புதிதினும் புதிது
அண்மைக்கால இலக்கிய விசாரிப்புகள் இரண்டு சிந்தனையைத் தூண்டிவிட்டன. பதிப்பாளர் ஒருவர் தாம் வெளியிடவிருக்கும் தமிழ்க் கவிதைத் திரட்டுக்காகப் புதிதாக எழுதிவரும் கவிஞர்களின் பட்டியலைக் கேட்டார். மலையாளப் பதிப்புலகைச் சேர்ந்த நண்பர் தமிழ் புனைகதையில் நடைபெற்றிருக்கும் மாற்றங்களையும் புதுவரவுகளையும் தெரிந்துகொள்ள விரும்பினார். வாசிப்பில் தங்கிநின்ற நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி விரிவாகவே இந்த இருவரிடமும் பேசியிருந்தேன். எனினும் அது போதாதென்று பட்டது.
கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் புத்தகக் காட்சிகளையொட்டிய நூல் வெளியீடுகள், தனித்தனியான இலக்கியச் சந்திப்புகள் இவற்றில் புதியவர்கள் பலர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள். அதுபோலவே பிற கலைத்துறைகளிலும் புதுவரவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்களுடைய படைப்புகள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. காலச்சுவடு ஆசிரியர் கலந்துரையாடலில் இந்த எண்ணத்தைச் செயல்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைச்சலே, தொடர்ந்து வரும் பக்கங்களின் கதைகளும் ஆங்காங்கே இடம்பெறும் புதிய திறமைகளைப் பற்றிய குறிப்புகளும். இந்த முன்னெடுப்புக்கு உதவுமாறு முகநூல் வழியாகக் கேட்டிருந்தோம். அதன் விளைவு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. பலரும் புதிய படைப்பாளிகளையும் புதிய பண்பாட்டு செயல்பாட்டாளர்களையும் பற்றி குறிப்புகளையும் சிலர் விரிவான கட்டுரைகளையும் அனுப்பினார்கள்.
இந்த அனுபவத்தில் சில சுவாரஸ்யங்களையும் அவதானிக்க முடிந்தது. மூத்த எழுத்தாளர்கள் / கவிஞர்கள் பலரும் புதிய முயற்சிகளைப் பற்றி அறிந்திருக்கவே இல்லை. அதுபோலவே புதியவர்கள் பலர் தமது நண்பர்களையோ தங்கள் குழாமைச் சேர்ந்தவர்களையோ தவிர பிறரது படைப்புகளை வாசித்திருக்கவும் இல்லை, பிற முயற்சிகளைப் பொருட்படுத்துவதுமில்லை என்பன கண்டறிந்த சுவாரஸ்யமான உண்மை.
காலச்சுவடுக்கு கிடைத்த படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும் அறிமுகக் குறிப்புகளும் வரும் இதழ்களிலும் தொடர்ந்து இடம்பெறும். இலக்கியத்தின் அடிப்படையான நிரந்தர, குணம் ‘புதிதினும் புதிது’ என்பதுதானே.
சுகுமாரன்
பொறுப்பாசிரியர்