எதிர்ப்பினால் எழும் நீதி
கடந்த மார்ச் மாத இறுதியில் வடஇந்தியாவில் எழுந்த தலித் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் எழுந்த கிளர்ச்சி ஒன்பதுபேரின் உயிரிழப்புகளோடு முடிந்தது. உச்சநீதிமன்றம் மார்ச் 20ஆம் தேதி தெரிவித்த கருத்து ஒன்றே இக்கிளர்ச்சிக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிப் போனது. அதாவது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989) மீது சில திருத்தங்களை நீதிபதிகள் ஏ.கே. கோயஸ், யூ.யூ லலித் அடங்கிய குழு சொல்யிருந்தது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் குற்றம் சாட்டப்படும் அரசு ஊழியர் ஒருவரைக் கைதுசெய்ய அவரை வேலைக்கு எடுத்த அதிகாரியின் ஒப்புதல் வேண்டும்; மற்றவர்கள் கைது செய்யப்பட்டால் மாவட்ட சிறப்புக் காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் வேண்டும்; அதன் காரணங்களை ஆராய்ந்த பின்னர்தான் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் சொன்னார்கள். தங்களுக்கு சட்டரீதியாக அளிக்கப்பட்ட உரிமையை நசுக்கும் முயற்சியாக இதைத் தலித்துகள் பார்த்ததன் விளைவே வடமாநிலங்களில் எழுந்த இக்கிளர்ச்சி.
தலித்துகளைப் பொறுத்தமட்டில் இந்திய சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அரசியல் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட சலுகைகளும் பாதுகாப்பும்தான். அதிலும் கைவைக்கப்படுகிறதோ என்கிற அய்யம் அவர்களுக்கு எழும்போதுதான் அது கிளர்ச்சியாக வெடிக்கிறது. தலித்துகளின் இந்தக் கிளர்ச்சி உடனடியானது இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து இருந்துவரும் நெடிய அதிருப்தியும் கோபமும்தான் இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ரோஹித் வெமுலா தொடங்கி உயர்கல்வி வளாகங்களில் தலித் மாணவர்களின் உயிரிழப்புகள், ஊனா பிரச்சனை என்று இன்று நடந்துவரும் பாஜகவின் அரசியல் பிரச்சினைகளுக்கான எதிர்வினையாகவும் இவை இருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் மராட்டிய தலித்துகளின் போர் நினைவிடமான கோரேகான் களத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனையை ஒட்டி தலித்துகள் போர்க்கோலம் பூண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் படம், நினைவகம், சிலை போன்றவற்றை மோடி அரசு நிறுவிவரும் அதேவேளையில் சமூகத்தின் உள்ளார்ந்த தளத்தில் இருந்துதான் தலித்துகளின் இத்தகைய போராட்டங்கள் மேலெழும்பி வருகின்றன. இது முக்கியமான முரண்பாடொன்றைக் காட்டுகிறது. தலித்துகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை விடுத்து அவர்களைக் குறியீட்டு அரசியல் மூலம் திருப்திபடுத்திவிட முடியும் என்று அரசு திட்டமிடுகிறது. அதன் அழுத்தம் உணரப்பட்டதும் போராட்டங்கள் தாமே வெடிக்கின்றன.
வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மூலம் தவறிழைக்காதவர்கள் கைது செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டே இத்தீர்ப்பைக் கூறுவதாக உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதோடு வன்கொடுமை வழக்குகளுக்கும் முன்ஜாமீனுக்கும் வழிவகுத்திருக்கிறது. இது தலித்துகளுக்குள்ள சட்டரீதியான பாதுகாப்பை நீர்த்துப் போகவைக்கிறது; நீதிமன்றத்தின் அச்சம் மிகையானது. இந்தியாவிலுள்ள எல்லா சட்டபிரிவுகளுமே தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அச்சட்டங்கள் பற்றிய எந்தப் பேச்சும் இங்கு எழுவதில்லை என்பது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மீதான ஒவ்வாமையையே காட்டுகிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கும் முறைப்படி எந்த மாநில அரசுமே நடந்துகொள்வதில்லை. இந்நிலையில் அச்சட்டம் முறைப்படி நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று புகார் எழுவதற்கு மாறாக சில சான்றுகளை வைத்துக்கொண்டு அச்சட்டத்தை மாற்றுவது அல்லது கைவிடுவது என்ற குரல்களுக்கு நீதிமன்றம் செவி சாய்ப்பது போல் அமைந்திருக்கிறது நீதிபதிகளின் இப்போதைய பரிந்துரை.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும், சிறப்புக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆறு மாதங்களுக்கொரு முறை முதலமைச்சர் தலைமையில் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் சட்டத்தில் உள்ளன. ஆனால் அவை நடைபெறுவதே இல்லை. குறிப்பாக அச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பின் தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு காவல் நிலையம்கூட அமைக்கப்படவில்லை. அதேபோல பீகார் போன்ற மாநிலங்களில்கூட மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆணையம் அமைக்கப்படாத மாநிலமாகத் தமிழ்நாடே இருக்கிறது. இது அதிமுக, திமுக ஆகிய இரண்டு ஆட்சிகளுக்குமே பொருந்தும். ஆனால் இந்த எதார்த்தங்கள் எல்லாம் இங்கு விவாதிக்கப்படுவதுமில்லை. நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுவதுமில்லை.
இப்போது நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்காக அது சுட்டிக்காட்டியுள்ள புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. இச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடுவதாலேயே அது அதன் இறுதிநிலை வரை கொண்டு செல்லப்படுகிறது என்று அர்த்தமல்ல. அதற்கிடையில் மிரட்டல், சரிக்கட்டுதல், நீர்த்துப் போகச் செய்தல் போன்றவை நடந்து உரிய தீர்ப்பு வராமலேயே போய்விடுகிறது. இச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் இந்திய அளவில் 25.7 வீதத்தினர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்றமைய ஆவணத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இதுவே உண்மையான நிலைமையைக் காட்டிவிடுகிறது. இந்நிலையில் இவ்வழக்குகளில் முன்ஜாமீனுக்கு வழிவகுத்திருக்கும் நீதிமன்றக் கூற்றால் சட்டம் நீர்த்துப் போகுமே அன்றிச் சரியாகப் பயன்படுத்தபட வழி ஏற்படாது. அதாவது வழக்கு தொடுப்பவர்கள் மிரட்டப்படுவது அதிகரிக்கும். எனவே இன்றைய தேவை இச்சட்டம் பற்றியும் அதைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வும்தான். ஆனால் நீதிமன்றம் அதைவிடுத்துச் சட்டத்தை நீர்த்துப் போகும் வண்ணம் தீர்ப்பு உரைத்திருப்பது சனநாயக அமைப்பின் சரிவைக் காட்டுகிறது.
நீதிமன்றக் கூற்றுக்கு எதிராகத் தலித் மக்களின் கிளர்ச்சி மத்திய அரசைச் செயல்படவைத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்தத் திருத்தத்தை முதலில் நடைமுறைபடுத்தப் போவதாகச் சொன்ன சில மாநில அரசுகள் அதை நிறுத்துவதாக முடிவுசெய்துள்ளன. காங்கிரஸ் கட்சி அதை எதிர்த்து நாடு தழுவிய உண்ணாவிரதம் ஒன்றை நடத்தியது. எப்போதுமே தலித்துகளின் பாதுகாப்பை அவர்களின் போராட்டமே உறுதிப்படுத்தி வந்திருக்கிறது. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளடங்கிய திமுக தலைமையிலான கட்சிகளின் கண்டனக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து அதிமுக தலைமையிலான தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்துச் சீராய்வு மனு செய்ய முடிவுசெய்துள்ளது. கேரள அரசு இதை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இப்போக்கு நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியமைப்பதில் உரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.