போக்கை மாற்றுங்கள்
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தொழிற்சங்கங்கள் தங்களது உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன பின்னர், சங்கம் அமைப்பதற்கும் கூட்டாகப் பேரம் பேசுவதற்குமான உரிமைகளைத் தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்துப் பல பத்தாண்டுகள் ஆன பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு சூழலை முந்திய நிலைக்கு எடுத்துச்செல்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள எளிதில் கையாள முடியாத, அதீத எண்ணிக்கையிலான தொழிலாளர் சட்டங்களே முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் இல்லாதிருப்பதற்கான முக்கியமான காரணம் என மையநீரோட்ட ஊடகங்களையும் தொழிற்துறையையும் பிரச்சாரம் செய்ய அனுமதித்துத் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் இந்த அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. வர்த்தகத்தை ‘எளிதாக்குவது’ என்ற குறிக்கோளுடன் தொழிற்சங்கங்களின் முதுகெலும்பை முறிக்கும் நோக்கத்துடன் எல்லா தொழிலாளர் சட்டங்களையும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு முன்மொழிந்திருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில் தொழிற்சங்கங்கள் தங்களது உத்தியைப் பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா? 10 மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து விடுத்திருந்த மூன்று நாள் போராட்டத்திற்கு முன்னுதாரணமற்ற ஆதரவு கிடைத்தது. ஆனால் அரசு, தொழிற்துறையின் எதிர்வினையைப் பொறுத்தவரை இதன் தாக்கம் எப்படியிருக்கிறது? இதற்கு முன்னர் நடந்த இதேபோன்ற இரண்டு வேலைநிறுத்தங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால் மையநீரோட்ட ஊடகங்கள் இதைப் பற்றிய செய்தியை மேலோட்டமாக வெளியிட, தொழிற்துறையும் அரசும் இந்தப் போராட்டத்திற்கு ‘ஓரளவு’ ஆதரவே கிடைத்ததாகச் சொல்லி, அரசு தனது தொழிலாளர் சீர்திருத்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.
தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தேசிய அளவில் கடினமாக்கிவிட்ட நிலையில் மத்திய அரசானது இந்தப் பணியை உற்சாகமாக மேற்கொள்ள மாநிலங்களைத் தூண்டுகிறது. முதலீடுகளைக் கவர்வதற்காக மாநிலங்களுக்கிடையே நடக்கும் போட்டி, ‘போட்டிக் கூட்டாட்சி’ என்று இந்த உத்தியின் ஆதரவாளர்களால் அழைக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம், 1947ஆம் ஆண்டு தொழிற்துறை தாவா சட்டம், 1961ஆம் ஆண்டின் பயிற்சிப்பணியாளர்கள் சட்டம் ஆகியவற்றைத் தொழிற்சாலை முதலாளிகளுக்குச் சாதகமாக நீர்த்துப்போகச் செய்வதில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான இராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகியவற்றுடன் ஆந்திரப் பிரதேசமும் தெலங்கானாவும் முன்னணியில் இருக்கின்றன. துறைகள் ஒழுங்குமுறைபடுத்தப்படுதல், பெரிய அளவிலான கொள்கை முடிவுகள் எடுத்தல் ஆகியவை மத்திய அரசிடம் இருக்கையில் ‘வர்த்தகச் சூழலை’த் தத்தம் மாநிலங்களில் மாநில அரசுகளே நிர்ணயிக்க முடியும்.
தொழிற்துறை தாவா சட்டத்தைத் திருத்துவதற்கான மகாராஷ்டிராவின் முன்மொழிவானது 300க்கும் குறைவான தொழிலாளர்கள் இருக்கும் தொழிற்சாலைகளுக்குச் சலுகைகளை வழங்க உத்தேசித்துள்ளது (இராஜஸ்தானும் ஹரியானாவும் இந்தத் திருத்தத்தை ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டன). இதன்படி இத்தகைய தொழிற்சாலைகள் அரசாங்கத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே தொழிற்சாலையை மூடலாம், ஆட்குறைப்பு செய்யலாம். தொடர்ச்சியாக வேலைபார்த்த ஆண்டுகளுக்கு ஓர் ஆண்டுக்கு 60 நாள் சம்பளம் என கணக்கிட்டு இழப்பீடு வழங்கினால் போதுமானது. 50 அல்லது 50க்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்படியாக 1970ஆம் ஆண்டின் ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தை அது திருத்தியது. ஆகவே தொழிற்சங்கங்கள் உள்ளூர் அளவிலும் மாநில அளவிலும் அடித்தட்டுத் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன என்றாலும் எவற்றிலும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஒன்றுதிரட்டப்படவில்லை.
1990களின் இறுதியிலிருந்தே தொழிலாளர்களின் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாறுதல்களின் காரணமாக இது எளிதான விஷயமல்ல என்பது உண்மையே. அப்போதிலிருந்தே தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பகுதியினர் முறைசாரா துறைகளிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றனர். அத்துடன் முறையான துறைகளிலும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முரண்நகைக்குரிய வகையில், நிரந்தரமான வேலையிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவில் வேலைக்கு அமர்த்தியது அரசாங்கமும் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்களுமே. இந்தத் தொழிலாளர்களை அமைப்புபடுத்துவது, ஒன்றுதிரட்டுவது என்பது பகீரதப்பிரயத்தனம்தான்.
பெரிதும் செல்லம் கொடுக்கப்பட்டுவிட்ட இந்தியத் தொழிலாளர்கள் மிகவும் வலிமையான தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர் என்ற பொதுமக்களின் கருத்தையும் தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தொழிலாளர் சட்டங்களின் காரணமாகவே உற்பத்தித் துறை வளரவில்லை என்று தொழிற்துறை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறது. இப்போது அந்தக் கருத்து மேலும் தீவிரமடைந்திருக்கிறது. ஆனால் இந்தச் சட்டங்கள் மிகக் குறைவாகவே அமல்படுத்தப்பட்டன, பெரும்பாலும் மீறப்பட்டன; அத்துடன் வேலைகள் ஒப்பந்தம் விடப்படுவது அதிகரித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரித்துவிட்டனர்; ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இந்தச் சட்டங்கள் பாதுகாப்பு அளிப்பதில்லை போன்ற உண்மைகள் வெளியே சொல்லப்படுவதேயில்லை.
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பையும் சேர்த்துக் கொண்டு (இதன் மூலம் மும்முனைப் பேச்சுவார்த்தையை சாத்தியப்படுத்த முடியும்) பொருள்பொதிந்த பேச்சு வார்த்தைகளை நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவதற்கான முயற்சியை எடுப்பது அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் முன்னுள்ள சவாலாகும். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள் இதற்கு உதாரணம். இத்துறைகளிலுள்ள மோசமான வேலைக் கலாச்சாரத்தின் காரணமாகவே தனியார்மயமாக்கம் தேவைப்படுகிறது என்று அரசாங்கத்தாலும் ஊடகங் களாலும் விமர்சிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் புத்துயிர்ப்புத் திட்டங்கள் (ரிவைவல் பேக்கேஜ்) உருவாக்கப்படுகிறபோது அதன் உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. உதாரணமாக, 10 பொதுத்துறை வங்கிகளில் மூலதனத்தை மேலும் அதிகரிக்க போடப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்றுதான் ஊழியர்களின் ஆதாயங்களைக் குறைப்பது. வங்கித் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் இதற்கு எதிரானது மட்டுமல்ல, வாங்கிய கடன்களைத் தனியார் கார்ப்போரேட் நிறுவனங்கள் திருப்பிச்செலுத்தாதிருப்பதற்கும் எதிரானது; அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கை அகங்காரமானது, யதார்த்தமற்றது என்று ஊடகங்கள் சொல்வதற்கும் எதிரானது ஆகும். குறைந்தபட்சக் கூலி பெரும்பாலும் அமல்படுத்தப்படாதிருப்பது, எல்லா தொழிற்சாலைகளிலும் வேலைகள் ஒப்பந்தங்களின் மூலம் செய்யப்படுவது ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்களை (இந்த இரண்டு பிரச்னைகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது) தொழிற்சங்கங்கள் எதிர் கொண்டாக வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் தொழிற்சங்கங்களின் பேரம்பேசும் ஆற்றலைக் குறைத்துவிட்டன.
தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும் ஆட்குறைப்பிற்கும் வழிவகுக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களானது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பதையும் தொழிலாளர் வர்க்கத்தின் நலனானது பொதுமக்களின் நலனும் கூட என்பதையும் விளக்குவது தொழிற்சங்கங்களின் முன்னுள்ள மாபெரும் சவாலாகும். முற்போக்கான அரசியல், சமூக இயக்கங்களுக்கு ஆதரவளிப்பது என்பது இதைச் சாதிப்பதற்கான வழிகளுள் ஒன்று.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, நவம்பர் 18, 2017
தமிழில்: க. திருநாவுக்கரசு