கோயில் நுழைவுச் சிக்கலும் நடைமுறை அரசியலும்
சபரிமலை சர்ச்சையில் பாலின நீதியானது வாக்கு வங்கி அரசியலுக்குப் பணயம் வைக்கப்படுகிறதா?
கரளாவின் சபரிமலைக் கோயிலில் பத்திலிருந்து ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது பற்றிய பிரச்சனை அந்த மாநிலம் உருவான காலம்தொட்டே இருந்துவருகிறது. சபரிமலைக் கோயிலைப் பற்றிய இந்த விவாதத்தில் நீதித்துறை, தொடர்ந்து வந்த மாநில அரசுகள், மத குருக்கள், சமூக-மத அமைப்புகள், அனைத்து வயதினருமான இருபாலினங்களைச் சேர்ந்த பக்தர்கள் எனப் பல தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த விவாதத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒரே வகைப்பட்டவர்கள் அல்ல, பல்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 2018 செப்டம்பரில் வந்த பிறகு இந்த வேறுபட்ட நிலைப்பாடுகள் அரசியல்ரீதியான பிளவுகளை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. மாதவிலக்கு வயதுகளிலுள்ள பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கோயில் நுழைவுத் தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது.
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு அமர்வால் 4:1 என்ற விகிதத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பக்தியில் காட்டப்படும் பாகுபாட்டுக்கும் மதத்தில் நிலவும் ஆணாதிக்கத்திற்கும் எதிரான அரசமைப்பு அறத்தைப் பெரும்பான்மை நீதிபதிகளின், அனைவரும் ஆண்கள், தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. மாறுபட்ட தீர்ப்பை அளித்த நீதிபதி, அமர்வில் இருந்த ஒரே பெண், “மத விஷயத்தில் அறிவுபூர்வமான கருத்துகளைப் பிரயோகிக்க முடியாது,’’ என்பதன் அடிப்படையில் பெரும்பான்மை நீதிபதிகளிலிருந்து மாறுபட்டார். பாலின சமத்துவத்தை உயர்த்திப்பிடிக்கும் இந்தத் தீர்ப்பை
நாட்டிலுள்ள பலரும் கொண்டாடுகையில் கேரளாவிலுள்ள பக்தைகள் வீதிகளில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மத விவகாரங்களில் அரசின் தலையீடு அதிகரித்திருப்பது பற்றிய அச்சத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கெதிரான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல மதங்களைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில் இத்தகைய அச்சங்கள் நியாயமானவையே என்றாலும் நாட்டின் பிற பாகங்களிலுள்ள யாத்திரைத் தலங்களைப் போலல்லாமல் கேரளாவின் சபரிமலையும் பிற கோயில்களும் வேறுபட்டவை.
சபரிமலை உட்பட கேரளாவிலுள்ள 1700 இந்துக் கோயில்கள் மாநில அரசின் அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறவை. கேரள அரசாங்கத்தின் தேவஸ்தான விவகார அமைச்சர் (கோயில் விவகாரங்களைக் கவனித்துக்கொள்கிறவர்), மண்டல தேவஸ்தான வாரியங்கள் (கோயில்களின் நிர்வாகப் பொறுப்பை வைத்திருப்பவை), கேரள உயர்நீதிமன்றம் (இந்த வாரியங்களின் செயல்பாடுகளை மதிப்பிடுகிறது) ஆகியவையே இந்த அரச அமைப்புகள். தென்னிந்தியாவிலுள்ள கோயில்கள் உள்ளூர் உயர்குழாமினர், அரசியல் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆதரவளிக்கப்பட்டுவந்த வரலாற்றைக் கொண்டவை. இவர்களே இந்தக் கோயில்களின் கருவூலங்களை நிரப்பினர், அவற்றின் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தனர். இந்த அதிகாரங்கள் சமஸ்தான அரசுகளிடமிருந்து காலனியாட்சியிடமும் பின்னர் இறுதியாக இந்தியக் குடியரசிடமும் வந்துசேர்ந்தன. இதன் காரணமாகவே தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளாவில் கோயில் நிர்வாகம் என்பது அரசை மையமாகக் கொண்டிருக்கிறது. சபரிமலையில் அரசின் தலையீடு என்பது 1950இல் இயற்றப்பட்ட திருவிதாங்கூர்-கொச்சின் இந்து மத நிறுவனங்களின் சட்டத்திலிருந்து தொடங்குகிறது. இச்சட்டத்தின் வழியே கோயில் நிர்வாகமானது திருவிதாங்கூர் அரசவைத் தேவஸ்தான குழுவிடமிருந்து சட்டப்படி உருவாக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்திற்கு மாற்றப்பட்டது.
கேரள இந்துப் பொது வழிபாட்டுத் தல (நுழைவு உரிமை) விதிகள் 1965-ஐ இயற்றியது மாநிலச் சட்டமன்றமே என்பது இன்றைய சர்ச்சையில் முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்ட இரண்டு அடுத்தடுத்த அறிவிக்கைகள் ‘முதிர்ந்த’ பெண்களைக் கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடைவிதித்தன. இதற்கு முன்னர் கருவறைக்குச் செல்ல மட்டுமே இவர்களுக்குத் தடையிருந்தது. இதைச் சட்டமன்றம் அங்கீகரித்தது. ஆனால் யதார்த்தத்தில் இந்த விதியானது யாத்திரை பருவமான நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் விஷு பண்டிகையின்போதும் கடுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் ஆண்டின் பிற காலங்களில் ஒருசில பகுதிகளுக்கு மட்டுமே பெண்கள் செல்லத் தடையிருந்தது. இந்தத் தடையை விஐபி பெண்கள் தொடர்ந்து மீறிவருவதை ஆட்சேபித்துக் கண்கொத்திப் பாம்பான ஒரு பக்தர் 1990இல் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது ஆட்சேபணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மாதவிலக்குப் பருவத்திலுள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முழுமையாகத் தடைவிதித்துத் தீர்ப்பளித்தது. அதன் பிறகு கோயிலுக்குள் நுழைய பெண்கள் தங்கள் வயது பற்றிய ஆதாரத்தைக் காட்டியாக வேண்டுமென்றானது.
இந்தத் தடை 2006இல் ஒரு மதச்சார்பற்ற குழுவால் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அப்போதிலிருந்து மாநில அரசுகள் தமது நிலைபாட்டைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டுவந்துள்ளன. 2006இலும் இப்போது 2018இலும் ஆட்சியிலுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி தடையை எதிர்த்தும், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரித்தும் வந்துள்ளன. இந்த ஊசலாட்டத்தை நீதிமன்றத் தீர்ப்பு முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் பிரச்சினை வீதிப் போராட்டங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது நிலையில் உறுதியாக இருப்பதுடன் அதைத் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் ஏற்க வேண்டும் என்கிறது. ஆதிக்கச் சாதியான நாயர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் நீதிமன்றத்தில் மீள்பார்வை மனு செய்ய வேண்டுமென கோருகின்றன.
கேரளாவில் பொது வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது அரசு அமைப்புகள் என்றபோதிலும் மாதவிலக்கு வயதுகளிலுள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்ல விதிக்கப்படும் தடையைச் சட்டமன்றம் அங்கீகரிப்பதன் ஏற்புடைமையைக் கேள்விக்குட்படுத்தியாகவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உச்ச நீதிமன்றம் நமது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள அரசமைப்பு அறத்தை மீறுவதாக இருக்கும் அது. இந்திய மதச்சார்பின்மை என்பது அரசை எல்லா மதங்களிடமிருந்தும் விலகியிருக்கக் கோரினாலும் இந்தியாவின் முதன்மையான அரசியல் முரண்பாடு மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. இது அரசியல் கட்சிகளாலும் அவற்றுடன் தொடர்புகொண்ட அமைப்புகளாலும் விசிறிவிடப்படுகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வழக்குகள் அளவுக்கு மீறிக் கிளறிவிடப்பட்டுக் கருத்து, நடைமுறை ரீதியான பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இதை ஷா பானு வழக்கிலும் (1985) முத்தலாக் வழக்கிலும் (2017) பார்க்கலாம். முத்தலாக், சபரிமலை வழக்குகளில் இன்றைய அரசியல் கட்சிகள் எடுத்திருக்கும் முரண்பட்ட நிலைபாடுகள் அவற்றின் பிளவுபட்ட தன்மையையும் சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்துகின்றன.
கோயில் நுழைவு என்பது நீதி குறித்த கவலைகளை வெளிப்படுத்துவதற்கான அடிப்படைகளுள் ஒன்று. இதில் அக்கறை கொண்டவர்களில் அரசு முக்கியமானது. ஆனால் ஒரு விழுமியம் என்ற வகையில் (பாலின) நீதியானது நடைமுறை அரசியலுக்கு எளிதில் பலியாகக்கூடியதாக இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல் எனும் புதைகுழியிலும் பெரிய அளவிலான மத/சமூக சீர்திருத்த கோரிக்கைகளிலும் பாலின நீதிக்குப் பெரும்பாலும் முக்கியத்துவம் இல்லை.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி,
அக்டோபர் 13, 2018
தமிழில்: க. திருநாவுக்கரசு