பேரலையாய், சிற்றலையாய், சலனமற்ற நீராய்...
இரண்டாயிரம் ஆண்டுக் கவிதை வரலாற்றின் போக்கில் பற்பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அவற்றுள் புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் தமிழ் இலக்கியத்திலும் கவிதைப் போக்கிலும் முக்கியமானதாகும். உலகமயமாதல், நகர்மயமாதல், சமூக அரசியல் நிகழ்வுகள், தகவல்தொடர்பு வளர்ச்சி ஆகியவை சமூகத்தின் சகல தளங்களையும் பாதித்ததுபோலவே இலக்கியத்தையும் பாதித்தது. இதற்கு எதிரான குரல்கள் கவிதைகளில் தீவிரமாக எழுந்தன.
தொண்ணூறுகளின் தொடக்கம் பெண்ணியம், தலித்தியம் ஆகிய ஒடுக்கப்பட்ட குரல்களின் எழுச்சிக்காலமானது. அவற்றுள் பெண்ணின் வலியைப் பேசுவது, குடும்பம் சமூகம் போன்றவற்றில் வழங்கப்படாத சமத்துவம் - விடுதலை - மரியாதை ஆகியவற்றைப் பெறுவது, தங்கள் வாழ்வைச் சுயமாக அமைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறுவது ஆகியவை பெண்ணியம் எனப்பட்டது. பெண் எதையெல்லாம் வெளியில் பேசக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதுவெல்லாம் கவிதைகளில் சொல்லப்பட்டது. சகலவிதமான புனிதங்க