ஆறுதல் அணங்குதல்
கடந்த கோடைமாதம் பின்காலனியம் பற்றி முதுகலை, முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வருகைதரு விரிவுரையாளராகக் கொரியா போயிருந்தேன். வடகொரியா அல்ல தென்கொரியா. நான் கொரியாவுக்குப் போனது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கிறேன். முதலில் போனது 1992இல் என்ற ஞாபகம். நித்தியமானதும் நிரந்தரமானதுமான வேதங்களே மாறும் இந்நாட்களில் ஒரு நாடும் அதன் கலாச்சாரமும் மாறாத்தன்மையுடையவை அல்ல. இந்த 25 ஆண்டுகளில் தென் கொரியா நிறையவே மாறியிருக்கிறது. கொரியர்கள் பற்றிய என் எண்ணங்களும் மாறியிருக்கின்றன. இந்தக் கட்டுரை இந்த மாற்றங்கள் பற்றியல்ல.
அது சரி, கொரியாவுக்கும் பின்காலனியத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். 1910-1945 முதல் கொரியா ஜப்பானின் காலனிய நாடாக இருந்தது. ஐரோப்பிய ஆண்டகைகள் என்ன அட்டுழியங்களைச் செய்தார்களோ அதையே ஆசிய காலனிய நாடான ஜப்பானும் செய்தது. எந்த ஏகாதிபத்தியமும் நம்புவது