கடிதங்கள்
‘ஆமேன்’. தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், “அது மீண்டும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக் கிறது” எனும் வரியைப் படித்து முடிக்கும்போது, நம்மையும் அறியாமலேயே நாவு ‘ஆமேன்’ என மொழிகிறது. சந்தைப் பொருளா தாரத்தின் செல்வாக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்வாக்கும் திருச்சபைகளில் மட்டுமன்றி, அனைத்துத் தலைமைப் பீடங்களிலும் நிலவுகிறது என்பதே எதார்த்தமாகும். ஆன்மாவுக்கு ஆனந்தமளிப்பதல்ல, சரீரத்திற்குச் சுகமளிப்பதே தேவை என்ற மனப்போக்கு அங்கிங்கெனாதபடி பரவியிருக்கிறது.
பொதுவாகச் சமயத் தலைவர்கள், வழிகாட்டிகள், போதகர்கள் இன்றைக்கு மணிக்கணக்கில் ஆக்ரோஷமாகவும் ஆங்காரத்தோடும் நீண்ட சொற்பொழிவாற்றுகிறார்கள்; மக்கள் மதிமயங்கும் அளவுக்குத் தகவல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள்; சமயக் கோட்பாடுகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் சொல்லி அசத்துகிறார்கள். ஆனால், பைபிளோ பகவத் கீதையோ குர்ஆனோ கூறும் அப்பழுக்கில்லாத தூய தனிமனித வாழ்க்கை நெறி, அப்போதகர்களிடம் மருந்துக்குக்கூட இருக்கிறதா? தங்கள் திறமைக்குக் கிடைக்கும் பெயரையும் புகழையும் தவறாகப் பயன்படுத்திப் பொருளாதார, பாலியல் குற்றங்களில் துணிச்சலோடு ஈடுபடுகிறார்கள். ‘வன்கலவி அல்ல; ஆன்மிகச் சங்கமம்’ என்று ஃபிராங்கோ சர்வசாதாரணமாகச் சொன்னது இந்த வகை துணிச்சல்தான்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை-&14
தலையங்கம், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் ஆழ்ந்து படித்து, உண்மையை அறிந்துகொள்ளும் ஆவணப் பதிவாக அரங்கேறியிருக்கிறது. திருச்சபை இயேசுவின் புனித உடலாக உவமிக்கப்பெறுகிறது. உயிர்த்தெழுந்த இயேசுவின் திருவுடல் அது மீண்டும் ஒருமுறை கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது எனும் ஆசிரியரின் அறச் சீற்றம் நியாயமானது.
மனிதத் தன்மையை வளர்ப்பதற்காகத் தோன்றிய மதங்கள் திசைமாறி, எளியவர்களை வருத்தி, அடிமைப்படுத்தும் இந்த இழிநிலை முற்றிலும் களையப் பெற வேண்டும்
குற்றவாளி ஃபிராங்கோவுக்கு ஆதரவாக வாடிகன் முடிவெடுத்து வாளாவிருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது. வாடிகனின் முடிவை எதிர்த்துக் கன்னியாஸ்திரீகள் எண்பத்தேழு நாட்கள் போராடிய பிறகே ஃபிராங்கோ கைது செய்யப்பட்டிருக்கிறார். வேலியே பயிரை மேய்ந்த கதையாகவல்லவா இருக்கிறது!
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
பாலியல் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டியதுதான். ஆனால் சமீபத்தில் சில புகார்கள் ரொம்ப விசித்திரமாக உள்ளன. பிராங்கோ முளைக்கல் தன்னை நான்கு ஆண்டுகளுக்கு முன், வெவ் வேறு காலகட்டங்களில் 13 தடவை பாலியல் வன்முறை
நடத்தியுள்ளார் என்று இப்போது ஒரு கன்னியாஸ்திரி புகார் கொடுத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. இத்தனை தடவைகள் பாதிக்கப்பட்டு இருப்பவர் பல ஆண்டுகளுக்கு பின், சாவகாசமாக புகார் கொடுப்பது ஏன்? பாலியல் தொல்லை செய்ததாக ஆண்கள் மேல் பழி போடுவது, பெண்களுக்கு ரொம்ப எளிது. சமுதாயமும் பெண்களுக்கு சப்போர்ட்டாகவே இருக்கும்.
எஸ். மோகன்
கோவில்பட்டி- & 628501
கல்விச்சிறப்பிதழ் கல்வியூட்டும் சிறப்பிதழாகவே இருந்தது. இருபது வகையான வினாக்களுக்கு விரிவாக விடையளித்த ‘நேர்காணல்’ மிகச் சிறப்பு. இதைப் படித்தபோது தமிழகத்தில் சிறியதும் பெரியதுமாகச் செயல்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் இதுமாதிரியான ஒரு முன் முயற்சியைத் தம் பாடநூல்களிலும் மேற்கொள்ளலாமே என்ற சிந்தனையும் கூடவே வந்தது.
தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் கல்விக் குழுவும் மேற்கொண்ட அயரா உழைப்பையும் உறுதியையும் உதயசந்திரனின் நேர்மறையான பதில்களின் வழியே அவதானிக்க முடிந்தது. எனினும், புத்தகம் புதியதே தவிர நடைமுறை என்னவோ பழைய முறைப்படி மனப்பாடம் செய்து வாந்தியெடுக்க வேண்டியதிருக்கிறது. இந்நிலை இங்கு மாறாதவரை எந்தவொரு தேர்வும் கசப்பான ஒன்றுதான்.
மீண்டும் அதே மெடிக்கல், இஞ்சினியரிங் கனவுகளிலேயே பெற்றோர்கள் காலம் தள்ளுகிறார்கள். முன்பை விட ஆர்வமாகப் பிள்ளைகள் இப்புத்தகங்களைக் கைகளில் ஏந்திப்படிக்கிறார்கள். நிச்சயம் இவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள் என்ற தன்னம்பிக்கை மட்டும் ஒரு ஓரத்தில் சுடர்விடுகிறது.
சஹானாவின் ‘படிக்காத பிள்ளை’ மாரணமாய் மனத்தைத் தைத்தது. கூடவே... எவ்வளவுதான் தமிழில் ஈடுபாடு இருந்தாலும் எழுத்துப்பிழை என்னை ‘ஒற்றைப்டை’ மதிப்பெண்ணுக்குத்தள்ளிவிடும்... என்றவரியில் ஓரெழுத்துப் பிழையின் முரண்நகை படிக்கப்படிக்க நன்னகையாய் என்னைப் புன்னகைக்கவும் வைத்தது.
எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி
ஈரோடு&-3
பொருத்தமான ஒருவர் பொருத்தமான துறைக்குப் பொறுப்பேற்கும்பொழுது ஏற்படும் மலர்ச்சியைத் தமிழகம் எப்பொழுதேனும் அனுபவிக்கும். முன்பொருமுறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத்திட்ட இயக்குநராக விஜயகுமார் பணியேற்றபொழுது நடைமுறைப்படுத்திய செயல்வழிக் கற்றல் முறையால் தமிழகத்தின் வகுப்பறைகள் வண்ணமயமாய் மலர்ந்திருந்தன. தற்பொழுது உதயசந்திரனால் ஒரு தலைமுறையே மலரும் வகையில் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காலச்சுவட்டிற்கு நன்றி.
வழக்கமாகப் பாடநூலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை வாசிக்கத் தூண்டும் வகையில் அமைய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களின் முழுமையான வாசிப்பையும் கோரி நிற்கும் பாடநூல்களை வடிவமைத்திருப்பது பாடநூல் வரலாற்றின் மைல்கல்.
சான்றாகச் சொல்வதென்றால் ஆறாம் வகுப்புப் பாடநூலில் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ பாடத்தைச் சொல்லலாம். இந்நாவலின் சுருங்கிய வடிவம் படக்கதையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நாவலை முழுமையாக வாசித்து உள்வாங்கிய ஓர் ஆசிரியரால் இப்பாடம் நடத்தப்படும்பொழுது அவ்வகுப்பறையில் ஏற்படும் மலர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இயற்கைக்கும் மனிதர்களுக்கு மிடையிலான உறவு, போராட்டங்கள், மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்குமிடையிலான நேசம் போன்றவற்றை இளம் தலைமுறைக்குள் மலரச்செய்வதற்கான அற்புதமான அனுபவமாக வகுப்பறைச் செயல்பாடுகள் உள்ளபடியே அமைய வேண்டுமாயின் அந்நாவல் குறிப்பிட்ட ஆசிரியரால் முழுமையாக உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
மட்டுமின்றிப் புதிய பாடநூல்களைக் கையாள்வதற்கு சங்க இலக்கியம் போன்ற மரபுசார் பிரதிகள்,நவீன இலக்கியம், உலக இலக்கியம் போன்றவை குறித்த பார்வையும் ஆசிரியர்களுக்குத் தேவையாக இருக்கிறது. பிரதியின் ஒவ்வொரு பக்கத்தையும் அரசியல், பொருளியல், சூழலியல் பார்வையோடு பகுத்தாயக் கூடிய பண்பையும் புதிய பாடநூல்கள் எதிர்நோக்குகின்றன. இப்பண்புகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் இலக்கியக் கூட்டங்களைத் தேடித்தேடிச் செல்ல வேண்டும்.
காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் ஆசிரியர்களுக்கென்றே சிறப்புக் கழிவுகள் அளிக்கலாம். சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளைச் சிறிய அளவுகளில் ஒவ்வோர் மாவட்டத்திலும் முன்னெடுக்கலாம். (சிறப்புக் கழிவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்ப்பதன்றி ஆசிரியர்களிடையே வாசிப்பை மேம்படுத்துவதற்கான சமூகச் செயல்பாடாகப் பார்க்கலாம்.)
தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்வதற்கான கருவியாக மட்டுமின்றி, அறிவை விரிவு செய்வதாகவும், இயற்கை, மானுடம் மீதான பேரன்பை வளர்த்தெடுப்ப தாகவும் சூழலியல், சமூகவியல் மாண்புகளை வளர்த்தெடுக்கும் வகையிலும் புதிய பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அற்புதமான விதைகள். நம்பிக்கையோடு விதைப்போம்.
செங்கவின் (எ) சௌரீஸ்வரி
கோயம்புத்தூர்
‘கற்பனையல்ல கதையல்ல!’ தெ. சுந்தரமகாலிங்கம் எழுதியுள்ள கட்டுரையை முழுவதும் படித்தேன். 1970களில் ஆரம்பமான அந்தப் போராட்டம் குறித்து நண்பர் ‘நினைவாக’ பல அரிய தகவல்களை எழுதியுள்ளார். அது முற்றிலும் உண்மை வரலாறு ஆகும். அதில் நானும் பங்குபெற்றவன் என்ற முறையில் அந்த நிகழ்வுகள் துயரமானவையென்றாலும் அதில் தனியார் பள்ளியின் பிடியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்களை விடுவித்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் அரசுப் பள்ளியை ஆரம்பிக்க ஏற்பாடு செய்ததுதான் அந்தப் போராட்டத்தின் லட்சியம் ஆகும்.
இதில் ஈடுபாடு கொண்டவர்களைக் கட்டுரையாளர் பட்டியலிட்டுவிட்டார். வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையேற்று அத்துணை காரியங்களையும் செய்த பொ. தங்கராசு பாராட்டுக்குரியவர். இதைச் சிறப்பாகப் பதிவு செய்தாக வேண்டும். அதற்கு உறுதுணையாக இருந்தவர் தெ. சுந்தரமகாலிங்கம். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆனந்தவல்லி அம்மையார், இயக்குநர் பெருமாள் தேவர் (திருச்சி இரத்தினவேல் தேவரின் மகன்), அடுத்த இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன், கல்விச் செயலர் ஜி.சி. ரெங்கபாஷ்யம் ஆகியோரையும் மறக்காமல் பதிவு செய்தே ஆக வேண்டும்.
இந்த நெடிய போராட்டக் காலத்தில் நாட்டில் அவசர நிலை வந்தது. ஊழல் நிறைந்த தனியார் பள்ளி நிர்வாகி காந்தி கிராமம் இராமச்சந்திரன் துணையோடு அன்றைய தமிழ்நாடு கவர்னர் ‘சுகாதியா’வைச் சந்தித்து ஒரு மனு கொடுக்கிறார்.
அதில் “வையம்பட்டியில் என் நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் புரட்சி செய்கிற மூவர் உள்ளனர். அவர்கள் என் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் தெ. சுந்தரமகாலிங்கம், ஜோசப், ஆசிரியர் சங்க தலைவர் பொ. இராமசாமி. இம் மூவரின் மீதும் அரசு கைது நடவடிக்கைகளை எடுக்க வேண்டு”மென மனுவில் குறிப்பிட்டார். இந்த மனு தலைமைச் செயலகத்தில் கல்வித்துறைக்கு வந்து சேருகிறது. ஒருநாள் நான் அங்கு நுழைகிறபோது சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் என்னை அழைத்து மேலே சொல்லப்பட்ட மனுவிபரங்களைச் சொல்லி, “இதை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பினால் நிச்சயம் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்; ஆனால் பயப்பட வேண்டாம். எந்த தனியார் பள்ளியை எதிர்த்துப் போராடுகிறீர்களோ அந்த நிர்வாகி செய்த வேலைதான் இது,” எனச் சொல்லி அந்த மனுவைச் செயலகத்திலேயே ‘நீர்த்துப்போக’ச் செய்தார் அந்த மனித நேயம் உள்ள மனிதரையும் நாங்கள் மறக்க முடியாது.
எங்கள் துன்பங்களையும் துயரங்களையும்
உங்கள் பத்திரிகையில் வரலாறாக ஆவணப்படுத்தியதற்கு மேலும் என் நன்றி.
பொ. இராமசாமி
வையம்பட்டி
கல்விச் சிறப்பிதழ் அனைத்துக் கல்விச் சிந்தனையாளர்களின் கவனங்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு கோணங்களில் இன்றையத் தமிழகக்கல்விப் புலத்தைப் பாரபட்சமின்றி நுணுக்கமாக ஆய்ந்துள்ளது. புதிய விவேகத்திலான பாடப்புத்தகங்கள், கற்றல் - கற்பித்தல் உத்திகள், ஆசிரியர் - மாணவர் நிலைப்பாடு ஆகிய அனைத்துப் பரிமாணங்களையும் சமூகப்பிரக்ஞையோடு முழுமையாக உள்வாங்கி உத்வேகத்துடன் செயல்பட்ட உதயசந்திரனின் நேர்காணல், நம் சிந்தனைகளை அறிவார்ந்த அடுத்த கட்டத்திற்கு வெகுவாக நகர்த்தியுள்ளது. நீண்ட அனுபவமுள்ள பேராசிரியர் பெருமாள்முருகன் மிகநேர்த்தியாக நேர்கண்டவிதம் காலச்சுவடு இதழின் பெருமையே ஆகும். இவர் கோடிட்டுக்காட்டியுள்ள அனைத்தையும் இன்றையக் கல்வி உலகம் உடனடி மேலாய்விற்கு உட்படுத்த வேண்டும்.
‘பாத்திரம் புதிது...’ கட்டுரை புதிய பாடப்புத்தகங்களின் உள்ளடக்கங் களைச் சிறப்பாக விவாதித்துள்ளது. காலத்தின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கும்படி அமைக்கப்பட்ட மொழிப்பாடங்களைப் போல் அறிவியல் பாடங்கள் அமைக்கப்பட வில்லை. அவை ‘புதிய பாத்திரத் திலுள்ள பழைய திராட்சை ரசம்’ என்ற கட்டுரை ஆசிரியரின் ஆதங்கம் நம்மையும் விசனத்திற்குள் தள்ளுகிறது.
பரமேசுவரி தமது கட்டுரையில் ‘ஆசிரியர் பாடங்களை விரிவுபடுத்தி விவாதிக்கவும் விளக்கவும் ஏற்ற வகையில் பாடவேளைகள் நெகிழ்வுத் தன்மை உள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதற்கான முழுப்பொறுப்பும் திறனும் ஆசிரியரைச் சார்ந்ததே. பாடப்பொருளை மையப்புள்ளியாக வைத்து, அதுசார்ந்த புற உலகைத்தொடர்புப்படுத்தி மேலும் வலுவாகச் சிந்திக்க மாணவர்கள் தூண்டப்பட வேண்டும். இத்தகைய முனைப்பாற்றல் செம்மையாகத் தொடருமானால் நீட் போன்ற அகில இந்தியத் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்ளப் பக்குவப்பட்டுவிடுவர்.
நா. அருள் முருகன் பல்வேறு சுவாரஸ்யமான மதிப்பீட்டுப் பணித்தகவல்களை இலைமறை காயாக உணர்த்தியுள்ளார். ஆசிரியர்களது மனங்களில் மையம்கொண்டுள்ள மதிப்பீட்டுப் பணிப் போக்குகளை நயத்தகு நாகரிகப்பாணியில் உணர்த்தியிருப்பது அன்னாரது நீண்டகாலக் களங்கமற்ற கல்விப்பணிக்குக் கட்டியம் கூறுகிறது. இறுதியில் ‘வெறும் மதிப்பெண் அளவீடுகளெல்லாம் இடம் மாறும் தோற்றத்தைக் கணிக்க முயலும் ஒளிவிலகல் எண்கள்தான்’ என்று பதிவிட்டுள்ள தமது உள்ளார்ந்த வேதனைக்குரலுக்குப் பல ஆயிரம் ஆசிரியர்கள் ஒப்புக்கொடுக்கத் தயாராகவே உள்ளனர். பாடப்புத்தகங்களுக்குச் சற்றே விலகி வெளிச்சமூகத்தில் பரிணமிக்கும் பிற வாழ்வியல் திறன்களை வெளிக்கொணரத் துடிக்கும் சஹானா போன்ற மாணவர்களைக் கண்டறிய நமது மதிப்பீட்டுக் கட்டகத்தில் போதிய வழிமுறைகள் உள்ளனவா?
சி. பாலையா
புதுக்கோட்டை
கல்வி சிறப்பிதழில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன துணைஇயக்குனர் முனைவர் நா. அருள்முருகனின் கட்டுரை ஒரு சிறுகதையைப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மதிப்பீடுகுறித்த வரலாற்றுச் செய்திகளையும் தற்காலத்தில் பின்பற்றப்பட்டு வரும் முறைகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
கூடுதல் செய்தி என்னவென்றால் மதிப்பீடு செய்கின்ற ஆசிரியர்கள் இதைப் படிக்கும்போது மகிழ்ச்சி அடைவார்கள். பழைய நினைவைத் தட்டி எழுப்புவதாக அது அமைந்துள்ளது. சில இடங்களில் சிரிக்கவும் தோன்றுகின்றது. அதேநேரம் சிந்தனை செய்யவைப்பதாகவும் உள்ளது. மிக எளிமையான நடையில் சிறப்பான கருத்துக்களை வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். காலச்சுவடு இதுபோன்ற சிறப்பிதழ்களை தொடர்ந்து கொண்டுவரும் எனநம்புகிறோம்.
மயிலம்இளமுருகு
திருவேற்காடு- & 77
கல்விச் சிறப்பிதழ் என்ற பெயரில் விளம்பர வாகனமாக இல்லாமல் கல்விகுறித்த கருத்தாடலாக அமைந்தது மகிழ்ச்சி . இதழ் விரிக்கும் ஒவ்வொரு கட்டுரையும் குணம் நாடி மிக்க கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நேர்காணல் சிறப்பாக உள்ளது. முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பிணைப்புச் சங்கிலியாய் ஒருபாடத்திட்டம் அமைக்கும் அரிய பணியின் அனுபவங்களைக் கூர்கத்தி விளிம்பின்மீது நடந்த அனுபவங்களைத் தற்பெருமையின்றிக் கண்ணியத்தோடு உதயச்சந்திரன் எடுத்துரைத்துள்ளது நல்லதொரு வழிகாட்டலாகும்.! சுந்தர மகாலிங்கத்தின் அனுபவக் கட்டுரை மெய்சிலிர்க்க வைக்கிறது.பாடத்திட்டத்தில் மட்டுமல்ல நிர்வாகத் திலும் பெரும்மாற்றங்களைச் செய்ய வேண்டியதுள்ளது. ஆறுலட்சம் ஜிகாபைட் கதை இயற்கையைச் செயற்கை அறிவும், உணர்வும் வெல்ல இயலாது என்பதை உணர்த்துகிறது.
ஜனநேசன்
மின்னஞ்சல் வழி