காவியக் காட்சி
குமரி இருபுறம் சமுத்திரங்களாலும் ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிருந்தாலும் அதற்குப் புயல் எனும் அனுபவம் புதிது. கடலைத் தம் தாய்மடியாகக் கருதும் மீனவ சமுதாயம் பெருகியிருப்பது இங்குதான். அது ஒவ்வொரு முறையும் வெவ்வேறான இயற்கைச் சீற்றங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. நீருக்குள் வாழ்ந்தும் தாழ்ந்தும் தினமும் போராடும் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர். உயிரைத் துச்சமாக மதித்தாலும் அதுவன்றி பிழைப்புக்கு வேறு மார்க்கமும் இல்லை. மீனவ சமுதாயத்தின் உழைப்புக்கும் துணிவுக்கும் அது பெருவாழ்வு வாழ வேண்டும். கடலில் கோடீஸ்வரர்களாகத் தம்மைத் தாமே கருதிக்கொள்ளும் அச்சமூகம் கரைக்குத் திரும்பியதும் ஏழ்மைக்குள் வீழ்த்தப்படுவது சாபக்கேடு. இடைத் தரகர்களின் குறுக்கீடு சமூகத்தின் வெள்ளந்தி வாழ்வைச் சூறையாடுகின்றது. எனினும் கடல்மாதா தம்மைக் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையுடன் கடலின் சலனங்களைப் பொருட்படுத்தாமல் பரிசல் செலுத்துவதை வழக்கமாகவும் கொண்டுள்ள சமூகம் இப்போது பெரும் இழப்புக்குள் சிக்கிவிட்டது.
2017 நவம்பர் 30ஆம் தேதி, அச்சமூகத்தின் கொடுங்கனவாகும். முன்னெச்சரிக்கை இல்லாத புயல் மாவட்டத்தை நிலைகுலைய வைத்தது. குமரிமாவட்டத்தின் எழிலும் இயற்கையும் புயலின்முன் மண்டியிட்டு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்ததில் பலதரப்பு மக்களின் பொருளாதாரம் நாசமாயிற்று. போக்குவரத்தும் மின்சாரமும் தடைப்பட்டன. வணிகம் முடங்கியது. ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டன. நிலப்பகுதியில் இவ்வளவு துயரங்கள் நிகழுமெனில் புகலிடமில்லாத கடலுக்குள் நிகழ்ந்த கோரங்கள் எப்படிப்பட்டனவாய் இருந்திருக்கும்?
புயல் குறித்த எச்சரிக்கைகள் இல்லாததால் பல்லாயிரம் மீனவர்கள் அதற்கு முன்னரே கடலுக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு நவீன உபகரணங்களுடனோ பாதுகாப்பு அம்சங்களுடனோ செல்வதில்லை. இன்னமும் கட்டுமரங்களும் அவற்றிற்கு இணையான சிறிய விசைப்படகுகளும்தான் அவர்களின் ஆதாரம். கடல் வன்மமாய் மாறுகையில் அதன்கையில் தம் உயிரைக் கொடுப்பதுதவிர வேறுவழியில்லாதவர்கள். அதிர்ஷ்டவசமாக ஏதேனும் கடற்கரைக்கோ வேற்று நாட்டின் நிலப்பகுதிக்கோ அவர்கள் வீசப்பட்டாலொழிய உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் இல்லை. இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் அன்று காணாமல் போயினர். புயலின் தாக்கத்தை நிலத்தில் உணரும்போதே கடலுக்குள் இருக்கின்ற தம் குடும்பத்தினரின் துயரம் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அப்போதே கடற்கரை மீனவக் கிராமங்களில் துயரங்கள் சூழ்ந்தன. அவர்களின் ஓலம் கேட்க ஆளில்லை. இத்தலையங்கம் எழுதப்படும் நேரம்வரை உயிரிழந்தோர் எத்தனைபேர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததாலும் இவர்களின் பிரச்சனைகள் தக்கமுறையில் எடுத்துச் செல்லப்படவில்லை.
மீனவர்கள் பாடு என்னவாகியிருக்கும் என்றறிய மத்திய, மாநில அரசுகள் சிறிதளவேனும் கவலை கொள்ளவில்லை. கிட்டத்தட்ட நாடற்ற குடிமக்கள்போல அவர்கள் கதறினர். இந்தியாவின் பெருமைமிகு கடல்படையும் கடலோரக் காவல்படையும் இந்நிலையை உணர முடியாமல் இருந்தன. தமிழகத்தின் நிலை இதுவானால் அண்மையிலுள்ள கேரள மாநிலம் தம் மீனவர்களைச் சுறுசுறுப்பாகத் தேடும் பணியில் இறங்கிவிட்டது. அனைத்து அமைச்சர்களும் களத்தில் இருந்தார்கள். கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டதுமல்லாமல் இழப்பீட்டுத் தொகையும் பெருமளவில் அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அலுவல்கள் இல்லா நேரங்களில் பெரும்பாலும் தன் தொகுதியிலேயே சுற்றிவரும் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இந்தத் துயரமான கட்டத்தில் கண்ணில் தட்டுப்படவில்லை. அவர் உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்களை அறிந்தவுடன் மீனவக் கிராமங்களுக்குள் ஓடோடிச் சென்றிருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர் என்ற செய்தி அகில உலக கவனம் பெற்றது. அந்த நிலையிலும் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கண்ணும் கருத்துமாய் இருந்தார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர் பகுதிக்கு வந்தது ஆறுதலான விஷயம். ஆனால் கடற்படையின் தேடுதல் பணிகளை ஒருங்கிணைக்கவில்லை அவர். மீனவர்கள் பேரிடர்ப் பகுதியாய் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. அடுத்த நிமிட வேலைத் திட்டம் இல்லாமல் அவர் திரும்பினார்.
தாமதமாய் வந்த பொன். இராதாகிருஷ்ணன் அதன்பின்னரும் மீனவ மக்களைச் சந்திக்கவில்லை. இப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கோரினார். அதே சமயம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் சிக்கித் துயர்ப்பட்டுக்கிடந்தோரின் மீது அவர் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் மீனவர்களின் அவலங்களைக் கண்ணிலிருந்து மறைக்க விவசாயிகளின் பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டது பாஜகவின் விவசாயப் பிரிவு. அனைத்துப் பிரிவினரின் எல்லா விபரீதங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. சாய்மானமில்லாத நிவாரணப் பணிகளும் அவசியமானவை. ஆனால் ஒருபுறத்தில் காட்டப்பட்ட அக்கறையினால் மறுபுறத்தின் துயரங்களை இருட்டில் தள்ளப் பார்த்தது பாஜக. கண்காணாத, கொத்துக்கொத்தான உயிரிழப்புகளுடன் பொருந்தாத பிறவற்றின் மீதும் அதே கண்ணோட்டம் செலுத்துவது ஏற்புடையதல்ல. அமைச்சரும் பாஜகவும் இவ்விவகாரத்தை அரசியல் நுட்பத்துடன் கையாண்டு சமூகத்தைப் பிளவுபடுத்தினர்.
இதன் விகாரமான தொடர்ச்சிதான் பிரதமர் மோடியின் வருகை. மூன்று வாரங்கள் கழித்து ஒக்கிப் புயலின் பாதிப்புகளைக் கண்டறியவந்த மோடி குமரிமுனைக்கு வெளியே ஓரடிகூடச் செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே துயர்ப்பாடுகளை, ஓலங்களை அறிந்துகொண்டார். வண்ண மாலைகள் சூட்டப்பட்ட புயலின் சேதாரப் படங்களைப் பார்த்துத் துயரில் ஆழ்ந்தார்.
அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று யார் சொன்னார்களோ அவர்களே முழுமையான அரசியல் ஆதாயம்தான் இது என்று நாமனைவரும் பக்குவமாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நடந்துகொண்டார்கள்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் இன்னுமொரு கடலாக விரிகிறது குமரிமுனையில்; யாவற்றுக்கும் அப்பால் நின்றார் காவியப் பிரதமர்!