியால் தெரிந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் அமர்வு நவம்பர் 14ஆம் தேதி தந்த உத்தரவில் உச்ச நீதிமன்றமானது தலைமை நீதிபதியின் செயல்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவை எனவும் சட்டப்படியோ நல்லுணர்வுபடியோ எந்த அடிப்படையும் அற்றது எனவும் கூறிவிட்டது. சந்தேகங்களை அகற்றுவதற்குப் பதிலாக தலைமை நீதிபதியின் செயல்கள் மேலும் அதிக சங்கடத்திற்குரிய கேள்விகளை எழுப்பிவிட்டன.
நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மட்டுமல்லாமல் நீதிபதிகளுக்கு மத்தியிலேயும் வழக்கறிஞர்களுக்கு மத்தியிலேயும் ஆழமான பிளவுகள் இருப்பதை இவை காட்டுகின்றன. இந்தப் பிளவுகள் திடீரென ஏற்பட்டவையல்ல, பல காலமாக வளர்ந்து வந்திருப்பவை. தனது அதிகாரத்தை, அதிகாரத்தின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்ட உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதையோ, தங்களது பதில் சொல்லும் கடமையையோ ஏற்கவில்லை என்ற நிலையில் இத்தகைய பிளவுகள், பதற்றங்கள் வெளிப்படவே செய்யும். இது ஆக மோசமான அசிங்கமான நிலையை அடைந்திருக்கிறது. இத்துறை தொடர்பான அனைவரின் மத்தியிலும் ஆழமான நம்பிக்கையின்மை நிலவுகிறது; நீதித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தலைமை நீதிபதிக்கு ‘நற்சான்றிதழ்’ வழங்கப்பட்ட விவகாரத்தில் பார்த்ததைப் போலவே இந்தப் பிரச்னைகளை மூடிமறைக்க காட்டப்படும் அவசரமானது உண்மையான சுயபரிசோதனைக்கு வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. நீதித்துறையில் நிலவும் ஊழல் பற்றிய கிசுகிசுக்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதை நேருக்குநேராக எதிர்கொள்ள நீதித்துறை காட்டும் விருப்பமின்மை, நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டு மர்மமான சூழலில் ராஜினாமா செய்தனர். மேலும் ஒரு நீதிபதி லஞ்சக் குற்றச்சாட்டிற்கு ஆளாகி வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்யப்பட்டிருக்கிறார். அவர்மீது சந்தேகம் இருக்கும் நிலையில், கீழ் நீதிமன்றத்தில் பணிபுரியும் அவரது மகன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த விஷயத்தில் அவரை டெல்லி உயர் நீதிமன்றம் பதவிநீக்கம் செய்திருக்கிறது. ‘ஒரு சில கருப்பு ஆடுகள்’ இருக்கின்றன என்று சொல்லப்படும் நிலையைத் தாண்டி நீதித்துறை நிறுவனமே தோல்வியுற்றுவிட்டது என்ற நிலை உருவாகிவிட்டது. தன்னுள் வேரோடியிருக்கும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நீதித்துறையால் முடியவில்லை அல்லது அதற்கு விருப்பமில்லை என்ற நிலை நிலவுகிறது. மேலும் பதில் சொல்லும் பொறுப்பையும் வெளியிலிருந்து தன் மீது செலுத்தப்படுவதற்கான முயற்சிகளையும் நீதித்துறை தடுக்கிறது.
இந்திய அரசமைப்பு ஜனநாயகத்தின் எதிர்காலம் இருளாக இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. அரசாங்கத்தின் பிற உறுப்புகளின் மரியாதையையோ மக்களின் நம்பிக்கையையோ பெறாத பலவீனமடைந்த நீதித்துறைக்கு ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் காப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையே இருக்க முடியாது. மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளில் நேர்மையான தரகராக இருப்பதற்கும் சரி, தேர்தல் பிரச்னைகளில் நேர்மையான நடுவராக இருப்பதற்கும் சரி அல்லது அரசமைப்பின் கீழ் குடிமை உரிமைகளின் பாதுகாவலனாக இருப்பதற்கும் சரி இந்தியாவின் அரசமைப்பு செயல்படுவதில் நீதித்துறையின் பங்கு மிக அடிப்படையானது. ஊழல், ரகசியம், வேண்டியவர்களுக்குச் சலுகை ஆகியவற்றில் சிக்கியிருக்கும் நீதித்துறையால் இந்தப் பணிகளைத் திறம்பட நிறைவேற்ற முடியாது. இதை விடச் சிறப்பான நீதித்துறையைப் பெறும் தகுதியுடையவர்கள் இந்தியர்கள்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
நவம்பர் 18, 2017