நீலம் பூக்கும் திருமடம்
திருமடம் மழையின் அடைசலில் ஆழ்ந்துபோய்க் கிடந்தது. சுற்றுச்சுவருக்கும் திருமடத்திற்கும் இடையில் செல்கின்ற பாதை முழுக்க சிமென்ட் பெயர்ந்து சிறுசிறு புற்கள் முளைத்திருந்தன. புற்கள் கால்களால் அரைபடும் இடத்திலிருந்து வீடு தொடங்கியிருந்தது. வீட்டின் நுழைவாயில் ஒற்றைக் கதவைக் கொண்டது. சாவித் துவாரத்தைச் சுற்றிலும் தாமரை மலர்ந்து கதவின்மீது கொடியை முழுவதிலும் பரவவிட்டிருந்தது. மூடிய கதவிற்குள் மழையின் ஒலி மட்டுமே உள்ளிறங்கும் வீடு. சிறு வெப்பத்துடன் எப்போதும்போல மாறாமல் உட்கிடந்தது, ஒழுங்குகொண்ட ஒரு காட்சியகம்போல.
இரகசியம்கூட எதிரொலிக்குமாய்ப் பொருட்கள் அதிகமற்ற கூடம். அங்கு ஜன்னலுக்கருகில் நீலா உட்கார்ந்திருந்தாள். சீப்பில் தொங்கிய நரைமுடியைக் கவனமாக எடுத்துச்சுருட்டி ஒரு காகிதத்தில் பொதிந்து அருகிலிருந்த குப்பைக்கூடையில் போட்டாள். தலைவாரியதும் எப்போதும் சீப்பைக் கழுவுவாள். அதற்காக எழுந்திருக்கையில் மழையின் சடசடப்புக்கிடையில் ‘தொப்பென்ற’ சத்தம் ஜன்னலுக்கு அருகில் கேட்டது. இந்த வாரத்தில் இது மூன்றாவது தென்னங்காய் என்பதை நீலா கணக்கில் கொண்டாள். ஜன்னலுக்கருகில் வந்து எட்டிப்பார்த்து, காய் விழுந்திருந்த இடத்தைக் கவனத்தில் வைத்தாள்.
சீப்பைக் கழுவித் துடைத்து வாயால் ஊதி ஈரமில்லையென்று உறுதியானதும் மீண்டுமொருமுறை துணியால் துடைத்து வெள்ளைப் பளிங்குக் கோப்பை ஒன்றில் வழக்கம் போல் சிறு ஒலி கேட்கப் போட்டுவைத்தாள். மழை இப்போது லேசான தூறலுக்குள் சென்றிருந்தது. தொலைபேசி வைக்கப்பட்டிருந்த மேசையின்கீழ் அடுக்கிலிருந்து பழுப்புநிற அட்டையிலான டயரியை எடுத்து மேசைமீது விரித்தாள். அந்த டயரியில் முதலிரண்டு பக்கங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன.
தொலைபேசியின் பூட்டை விடுவித்து எண்ணை அழுத்தினாள். மறுமுனை எடுக்கப்பட்டதும், ‘திருமடம் வீட்டிலேருந்து நீலா பேசறேன்... நேத்து ஃபோன்ல பேசியிருந்தேனே. நாளைக்கு வந்துருவீங்களா?” என்று கேட்டாள். பதில்பெற்றதும் தொலைபேசியின் வாய்ப்பகுதியினை அருகிலிருந்த வெள்ளைத்துணியால் துடைத்து அதனிடத்தில் பொருத்திவிட்டுக் கைத்தடம் பட்டிருந்த இடத்தையும் மென்மையாகத் துணியால் தடவிக்கொடுத்தாள்.
நாள்காட்டியில் மறுநாள் செய்ய வேண்டியவற்றை விலாவாரியாக எழுதிவைத்தாள்.
மழை நின்று போயிருந்தது.
குடையை எடுத்துக்கொண்டு திருமடத்தின் சுற்றுச்சுவர் நோக்கி நிதானமாகக் காலை அழுத்திவைத்துப் போனாள். ஒரு கையால் நீலநிறத்தில் மெல்லிய தலைப்பைக் கொண்டிருந்த சேலையின் நுனியைக் கணுக்காலுக்கும் மேலாகத் தூக்கிக்கொண்டாள். பூம்பாதங்கள். காற்றில் மழை தந்த நீரின் வாசம் அடர்ந்திருந்தது. வீட்டைச் சுற்றிலுமுள்ள பூச்செடிகளில் சொட்டிய துளிகளைப் பார்த்துக்கொண்டே புல்மீது நடந்தாள். ‘பூமியின் பச்சைப் பற்கள்’ என்று தனது கணவன் புற்களைப் பற்றி ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்ததை எப்போதும் போல் இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் போதே வெளிவாசல் வந்தது.
சுற்றுச்சுவருக்கு வெளியே யாரோ ஒருவனின் தலை தெரிவதை நீலா சுவரை நெருங்கும்போதுதான் பார்த்தாள். வேகமாக அவனிருக்கும் திசை நோக்கி நடந்தாள். திருமடத்தின் சுவரில் அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். முந்தியநாள்கூட அவனையும் அவனைப்போலச் சிலரையும் அங்குப் பார்த்தது நினைவுக்கு வந்து நீலாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தெருவில் ஒரு நாய்கூட அலையவில்லை. இப்போதுபோய் அவனைத் தடுப்பதா, முடிந்த பிறகு எச்சரிப்பதா என்று யோசித்தபடி நின்றாள். அடுத்தமுறையும் இங்கே இடமிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தைத் தடுக்கலாம் என்று தோன்றக் காத்திருந்தாள். அவன் திரும்பி நடக்கத் தயாரானான்.
‘ஹல்லோ,’ என்றாள் நீலா.
சற்றும் எதிர்பார்க்காத அவன் திணறி நீலாவைத் திரும்பிப் பார்த்தான். முகம் திகைப்பில் இருந்தது.
நீலாவுக்குச் சட்டென்று என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“இது என்னோட வீடு,”
அவன் வீட்டைப் பார்த்துவிட்டு மீண்டும் நீலாவைப் பார்த்தான்.
“இனிமே இங்க போகாதீங்க..”
அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடந்தான்.
அவன் அப்படிப் போவதை நீலா வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சிறுநீர் கழித்திருந்த இடத்தில் மஞ்சள் பூக்கள் செடியிலிருந்து உதிர்ந்திருந்தன, வாசனையை இழந்தபடி. வாசல்கம்பிக் கதவு அருகே உள்ள கறுத்த கல்லில் செதுக்கப்பட்ட ‘திருமடம்’ என்ற எழுத்தை மழை பளிச்சென ஆக்கியிருந்தது. மேற்கொண்டும் தேங்கியிருந்த மழைநீர் எழுத்துகளின்மீது வழிந்துகொண்டிருந்தது. ‘திருமடம் கண்ணீர் பொழிகிறது’ என்று தன்னுடைய கணவன் இருந்தால் எழுதக்கூடும் என்று நினைத்துக் கொண்டாள்.
சில நாட்களாகத்தான் திருமடம் வாசலில் இப்படி சிலர் சிறுநீர் கழிக்கத் தொடங்கியிருப்பது நடக்கிறது. அந்தத் தெருவில் சில இடங்களில் கட்டட வேலைகள் நடப்பதால் தெருமுனையிலிருக்கும் திருமடத்தின் சுற்றுச்சுவரினை அங்குள்ள பணியாளர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். நீலாவுக்கு இதனை எப்படி நிறுத்துவது என்பது தெரியவில்லை. கரியால் ‘சிறுநீர் கழிக்காதீர்’ என்று எழுதி வைத்திருந்தாள். அதற்கு ஒரு மரியாதையும் இல்லாமல் போனது. கட்டடத் தொழிலாளர்களில் பலரும் வடக்கத்திக்காரர்களாக இருப்பதனால் தமிழ் வாசிக்கத் தெரிந்திருக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். ‘சிறுநீர் கழிக்க வேண்டாம் சகோதரா,’ இப்படி இந்தியில் எழுதி வைக்கலாம் என்று நினைக்கும்போதே தமிழ் மட்டுமே தெரிந்தவனுக்காகத் தமிழிலும் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இதுபோன்ற விஷயங்களை வீட்டுச் சுவரில் தமிழிலும் இந்தியிலும் எங்காவது எழுதியிருப்பார்களா என்று சந்தேகமும் தோன்றியது. மொழி தெரியாத ஊரில் தனது சொந்தமொழியில் வேண்டுகோள் விடப்பட்டால் வடக்கத்திக்காரர்களால் அதை உதாசீனம் செய்ய இயலாது. இந்த முடிவுக்கு வந்ததுமே அதைச் செயல்படுத்தும் உறுதியையும் மேற்கொண்டிருந்தாள்.
திருமடம் போன்றே தோட்டத்துடன் கூடிய தனி வீடுகளைக் கொண்டதாக அந்தத் தெரு இருந்தது. இந்தப் பத்து வருடங்களில் பகுதியாவும் இடிபட்டு அடுக்ககக் குடியிருப்புகளாக மாறத் தொடங்கிவிட்டன. திருமடமும் இடிக்கப்பட வேண்டியதுதான் என்று நீலாவைத் தவிர வேறு சிலர் எண்ணம் வைத்திருந்தனர். மாதத்துக்கு ஒருமுறையேனும் விலை வைத்துக்கொண்டு யாராவது வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். வீட்டைவிட்டு நகரவே முடியாது என்று அவர்களிடமெல்லாம் நீலா திட்டவட்டமாகக் கூறினாலும் மனதைக் கரைக்கும் முயற்சியிலேயே அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அவளுக்கு மனம் கனத்தபடி இருந்தது. வீட்டினுள்ளே நுழையப் போனவள் சத்தம்கேட்ட பின்பகுதி தோட்டத்திற்குச் சென்றாள். இந்த வீட்டை விற்றால் முதல் பலியாகப் போவது இந்த மரஞ்செடிகள்தான். வேர் பிடுங்கப்பட்டு உயிர் அற்ற மரங்கள் போலவேதான் தானும் இந்த வீட்டைவிட்டுப் பிரிகையில் ஆகிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டாள். மூத்திரத்தால் உதிர்க்கப் பட்ட வாசனை இழந்த பூக்களும் கூடவே நினைவுக்கு வந்தன.
சமீபமாக வீட்டை விற்க மறுக்கும்போதெல்லாம் நிலவியாபாரிகளால் அவளுடைய வயது பிரதானமாய் அறிவுறுத்தபட்டு வருகிறது. யாரோ ஒருவரின் விருப்பத் திற்காகத் தனித்து வாழ்பவர்கள், வயதானவர்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் விட்டுத்தர வேண்டும் என்று நினைப்பது அநீதியும் அச்சுறுத்தலும் என்பதாக நீலா சொல்லிக்கொள்கிறாள்; சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.
இந்த நிலத்தை நீலாவின் கணவர் வாங்கும்போது காதலில் வசப்பட்டிருந்தார். அவர் காதலித்த பெண்ணை நீலா என்றே அழைத்தார். அதற்கு முன் அவளது பெயர் வேறொன்றாக இருந்தது. நீலம் என்னும் நிறம் அவருக்குச் சிறுவயதின் நினைவை உணர்த்திக்கொண்டே இருப்பதாகக் கூறுவார். ‘ஒவ்வொருமுறை என்னை அழைக்கும்போதும் சிறுவயது நினைவைத்தான் மீட்டுக் கொள்கிறீர்களா?” என்று ஒருமுறை நீலா அவரிடம் கேட்டாள். ‘மீட்கமாட்டேன்... மூழ்கிக்கொண்டிருப்பேன்’ என்று அதற்குப் பதில் சொன்னார். அந்தச் சிறுவயது நினைவு என்னவென்பதை நீலாவும் கேட்டதில்லை; கேட்காதபோதும்கூட அவரும் சொல்லவில்லை.
இந்த நிலத்தில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றார். யாரையும் சுலபத்தில் உள்ளிழுத்துக் கொள்ளாத சுற்றிலும் நெடிய மரங்கள் கொண்ட வீடு. ‘நன்றாக இருக்கும் நீலா’ என்றார். நீலாவுக்கு உடனேயே அது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. ஆனால் ஆச்சர்யமாக நீலாவைத் திருமணம் செய்த நாளுக்கு முன்பாக திருமடம் வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. நிலத்திலிருந்த மரங்களுக்குச் சேதமுண்டாகாமல் நடுவே சிறிய வீடு.
நீலாவின் கணவர் வேலை பார்த்த அலுவலகம் வீட்டிலிருந்து நீண்ட தூரத்தில் இருந்தது. அவர் கிளம்பிச்சென்று திரும்பும்வரை அந்த வீட்டின் தனிமை நீலாவுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய இல்லாத பொழுதுகள் மட்டுமே அவளுக்கு நிரம்பக் கிடைத்தன. குழந்தை உருவாகத் துவங்கியதுதான் நம்பிக்கை சொல்லும் ஒரே பிடிப்பாக அவளுக்கு வாய்த்தது. குழந்தை பிறந்ததும் தானும் அதுவுமாக இந்த வீட்டினை நிரப்பப்போகிறோம் என்று அடிக்கடி கணவனிடம் சொல்வதின் மூலம் தனக்கும் சொல்லியபடியே இருந்தாள். வீட்டிலேயே பிரசவம் நடந்தது. பெண்குழந்தை என்றதும் நீலா மனம்நிறைந்து பொங்கினாள். ஆனந்தப் பெருக்கில் கணவன் அழுதான். நீலா அவனிடத்தில் கண்ட முதல் அழுகை அது. குழந்தையும்கூட விடாப்பிடியான அழுகையைக் கொண்டிருந்தது. அதுவும் அதன் அழுகையும் அவனைப் போலவே இருந்தது.
குழந்தை, இரவுகளை முழுமைக்கும் தன்அழுகையால் கடத்தியது. பகலில் ஆழ்ந்து உறங்குவது போல் நம்பச் செய்து அழுதது. தனக்கெனத் தீர்மானித்துக்கொண்ட ஒருநாளில் அது அழாமல் கிடந்தது. அன்றைய இரவு கணவனும் வராது போனான். அழாத குழந்தை பீதி ஏற்படுத்தும் முகமாய்க் கிடந்தது. அதிகாலைவரை காத்திருந்த நீலாவிற்கு அதனிடத்தில் வெளிப்பட்ட உணரச் சிரமமான சுவாசஒலி கடைசியாக ஒரு தடவை நீலாவின் கையில்பட்டு உறைந்துபோனது. குழந்தைக்குப் பெயரே வைக்கப்போவதில்லை, வளர்ந்தபிறகு அவள் பெயரை அவளே முடிவு செய்யட்டும் என்ற கணவனின் விருப்பத்தினை நீலாவும் பின்பற்ற விரும்பினாள். நினைவில்கூட எந்தப் பெயரையும் சொல்லி அவள் அழைத்ததில்லை.
இருவருமாகத் தோட்டத்திலேயே மண்ணுக்குள் இட்டுக் குழந்தையை வைத்தனர். ஒரு தென்னையை அதில் நடவேண்டுமென்று விரும்பினார்கள்.
நீலா கீழேகிடந்த தேங்காயைப் பதமாக இருகைகளாலும் தூக்கினாள். தொட்டியில் நிரம்பியிருந்த மழையின் குளிர்ந்த நீரால் அதனைக் கழுவினாள். காயின் பச்சை நீரொளியில் பட்டு அவள் முகத்தில் பளபளத்தது. பூத்திருந்த நீரைத் துவாலை கொண்டு துடைக்கலாமா என்றுகூட எண்ணினாள். ஒட்டாமல் கீழிறங்கிக் கொண்டிருந்த நீர் அவளுக்குள் ஒரு பரவசத் தாய்மையைக் கொண்டுவந்திருந்தது. அதைக் கைகளிலேயே வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். அதன் கனம் குறைந்து இல்லாதது போலவே கைகள் லேசாகின.
குழந்தைபோனதும் நீலாவின் கணவன் அவளிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். அலுவலகத்தில் உடன் வேலைப்பார்ப்பவர்கள் ஆறுதலுக்காக வந்தார்கள். எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் அவர்கள் நீலாவையும் அவளது கணவனையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் ‘துக்கத்திலிருந்து சீக்கிரம் வெளியேற வேண்டும்’ என்பதை மட்டுமே அவர்களால் வார்த்தைகளாகச் சொல்ல முடிந்தது. முடிக்க இயலாத உரையாடல் திண்டாடும் இடங்களில் யாரேனும் தண்ணீர் சொம்பினைக் கையில் கொண்டு நிறைவுசெய்தார்கள்.
நீலாவின் கணவன் நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டான்.இடைவிடாது ஒரு அறையிலேயே அமிழ்ந்து கிடந்தான். ஒருநாள் இரவு மெதுவாக, ‘என்னுடைய அம்மாதான் பிறந்திருக்கிறாள் என்று நினைத்திருந்தேன்,’ என்றான். பிறகு எதுவும் சொல்லாமல் திரும்பிப் படுத்துக்கொண்டான். ‘உங்கள் அம்மாவின் பெயர் நீலாவா?’ என்று கேட்க நினைத்துப் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டிருந்தாள் நீலா.
பின்மாலை ஒன்றில் சுவரெல்லாம் நீலநிறம் கொண்டிருந்த அறையில் நீலாவின் கணவன் கயிற்றில் தொங்கும்போது நீலாவால் மட்டுமே அது நீலநிறக் கயிறு என்பதைக் கவனிக்க முடிந்தது.
மழையில்லாத மறுநாளில் சுவரோவியன் விதவிதமான வண்ணங்கள் கொண்ட டப்பாக்களுடன் வந்துசேர்ந்தான். வந்தவனுக்கு இந்தி தெரிந்திருக்கவில்லை. இதைமுன்பே யோசிக்க முடியாமல் போனது குறித்து வருத்தப்பட்டுக் கொண்டாள். சிறுநீர் கழிப்பவர்களை வசைபாடிக்கொண்டே “சும்மா எழுதி வச்சா அடிக்கிறவன் நிறுத்தமாட்டான். சாமி படம் போட்டுருவோமா?” என்றான்.
நீலாவுக்குச் சரியென்றே பட்டது. சுலபமான தீர்வாகவும் ஆகியிருந்தது. “பிள்ளையார் படம் போடவா? முருகர் படம்னா இன்னும்கூட யோசிப்பாங்க,” என்றான். நீலாவுக்கு சட்டென்று முடிவுக்கு வர முடியவில்லை.
“குழப்பமாயிருந்தா பிள்ளையார், லக்ஷ்மி, முருகர் மூணு படத்தையும் போட்டுரலாம்?” என்றான். நீலா சரியெனத் தலையசைத்தாள்.
பிறகு அவனுக்கே திருப்தி வராமல், சுற்றுச்சுவரையே உற்றுப் பார்த்துவிட்டு “இப்படிப் பண்ணலாம். முருகர், சிலுவை, பிறை மூணுத்தையும் போட்டுறலாம். இடம்தான் இருக்கே” என்றான். நிலாவுக்கு அவனது அனுபவ அறிவு பிடித்திருந்தது.
வரைவதற்கிடையில் அவன் உரிமையுடன் அடிக்கடி வீட்டுக்குள் வந்து வேலைக்குத் தேவைப்படுவதை எடுத்துக்கொண்டு போனான். நீலாவும் இடையில் அவன் வரைவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவன் வரையவரைய முருகர் சிறு குழந்தையானார். சிறு குழந்தைக்கான சிரிப்பு முருகரிடம் இல்லை. அம்மாவிடம் கேட்டது கிடைக்காமல் முகத்தைத் தூக்கிக்கொள்ளும் குழந்தையின் கோபமுகம் அது. குழந்தை சிரித்தால் பார்ப்பவர்களுக்குள் இலகுத்தன்மை வந்துவிடுமென்பதற்காகப் புருவம் சுருக்கிய இந்த முகத்தை ஓவியன் தீட்டியிருக்கலாம் என்று நீலா நினைத்தாள்.
முடிக்கும்போது மாலை ஆகியிருந்தது. கிளம்பிய போது அவன் செருப்புப் போட மறந்ததை நீலா தான் நினைவுபடுத்தினாள். “பிள்ளைக்குக் உடம்பு சரியில்லம்மா... அதான் சில சமயம் இதெல்லாம் மறந்து போயிடுது. அழ ஆரம்பிச்சதுன்னா நிறுத்தாது. மருந்து குடுத்த கொஞ்ச நேரத்துலேயே தூங்கிரும். இப்பக்கூட மருந்து குடிச்சிட்டு தூங்கறாளாம். என் பொண்டாட்டிதான் ஃபோன்ல சொன்னா,” என்றான். ‘சரியாயிரும்’ என்றாள் நீலா. அவனுக்குப் பேசியிருந்த தொகையைக் காட்டிலும் கூடுதலாய்த் தந்தாள். அடுத்த நொடியே ஏதோ நினைவு வந்தவளாய் அவனை நிற்கச் சொல்லிவிட்டுத் தனக்காக வாங்கிவைத்திருந்த பழங்களையும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் “இருக்கட்டும்மா,” என்றபடி வாங்கிக்கொண்டான்.
மெலிதான இருளில் முருகரின் படத்தையே தெருவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். இரவுக்குள் மூன்று முறைகூட வந்து பார்த்தாள். கடைசிமுறை பார்க்கும்போது முருகரின் கோப முகம் கொஞ்சம் லகுவாகியிருப்பதுபோலத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் தன்னைப் பார்த்து அது சிரிக்கக்கூடும் என்றும் எண்ணம் வந்துபோனது. அன்றிரவு வரையிலும் யாரும் அங்கு சிறுநீர்கழிக்க வரவில்லை என்ற நம்பிக்கையில் அவள் தூங்கப்போனாள்.
மறுநாள் காலையில் வழக்கமான ஈரமில்லாத சுவரில் முருகரை ஒரு தடவைப் பார்த்துவிட்டு வந்தாள். நாற்றம் இல்லாதிருந்தது பெரும் ஆறுதலாக இருந்தது.
சுவரோவியனின் குழந்தையைப் போய்ப் பார்த்தால் என்ன என்றும் ஒரு எண்ணம் தோன்றியது. வீட்டின் முகவரியைக் கேட்பதற்காக அவனுடைய தொலைபேசி எண்ணுக்கு அழைத்தாள். மறுமுனை ஏதோ ஒரு பாடலை பாடிவிட்டு அமைதியடைந்தது. அதே சமயம் வீட்டின் எங்கோ மூலையில் ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்டுமறைந்த உணர்வும் சம்பந்தமில்லாமல் வந்தது. நீலாவின் உள்ளுக்குள் வகைப்படுத்த முடியாத அனுமதிக்க முடிந்த வலி ஒன்று உருவாகி உதைக்கத் தொடங்கியிருந்தது. வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் திறந்துவைத்தாள். காற்று வேகமாக வந்தது. ஆனாலும் அனுபவிக்கச் சிரமமாக இருந்தது.
அன்று முழுவதும் தோட்டத்தையே சுற்றி வந்தாள். யாரிடமாவது தொலைபேசியில் பேசலாம் என்று நினைத்தாள். அதையும் ஒத்திப் போட்டாள். என்ன பேசுவது என்ற தயக்கம் எழுந்தது. எப்போதேனும் இதுபோன்ற தருணங்களை நீட்டிக்கச் செய்யக்கூடாது என்பதற்காகவே நீலா பல மனப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவையெல்லாமே இன்று தள்ளிப்போய் நின்றுகொண்டிருந்தன.
இரவுகளில் எப்போதும் கேட்கும் பாடல்களையும் அன்று கேட்கும் மனம் அமையவில்லை. சும்மாவே படுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சலனமற்ற உறக்கத்துக்குள் நீலா போயிருந்தபோது மின்சாரம் நின்றுபோயிருந்தது. நீலாவுக்கு முனையில் பற்றியெரிகிற புகைப்படங்கள்போல காட்சிகள் ஒன்றன்மேல் ஒன்றாய்க் கனவுக்குள் வந்துகொண்டிருந்தன. அதில் சிறு குழந்தையான முருகர் அழ வேண்டித் தன் முகத்தைச் சுருக்கிக்கொள்வதுபோலத் தெரிந்த அந்நேரத்தில்தான் அழுகை ஒலியும் கேட்டது. கேட்ட அழுகை கனவுக்குள் இல்லை என்கிற உணர்வு பெற்றுத் தூக்கிவாரிப் போட எழுந்து உட்கார்ந்தாள். குழந்தை அழும் ஒலி துல்லியமாய் அருகிலேயே எங்கோ கேட்டது.
மின்சாரமற்ற அந்த இருட்டில் ஆதரவு வேண்டி எதையோ பற்றினாள். அது கைநழுவிக் கீழே விழுந்தது. நீலா அப்படியே அமர்ந்திருந்தாள். எண்ணங்கள் தொடர்புக்குள் வர மறுத்தன.
கீழே விழுந்த பொருளைத் தடவித்தடவி எடுத்தாள். அது மேனி குளிர்ந்திருந்த டார்ச் லைட். அதை முன்தினம் கூடவே வைத்துக்கொண்டு படுத்த நினைவு அவளுக்கு இல்லை. மிகக் கச்சிதமாக கட்டிலிலிருந்து இரண்டடி தள்ளியிருக்கிற சிறிய மேஜையில்தான் இருக்க வேண்டும். எப்படி எதிர்த்திசையில் கிடக்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை. தன்னைப் பாதுகாக்கக்கூடிய ஒரே பற்றாக டார்ச்லைட்டைப் பிடித்துக்கொண்டு அதை எரிய விட்டுப் பார்த்தாள். தோட்டத்தில் நின்றிருந்த மரத்தின் நிழல் அறைக்குள் மெலிதாய் ஆடிக்கொண்டிருந்தது.
அந்த அழுகை நின்றபிறகும் அவள் அதனைத் தனக்குள் கேட்டுக்கொண்டிருந்தாள். மெதுவாக அவளுக்குள்ளிருந்த பதற்றம் குறைந்தது. குழந்தை புதையுண்டிருந்த தென்னை மரத்தைத் தான் இருக்குமிடத்திலிருந்து பார்த்தாள். மெல்லிய காற்றால் அதனை அசைக்க முடியவில்லை. அந்த மரத்தின் அருகில்போய் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். உறக்கம் தட்டித்தட்டிப் போய்க்கொண்டிருந்தது.
அதிகாலை தென்னை மரத்தின் மேலிருந்து பழகிய குரலுயர்த்திக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கு முன்பாகவே தான் எழுந்திருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். சுவரோவியனின் குழந்தையைத் தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போகச் சொல்லலாம் அல்லது தானேகூடப் போகலாம் என்று நினைத்தபடி இருக்கையில் தூக்கம் படரத் தொடங்கியது. எந்தச் சலனமுமற்ற ஆழ்ந்த தூக்கமாக அமைந்திருந்தது.
உறக்கத்தில் தான் நெருக்கப்படுவதுபோல நீலாவுக்குத் தோன்றியது. கண்ணைத் திறந்தாள். அது நடக்கவில்லை. முகம்மீது எதுவோ அழுத்திக்கொண்டிருந்தது. முற்றிலும் இருளாக இருந்தது. இன்னும் ஒரே ஒரு மூச்சினை விடமுடியுமா என்கிற அச்சம் வந்தது. உடல் முழுவதும் ஏதோ அழுத்த அவள் திணறினாள். கழிவுகள் திடமும் திரவமுமாக வெளியேறின.
சிறு நழுவலில் அந்த உருவத்தை அவள் கண்டாள். அங்கு யாரோ நின்றிருந்தார்கள். ஒரு கணம் அந்த உருவம் நொடி நேர வெளிச்சத்தில் சுவரோவியக்காரனுடன் ஒத்திருந்தது. அந்த உருவம் இரண்டாகப் பிரிந்தது. இரண்டாவது உருவத்தின் முகத்தில் அன்று மழைநாளின்போது சிறுநீர் கழித்தவனின் அடையாளம் தெரிந்து மறைந்தது. முழு பலத்துடன் தப்ப எண்ணினாள். அவள் வாழ்க்கையில் முயற்சி என்பது இறுதியில் தோற்றுப்போனது.
உடல் அந்தரத்தில் எழுந்து மண்புதைவுக்குள் பிடிமான மற்று விரைத்தபடி கிடப்பதை அவளால் உணர முடிந்தது. வீட்டினுள் அறிமுகமற்ற சிலரின் நடமாட்டத்தை நீலா உணர்வு கடந்து வெறித்துக்கொண்டிருந்தபோது பழகிய அந்த அழுகை சின்னஞ்சிறு அலறலாய்த் தொடங்கியது. தன்னைத் தூக்கிக்கொள்ளுமாறு அவளிடம் இறைஞ்சியது. தன்னுடைய மடியில் கிடந்து ஒலித்த குரலை சமாதானம் செய்தேயாக வேண்டும் என்ற உந்துதல் நீலாவுக்குள் எழுந்தது.
கட்டிய மார்பு பெருக்கெடுத்தது. மரம் அடுத்த காயைத் தள்ளும் சத்தம் தூர ஆழத்தில் கேட்டது. தென்னைமரத்தின் பறவை அன்றைய அதிகாலையிலும் குரலுயர்த்தத் தொடங்கியிருந்தது.
மின்னஞ்சல்: deepaj82@gmail.com