கருத்துரிமைமீது விழுந்த அடி
பென் இன்டெர்நேஷனல் (PEN International), பென் Delhi மற்றும் South India அமைப்புகளோடு மரியாதைக்குரிய சுஜாத் புகாரி 2018 ஜூன் 18ஆம் நாள் ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டனம் தெரிவிப்பதில் தன்னை இணைத்துக்கொள்கிறது. இப்படுகொலையின் நோக்கம் இன்னும் தெளிவாகாத நிலையில் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் புகாரி காஷ்மீரில் அமைதிக்காக குரல் கொடுது தீவிரவாதம், அரசியல், மனித உரிமை பிரச்சினைகள் பற்றி ஏராளமாக எழுதியவர் என்பதை பென் புரிந்துகொள்கிறது. இக்கொலையை முழுமையான, பாரபட்சமில்லாத புலனாய்வு மேற்கொண்டு படுகொலைக்குக் காரணமானவர்களை நீதிக்கு முன்பாக நிறுத்தித் தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
சுஜாத் புகாரி அபாயகரமானதொரு பகுதியில் அறிவுபூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தி அமைதிக்கான குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர். மாநிலத்தின் அமைதி குறித்த அக்கறையுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தவர். அமைதியற்ற பகுதிகளில் பத்திரிகையாளராகப் பணிபுரிவது எளிதானது அல்ல. ஆனால் புகாரி தனது நடுநிலையான தொடர் பணியால் அனைத்துத் தரப்பினரிடமும் நம்பகத்தன்மையை வளர்த்துக்கொண்டவர். பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரில் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகி மாநில அரசு கவிழ்வதற்கு புகாரியின் படுகொலையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் நிர்வாகங்கள் இக்கொலையை முனைப்போடு விசாரித்து, காரணமானவர்களின்மீது வழக்குத் தொடர வேண்டும்” என்று பென் இன்டர்நேஷனரின் தலைவர் சலீல் திலிபாரி கோரியுள்ளார்.
‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியரும் ‘தி இந்து’வின் காஷ்மீர் செய்திப் பிரிவின் தலைவருமான சுஜாத் புகாரி காஷ்மீரில் அதிகம் அறியப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவர். ‘இப்தார்’ விருந்தில் கலந்துகொள்ள தனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது அவரது பாதுகாவலர்கள் இருவரோடு சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பொறுப்பேற்க எந்தக் குழுவும் இன்னும் முன் வரவில்லை.
2017இல் கவுரி லங்கேஷ் கொலைக்குப் பின் இந்தியாவில் கொலை செய்யப்படும் ஐந்தாவது பத்திரிகையாளர் சுஜாத் புகாரி.
அமைதியான வழிகளில் தமது கருத்துகளைப் பதிவிடும் பத்திரிகையாளர்களை எந்தத் தயக்கமும் இன்றிக் குறிவைத்துத் தாக்கும் போக்கு இந்தியாவில் வளர்ந்துகொண்டிருப்பதை பென் ஆழ்ந்த கவலையோடு நோக்குவதோடு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தமிழில்: பெர்னார்ட் சந்திரா