வெள்ளங்கொண்ட அகரம்
சிகாமணிக்கு மூன்று ஊர்கள். கந்தன்பாளையம், வெள்ளங்கொண்ட அகரம், கடுக்கலூர். ‘யாதும் ஊரே யாவருங் கேளிராக’ச் சுழன்றோடும் காலவெள்ளம் செத்தைசெனார்களாக குப்பைக்கூளங்களாக, யாரை எங்கு சேர்க்கும் என்பது யார் கையிலிருக்கிறது? வெள்ளத்தின் போக்கில் விட்டுவிடுவதைத் தவிர.
வெள்ளங்கொண்ட அகரம் காரணப் பெயர்தான். வருடாவருடம் கார்த்திகை வெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு ஆடு, மாடு, நாய், கோழி, பெரிய பனைகளில் பூசிவைக்கப்பட்ட மல்லாட்டை, கம்பு, கெவுரு எனக் குடிசைகளுடன் கொண்டுபோவது வழக்கம். மனிதர்கள் மட்டுமே தப்பித்துக்கொள்வர். அப்படி வந்ததுதான் வெள்ளங்கொண்ட அகரம்.
ஓங்கூர் ஆறு கிழக்குக்கடலைப் பார்க்கப்போகும் வழியின் கரையில் வேலிக்காத்தான் புதர்கள் சூழ அமைந்த காட்டுக்கிராமம் அது.
சிகாமணி தன் பால்யத்தை இங்குதான் கரைத்தான். பிறந்தது கந்தன்பாளையமானாலும் பிறகு போனது கடுக்கலூரானாலும் இந்த ஊரின் உப்பங்கழியின் வாடையும் ஆற்றின் மணற்பரப்பின் நடுவே குழி தோண்டிக் கவிழ்ந்து குடித்த தண்ணியும் பசியாற்றிய பறவை முட்டைகளும் பனங்குலைகளும் இளநீர்க்காய்களும் மரவள்ளியும் மல்லாட்டையும் ஊறல்பானை வெள்ளக்கட்டிகளும் குரும்பரங்காட்டு சூரப்பழங்களும் குருவிப்பழங்களும் களக்காயும் கொஞ்சிப்பழமும் கொடுக்காப்புளியும் நாவற்பழமும் ஈச்சம் பழமும் அவனின் உடலோடு ஊறிக்கிடக்கிறது.
குடும்பப்பிளவினால் சிதறு தேங்காயென ஆளுக்கொரு ஊரில் அவனது குடும்ப நபர்கள் வசிக்க வேண்டியதாயிற்று. அப்பா ஆறுமுகம் மட்டும் வெள்ளங்கொண்ட அகரத்தில் தனியாகவும் அவ்வப்போது பிள்ளைகளின் துணையோடும் வசித்துவந்தார்.
அவரொரு சாராயப்ரியர். ப்ரியர் என்றால் அப்படி இப்படி இல்லை. அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்குபவர். இடைவிடாமல் குடித்துக்கொண்டிருப்பார். இப்படி சுமார் 46 ஆண்டுகாலமாய் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இந்தச் சாராயத்திற்கும் அவருக்கும் இருக்கும் உறவை சிகாமணி கணக்குப் பார்த்துக்கொள்வான்.
அவரைக் குடும்பத்தின்மீது பற்றில்லாதவர் என்று சொல்லிவிடவும் முடியாது.
‘‘போதை, மனிதனை இலகுவாக மடைமாற்றக் கூடியது. மீள முடியாத மலைப்பாம்பின் பலம் பொருந்திய அதன் கட்டுக்குள் சிக்கிக்கொண்டவர்கள் என்ன செய்வார்கள்? அதில் ஒருவர்தான் அவர்.’’
ஊர், உலகம், உறவுகள், அம்மா, தங்கைகள் அனைவரும் அப்பாவை நிராகரித்தாலும் அவர்மீது அளவுகடந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இன்றுவரை எல்லாம் மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டது சிகாவின் பேரன்பு. ‘அப்பாவாச்சே’ அவன்தானே அவர், அவர்தானே அவன். அந்தத் தெருக்கூத்தாடியின் ரத்தம் தானே இன்றும் இவனில் முள்குத்திக் கசிவது. அந்தக் காடா விளக்குதானே இந்த அகலை ஏற்றிவைத்தது. ஆலமரம்மீது ஆயிரம் விமர்சனம் இருக்கிறது. அதிலிருந்து முளைத்த விழுதுதானே இது. இல்லையென்று ஆகிவிடுமா?
ஆறுமுகத்தின் அன்பையும் தவறுகளை உணர்ந்து அவன் அழுத கண்ணீரையும் அவன் பலவீனமானவன் என்பதையும் சிகா நிறைய நேரம் கண்டிருக்கிறான்.
ஒரு தடவை போதை மிதமிஞ்சிக் குற்றவுணர்ச்சியில்,
‘‘என்ன மன்னிச்சிருடா சிகா, அம்மா இல்லாத உன்ன தனியா வுட்டுட்டேன்டா’’ என்று மகனின் காலைப் பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார்.
அவர் அழ இவனுக்கும் அழுகை வந்தது. இருவரின் அழுகையும் ஒரே நேரத்தில் முடிந்தது.
கண்ணீரின் பிசுபிசுப்போடு ஆறுமுகம் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மகனின் கன்னத்தில் முத்தமிட்டார்.
சாராய வாடைகலந்த அந்த முத்தம் நுரையீரலின் அடிவரை போய்ப் படிந்தது.
மகன்களிடம் பாசத்தைப் பொழிய ஏழை அப்பாக்களுக்கு சாராய நெடி முத்தத்தைவிட உலகத்தில் சிறந்தது வேறில்லை என்பதை அன்றுதான் சிகா முடிவு செய்தான்.
சிறுவயது தொட்டு மழையோடும் வெள்ளத்தோடும் வளர்ந்த அவனுக்கு நீர்மீது நிறையக் காதல். குள்ளக் கெண்டைகளும் குரவையும் விராலும் நண்டும் நத்தையும் தண்ணிப்பாம்பும் தவளைகளும் தலைப்பிரட்டைகளும் நீர்ப்பூச்சிகளும் அவனது பால்ய நதிக்குள் இன்னும் நீந்தியபடிதான் இருக்கின்றன.
ஒவ்வோராண்டும் ஊரை வெள்ளம் சூழ்ந்துகொள்ள உட்கார இடமின்றிப் பள்ளிக்கூடத்திலும் பக்கத்தூர் களிலும் அடைக்கலமாகிப் பொட்டலஞ் சோற்றுக்கு வரிசையில் நிற்கும் அவலத்திலிருந்து அவன் ஊர் இன்னும் வெளிவரவில்லை. வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கிக் கலங்கி அழுபவர்கள் நீர்வடியும் நாளில் நிதானத்திற்கு வருகிறார்கள், பின்பு வீடுகட்டிக்கொள்கிறார்கள், அந்த வீடும் அவர்கள் நிம்மதியும் அப்படியே இருக்கிறது அடுத்த வெள்ளம் வரும்வரை.
இப்படித்தான் இப்படித்தான்... ஒரு எண்பது வருடங்கள் ஓடியிருக்கிறது என்று வயசாளிகள் சொல்லக் கேட்டிருக் கிறான் சிகா. சந்தர்ப்பங்கள் மனிதனை அதுக்கேற்றவாறு வடிவமைத்துக்கொள்கிறது என்பதற்கு அவர்கள் நல்லசாட்சி. அரசாங்கம் அவர்களுக்கு அறிவுரை சொல்லி மேட்டுப்பகுதியில் இடம் தந்து இட்டு வருவதற்கு எவ்வளவோ முயன்றுபார்த்து விட்டுவிட்டது.
பிறந்துவிழுந்த பச்சை மண்ணின் ரத்தப்ரியம் அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுக்கும் அந்த மண்ணிற்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உறவொன்று உட்சரடாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அணைகளையும் வீடுகளையும் கற்களால் கட்டித் தரச் சொன்னார்களேயொழிய அங்கிருந்து அவர்களின் கால்கள் நகர்ந்தபாடில்லை. வெள்ளத்திற்கும் அவர்களுக்கு மான சண்டை நடந்துகொண்டே இருந்தது.
2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் முகம் வெறிபிடித்த மிருகமாய்ப் பயமுறுத்தியது. எப்போதும் போல்தான் என அலட்சியமாக இருந்தவர்கள் இல்லை என்பதாகப் பிறகு விளங்கிக்கொண்டார்கள்.
ஐந்தாறு நாட்டுப்படைகள் ஒன்றாய்ச் சேர்ந்துவந்தது போல் உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்தது. ஒரே நாளில் ஒட்டுமொத்தப் பற்களும் விழுந்த வாயாக அணை ஆ...வென வாய் பிளந்து கிடந்தது.
ஊருக்கு நடுவே பெரும் பாதையொன்றை உருவாக்கி இரையைத் துரத்தும் சிறுத்தையென விரைந்தது வெள்ளம். வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் விளையாடிக் கொண்டுபோயின.
நடுவில் வட்டமாய் வெள்ளையடித்து இலக்கம் போட்டிருந்த பனைமரமொன்று நான் நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மூழ்கிச் சற்றுத் தூரத்தில் முகம் காட்டிப் போனது.
எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் மண்பானைகள், பிரம்புக்கூண்டு, சம்மங்கூடை இவற்றோடு இந்த ஊரிலிருந்தும் தேவையானதை எடுத்துக் கொண்டு போனது வெள்ளம்.
மண்சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்து இறுதியாய் இடுப்பொடிந்து விழுந்து செத்த பிணங்களாய் மிதந்துகொண்டிருந்தன கூரைவீடுகள்.
எறும்புகளும் மரவட்டைகளும் பூச்சிகளும் மனிதர்களை விட இடம் தேடி அவஸ்தைப்பட்டன.
எல்லோரும் துணிமூட்டைகளும் குழந்தைகளுமாய் இலங்கையிலிருந்து வந்தவர்களைப் போல் என்ன செய்வதெனத் தெரியாமல் நடுங்கிக்கொண்டிருந்தனர்.
அல்லும் பகலும் அயராது அழுதுகொண்டிருந்தது வானம். இருக்க இருக்க நீரின் அளவு பாம்பு கடித்த விஷமென ஏறிக்கொண்டிருந்தது. ‘‘பாழுந்தெய்வத்துக்குக்கூட கண்ணில்லாமப் போச்சே,’’ புலம்பினாள் ஒரு கிழவி. எது சாலை, எது சுடுகாடு, எது வயல், எது வாட்டை, எது வழி என எதுவும் தெரியவில்லை. எல்லாம் தண்ணீர் மயம், இருட்டில் வெள்ளத்தின் பேயோசை. கழுத்துவரை மூழ்கிய வேலிக்காத்தான் மரத்தின் தலைமீது நல்லபாம்பொன்று தத்தளித்துக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அந்த மரம் அப்படியே மூழ்கலாம், அடித்துக்கொண்டும் போகப்படலாம்.
செல்போன்களும் மின்விளக்குகளும் செத்துப்போய் ஏழு நாட்களாகியிருந்தன. நமுத்துப்போன தீப்பெட்டியை அக்குள் சூட்டில் வைத்தபடி காய்ந்த திரித்தேரி ஏற்றிய மண்ணெண்ணெய் விளக்கும் எரிய மறுத்தது. காற்றில், வெள்ளத்தின் சூரத்தனத்தை மீறிப் புறப்பட யாருக்கும் தைரியமில்லை. அக்கரை சேர்வதற்குள் ஆற்றோடு போய்விடுவோமோ என்ற பயம் எல்லோரின் நெஞ்சிலும் படிந்திருந்தது.
வேலைக்கு வெளியூர்போன மகன் முதற்கொண்டு யாருக்கும் யாரைப் பற்றியும் தெரியவில்லை. இருக்கிறார்களா செத்தார்களா எதுவும் விளங்கவில்லை. சோறில்லை, குடிக்கத் தண்ணியில்லை, இடமில்லை, உயிர் மட்டும் பிழைத்தால் போதுமென்ற குறைந்தபட்ச நம்பிக்கையுடன் பசி காதடைக்க எல்லோரும் ஓர் இடத்தில் குழுமினர். ஆறுதலின் முதல் வெளிச்சக் கீற்றாய் ஐந்துபேர்கள் வெள்ளம் தாண்டி வந்திருந்தார்கள், ஒரு வேளை இவர்கள் வராமல் இருந்திருந்தால் அந்தத் துயரச் சம்பவம் நிகழாமல்கூட இருந்திருக்கலாம்.
வந்திருந்தவர்கள் அறிவுரைப்படி கயிற்றைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் இக்கரைக்கு வந்தனர். இவர்களில் ஒருவராகத்தான் ஆறுமுகம் அன்று சூனாம்பேடு வெள்ளமுகாமிற்கு வந்துசேர்ந்தார். அந்த வட்டாரத்தில் ஆறுமுகத்தின் நட்புப்படலம் பெரிது. இருபது வருடங்களுக்கு முன் அவரது சாராயங் காய்ச்சும் தொழிலாலும் தெருக்கூத்தாலும் பெரியதாய்ப் பரவியிருந்தார். அதன் பொருட்டு முகாமை அடையும் வழியில் பீடி, பிராந்தி, உணவு என நிறைய ஆதாயம் கிட்டின. அதில் ஒரு புண்ணியவானின் செல்போனும் பேசக் கிடைத்தது.
நினைவில் பதிந்திருந்த தன் மகன் சிகாவின் எண்ணிற்கு அழைத்தார். ‘‘அப்பாடா. நாங்க எல்லாரும் சூனாம்பேடு இஸ்கூலுக்கு வந்துட்டோம். ஒண்ணும் பயப்படாத நீங்க பத்தரமா இருங்க.’’ சிகா இந்த அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தான் ‘‘நீ கௌம்பி கடுக்கலூர் வந்துடுப்பா. நான் எதுர வரேன்.’’
‘‘இல்ல அப்பாடா தப்பாயிடும். எல்லாம் இருக்காங்க. வுட்டுட்டு வர முடியாது. மழயில நீ எங்க வரப்போற. இரு பாக்கலாம்.’’ ‘‘வூடு வாரியா காசு எழுதுறாங்க என்னன்னு பாத்துட்டு ஒரு ரெண்டு மணிக்கெல்லாம் வந்துர்றேன். நீ வராத’’ என இருவரும் பேசி முடிக்கையில் காலை ஒன்பது மணி. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சிகாவிற்கு. மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. அவன் மனைவி கேழ்வரகு மாவில் புட்டு செய்துகொண்டு வந்து வைத்தாள். அள்ளி வாயில் போட்டான். முகாமிலிருந்து அடுத்த போன் வந்தது. ‘‘சிகா நான் குணா பேசறேன், எங்கப்பா இருக்கிற? ஒடனே கௌம்பி வாப்பா,’’ என மொட்டையாகத் துண்டிக்கப்பட்டது அந்த அழைப்பு.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வேறொரு எண், வேறொரு குரல். அடுத்தடுத்து எண்களும் குரல்களும் மாறிமாறி வந்துகொண்டேயிருந்தன. குரல்களுக்குப் பின்னணியில் சலசலப்பு இருந்தது. அத்தனைபேரில் யாரும் எதையும் தெளிவாகக் கூறவில்லை. அடுத்த போன், ‘‘ஏம்பா சிகா எங்க இருக்கிறப்பா? அப்பாவுக்கு ஒடம்பு சரியில்ல, வாப்பா கௌம்பி.’’ சிகா கொஞ்சம் குழம்பினான். ஒரு மணிநேர இடைவெளியில் உடம்பு சரியில்லாமல் எப்படிப்போகும்; ஒரு வேளை குடித்துவிட்டுப் போதை அதிகமாகி நம்மை வரவழைக்கப் பழையபடி அப்பா ஏதாவது நாடகம் போடுகிறாரா? இதற்கு முன் பல தடவை இப்படி நடந்ததுண்டு. ‘‘அப்பாடா. கழனிக்குப் போனேன்; பாம்பு கடிச்சிடுச்சி. கட்டுப்பானையான்போல இருந்துச்சி, மாரடைக்கிறா மாதிரி இருக்குது ஒடனே கௌம்பி அகரம் வா,’’ - என அப்பட்டமாய்ப் பொய் பேசுவார். பதறியடித்துப் போய் நின்றால் அரை போதையில் நாய்கள் புடைசூழப் பிணாத்திக்கொண்டிருப்பார்.
‘‘தத்தத்தன தானே... தத்தத்தன தானே...’’ என திருப்புகழும் தெருக்கூத்தும் சுதியேறும். பாம்புக்கடி பச்சைப் பொய். குடித்துப் போதையேறிவிட்டால் சிகாவைப் பக்கத்தில் பார்க்கவும் அழவும் அவருக்கு அதிகம் பிடிக்கும். அது இப்படித்தான் நிறைவேறும். ஆனால் இப்போது பேசுபவர்களின் தொனியைப் பார்த்தால் வேறு மாதிரி ஏதோ தோன்றுகிறது; பயமெடுக்கத் தொடங்குகிறது.
அடுத்த போன், பேசாத சண்டைக்காரன் பேசினான். சிகா கலவரமடைகிறான், இரண்டு நாட்களாய்க் காய்ச்சல் அவனுக்கு. இது போதாதென்று ‘வீசிங்’ தொல்லை வேறு. பனி, மழைக்காலங்களில் அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
போன் அடித்தது.
“இன்னாதான் ஆச்சி யாராவது ஒழுங்கா சொல்றீங்களா. அந்த ஆளு செத்தாப் போய்ட்டான். போன குடுங்க அவருக்கிட்ட,’’ கோபம் வந்தது.
“என்ன நடக்கிறது என்பது புரியாமல் எதையோ பேசுகிற மனிதன் எவ்வளவு பெரிய பாவம்.”
உண்மையிலேயே அப்பா செத்துவிட்டார் என்றால் அவன் இப்படிப் பேசியிருப்பானா. பேசிவிட்டானே தவிர வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். போன் வந்துகொண்டேயிருந்தது. சாலையோரம் வண்டியை நிறுத்தி எல்மெட்டைக் கழற்றி போனை எடுத்தான். ஏழு வருடங்களாய்ப் பேசாத இந்திரா அண்ணி; அவன் கை நடுங்குகிறது.
“எங்கதான் இருக்கிற சீக்கிரம் வா. அப்பாவுக்கு மூச்சி நின்னு போச்சி.”
“தோ வந்துட்டேன். எங்க இருக்குறீங்க?”
“இல்லீடு ஆஸ்பிட்டல்ல.”
அவனால் வண்டியைப் பிடிக்க முடியவில்லை. கைகால்கள் உதறுகிறது. அமர்ந்து கிளப்பினான். அழுகை வருகிறது. வழுக்கிக்கொண்டு மழை சேற்றில் விழுந்தான். எழுந்து நீர்கோத்த கண்களுடன் மனைவிக்குப் பேசினான். முழுதாய்ப் பேச வார்த்தை வரவில்லை, தொண்டை அடைக்கிறது. மழை முகத்தில் தெறித்தது. எல்மெட்டைத் தலையில் போடாமல் வண்டியின் பக்கவாட்டில் மாட்டிக்கொண்டான். காய்ச்சல் பெரிதாகப் படவில்லை. ‘வீசிங்’ குறைவாகவே இருந்தது. இழுத்து மூச்சுவிட்டுப் பார்த்துக்கொண்டான்; பெரிய சிரமமில்லை.
மனம் பெரிய அளவில் அதிர்வடையும்போது உடல் தன்னைத்தானே இயக்கிக்கொள்ளத் தயாராகி விடுகிறது என்பதை அப்பாவின் மரணச் செய்தி அவனுக்கு உணர்த்தியது. சிகா நீர்கட்டிய கண்களுடன் எதுவும் புரியாமல் தழுதழுத்தபடி ஆறுமுகத்தின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இரும்பு பெஞ்சின் அருகில் நின்றுகொண்டிருந்தான். எப்படி இறந்தார்? இறந்தாரா? இல்லையா. என்ன நடந்தது. அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஆளாளுக்கு ஒன்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்றைய தினம் ஒட்டுமொத்த தமிழ்நாடே வெள்ளத்தில் மிதப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் சிலர் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். வெள்ள முகாமில் என்ன நடந்ததெனில் தங்களின் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம் தலைமையின் பெருமை பேசுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு கட்சியினர் உணவு வழங்குவதாகத் திட்டமிட்டதின் பேரில் அன்றைய தினம் அதிமுகவினரின் முறை.
வெள்ளங்கொண்ட அகரத்தினர் தங்க வைக்கப்பட்டது ஒரு பள்ளிக்கூடத்தின் சிறிய அறை என்பதனால் இருநூறுக்கு மேற்பட்டோரைக் கொள்ள முடியாமல் இடநெருக்கடி.
அதிமுகவினர் தயார் செய்த உணவு, முகாமில் மூடிவைக்கப் பட்டு அப்படியே இருந்தது. அவர்களோ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மனிதாபிமானிகளும் கொண்டுவந்து இறக்கிய பொருட்களில் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் அவற்றைப் பதுக்குவதிலும் காலம் தாழ்த்தினர்.
முகாமிலிருந்தவர்களுக்குப் பசி பொறுக்கவில்லை. பரிமாற யாரும் வராததால் அவர்களாகவே உணவைத் திறந்து ஆளாளுக்கு எடுத்துக்கொள்ளத் தொடங்கியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கூட்ட நெரிசலில் ஆறுமுகம் தவறி விழுந்து பின்னந்தலையில் பலமாய் அடிபட்டு இறந்துவிட்டார் என்பதுதான் சிகாவிற்குக் கிடைத்த இறுதியான தகவல்.
ஆறுமுகத்தை நடுரோட்டில் கிடத்திப் போராட்டம் நடத்தக்கேட்டு ஊர் இளைஞர்கள் ஒரு பக்கம். அப்பா இறந்துவிட்டாரா, உயிர் இருக்கிறதா என எதுவும் முடிவுசெய்ய முடியாத தவிப்பில் சிகாமணி. அவன் மனைவி ஆறுமுகத்தின் கையைப்பிடித்து அழுதபடியிருக்கிறாள். தாடையில் கை வைத்து எழுப்புகிறாள், தண்ணீர் தெளிக்கிறாள். ஒரு மருத்துவர் இல்லை, செவிலியர் இல்லை. இந்தக் கொலைகார வெள்ளத்தின் முன், யாரையும் எந்தக் குறையும் சொல்லிப் பயனுமில்லை. எந்த ஊர் மருந்துவமனைக்கும் இட்டுச்செல்ல வாகனமில்லை, சாலைகள் இல்லை. ஏதாவது வழிதேடிப் போகலாமெனில் அதற்கும் தடை. அங்குமிங்கும் கண்கள் அலைய அப்பாவின் கையைப் பிடித்து நாடி பார்க்கிறான். கண்களைத் திறந்துபார்க்கிறான். வயிறு ஏறி இறங்குகிறதா, மூச்சு வருகிறதா, இருமிக்கொண்டு எழுந்து உட்கார்ந்திடமாட்டாரா? மனம் ஏங்குகிறது.
‘‘எதுவும் இல்லப்பா,’’ யாரோ ஒரு கிழவன் சொல்லியபடி கொம்பை ஊனிப் போகிறான், உடனே ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. எங்காவது உயிர் கொஞ்சம் இருக்குமா? அங்கலாய்ப்புடன் ஒருவன் முன் ஓடிப்போய்ப் பேசுகிறான்.
‘மதுராந்தகம் கூட்டுட்டுப் போய்டலாம், பத்தாயிரம் தரேன்.’
உயிருக்குப் பயந்த அந்த ஓட்டுநரின் உதடு பிதுக்கலில் இரண்டு பதில்கள் இருந்தன.
‘ஒண்ணுங் கெடயாது.’
‘என்னால் வர முடியாது.’
இந்த இடைவெளியில் எங்கிருந்தோ தெய்வ ரதமாக ஒரு ஆம்புலென்ஸ் வருகிறது. இறுக்கிக் கண்களைத் துடைத்துக்கொண்டு அதனருகே ஓடுகிறான். வந்த வேகத்தில் அதன் ஓட்டுநர் டார்ச் அடித்து ஆறுமுகத்தின் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்துவிட்டு அவனும் உதட்டைப்பிதுக்கி, “ஒண்ணுமில்லப்பா, உயிர் இருந்தாத்தான் ஆம்புலன்ஸ்ல கொண்டுபோகணும், அதான் ரூல்,’’ என்று கையை விரித்தான்.
அப்பாவிற்கு உயிரில்லை என்பது இப்போது திட்ட வட்டமாக சிகாவிற்குத் தெரிந்தது. அழாமல் அடுத்தகட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். ஊர்க்காரர்களுக்கும் காவலர்களுக்கும் நடந்த பிரச்சனையில் அவன் கலந்துகொள்ளவில்லை. மனத்தெளிவின்றி அதிர்ச்சியிலும் பிரிவின் பெரும் வலியிலும் சிக்கிக்கிடந்தான். உடலை நடுரோட்டில் போட்டுக் கோஷமிடுவதின் மூலம் ஊருக்கு உரிமையைப் பெற்றுத்தந்துவிட முடியுமென்று நிலைமை புரியாமல் ஊரார்கள் காவலர்களோடு வாக்குவாதம் செய்தனர். அன்றைய தினம் காவலர்கள்மீது சிகாவிற்குக் கோபம் வரவில்லை.
வெயில்காலத்திலே வந்து பார்க்காத அதிகாரப் பெருந் தகைகள் இந்த வெள்ளத்தில் நீந்திவந்துவிடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையாளர்களை நினைத்துப் பாவப்பட்டான் அவன். அப்படி ஊருக்கு விடிவு வருமெனில் அப்பாவின் உடலைத் தந்துவிடத் தயாராகவும் இருந்தான். அப்படியெல்லாம் நல்லது நடந்துவிடுமா என்ன? சூழல் புரியாமல் ஆர்வக் கோளாறு பிடித்த வர்கள் அதிகமுள்ள ஊரில் பிறந்தமைக்காக அவன் வருத்தப்பட்டான்.
ஓரிரு ஊடகங்கள் வந்திருந்தன. போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சிலபேர் தொலைக்காட்சியில் தன் முகம் தெரிய வேண்டுமென்பதற்காகக் கையை உயர்த்தினார்கள். சிலர் வெறும் மல்லாட்டைத் தொளும்பு வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் தம்மீது பழி விழுந்து கட்சிக்குக் களங்கம் வந்துவிடப்போகிறதென்ற அச்சவுணர்வோடு சிகாவின் காதில் வந்து அரசாங்கம் தரும் அஞ்சு லட்சம் கதையை ஓதினர் சிலர். இப்படி ஆளாளுக்குத் தங்களின் தேவையைப் பூர்த்தி பண்ணிக்கொள்ளவும் தப்பிக்கவும் சாதுர்யமாகக் காய் நகர்த்திக்கொண்டிருந்ததை அவன் புரிந்துகொண்டான்.
ஏதோ ஒரு வகையில் எல்லோரும் சுயநலமிகள்தாம்.
சிகாவிடம் ஒரு தலைமைக்காவலர் வந்து பேசினார்.
‘தம்பி எல்லாரும் எங்கள திட்றாங்க,’
‘வந்துபாருங்க ஸ்டேஷன,’
‘டேபிள் சேர் எல்லாத்தையும் ஒடச்சி, நாசம் பண்ணிட்டாங்க’
‘நாங்க யாருக்கு பதில் சொல்றது,’
‘இந்த வெள்ளத்துல சோறு இல்லாம தண்ணியில்லாம நாங்களுந்தான் தம்பி தவிக்கிறோம்,’
‘ஒரு வாரமாச்சி பொண்டாட்டி புள்ளைங்ககிட்ட பேசல. இருக்காங்களா செத்தாங்களா எதுவும் தெரியல,’
‘டிபார்மென்ட்ல உத்தரவு, என்ன பண்ண முடியும் சொல்லுங்க.’
அவர் ஒரு காவலர் என்பதைத் தாண்டித் தன் பிள்ளை களுக்கு அப்பாவாகக் கலங்குவது கண்களில் தெரிந்தது.
‘தம்பி நடந்தது நடந்துபோச்சி, என் ஜீப்பு வேணா தர்றேன்,’
‘வண்டி போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கும் ஒரு லட்டர் தர்றேன். அப்பாவ ஏத்திக்கிட்டுப் போயி ஆக வேண்டியத பாருங்க.’
அவரைப் போன்ற சிலர் காவல்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள். உடலைத் தராத கோபத்தில் ஊர்க்காரர்கள் அடிக்கிற மழையில் ஆஸ்பிட்டலில் அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டனர். சிகாவின் பெரியப்பா மகன் பிரபு மட்டும் அப்பாவின் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தான். ரத்தம் ரத்தம்தான்.
மந்தாரப் பொழுதில் மணியாவது தெரியவில்லை. மழை இன்னும் வலுக்கிறது. யாரிடமும் பணமில்லை. இருந்தவர்களின் பணத்தை எடுக்க வழியில்லை. அந்தப் பகுதியிலிருந்த இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கி மூன்று நாட்களாயின. கையில் பணமில்லை. வெளியே மழையும் வெள்ளமும். ஒன்றும் புரியவில்லை சிகாவிற்கு. அப்பா அமைதியாகப் படுத்திருக்கிறார். கடந்த காலத்தில் ஒருநாள் அவர் அவன் காலைப் பிடித்துக்கொண்டு அழுதது கண்முன் வந்துபோனது.
ஒருவழியாகக் கார் ஏற்பாடானது, அப்பாவை அதில் ஏற்றி உடன் பிரபுவையும் இன்னொரு தம்பியையும் மதுராந்தகம் ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தான். காவல்நிலையத்திற்கு வந்து ‘போஸ்ட்மார்டம்’ செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்கையில் இரவு ஏழு மணி. மழை நின்ற பாடில்லை. போஸ்ட்மார்டம் முடித்து அப்பாவின் உடலை இரவே அனுப்பிவிடுவதாக ஆஸ்பத்திரியிலிருந்து தகவல் வந்துவிட்டது.
சிகா காவல்நிலைய வாசல்முன் வந்துநின்று ஏதோ யோசித்தான். இப்போது மணி 7.45 ஊருக்குள் மின்சாரமில்லை; வண்டிபோக வழியில்லை. இந்த இருட்டிலும் மழையிலும் வெள்ளத்திலும் அப்பாவை எங்கு கொண்டுபோய் இறக்கிவைப்பது, வண்டிக்காரன் வருவானா? திடுக்கிட்டவனாக அந்த தலைமைக் காவலரிடம் ஓடி,
‘சார் ஒரு உதவி,’
‘பாடி ஆஸ்பிட்டல்லயே இருக்கட்டும் சார்,’
‘இந்த மழையில எங்க எடுத்துட்டுப் போறதுன்னு தெரியல,’
‘காலையில அஞ்சு மணிக்கு எடுத்துக்குறேன். நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்.’
அன்றைய பங்குக்கு மழை அதிகமாகவே பெய்தது. பசியில்லை. அவனும் அவன் மனைவியும் வீட்டிற்கு வந்துசேர்ந்தார்கள்; படுக்க முடியவில்லை அவனால்.
காவல்நிலையத்திலிருந்து கொண்டுவந்திருந்த அப்பாவின் கைக் கடிகாரத்தை இன்னொரு தடவை எடுத்துப்பார்த்தான். முத்தமிட்டான், முகந்து பார்த்து அப்பாவின் வாடையை உள்ளிழுத்துக்கொண்டான். பாலித்தீன் உறையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த அவரின் செருப்புகளை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அப்பாவுடன் சென்றவர்கள் திரும்பிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அப்பாவின் உடல் தனியாக ஆஸ்பத்திரியில் இருப்பதைத் தாங்கிக்கொண்டு வீட்டில் அவனது உடல் இருப்புக் கொள்ளவில்லை. போஸ்ட்மார்டம் செய்த டாக்டருக்குப் போன் செய்தான்.
‘சார் நான் சிகாமணி பேசறேன் சார்,’
‘நான் இப்ப கௌம்பி ஆஸ்பிட்டல் வரேன் சார்,’
‘நைட் மட்டும் அப்பாகூட முழிச்சிருக்கிறேன் ப்ளீஸ் சார்.’
‘இதப்பாருங்க தம்பி, இப்ப வந்தீங்கன்னா யாரையும் உள்ளவிடமாட்டாங்க. மழ வேற அதிகமாயிருக்கு.’
‘இப்போ மணி பதினொன்ற. இன்னும் கொஞ்ச நேரம் இருங்க. அப்பா பத்திரமா இருக்காரு, மார்னிங் வாங்க.’
அறுத்து முடித்து பொட்டலங் கட்டிய பிறகும் அப்பா என்று அவர் சொன்னது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மனித இதயங்களுக்குச் சில நேரங்களில் மருத்துவர்களின் சொற்கள்கூட மருந்துகளாகிவிடுகின்றன.
சிகா அதுபோன்றதொரு பெருந்துயரம் நிரம்பிய பளுவான இரவைச் சந்தித்ததில்லை. அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ‘அடப்பாவிங்களா எங்கப்பன இட்டுவராம அங்கேயே வுட்டுருந்தாக்கூட உயிரோட இருந்திருப்பாரடா.’
அப்பாவின் நினைவுகளை அசைபோட்டபடியே தூங்காத கண்கள் சிவந்திருக்க மறைந்துபோனது அந்த மழை இரவு. காலையில் தன் மாமனாரையும் மச்சான்மார்களையும் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிவைத்தான். பந்தல், மேளம், ஐஸ்பெட்டிக்குச் சொன்னான். மின்சாரமில்லாமல் ஐஸ்பெட்டி எதற்கு? அப்புறமாய்த்தான் யோசனை வந்தது.
எல்லோரும் மேற்கொண்டு மூன்று மடங்குப் பணம் கேட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் நீந்திக்கொண்டுதான் அவர்கள் வரவேண்டுமென்பதால். அந்தப் பணம் ஒன்றும் பெரிதில்லை என்று நினைத்துக்கொண்டான். சக மனிதனை இதயத்தால் புரிந்துகொள்கிறவனுக்கு நியாயம் புலப்படுகிறது. அத்துடன் சந்தர்ப்பத்தைப் பணமாக்குபவர்களின் அடையாளம் அவனுக்குத் தெரியாமலுமில்லை.
நீர்கோத்த கண்களுடன் அவன் மனைவி சொன்னாள், “அப்பாவ மண்ணுல வைக்க வேணாங்க. எப்படியாவது ஒரு பெட்டி செஞ்சிடலாம்.” அதுதான் அவனுக்கும் சரியெனப்பட்டது.
அப்படியே அலைந்துதிரிந்து ஒரு மரப்பட்டறைக்கு ஓடியபோது, அங்கிருந்த பலகைகள், மரங்களெல்லாம் வெள்ளத்தில் தெப்பமாய் மிதங்கிக் கொண்டிருந்தன. பெட்டி செய்துவிட முடியுமென்பதற்கான எந்த அறிகுறியும் அங்கு அவனுக்குத் தென்படவில்லை. உள்ளிருந்து வழுக்கைத்தலையுடன் ஒருவர் வந்தார்.
“என்னப்பா,”
“அண்ணா அப்பா தவறிட்டாங்க,”
“ஒரு பெட்டி செய்யணும்.”
அதற்குமேல் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அழுகை மேல் தொண்டையில் நின்றுகொண்டிருந்தது.
“யாரு பள்ளிக்கொடத்துல உழுந்துட்டாருன்னு சொன் னாங்களே அகரத்தாரு, அவரா?” என்றபடி கொஞ்சம் யோசித்தார்.
“இப்ப முடியாதப்பா. பலகயெல்லாம் நனஞ்சிப் போச்சி, பாதி அடிச்சிட்டு போய்டுச்சி. கரண்ட் வேற இல்ல, என்னப்பா பண்ணலாம்.”
அந்த மனிதன் சிகாவை உள்வாங்கி உணர்ந்தவனாகச் சொன்னான்.
“சரிப்பா அழாத பண்ணிடலாம்.”
“ஒரு பன்னென்டு மணிக்கு ஆள் அனுப்பு.”
‘‘ஒரு நாலு மீட்டர் கறுப்புத் துணியும் நாடாவும் வாங்கித் தந்துட்டுப் போ.”
அய்யப்பனுக்கு மாலை போட்டிருந்த அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான்.
அப்பாவின் உடலை ஊருக்குள் கொண்டுபோவதற்கான நான்கைந்து வழிகளில் நல்லதாய் ஒன்றை முடிவுசெய்து கொண்டு உப்பளம் சென்று உப்பு மூட்டைகளுக்குச் சொல்லிவிட்டு அமரர் ஊர்தி வரும் சாலையில் நின்றிருந் தான். அய்ந்தாறு பேர் கொம்புகளுடன் முன்சென்று வழிகாட்டிக்கொண்டேபோக தத்தித்தடுமாறி நீந்தி வந்து ஊர் சேர்ந்தது வண்டி.
பெண்களின் அழுகைப் பேரோலம் பெரியதாய்க் கேட்டது. அப்பா வாழ்ந்த வீட்டின் தடமில்லாமல் தண்ணீர் போக, பக்கத்திலிருந்த வேப்பமரம் வேதனையுடன் நின்றுகொண்டிருந்தது. உடலை வைத்து அழுவதற்கும் இடமில்லாத அந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது. விரைவு ரயில் வண்டியாய்ப் போகுமந்த வெள்ளப் பெருங்காட்டின் நடுவே தரைமட்டும் தப்பித்திருந்த தன் பெரியப்பா வீட்டு வாசலில் இறக்கிக் கிடத்தினான் தன்னுடைய தகப்பனை. போராட்டத்திற்கு ஆறுமுகத்தின் உடல் கிடைக்காத வெறுப்பில் சிலர் வந்து பார்க்கவில்லை.
சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டிருந்தவர்கள் தீட்டுப்பட்டுவிடுமென ஒதுங்கியிருந்தனர்.
‘‘எப்பிடி சிகாமணி சாவ எடுக்கிறான் பாக்கலாம்,’’ என்பதாகச் சபதமெடுத்துக்கொண்டு அது குறித்தான சம்பவங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள் சிலர்.
அவனுடைய தங்கைமார்களைச் சொத்துப்பங்கு கேட்கச்சொல்லித் தூண்டுபவர்கள் ஒரு பக்கம்.
“கவுருமூட்ல அஞ்சி லச்சம் குடுத்தாங்க இல்ல, அத வாங்கி வச்சிக்கின்னு ஆடறான்,” என்கிற அறிவுஜீவிகள் இன்னொரு பக்கம்.
குடித்துவிட்டு அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.
‘பொறுமை கடலினினும் பெரிது.’ பொறுத்துக் கொண்டான்.
அருகிலிருந்த அப்பாவின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். பெரிதாக யாருக்கும் சொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. இந்த வெள்ளத்தில் யார்யார் எங்கெங்கு எந்த நிலையில் இருக்கிறார்களோ. அடுத்தவர்களைப் புரிந்துகொள்வதில் அவன் அக்கறை எடுத்துக்கொண்டான், அவன் வாய்ப்பட சேதி சொன்ன ஒரே ஆள் சென்னையிலுள்ள பெரிய பெரியப்பா மகன் பாஸ்கரன்.
ஏழுமலைதாண்டி ஏழுகடல் தாண்டி எப்படியோ அவர் வந்துசேர்ந்தார். அவரோடு தண்ணீரில் தவழ்ந்தும் நீந்தியும் கிழக்கில் அமைந்த சுடுகாட்டிற்கு இடம் பார்க்கப் போனான். சுடுகாடா சூனாம்பேடு ஏரியா என்பது போல் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புதியதாகப் புதைக்கப்பட்ட பிணங்கள்கூட அடித்துப் போகப்பட்டிருக்கலாம். சுடுகாட்டை ஒட்டிய வயல்களில் பதினைந்து அடிகளுக்கு மேலாகப் பள்ளமெடுத்திருந்தது வெள்ளம். எங்கு தேடியும் இடமில்லை. கடைசியாக தன் கழனியின் சனிமூலையில் அணைமேட்டில் இடம் பார்த்து இருவருமாக அடையாளம் வைத்துவிட்டு வந்தனர்.
முன் கூட்டியே குழி எடுக்கக் கூடாது; வீட்டிலிருந்து புறப்பட்டவுடன் எடுக்கக் தொடங்கினால் வந்து சேருவதற்குள் எடுத்துவிடலாம் என்பதாகத் திட்டம் வைத்துக்கொண்டான். முன்பே குழி எடுத்துவிட்டால் ஊற்றுத் தண்ணீர் சுரக்கக் கூடும் என்பதற்காக அந்த யோசனை. வீட்டிற்கு வந்ததும் கதை வேறு மாதிரி போய்க்கொண்டிருந்தது.
“சனிக்கெழம எடுக்கக்கூடாது,”
“பெரிய மருமொவன் வரணும்.”
பெருஞ்சிரமங்களுக்கப்பால் பெட்டியும் உப்பு மூட்டை களும் வந்துசேர்ந்திருந்தன. ஊர்ப் பெரியவர் ஒருவரிடம் தென்னங்கீற்று முடையச் சொல்லிவிட்டுப் பழைய காலத்துப் பாடையொன்றைத் தயாரிக்கும் பொருட்டு சில வேலைகள் செய்துகொண்டிருந்தான்.
பொழுது நான்கு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒத்தூதுபவர்கள், குளிர் காய்பவர்கள் ஒன்றாய் வந்து குரலை உயர்த்தினார்கள்.
அதுவரை அமைதி காத்தவன், “ங்கோத்தா, எவன்னா எதுனா பேசனீங்க, வெட்டி எங்கப்பங்கூடவே பொதச்சுடுவேன்.’’
ஒருவரும் மறுவார்த்தை பேசவில்லை, அளவுக்குமேல் பலூனை ஊதினால் உடையத்தானே செய்யும்.
சடங்குகள் தொடங்கின. ஒன்றிரண்டு பேரைத் தவிர ஊர்க்காரர்கள் யாரும் வரவில்லை.
தான் வளர்த்தெடுத்த கடுக்கலூர் தம்பிமார்கள் இருபது பேர்களுக்கு மேல் சிகாவுடன் இருந்தனர். அப்பாவைக் கொண்டுபோய் அடக்கம் செய்ய அவர்கள் போது மானவர்களாக அவனுக்குப்பட்டது. ஆளுக்கொன்றாய் உப்பு மூட்டைகள், பெட்டி என கீற்றுப்பாடையில் கிடத்திய அப்பாவை அனைவருமாய்ச் சேர்ந்து தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.
பெட்டியின் மூடாப்பைத் தனியாகத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்ட குமார் அண்ணனை, அழுகையை அடக்கிக்கொண்டு பார்த்தான் சிகா.
இழுத்துச்செல்லும் ஆவேசத்துடன் போகும் அபாயம் மிகுந்த அந்தக் கழுத்தளவு தண்ணீரில் பள்ளம்மேடு பார்த்துப் போவதே பெரும் சாகசம். பிரேதத்தைத் தூக்கிக்கொண்டு போவதென்பது அவர்களுக்கு பெருஞ்சவாலாக இருந்தது. இளைஞர்களின் நம்பிக்கையைக் கரையில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கண் கலங்கினார்கள்.
இரண்டு தம்பியரை இழுத்துக்கொண்டு போனது வெள்ளம். பாடைக்கழியைத் தோள் மாற்றிவிட்டு நீந்தியோடித் தூக்கினார்கள் துணிவுள்ள மூவர். தண்ணீர் குடித்துக் கண் சிவந்துபோயிருந்த அவர்களைக் கரைக்கு போங்கள் என்று சொன்னதையும் கேட்காமல் ‘தாத்தா எங்களுக்கு யாரு தாத்தா இனிமே கூத்துப்பாட்டு பாடுவாங்க,’ என அழுதுகொண்டு வந்தார்கள்.
அதிலொரு தம்பி அரிச்சந்திர வழிபாடு செய்து முடித்தான். அவன் பள்ளிக்கூடமே போனதில்லை. பிணங்களோடு நடந்துநடந்து சுடுகாட்டில் பாட்டு பழகிக்கொண்டவன். இறுதியாக அந்த இளம் ரத்த வாலிபக் கூட்டம் குழிக்கரையில் சடலத்தை இறக்கிவைத்துப் பலத்தை நிருபித்தார்கள். அவர்களுக்குத் தெரிந்தவரை அரைகுறையாகச் சடங்குகள் நடந்தன. ஆறுமுகத்தின் உடல் பெட்டிக்குள் இறக்கப்பட்டது. அழுகையொலி கூடிக் குறைந்தது.
கடைசியாக முகம் பார்த்து உப்பு மூட்டைகளைப் பிரித்துக் கொட்டினார்கள். ஆணி அடிக்கச் சுத்தியல் எடுத்துவர மறந்திருந்தனர். இப்போது போய் எடுத்து வருவதென்பது இயலாத காரியம். எதுவும் புரியாமல் எல்லோரும் குழம்பிய நேரத்தில் சிகா குழிக்குள் இறங்கி மண்வெட்டியின் மண்டைப்பகுதியைத் திருப்பி ஆணிகளை அடித்து முடித்து மடமடவென மண்ணைத் தள்ளினான். அனைவருமாய் மண்மூட்டையைப் பிடித்துப் போட்டனர். மேடாக்கி மஞ்சள் குங்குமம் தூவி மாலை போட்டுக் கையெடுத்துக் கும்பிட்டுக் கலைந்துபோயினர்.
எல்லோரும் போன பின்பு சிகா மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தான். தன் பால்யகாலத்தின் ஒருநாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது. மூக்கின் நுனியில் அவன் அப்பாவின் சாராய வாடை முத்தம் நின்று கொண்டிருந்தது.
பதினோரு நாட்களுக்குப் பின் வானம் வெளுத்து வெள்ளம் வடியத் தொடங்கியிருந்த யாருமற்ற அந்த முன்னிரவில் சுதந்திரத்துடன் குரல் உடைந்து அழத்தொடங்கினான்.
மின்னஞ்சல்: meeramuthu2014@gmail.com