‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன். ஓர் ஆட்சியின் தகைமையைக் கணிக்க நான்கு ஆண்டுகள் என்பது, கூடுதல் கால அவகாசம்தான். இருப்பினும், ‘திருந்தலாம் அரசு’ எனும் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் அளவிற்கான இக்கால அவகாசத்தில் மேற் கொள்ளப்படும் சரியான மதிப்பீடு, அரசுமீதான நம்பிக்கை யைக் கேள்விக்குரியதாக்கி, இனியும் சாக்குப்போக்குச் சொல்லி அரசு தப்பிக்க இயலாது என்ற நிஜத்தை உணர்த்தும் துலாக்கோலாக அமையும் என்பதை மறுக்கவியலாது.
ஓர் அரசாங்கம், குடிமக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யாமல் இருந்தாலே பேருதவியாக இருக்கும். இந்தியச் சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர்களைத் திட்டமிட்டே நசுக்கும் வேலையை மட்டுமே பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கிறது. விளிம்பு நிலை மக்களான அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, அடிமைகள்போல் ஆக்கி, சட்டபூர்வமான உரிமைகளைக்கூடப் பறித்து, தம் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நொடியையும் கழிக்கின்ற அவல நிலையில்தான் அவர்களை வைத்திருக்கிறது இந்த அரசு. எம்மை நீங்கள் கைகொடுத்துத் தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை; முதுகில் குத்திவிடாதீர்கள் என்று கெஞ்சுவதைப் போன்றுதான் அவர்களின் வாழ்நாள் இங்கே கழிகிறது. “இருக்கும் சுதந்திரத்தில் கை வைக்காதீர்கள்; அதுபோதும்” என்று, கூட்டம்போட்டு அவர்கள் கதறுகின்ற பரிதாப நிலையை உருவாக்கியதுதான், இந்த அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனை!
இதற்காகவா, எம் முன்னோர் விடுதலைப் போரில் பங்கெடுத்தனர்? வெள்ளையனே வெளியேறு என்று கர்ஜித்தனர்? நாட்டுப் பிரிவினையின்போது, இதுதான் எங்கள் தாய்மண் என்று கூறித் தம் வாழ்வையும் சாவையும் இங்கேயே தீர்மானித்துக்கொண்டனர்?
வெட்டிக் கொல்வது, வன்புணர்ச்சி, ஊடக அராஜகம், சுய மரியாதை ஒழிப்பு, சமூகநீதி மறுப்பு, அரசியல் வெறுப்பு, மொழித் திணிப்பு, அதிகாரப் பறிப்பு ஆகியவற்றைத் தவிர வேறு என்ன வளர்ச்சியைக் கண்டது நாடு?
இறுதியாக, இளைத்தவர்களின் இறை வேண்டல் இதுதான்: சமயச் சார்பற்ற சக்திகள் பலம்பெற வேண்டும்; மத துவேஷம், இன, மொழி வெறி அகல வேண்டும்; அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற வேண்டும்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை -& -14
‘இந்த உலகில் வாழ்வதற்கான நம்பிக்கையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ - தலையங்கத்தின் இந்த வரியைக் கல்வியாளர்கள் அனைவரும் மனத்தில் கொள்ள வேண்டும். ‘100 பேருக்கும் அதிகமானவர்களின் உயிரைக் குடித்தது, கோடிக்கணக்கானவர்களின் பொருளாதார வாழ்வைச்சீரழித்தது என்பது பணமதிப்பு நீக்கத்தின் உள்ளார்ந்த பண்பு.’ சத்தியமான வரிகள் இவை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்த களஆய்வு கலங்கவைத்தது. ஜனநாயக நாட்டில் நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் மக்களைத் தலையில் குறிவைத்துச் சுட்டு வீழ்த்தியதை எவ்வளவு முயன்றும் மறக்க இயலவில்லை. ம.இலெ.தங்கப்பா குறித்த பாவண்ணனின் அஞ்சலிக் கட்டுரை அருமை. உயர்கல்வி மாணவர்களுக்குத் தமிழாசிரியர்கள் தரும் அரவணைப்பு போற்றுதலுக்குரியது. ‘கோயிலுக்குப் போனவன் பாவத்தில் மூழ்கினான் வெளியிலேயே இருந்தவன் தூயனாய் நின்றான்’ கபீரின் வரிகள் நிதர்சனமானவை.
சரவணன்
மதுராந்தகம்.
ஜூலை இதழில் கலாமோகனின் “இடையில்...” கதை நவீன பண்பாட்டு உருவாக்கத்தையும் அதன்வழிப்பட்ட சமூகச் சீரழிவையும் காதுவழிக்காட்சியாய்ச் சித்தரிப்புச் செய்கிறது. இணையக் கண்டுபிடிப்பு உலகத்தை ஒற்றைக் குடைக்கீழ் கொண்டுவந்து ஆசுவாசப்படுத்தும் அதேவேளையில் மனித உணர்ச்சிகளுக்கு வடிகால் தருகிறோம் என்ற பெயரில் பாலியல் வக்ர முகவரிகளைப் பதிவுசெய்து இளைஞர்களை அந்தத் திசைநோக்கித் துல்லியமாய் வழிநடத்துகிறது. எப்பேர்ப்பட்ட வைராக்கியசாலியையும் முன்னேற்றம் சார்ந்த பணிகளிலிருந்து விலக்கித் தன்பக்கம் இழுத்துக்கொள்கின்றது. அதனால் சமூக, வரலாற்றுத் தாக்கங்கள் பிழியப்படாத ஈரத்துணியாய்த் தொளதொளத்துப்போகின்றன.
உலகச்சீரழிவின் இன்னொரு முகத்தைப் படம்பிடிக்கிறது கலைச்செல்வியின் ‘கனவு.’ பிரபஞ்சம், வாழும் உரிமையை எல்லாருக்கும் பொதுமை செய்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் மண்ணாசையும் மதவெறிப்பண்பாட்டாசையும் சொந்த மக்களையே அகதிகளாய் ஆக்குகின்றன. அவர்கள் நிலமெங்கும் நீள்கடல் பரப்பெங்கும் அலைந்து திரிந்து வயிற்றுப்பாட்டுக்காக அல்லாடுகின்றனர். அல்ஜீரிய அரசு, நைஜீரிய அகதிகள் பதின்மூன்றாயிரம்பேரைப் பாலைநிலத்தில் இறக்கிவிட்டுத் தவிக்கவிட்டுள்ளது. பலகோடிப்பேர் வாழ்வதற்கான சமூகநியாயங்கள் அடாவடித்தனமாய் அழிக்கப்படுகின்றன. மனசைப் பிழியும் நல்லபடைப்பு. முன்னணிப் பெண்படைப்பாளிகளை முந்திச்சென்றுகொண்டிருக்கிறார் கலைச்செல்வி.
‘கடல் இரவில் பாடுகிறது’ ஒருவித்தியாசமான படைப்பு. கடலுக்கும் மண்ணுக்குமான உறவைப் பூடகமொழியில் வர்ணிக்கிறது. கடலுக்கும் மனிதனுக்குமான உறவை என்றுகூடச்சொல்லலாம்.
சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் காலச்சுவடுக்குப் பாராட்டுக்கள்.
தேனி சீருடையான்
தேனி
பாவண்ணனின் கட்டுரை, ‘என் ஆசிரியர்; தங்கப்பா’ என்னைப் பெரிதும் மகிழ்வித்தது. ஒரு வானம்பாடியாக வாழ்ந்து மறைந்திட்ட பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஒரு சங்கப் புலவர்போல் சுவடு எதையும் விட்டுச் செல்லவில்லை. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி, ஜித்து கிருஷ்ணமூர்த்தியைப் (ஜே.கே) போற்றியவர் தங்கப்பா. தன்முனைப்பு என்பது அறவே இல்லாதவர் ஜே.கே. “வானத்தில் பறந்து செல்கிறதே பறவை, அது செல்கின்ற வழியில் ஏதேனும் ஓர் அடையாளத்தை விட்டுச் செல்கின்றதா? அதேபோல் மனித வாழ்க்கையும் அமைந்து முடிவுற வேண்டும்” என்பது ஜே.கே.யின் கருத்து.
ஜே.கே.யைப் போல் வாழ்ந்து மறைந்தவர் தங்கப்பா. ‘அவர் மிகச்சிறந்த படைப்பாளி. ஆனால் படைப்பின் வழியாக ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அவர் ஒரு நாளும் முனைந்ததில்லை. அவர் மிகச்சிறந்த மொழியறிவு உள்ளவர். ஆனால், ஒருபோதும் தன் அறிவைப் பிறர்மீது சுமத்தியதில்லை’ என்று பாவண்ணன் குறிப்பிடுவது அப்பட்டமான உண்மை.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் முயற்சியால்தான் சங்க இலக்கியத்திலிருந்து, தங்கப்பா தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த பாடல்கள் பெங்குவின் பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. இந்த அளவுக்கேனும் தமிழறிஞர் தங்கப்பாவைத் தமிழுலகம் அறிந்துகொள்ளுமாறு செய்திட்ட சலபதி தமிழுலகின் நன்றியறிதலுக்கு உரியவராகிறார்.
மிதிவண்டிப் பேராசிரியர் தங்கப்பா ஆழ்ந்த இயற்கை நேயர். எளிமையே இவரது வாழ்வியல். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே. கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள எமது வேப்பந்தோப்புக்குத் தம் துணைவியாருடன் வந்து, தோப்பிலுள்ள எளிய குடிலில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தார். இந்த நாட்களில் தோப்புக்காவலர் குடும்பத்தினர் வழங்கிய எளிய உணவை உட்கொண்டு தம்பதியர் பசியாற்றிக்கொண்டனர். இந்த அத்துவானக் காட்டில், நாட்கள் பலவாக, தங்கப்பாவுக்கு ஏன் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது? இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திட விரும்பியவர் தங்கப்பா என்பதைப் புரிந்துகொள்ளலாம். வேப்ப மரங்களின் குளுமை அவரையும் அவரது துணைவியாரையும் குளிர்வித்தது. தங்கப்பாவின் வேப்பந் தோப்பு வருகையும் ஐந்து நாட்கள் இந்தத் தோப்பில் அவரும் அவருடைய துணைவியாரும் தங்கியிருந்ததையும் எப்போதும் என்றென்றும் நானும் வேப்ப மரங்களும் இணைந்து நினைவுகூர்வோம்.
க.சி. அகமுடைநம்பி
மதுரை -& 625020
என் ஆசிரியர் தங்கப்பா என்ற பாவண்ணனின் அஞ்சலி மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. எவ்வளவு சிறந்த கல்வியாளர்கள், ஆசான்களாக பாவண்ணன் தலைமுறையில் இருந்திருக்கிறார்கள்? நான் அவருக்கு அடுத்த தலைமுறை என நினைக்கிறேன். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த எனக்கும் இரு தமிழாசிரியர்களும் ஒரு வரலாற்றாசிரியரும் கிடைத்தார்கள்.
ஆயினும் வேறுபட்ட பாட அனுபவத்தைத் தாண்டி அவரைப் போல் எனக்குக் கிடைக்கவில்லை. அதனினும் தாழ்வாக என் பிள்ளைகளுக்குக் கல்வி அமைந்திருக்கிறது. ம.இலெ. தங்கப்பாவைப் போன்று இப்போதும் எங்கெங்கோ ஆசிரியர்கள் இருக்கக் கூடும். ஆனால் அவர்களையும் அஞ்சலிக் கட்டுரையில்தான் அறிய முடியுமோ என வலிக்கிறது.
செம்பரிதி
ஒசூர் & 635 109
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்மக்களுக்கு நன்மைசெய்யாமல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கொடுமைகளைச் செய்துவருகிறது. அதனின் உச்சபட்சக் கொடுமை நீட்தேர்வு என்பதாகும். மாநிலங்களைஆள்வதற்கு அதிகாரத்தைப் பெயரளவில் கொடுத்துவிட்டுத் தன்போக்கிற்கு வஞ்சிக்கும் நிலைப் பாட்டை மத்தியஅரசு தொடர்ந்து எடுத்துவருகிறது.
களஆய்வு என்னும் கட்டுரை சிரத்தையான கட்டுரையாக அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களின் சூழல்களையும் காவலர்களின் கொடுஞ்செயல்களையும் விவரித்தவிதம் உண்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. உறவினர்களின் கதறல்களையும் தமிழக அரசின் ஈவிரக்கமற்ற தன்மையையும் பதிவுசெய்திருப்பது கவனத்திற்குரியது.
காலச்சுவடு இதழின் சிறப்பே குறிப்பிட்ட இடைவெளியில் ‘சிறப்புப் பகுதி’ என்பதை வெளியிடுவதாகும். அந்த வகையில் ஜூலை இதழில் தமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்தில் என்ற தலைப்பிலான சிறப்புப்பகுதி பல்வேறு பொருண்மைகளை விளக்கும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு- 600077
நீட் தேவைகளும் கோரிக்கைகளும் பற்றி: கடந்த ஆண்டாவது போராட்டம் இருந்தது, இந்த ஆண்டு எப்படியோ போகட்டும்... சாகட்டும் என்று விட்டுவிட்டது மத்திய அரசும் மாநில அரசும். பன்னிரண்டாவது வரை படித்த 18, 19 வயதுப் பிள்ளைகள் சாவதைப் பார்த்துச் சற்றும் கவலைப்படவில்லை. எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. தமிழகம் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. போராடுகிற கிழவியைத் தேசத்துரோகி என்றால் இது என்ன ஆட்சி? போராட்டம் நடத்தக்கூட வழியில்லாமல் செய்துவிட்டது இப்போதைய அரசு.
“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மனிதம் சுத்தமாகக் காணாமல் போனது. எத்தனை கொலைகள், கட்டிவைத்து அடித்துக் கொல்லுதல்... இப்போது ‘லிஹ்ஸீநீலீவீஸீரீ’ என்றால் இதைத் தமிழ் வார்த்தை என்று சொல்லுமளவிற்குப் படுகொலைகள். பசுவுக்கு, மாட்டுக்கு இருக்கிற பாதுகாப்பு இந்தியாவில் மனிதனுக்கு இல்லவே இல்லை.
தூத்துக்குடி முத்துக்குப் பேர்பெற்ற ஊர் இன்று செத்துக் கிடக்கிறது. என்ன கொடுமைங்க! குறிப்பார்த்து அந்த மஞ்சள் பனியன் போட்ட ஆசாமி சுட்டது எத்தனை பேரை? கைதானவர்கள் எத்தனை பேர்? தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே, தேசத்துரோகிகள்! 99 நாள் போராட்டத்தை அமைதியாக, அழைத்துப் பேசாமல் இருந்த அரசு 100வது நாள் குறிவைத்து சுடுகிறதே. குடிக்கத் தண்ணீர் இல்லை. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. எத்தனை பேருக்கு சுவாசக் கோளாறுகள், புற்றுநோய்கள், அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை. எந்தத் தொழிற்சாலை¬யும் அமைக்கலாம். அது கெடுதல் தந்தால் அதை எடுத்து விடலாம். மனுஷன் முக்கியமா? அலுமினியம், தாமிரம் முக்கியமா?
ஞா. சிவகாமி
போரூர்
சினிமா சிறப்பிதழ் போல் அமைந்துவிட்டதோ என்று பலவாசகர்கள் ஆச்சர்யத்திற்குள்ளாகிவிட்டாலும் அனைத்துக் கட்டுரைகளுமே பல்வேறு கோணங்களில் தமிழ் சினிமாவை நுணுக்கமாக அலசி ஆய்வு செய்திருக்கின்றன.
சினிமா தமிழ்ச் சமூகத்தை எவ்வாறெல்லாம் முழுமையாக ஆட்படுத்தி வசீகரித்துக்கொண்டது என்ற சமூகரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தைப்போன்று சினிமா நாயக, நாயகிகள் மோகமும் வசீகர ஈர்ப்பும் வேறு எப்பகுதியிலும் வியாபித்திடவில்லை. இயல்பான மிகுபுனைவும் மிகை நாட்டமும் படங்களின் கலைத்தன்மையையும் கதையாடலின் பக்குவத்தையும் குறைக்கிறது என்று ஆதங்கப்படும் கட்டுரை ஆசிரியர் அரவிந்தன், இந்த இரண்டும் நமது பொதுச் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்பதையும் சற்று ஆய்ந்திருக்கலாம்.
1950களில் தொடங்கி இன்று வரையிலான தடம் பதித்த பல இயக்குநர்கள், படங்களின் மகத்தான வெற்றிகளையும் அதேசமயம் பாதிப்புக்களை ஏற்படுத்திய பல சறுக்கல்களையும் நயமாக ஆய்வு செய்துள்ளார் உமா வரதராஜன். தமிழ் சினிமாவின் இன்றையப் போக்கும் பல புதிய இளம் படைப்பாளிகளின் புதுப்புதுப் பார்வைகளும் சமூகப் பிரச்சினைகளை அணுகும் யுக்திகளும் தமிழ் சினிமா வரலாற்றில் சிகரம் தொடும் மேலெடுப்பு நகர்வுகள்தான். இருப்பினும், நாயகர்களைச் சர்வ வல்லமைபொருந்திய சர்வரோக நிவாரணமாகப் பார்க்கும் நமது ரசிகர்களின் கலாரசிப்புப் பக்குவங்களை யார் உருவாக்கித்தருவது? சமீபத்தில் வெளிவந்த படத்தில் வரும் வில்லனின் செருப்பைத் தொட்டுக் கதாநாயகன் எடுக்கும் காட்சி இடம் பெற்றுவிட்டதை அந்த உச்ச நடிகரின் ரசிகர்கள் பார்த்ததும் பொறுத்துக்கொள்ள முடியாத கடும்சினம் கொண்டதாக ஒரு பேட்டியில் படிக்க நேர்ந்தது. இத்தகைய தமிழ்ப்பட ரசிகர்களிடம் எப்படி மிகை நாட்டத்தையும் மிகுபுனைவையும் இயக்குநர்கள் தவிர்க்க இயலும்?
இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்துத் திரையங்குகளிலும் விவசாய வளர்ச்சி பற்றிய தொழில்நுட்பங்களைத் தவிர வேறேதும் காட்டக்கூடாது என அரசு சட்டம் போட்டது. அதனால், ஜப்பான் விவசாய வளர்ச்சியில் தன்னிகரற்று உயர்ந்ததாக வரலாறு. நமக்கு இது ஒத்துவருமா? இக்காலச் சூழலில் கதையோ காதலோ இல்லாமல் மனிதவாழ்வின் பாடுகளை உலகச்சமூகத்தின் நெருக்கடிகளைப் படங்களாக எடுக்கப்படைப்பாளிகள் முனைந்து மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள். திரைப்படங்கள் எண்டர்டெய்ன்மெண்டுக்கானதுதான் என்பது ஒரு யுகம். இப்போது ஒரு புதுயுகம் பரிணமித்து வருகிறது. எனவே நாமும் நம்மைச் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘சில அமைப்புகள் தம் அரசியல் தேவைக்குப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. வேறு ஒன்றையும் சாதிக்க முடியவில்லை’ எனும் ஆசிரியரின் கருத்து சிந்திக்க வைக்கிறது. நியாயமான, தன்னெழுச்சிப் போராட்டங்கள்கூட இறுதியில் வலுவிழந்து பலரைப் பழிவாங்கிக்கொண்டிருப்பதை மாற்றியாக வேண்டும். இப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் சில அரசியல் தலைவர்களை மக்கள் உணர்ந்து வருங்காலங்களில் அவர்களுக்குப் புத்தி புகட்ட வேண்டும்.
எம்.பி.பி.எஸ் மட்டுமல்ல ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்ற படிப்புகளும் மருத்துவம் சார்ந்ததே என்று மாணவர்களுக்கு உணர்த்தவும் உரைக்கவும் சமூக செயற்பாட்டாளர்களும் மருத்துவக் கல்வியாளர்களும் முன்வருதல் அவசியம்.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மைக்குத் தலையங்கம் கூறும் மாற்று வழிகள் ஆபத்தானவை; சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்குச் சாவு மணியடிக்க விரும்பும் மத்திய அரசுக்குத் துணை போகும் எடப்பாடி அரசு நீதிமன்ற மெத்தனத்தால் சிறுபான்மை அரசாக இருந்தாலும் காலத்தை ஓட்டிக்கொண்டு வருகிறது.
அரசு எதற்காக இருக்கிறது? தன் மாநில மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க எது தடுக்கிறது? மோடியின் காலடியில் வீழ்ந்து கிடப்பதன்மூலம் ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் போராடுவோரோடு பேசாது; அவர்கள் கூறுவதைக் கேட்காது; பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும்; துப்பாக்கியைத் தூக்கும்; போராடுவோரின் உயிரைப் பறிக்கும் - தலையங்கம் கூறும் இவ்வுண்மைகள் எவருக்கும் தெரியாதவை அன்று. அதற்காகப் போராடாதிருக்க முடியுமா? பகத்சிங், காந்தி ஆகியோர் இத்தகைய நிலையைத்தான் அன்று எதிர்நோக்கியிருந்தனர். அச்சத்தினால் போராட்டங்களைக் கைவிட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
“போராட்ட வழிமுறைகளை மாற்றவோ தொடர்ந்து எடுத்துச் செல்லவோ மக்கள் திரளை இணைக்கவோ வழிகாட்டும் தலைமையும் இல்லை” என்ற தலையங்க வரிகள் அவநம்பிக்கையூட்டுவதற்கென்றே எழுதப்பட்டுள்ளன. அரசப் பயங்கரவாதம் என்பது ஓரளவுக்கு மேல் சகிக்க முடியாததாகிவிடும். ஸ்தல மக்களின் ஆதரவுள்ள எந்தப் போராட்டமும் தோற்காது என்பதற்கு வியட்நாம் போர் சிறந்த சான்றாகும். உலகுக்கே அறவழிப் போராட்டத்தைக் கற்றுத் தந்த காந்தியார் தமிழக மண்ணில்தான் தம் மேலாடையைத் துறந்தார். காரைக்குடி சா. கணேசன் வெள்ளையனின் துப்பாக்கிக்கு நெஞ்சைக்காட்டச் சட்டையை அகற்றியவர் இறுதிவரை சட்டை அணியவில்லை. துப்பாக்கி என்ன செய்துவிடும்?
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626132
எந்தவொரு சினிமா இயக்குநருக்கும் கதையமைப்பிலும் காட்சிப்படுத்துதலிலும் சறுக்கல் ஏற்படுவதென்பது வாடிக்கையானதுதான். சிறந்த இயக்குநர் ஒருவருக்கு அடிப்படையாகத் துணை நிற்கக் கூடியது இலக்கியச் செறிவு கொண்ட சிறந்த திரைக்கதை என்பதைப் பல இயக்குநர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அப்படி இலக்கியச் செறிவூட்டப்பட்ட சிறந்த திரைக்கதை ஒன்று அமைந்தால் அத்திரைக்கதையை இலக்கிய அந்தஸ்தோடும் வழங்குவதற்குரிய தீவிரமான மெனக்கெடல் மிகவும் முக்கியத்துவத்திற்குரியது.
கட்டுரையாளர் அரவிந்தன் குறிப்பிட்டுள்ளதுபோல் “படைப்புத் திறன் என்னும் விபத்து” இலக்கியச் செறிவூட்டப் பெற்ற சிறந்த கதை ஒன்றிற்குக் கவித்துவமான காட்சியமைப்புக்களே சிறப்பம்சத்தை உருவாக்கித் தரும். கதை சிறப்பாக இருந்து காட்சிப்படுத்துதலில் சொதப்பிவிடும் இயக்குநர்கள் யாவரும் படைப்புத் திறனை இழந்தவர்களாகவே இருப்பர். படைப்புத் திறன் ஏன் இழப்புக்குரியதாக விடுகிறது? கேள்விக்குப் பதில்தான் என்ன? கலைநயத்தோடு கூடிய காட்சியமைப்புக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் ஆழமான வாசிப்பை வளர்த்துக் கொள்வதோடன்றி அதற்கான தெளிந்த சிந்தனையோடு செயல்படுவதென்பதே படைப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள பேருதவியாய் அமைந்திடும் என்பது உறுதி.
பா. செல்வவிநாயகம்
சென்னை -82
தமிழ் சினிமா தமிழர்களின் வாழ்விலும் அரசியலிலும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக உயிர் மூச்சாக இருக்கிறது. அன்றைய கே.பி. சுந்தராம்பாள் முதல் இன்றைய கமல்ஹாசன் வரை திரையில் பார்த்த பிம்பங்களைத் தங்களின் அரசியல் தீர்வாகவும் பார்க்கத் துடிக்கும் சமுதாயமாக தமிழ்ச் சமூகம் இருக்கிறது. நமது துயரங்களையும் துன்பங்களையும் வறுமைகளையும் தீர்க்கும் குணம் திரையில் தோன்றி மறையும் கதாநாயகர்களுக்கு மட்டுமே உண்டு என்ற மாய பிம்பம் விதைக்கப்பட்டுள்ளது. அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரைத் தொழுத கரங்கள் இன்னும் கீழே விழாமல், ரஜினிகாந்த்வரை தொடரும் கதையாய் உள்ளது. திட்டமிட்டுத் திரையில் வலம் வந்த எம்ஜிஆர் பிம்பம், இன்னும் தொடர்வதைக் கண்டால் தமிழர்கள் தங்களின் இத்தனைத் திறனில் இன்னும் வளரவில்லை என்றே எண்ண வேண்டும்.
பிலிம் சுருளிலிருந்து படிப்படியாய் டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்கள் மாறினாலும், திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளனுக்கு எந்த விதத்திலும் பயன் உண்டா? முக்கியமாக தியேட்டர்களின் கட்டணக் கொள்ளையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எழுபதுகளில் குறைந்த பட்சம் ஒரு ரூபாய்க்கு திரையில் தெரிந்த திரைப்படம், இன்று சாதாரண ஊர்களின் திரையில்கூட இருநூறு ரூபாய் அழ வேண்டியுள்ளது. மாநகராட்சிகளில் இக்கட்டணம் ஐநூறு வரை உச்சத்தைத் தொட்டுள்ளது. நடிகர்களும் தயாரிப்பாளர்களும் சமீபத்தில் மேற்கொண்ட ஒரு மாத வேலை நிறுத்தம் இக்கட்டணக் கொள்ளையை எவ்விதத்திலும் மாற்ற முயலவில்லை. தியேட்டரில் வெளிவரும் அதேநேரம், வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் புதிய படங்களை நேரடித் தொடர்பு மூலம் வெளியிட்டால் மட்டுமே இதனைத் தடுக்க இயலும். டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்களைக் கண்டு மகிழ்வுறும் பார்வையாளர்களை மனத்தில் கொண்டு நியாயமான கட்டணத்தைப் பெற்றால் தியேட்டர்களும் வாழும், திரைப்படங்களும் வாழும்.
ஆறு. கணேசன்
திருச்செந்தூர்
ம.இலெ. தங்கப்பா உயிர்ப்பு மிகுந்த முகம். மற்ற ஆசிரியர்களைப்போல் அல்லாமல் எளிமையானவர். மனத்தை ஈர்க்கும்படிக் கல்வித் திட்டம் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவில்லை என்பார். வாழ்க்கைக்குப் போதுமானதாகக் கல்வியில்லை. வாழ்க்கைக் கல்வியிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம். அறியாமை என்பது கல்வியை, கடமையை இல்லாமலாக்குவது, பணம் உண்மையை உணர்த்தவே எனப் பலமுறை வலியுறுத்தியுள்ளார். Love stand alone, சோளக் கொல்லைப் பொம்மைக்கு சாகித்திய அகாடமி இரண்டு முறை பெற்ற ஒரே படைப்பாளி. வீட்டிற்கு வாகனம் எனப் பெயர் சூட்டினார். புதுமை பல செய்து, புதுவை இயற்கை கழகத்துடன் இணைந்து சுற்றுச்சூழல், பறவைகளின் வாழ்வியலைப் பெரிய அளவில் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். இயற்கையோடு இணைந்து இயல்பாகவே இயற்கை எய்தினார்.
ஏ.டி. ஸூந்தரம்
சென்னிமலை