கிரிஷாந்
எழுத்து, உரையாடல், சமூகச் செயற்பாடு என மூன்று தளங்களில் சமாந்தரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கிரிஷாந், இலங்கையின் இளைய தலைமுறையினரில் குறிப்பிடத்தக்கதோர் அடையாளம். ‘மயான காண்டம் - பிந்திய பதிப்பு’ என்ற புதிய தலைமுறையின் கவிதைத் தொகுதியில் கிரிஷாந்தின் கவிதைகள் வெளியாகிக் கவனத்தைக் கோரின. செறிவடர்த்தியான மொழியில் படிம அடுக்குகளின் வழியே உணர்வைப் பகிர முனையும் கவிதைகள் செங்குத்தான மலைப்பாறையை, மின்னலை, மூண்டெரியும் பெருந்தீயை உணரும்போது ஏற்படும் மனநிலையை நமக்குள் உருவாக்குகின்றன. எதிலும் தீவிரத்தைக் குவிப்பதே கிரிஷாந்நின் இயல்பு.
‘விதை குழுமம்’ என்ற சமூகச் செயற்பாட்டியக்கத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் வழியாக சமூகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார் கிரிஷாந். குறிப்பாக சூழல் மாசுபற்றிய விழிப்புணர்வு, குடிநீர்ப் பிரச்சனை, படையினரிடத்திலுள்ள மக்களின் நிலங்களை மீட்கும் போராட்டங்கள் போன்றவற்றில் விதை குழுமம் அதிர்ச்சியை உண்டாக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், விதை குழுமம் நடத்திய போராட்டங்கள் பலரையும் திரும்பிப் பார்க்கவும் அந்தப் போராட்டங்கள் குறித்து உரையாடவும் வைத்தன. இதில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையைப் பற்றிய போராட்டம் வடமாகாணசபைக்கு நெருக்கடியை உண்டாக்கியதுடன், கிரிஷாந்தை முதல் நிலைப் போராட்டக்காரராக்கியது. இது காரணமாகப் போர், இன ஒடுக்குமுறை, இன மேலாதிக்கவாதம் போன்றவற்றினால் சிதைவடையும் மரபுருக்களைப் பேணுதல், தேடிக்காணுதல் போன்ற செயற்பாடுகளைச் சக நண்பர்களுடன் மேற்கொண்டு வருகிறார். ‘தொன்ம யாத்திரை’ என்ற அமைப்பின் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றோடு, சினிமாவுக்கான அமைப்பை ‘நிகழ் படம்’ என நண்பர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் மாற்று சினிமா உருவாக்க முயற்சிகள், அயல் சினிமா, உலக சினிமா காட்சிப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் நடக்கின்றன. கூடவே புதிய சொல் என்ற இதழின் ஆசிரியர் குழுவிலும் செயற்படுகிறார். ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமாகவே மாற்றங்களையும் சமூக வளர்ச்சியையும் அவர் தொடர்ச்சியாக எழுதி, பேசி வருகிறார்.
& கருணாகரன்