சபரிநாதன்
தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுந்து வந்த குறிப்பிடத் தகுந்த கவிஞர்களுள் ஒருவர் சபரி¢நாதன். 2011ஆம் ஆண்டு ‘களம் காலம் ஆட்டம்’ என்கிற கவிதைத் தொகுதியும், 2016ஆம் ஆண்டு ‘வால்’ என்கிற கவிதைத் தொகுதியும் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன; விருதுகளையும் பெற்றுத்தந்தன. 2014இல் ‘உறைநிலைக்கு கீழே’ என்கிற தலைப்பில் தாமஸ் ட்ரான்ஸ்ரோமரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். அது சிலரால் சிலாகிக்கவும் சிலரால் புறமொதுக்கவும் பட்டது. தேவதச்சனின் கவியுலகைக் குறித்து ‘தேவதச்சம்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய விரி¢வான கட்டுரை கவிதையியலுக்கு முக்கியமான பங்களிப்பு.
அறிவுத்துறைகளுடனான அதீதபுழக்கம் கவிதையின் வெள்ளந்தித் தனத்தைச் சீரழித்துவிடும் என்று உறுதியாக நம்பும் தமிழ்க்கவிதை சூழலில், அறிவின் அகன்ற கண்களையும் கவிமனத்தின் பித்து நிலையையும் கவனமாகவும் சாதுர்யமாகவும் கையாள்பவை சபரி¢யின் கவிதைகள்.
இக்குணாம்சம் இவரது கவிதைகளுக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன.
யோகக் கலையிலும் கவிதைக் கலையிலும் ஏக காலத்தில் நிபுணத்துவம் காட்ட வேண்டும் என்கிற கோளாறு சபரி¢யிடம் இல்லை. அவரது வெளிப்பாட்டு மொழி எளிமையானதே. அதாவது சபரி தன் முதல் கவிதைத் தொகுப்பைச் சமர்ப்பித்திருக்கிற ஆத்மாநாமின் கவிதைகளைப் போன்று எளிமையானது. கவிதையின் தலையெழுத்து அரைப்பக்கம் என்பதற்கு மாறாக அவ்வப்போது நீளமான கவிதைகளுக்கும் முயன்று பார்ப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தற்போதிய கவிதைச் சூழலில் பகடி குறிப்பிடத்தக்க இடத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் சுவாரஸ்யத்திற்காகவும் உடனடி கவன ஈர்ப்பிற்காகவும் மோசமாக வல்லாங்கு செய்யப்படும் அப்பாவி உயிராக, அதன் கதறல் மனத்தை நடுக்குகிறது. ஆனால் சபரி¢யின் கவிதைகளில் வெளிப்படும் ஒருவித ‘சாந்தமான பகடி’, அதன் அதிராத தன்மையால் இந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுகிறது.
நல்ல கவிதையின் பிரதானப் பண்பு அதன் புத்தம் புதுமையே.சபரி¢யின் பல கவிதைகளில் அப்புதுமையைக் காண முடிகிறது.
ஏன்
இது சத்தியம்.
நடுவர், பயிற்சியாளர், அணியினர், எதிரணியினர், பார்வையாளர், பத்திரிகையாளர்
அந்த மைதானத்தில் உள்ள எவருக்கும் தெரி¢யாது
பந்தை ஏன் கூடைக்குள் போட வேண்டுமென.
(“சாந்தமான பகடி” என்னும் சொற்கட்டு கவிஞர் ந. பெரியசாமியுடையது)
- இசை