புதிர்
எங்களிடமில்லை அமைதியான ஓரிரவும்
தீப்புண்கள் பெருகி
எல்லா நாட்களும் வலியில் துடித்தழிகின்றன
எதைக் கொண்டு எதை மீட்பது?
எல்லா ரகசியங்களும் அறிந்திருக்கும்
அந்த மௌனம் இன்னும் உடையாதிருப்பதேன்?
தோற்றுக் கொண்டிருப்பதும்
வென்று கொண்டிருப்பதும்
சம நேரத்தில் நிகழுமொரு மாய வித்தை.
எப்படி இதைப் பகிர்ந்து கொள்வது?
பகிரப்படாமலே அந்தரத்தில் மிதக்கப்போகிறதா
இந்த மௌனம்?
யாருக்குத் தோல்வி
யாருக்கு வெற்றி?
என்றறிய முடியா மாயப் புதிர்
கண்ணாடியாக முன்னே எழுந்து நிற்கிறது
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கென்று தெரியவில்லை
நினைவுகளின் வழிப்பாதை.
மின்னஞ்சல் - poompoom2007@gmail.com