பேட்டை
சாப்பிட்டு முடித்து, அவன் காம இச்சைக்கு ஒத்துழைத்தற்குப் பிறகு சோர்வுடன் பாயில் சாய்ந்தவளுக்கு கிளியாம்பாளைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆவல் பிறந்தது. சுவாரசியமான ஒன்றைப் பாதியில் நிறுத்திய வருத்தத்தைச் சமன்செய்ய, படுத்தவாக்கிலிருந்தே சுவரில் மாட்டியிருந்த கிளியாம்பாளின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நகோமியம்மா சொன்னதை வைத்து மாமியார் பற்றிய சித்திரத்தைத் தன் கற்பனா சக்தியின் துணையால் இன்னும் விசாலமாக மனக்கண்களில் ஓட்டி அதில் லயித்தவளுக்கு உறக்கம் எப்படி வரும். மீன்பாடி வண்டியின் சத்தம் போல சீரான இடைவெளியில் குறட்டை விட்டுத் தூங்கிய குணசீலனுக்கு அருகில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு இருட்டில் நீந்தினாள்.
காலையில் சமையல் வேலைகளை முடித்ததும் அவனை வேலைக்கு அனுப்பி வீட்டை ஒப்புக்குச் சாத்திவிட்டு வெளியே வருகையில் பத்து மணி இருக்கும். நகோமியம்மா வீட்டு வாசலில் போய் ந