ஏழரைப் பங்காளி
அர்ஷியாவைச் சந்திக்கும்வரை அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. 1999ஆம் ஆண்டு மதுரை சிந்தனைச் சரம் மாத இதழில் நான் பணிபுரிந்தபோது, தான் எழுதிய கதையைப் பிரசுரத்திற்காகக் கொண்டுவந்திருந்தார். வார இதழ்களில் பல கதைகளைத் தான் எழுதியிருப்ப தாகச் சொன்னார். எனக்குச் சங்கடமாக இருந்தது, இதழ்களையெல்லாம் வாசித்துக்கொண்டுதானே இருக்கிறோம், இவர் பெயர் ஏன் கவனத்தில் பதியாமல் போனது என்று.
அவர் என்னை அறிந்துகொண்டதும் கூட குமுதம், குங்குமம், தினமணி கதிர் போன்ற பிரபல வார இதழ்களில் எழுதியிருந்த கதைகளின் மூலம்தான். நான் அதுவரை எழுதியிருந்த சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்களை அவர் வாசித்திருக்கவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். இப்படி இருவரும் ஒருவரையொருவர் அரைகுறையாகவே இடைவழியில் சந்தித்துக்கொண்டோம். நட்பு நீண்டது. அது அவருடைய குடும்ப அறிமுகம் வரையும் கொண்டுவந்து சேர்த்தது.
அவர் அப்போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். உரையாடவும் மாலைநடை போகவும் என நட்பு விரிந்தது. புதன்கிழமை தோறும் பெரியார் பேருந்துநிலையத்திலுள்ள பாரதி புத்தக நிலையத்தில் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் ஒன்றுகூடுவோம். முனைவர்கள் தி.சு.நடராசன், செ. போத்திரெட்டி, அ. சிவக்கண்ணன், பா. ஆனந்தகுமார் ஆகியோரும் நூலகர் பாண்டுரங்க நடராஜன், தி. ரங்கசாமி, வழக்கறிஞர் சாமிநாதன் உள்ளிட்ட மேலும் சிலரும் ஒருங்குகூடி இலக்கியம் கதைப்போம். ஓரிருமுறை ந. முத்துமோகன் வந்திருந்தார். இரண்டரை மணி அங்கிருப்போம். அர்ஷியாவிடம் இருசக்கர வாகனம் இருந்தது. புத்தக நிலையம் சென்று அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். இதன்பின் உறவு வலுப்பட்டது. மீனாட்சி மிஷன் சார்பில் மாதம்தோறும் மருத்துவ இதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார்கள். அந்த இதழ்ப் பொறுப்பில் அர்ஷியா இருந்தார். இதழை அச்சுக்குக் கொண்டுசெல்வதாயிருந்தால் அவர் தீக்கதிர் அலுவலகம் போயாக வேண்டும். பணிகளை அவ்வப்போது பார்வையிட அவர் அங்கு செல்ல வேண்டியிருந்ததால் என்னையும் அழைத்துச் செல்வார். அங்கு தோழர்கள் எஸ்.ஏ. பெருமாள், மதுக்கூர் ராமலிங்கம், காஸ்யபன், ஸ்ரீரசா, சமயாசமயங்களில் மேலாண்மை பொன்னுச்சாமி, சோழ. நாகராஜன் ஆகியோரைச் சந்தித்து அளவளாவுவோம். இந்தத் தோழமை உறவுகளைச் செம்மை செய்ததன் வாயிலாக அவர் தன் எழுத்தின் இரண்டாம் கட்டத்தை உணர்ந்துகொண்டார். ஆனால் அதற்கான முயற்சிகள் அப்போது அவரிடம் இல்லை. இந்த உறவுகள் கிடைத்தபின்னரே தமிழ் எழுத்துலகின் பல ஜாம்பவான்களையும் படைப்புகளையும் அவர் வாசிக்கலானார்.
மதுரையில் எனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடியின்போது மிக்க உறுதுணையாக இருந்தார். அப்போது நாங்கள் பல இடங்களுக்கும் அலையவேண்டி நேரிட்டது. தன் அனைத்து வீட்டு வேலைகளையும் ஒதுக்கி என்னோடு எல்லா இடங்களுக்கும் வந்தார். எனக்காகப் பிறனைப் பகைத்துக்கொண்டார். சில மாதங்களில் நான் சென்னைக்குப் பயணமானேன். அன்று காலையிலிருந்தே அவர் என்னைவிட்டு நீங்கவில்லை. இரவில் பயணத்திற்காக விடைபெறும் தருணத்தில் நான் எதிர்பாராத வண்ணம் தளுதளுத்தார்; கண்ணீர் சிந்தினார். என்னால் அவரை ஆற்றுப்படுத்த முடியவில்லை.
நான் சென்னை சென்றபின் கொஞ்ச நாளைக்கப்புறம் அவர் என் தொடர்பில் இல்லை; மற்றவர்களின் தொடர்பிலும் இல்லை என்று தெரிந்தது. தொடர்பு அறுபடும் காலத்திற்கு முன் அவர் மீனாட்சி மிஷனையும் விட்டு புதிய காற்று, தீக்கதிர் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். அவரால் எங்கும் நிலைத்திருக்க முடியவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். ஒவ்வொரு வார்த்தையிலும் வேறொரு வார்த்தை ஒளிந்திருப்பதாக அவர் கருதிவிடக் கூடியவர்; முறுகலான உறவுமுறைதான் அனைவரிடமும். அந்த முறுகலை வைத்துக்கொண்டே அவர்களின் உறவுகளைப் பேணுவார்; சும்மா இருக்க மாட்டார்; சுற்றிச்சுற்றி வருவார். வரும்போதே கண்ணில் தட்டுப்படுகிற காட்சிகளில் கதைகளைச் சேகரிப்பார்.
2008ஆம் ஆண்டில் மீண்டும் தொடர்பில் வந்தார். அப்போது நாவல் எழுதிவிட்ட செய்தியைச் சொன்னார். தனது மூத்தோர் இழையைப் பற்றிக்கொண்டு அவர்களின் வரலாற்றை வம்சப் பெயரான ‘ஏழரைப் பங்காளி வகையறா’வாக எழுதினார். நாவலை சரிபார்க்க வேண்டுமெனக் கூறி அதனை என்னுடைய சென்னை முகவரிக்கு அனுப்பிவைத்தார். ஒருமுறைக்கு இரண்டுமுறை வாசித்தேன். அதற்கு நீண்ட அவகாசத்தை எடுத்துக்கொண்டேன். சில ஆலோசனைகளைக் கூறினேன். அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை.
அந்த நாவலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது அவரை மிகவும் குளிர்வித்தது. அது பெரும் ஊக்கமாக அமைந்தது. தொடர்ந்து நாவல்களை எழுதிக் குவித்தார். எல்லாம் மதுரையைச் சுற்றியே வட்டமிட்டன. அவர் மதுரையை மிகவும் நேசித்தது ஒரு காரணம். மதுரையைப் பொறுத்தமட்டிலும் அது அவருக்குப் பெரிய கிராமம். எங்கிருந்தோ மதுரைக்கு வந்த அவரின் முன்னோர்கள் அங்கேயே காலூன்றியதாலும் அவருடைய பால்ய விழிகளில் மதுரை மட்டுமே வண்ணமயமாக விரிந்திருந்ததாலும் அதைச் சளைக்காமல் எழுதினார்.
நாவல்களை எழுதுவதில் வேகம் இருந்தது. ஒரு நாவலை முடிக்கும்போதே அடுத்த நாவலுக்கான திட்டம் அவரிடம் இருந்தது. தலைப்புகளை முதலிலேயே தேர்ந்திடுவார். ஒருவேளை அந்தத் தலைப்புகளே அவரை எழுதவும் ஊக்குவித்திருக்கலாம். அந்த வேகத்தை எழுதுவதில் காட்டிவிட்டு அவற்றைச் செம்மை செய்வதில் காட்டாமல் இருந்துவிட்டார் என்பது என் அபிப்ராயம். ‘ஏழரைப் பங்காளி வகையறா’வில் அவருடைய காட்டாற்று வெள்ளம் கரைமண் தெரியாமல் புரண்டு எழுந்தது. அடுத்தடுத்த நாவல்களில் செம்மை செய்யலாம் என்று அவரிடம் கூறியிருந்தேன். முதல் நாவலுக்குப் பிறகு மதுரையில் நண்பர்களின் பெருக்கம் கூடுதலாகியது. கிடைத்த நட்புகளைப் பேணிக்கொண்டார். இரண்டாவது நாவலை என்னிடம் தரவில்லை. அதுபற்றிய தகவலையும் அவர் என்னிடம் சொல்லவில்லை. அவருடைய முதல் நாவல் வெளியீட்டு விழாவை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அது அவருக்குப் பெரிய மனக்காயமாகப் பதிந்துவிட்டது.
தமிழ் இந்துவில் பணியிலிருந்தபோது கண்ணதாசன் குறித்த கட்டுரையொன்றை எழுதினேன். மறுநாள் காலையில் நான் கண்விழிக்கும் அந்தத் தருணத்தில் அவருடைய அழைப்பு வந்தது. அவ்வளவு காலையில் அவர் அழைப்பது ஏன் என்று பதற்றமாகப் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தேன். அவர் காலை நடைப்பயிற்சியில் இருந்திருக்கிறார். கண்ணதாசன் கட்டுரையில் அவருக்கு அப்படியென்ன கருத்து மாறுபாடுகள் இருந்தனவோ? கடுமையான சொற்களால் உரையாடினார். சமாளிக்க முடியவில்லை. அந்தக் கோபம் பலர்மீதும் படர்ந்து சென்றது.இருப்பினும் உறவுகளைப் பேணியவர். அந்தக் கோப அலைக்குப் பின் அவர் சென்னைக்கு வந்தார் - மனைவி, மக்களோடும் கூட. அவர் மகளின் நேர்காணல்கள், வேலை வாய்ப்புகள் போன்ற தருணங்களில் என்னுடைய துணையை நாடினார். தெற்குக்கும் மேற்குக்குமாக அலைந்தோம். பேருந்து புறப்படும் அந்தக் கடைசித் தருணம் வரைக்கும் என் நிழலில் நின்றுகொண்டிருப்பார்.
மகள் நிலோவ்னாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை அவருக்குச் சென்னையிலிருந்து அனுப்பிவைத்திருந்தேன். அதைப் பெற்றுக்கொண்டதும் நான் எப்போது ஊருக்கு வருவேன் என்று விசாரித்துக்கொண்டார். நான் ஊர் போய்ச்சேர்ந்த மறுநாள் மதுரையிலிருந்து வீட்டுக்கு வந்தார். ஏற்கெனவே அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்திருக்
கிறார். அதனால் வீட்டில் அனைவரும் அவரைக் கனிவாக வரவேற்றோம். அவர் சும்மா வரவில்லை. கைநிறைய பணத்தோடு வந்திருந்தார். நாங்கள் எதிர்பாராத நேரத்தில் பணத்தை எடுத்து நீட்டினார். மகளின் திருமணச் செலவை என்னுடைய பால்யகால திருச்செந்தூர் நண்பர்கள் ஏற்றிருந்தார்கள். அதே நிலையில் இவரும் என் மனைவியின் கையில் பணத்தைத் திணித்தார்; திருமணத்திற்கும் நேரில் வந்து வாழ்த்தினார்.
தொலைபேசியில் உரையாடினால் மணிக்கணக்கில் பேசக்கூடியவர். சில மாதங்களுக்கு முன் பேசியபோது புதிய நாவலுக்கான திட்டம் பற்றிக் கூறினார். மொழிநடையில் மாற்றம் கொண்டுவர, திருமுருகாற்றுப் படையை வாசித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
அவர் மனதுக்குள் மதுரை அதன் நிலப்பரப்பை விடவும் கூடுதலாக விரிந்திருந்தது. அந்த மண்ணுக்குள் அவர் மேலும் பல கதைகளோடேயே புதைந்திருக்கிறார். அவை என்றேனும் வெளிவரக் கூடும். சென்னைக்கு என்னை அவர் வழியனுப்பி வைக்கும்போது அவர் கண்களில் தளும்பிய கண்ணீர் இப்போது உருவம் மாறித் தளும்புகிறது.
மின்னஞ்சல் - kalanthaipeermohamed@gmail.com