நீட்: தேவைகளும் கோரிக்கைகளும்
கடந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நடைபெற்ற போராட்டம், இவ்வாண்டு நீட் தேர்வுக்கான மையங்களைத் தமிழகத்திலேயே ஒதுக்க வேண்டும் என்பதாக மாறிப்போயிற்று. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் மாநில மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. உடைக் கட்டுப்பாடு, நகைக் கட்டுப்பாடு, நேரக் கட்டுப்பாடு எனப் பல கட்டுப்பாடுகள். கடந்த ஆண்டு மாணவி அனிதா மரணம். இவ்வாண்டு பெற்றோர் இருவர் மரணம். எதிர்ப்புத் தெரிவிக்கும் தற்கொலைகள். தேர்ச்சி பெறாத சில மாணவர் தற்கொலைகள். இவ்வாறு நீட் தேர்வு உயிர்ப்பலி கொண்டு ஒரு களேபரமாய் முடிந்திருக்கிறது. அனிதா மரணத்தைப் போல இந்த ஆண்டு நிகழ்ந்த மரணங்கள் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கவில்லை. போகப் போக இது சகஜம் என்னும் மனநிலை உருவாகிவிடக் கூடும்.
எத்தனைவிதமான பிரச்சினைகள் மக்களை எதிர்
கொண்டாலும் அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, அலட்டிக்கொள்ளாத, அசைந்து கொடுக்காத அரசுகளை நாம் பெற்றிருக்கிறோம். ராஜஸ்தான் மாநிலத் தமிழ்ச் சங்கம் அங்கே தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு உதவ மேற்கொண்ட நடவடிக்கைகள் அளவுக்குக்கூட மத்திய, மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை. கேரள அரசு கொடுத்தது போன்ற தார்மீக ரீதியான நம்பிக்கையைக் கொடுக்கவும் தமிழக அரசால் இயலவில்லை. ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என அறிவித்ததோடு சரி. அத்தொகையை எவரேனும் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தனிநபர்கள், சிறு அமைப்புகள் மக்களுக்கு உதவ ஓடோடி வந்தன. ஓராயிரம் கைகளைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. உடனடியாக உதவி மையம் ஒன்றைத் திறந்து யாருக்கெல்லாம் பிரச்சினையோ அவர்கள் தமக்கு அருகிலேயே வசதியான இடத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம். அது இயலாது என்றால் தேர்வு மையம் உள்ள ஊருக்குச் செல்ல உரிய வகையில் பயண ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கலாம். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றால் மாநில அரசுக்கும் தம் மக்களைப் பற்றிய அக்கறை இருக்க வேண்டாமா?
இத்தனை பிரச்சினைக்குரிய ஒரு நுழைவுத் தேர்வை அரசு நடத்துவதற்கான தேவை என்ன இருக்கிறது? தேர்வு நடத்துவதால் கிடைக்கும் வருமானம், தனியார் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாய் வாய்ப்புகள், பயிற்சி மையங்களின் சம்பாத்தியம் ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மாணவர்களை மனரீதியாகத் துன்புறுத்துவதும் அலைச்சலுக்கு உள்ளாக்குவதும் மிகக் கொடுமை. எந்த நுழைவுத்தேர்வும் போட்டித்தேர்வும் மாணவர்களுக்கு நன்மை பயப்பனவல்ல. கல்வி நிறுவனங்களும் பயிற்சி மையங்களும் தனியார் சம்பாத்தியத்திற்கு உதவுபவையே. மேலும் தேர்வறைகளில் மாணவர்களைக் குற்றவாளிகள் போல நடத்தும் இப்படிப்பட்ட விதிமுறைகள் வேறு எந்தத் தேர்வுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை அந்தச் சமயத்தில் தம் வேகத்தைக் காட்டுகின்றன. சில அமைப்புகள் தம் அரசியல் தேவைக்குப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. வேறு ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. போராட்டங்களைச் சிறிதும் பொருட்படுத்தாத அரசாங்கம், ஒரு போராட்டம் தானாகவே வலுவிழந்து போகட்டும் என வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறது. போராடுவோரின் கோரிக்கைகளைக் கேட்க அரசாங்கத்துக்குக் காதுகளும் இல்லை; அவர்களோடு பேச வாயும் இல்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போகுமானால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தேசத் துரோகிகள் என முத்திரை குத்திக் கைது செய்வதற்கும் துப்பாக்கிக் குண்டு பொழிந்து போராட்டக்காரர்களின் உயிரைப் போக்குவதற்குமான வழிமுறைகளை அரசாங்கம் கையிலெடுக்கிறது.
போராட்ட வழிமுறைகளை மாற்றவோ தொடர்ந்து எடுத்துச் செல்லவோ மக்கள் திரளை இணைக்கவோ வழிகாட்டும் தலைமையும் இல்லை. யார் மீதும் நம்பிக்கையற்ற மக்கள் திரள் தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவும் தயாராக இருக்கின்றது. நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கும் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் பிள்ளைகளைச் சேர்க்கவும் தனியார் பயிற்சி மையங்களை நாடவும் ஓடும் காட்சிகள் இப்போது எங்கும் தென்படுகின்றன. ஏற்கெனவே கல்வியைத் தொழிலாக்கிப் பணம் சம்பாதித்து ருசி கண்ட தனியார் நிறுவனங்கள் நீட் தேர்வையும் காசாக்கும் தந்திரங்களைச் செய்து மக்களைச் சுரண்ட களத்தில் இறங்கிவிட்டன.
இச்சூழலில் கல்வியாளர்கள், சமூகச் செயற் பாட்டாளர்கள், மக்கள் நலன் நாடும் கட்சிகள் தம் செயல்பாட்டுக் களத்தை விரிவாக்கவும் மாற்று வழிகளைச் சிந்திக்கவும் வேண்டும். முதலாவதாக உயிர்ப் பலிகளை நிறுத்துவது அவசியம். மருத்துவக் கல்வி பயிலவில்லையானால் வாழ்க்கையே இல்லை என்னும் மனநிலைக்கு மாணவர்கள் ஆளாகிறார்கள். அதற்குக் காரணம் பெற்றோரின் எதிர்பார்ப்பு, அழுத்தம், அவற்றுக்கு வடிவம் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், சமூக விழுமியங்கள் ஆகிய அனைத்துத் தரப்பும்தான். மருத்துவக் கல்வியைத் தவிர ஏராளமான துறைகளில் கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அனைத்துத் தரப்புக்கும் உணர்த்தவும் அவற்றை நோக்கிச் செல்லவுமான மனநிலையை உருவாக்கி வளர்க்க வேண்டும். இந்த உலகில் வாழ்வதற்கான நம்பிக்கையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மருத்துவக் கல்வியை நோக்கிய பயணத்தில் நேரும் இடர்களை எளிதாகக் களையும் வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும். மக்களுக்கு உதவும் மனப்பான்மையை அரசாங்கம்தான் இழந்திருக்கிறதே தவிர, சக மனிதர்களுக்கு உதவும் நல்லுள்ளத்தை மக்கள் இன்னும் இழக்கவில்லை. அத்தகைய உள்ளங்களை ஒருங்கிணைத்து மாணவர்களை நோக்கிக் கரம் நீட்டச் செய்ய வேண்டும். ஆங்கில மருத்துவக் கல்வி மட்டுமல்ல, இந்திய மருத்துவக் கல்வித் துறைகளும் இருக்கின்றன என்பதை உணர்த்தி அவற்றை நோக்கிய பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். கேரளத்தில் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவக் கல்வியும் மருத்துவ முறைகளும் பெரிதும் வளர்ந்திருக்கின்றன. அத்தகைய முன்னுதாரணங்களை எடுத்து சித்த மருத்துவம் போன்றவற்றை வளர்த்துச் செல்ல வேண்டும்.
அதே போலக் கோரிக்கைகளையும் மாற்ற வேண்டியிருக்கிறது. மிகக் குறைவான மருத்துவக் கல்லூரிகள், எல்லைக்குட்பட்ட இடங்கள் என்றிருப்பதை மாற்றி இன்னும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்னும் முழக்கம் என்னவாயிற்று எனக் கேள்வி எழுப்ப வேண்டும். மருத்துவம் படித்தால் ஏராளமாகச் சம்பாதிக்கலாம் என்னும் எதிர்பார்ப்புத்தான் அக்கல்விக்கான மவுசுக்கு முக்கியமான காரணம். வீதிக்கு ஒரு மருத்துவர் என்றாகட்டும்; மோகம் ஒழியட்டும்.
இவ்விதம் மாற்று வழிகளைச் சிந்தித்துப் போராட்ட முறைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. மக்களைப் பலி கொடுத்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சுயநல அரசை நம்பாமல் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள மக்கள் பழகியாக வேண்டிய சூழலில் வாழ்கிறோம். அதை உணர்ந்து செயல்படுவதே இன்றைய தேவை.