பாபாவுக்கு ஒரு கடிதம்
நமது குதிரைகள்
வீடு திரும்பிவிட்டனவா பாபா?
உயரமான புல்படர்ப்புகளுக்கு இடையில்
அந்த பூதங்கள் என்னைத் துன்புறுத்தியபோது
அழுவதற்கு அவை மட்டுமே உடனிருந்தன
குன்றின் சரிவுகளில்
சிவப்புப் பூக்கள் தலைகுனிந்து நின்றன
நீர் ஊற்றுகள்
என் குருதியைப்போல உறைந்து போயின
அந்த வெள்ளை உடுப்புகள்
என்னைத் தேவதைக்குப் பலியிடக்
கொண்டு செல்கிறார்கள் என்பதை
வெள்ளைக் குதிரைகளைக்
கனவு காணும் மயக்கத்தில்
நான் அறியவில்லை பாபா
பாதிமயக்கத்தில்
கெக்கலிக்கும் சிரிப்புகளையும்
அட்டகாசக் கூச்சல்களையும்
குதிரைகளின் அழுகைகளையும் கேட்டேன்
விழித்தபோது
எங்கும் ரத்தமாக இருந்தது, பாபா
குதிரைகளைக் காணவில்லை
புல்லும் பூக்களும் பட்டுப் பூச்சிகளும்
மறைந்து போயின
நான்
தாகத்துடன் அலறினேன்
அவர்கள்
எனக்குத் தண்ணீர் தரவில்லை
ஒருவன் வந்தான்
பிறகு இன்னொருவன் வந்தான்
மாமா என்னை அழைப்பதைக் கேட்டேன்
அவர்கள் என் வாயில்
துணிகளைத் திணித்திருந்தார்கள்
என் குரல் கேட்கவில்லை
‘ஹராம் பிறப்பு’ என்று உறுமி
அவர்கள் என்னைக்
கொம்புகளால் வெட்டிக் கிழித்தபோதும்
குளம்புகளால் மிதித்தபோதும்
பாபா,
நான் உங்களை நினைத்தேன்
நமது மதம் எது பாபா?
எனக்கு ஒரு புது உடை வேண்டும் பாபா
நாம் எங்கேயாவது போய் விடலாம்
இந்தச் சுவர்கள் கூட
‘ரத்தம், ரத்தம்’ என்று
முணுமுணுப்பதைக் கேட்டேன்.
இது நமது நாடு அல்ல, பாபா
நாம் உயர்த்தும் கொடியின் சிவப்பில்
பெண் சிசுக்களின் ரத்தத்தின் நிறம்
பச்சை, நமக்கு அனுமதியில்லாத
புல் மேடுகளுடையது
வெண்மை, நாம் கண்டிராத
புலரியுடையது
சக்கரம், தினமும் நம்மை
துண்டுதுண்டாக அரிந்து தள்ளுவது
போய்விடுங்கள், பாபா
பிரியமான குதிரைகளை அழைத்துக்கொண்டு
மழையை அழைத்துக்கொண்டு
மனிதர்களுக்குக் கண்ணீரும்
பூக்களுக்குக் கோரைப்பற்களும் இல்லாத இடத்துக்கு
அலைந்து திரிபவர்களின் உதிரத்துக்காக
தும்பிகள் தாகம் கொள்ளாத இடத்துக்கு
கொடிகளை நாட்டப்
பிசாசுகள் பிஞ்சு உடல்களைத் தேடாத இடத்துக்கு
எல்லைகளே இல்லாத இடத்துக்கு
அப்போது நான்
குருதியைத் துடைத்து அகற்றி
என் பழைய சிரிப்புடன் திரும்பி வருவேன்
எல்லாம் திரும்ப வரும்
காடுகள், அருவிகள், பறவைகள்
எல்லாமும்.
மலையாளத்திலிருந்து தமிழில் – சுகுமாரன்