சுனில் கிருஷ்ணன்
1986 ஆம் ஆண்டு பிறந்து, காரைக்குடியில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணனை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். சுனில் கிருஷ்ணன் ‘காந்தி டுடே’ (www.gandhitoday.in <http://www.gandhitoday.in/>) எனும் இணையத்தளத்தின் நிர்வாகியாக அறிமுகமாயிருந்தார். தொடங்கிய இரு ஆண்டுகளுக்குள் தமிழில் காந்தியம் தொடர்பான முதன்மையான களஞ்சியமாக ஆனது. தமிழில் தனித்துவமான கட்டுரைகள், காந்தி ஆய்வாளர்களின் மொழியாக்கங்கள், காந்தியக் கொள்கைகளை தன்னறமாகக் கொண்டவர்களைப்பற்றிய காந்தியச் சிந்தனைகளுக்கு மாற்று சிந்தனைத் தடத்தை விவாதப் பொருள் ஆக்கியதில் சுனில் கிருஷ்ணன் நடத்திவரும் காந்தி டுடே தளத்தின் பங்கு முக்கியமானது.
ஆம்னிபஸ் (www.omnibusonline.nic.in <http://www.omnibusonline.nic.in/>) எனும் புத்தக ஆர்வலர்களுக்கான வலைத்தளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் முழுவதும் 365 புத்தகங்களைக் குறித்து எழுதிவந்த குழுவில் அவரும் ஒருவராகப் பயணித்தார்.
சொல்புதிது இணைய குழுமம், எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய பல கூடுகைகள் அவரைச் செழுமையாக்கின. சில தனிப்பட்ட நூல்களையும் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது க்ஷிதி மோகன் சென் எழுதிய ‘இந்து ஞானம்: ஓர் எளிய அறிமுகம்’ எனும் நூலின் மொழியாக்கம். பண்டைய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூல நூலை, இன்றைய இளம் வாசகர்களும் தத்துவ அறிமுகம் இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் கதைகள் வெளியாகியுள்ளன. நாட்டாரிய நம்பிக்கைகள், தொன்மங்கள், இயல்புவாதக் கதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.
2017க்கான கணையாழி குறுநாவல் போட்டியில் ‘பேசும் பூனை’ எனும் குறுநாவலுக்கு அசோகமித்திரன் பரிசு கிடைத்ததன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். பதாகை இணையதளத்தில் புதிய குரல்கள் என இளம் படைப்பாளிகளின் புத்தக விமர்சனங்கள், நேர்காணல் தொகுப்புகளை எழுதி வருகிறார். அ. முத்துலிங்கம், வண்ணதாசன், தேவதச்சன், ஞானக்கூத்தன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புலகைப் பற்றிய கட்டுரைகளும் கவனத்திற்குரியவை. குன்றாத ஊக்கமும் ஒருமுகச்செயல் திறனும் கொண்ட இளைஞராக அவர் தொடர்ந்து தமிழில் இயங்கிவருகிறார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘அம்புப் படுக்கை’, யாவரும் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது.
- ரா. கிரிதரன்