பாவண்ணன்
சாதுவான பாரம்பரியம்
(நாவல்)
ப்ரான்ஸ் எமில் சீலன்பா
(இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை
நாகர்கோவில் 629 001
பக். 208
ரூ. 225
ந
£ர்வே, சுவீடன், ரஷ்யா என மூன்று நாடுகளுக்கிடையே விரிந்திருக்கும் நிலப்பரப்பின் பெயர் பின்லாந்து. பனியாலும் குளிராலும் மழையாலும் சூழப்பட்டிருக்கும் நிலம். மூன்று தேசங்களும் தம் கைகளுக்கு எட்டிய அளவில் பின்லாந்தின் பகுதிகளை வளைத்துவைத்திருந்தபோதிலும் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியே மிகுதி. 1917, அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ரஷ்யாவின் பிடியிலிருந்து பின்லாந்து விடுதலை பெற்றது.
அடிப்படையில் நிலவுடைமைச் சமூகமான பின்லாந்து ஏராளமான தேவாலய வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் பற்பல பண்ணைகள். எல்லாப் பண்ணைகளும் பெரும்பாலும் ‘ரை’ பயிர் விதைக்கப்பட்ட வயல்களால் நிறைந்திருந்தன; அல்லும் பகலும் வேலை செய்ய ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். பண்ணையின் சொந்தக்காரர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு. பண்ணைக்குள்ளேயே சிறிய பகுதி வயல் ஊழியருக்கென ஒதுக்கப்படும். அந்த வயலில் உழுது, விதைத்து, உழைத்துப் பெறும் அறுவடைப்பயன்கள் அனைத்தையும் விவசாயி சொந்தமாக்கிக்கொள்ளலாம். அதற்கு ஈடாகப் பண்ணையிலுள்ள சொந்தக்காரருக்குரிய பெரும்பகுதி நிலத்தில் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இலவசமாக உழைத்துப் பயிரிட்டு மகசூல் எடுத்து அவரிடம் தர வேண்டும். இருவகையான நிலங்களும் வேலியால் பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். பல நூற்றாண்டுகள் இத்தகு உழைப்பு முறையிலேயே மூழ்கியிருந்த தேசம் பின்லாந்து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவான
பஞ்சத்தின்போது விவசாயிகள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். சீலன்பா தன் நாவலை இந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறார்.
சீலன்பாவின் நாவலை வாசித்து முடித்ததும் நம் மனத்திலெழும் முதல் மனச்சித்திரம் இது: உழைக்கும் விவசாயிகளுக்கென தனிநிலம், உரிமையாளர்களுக்கென தனிநிலம் என்பது பார்வைக்கு ஏதோ நல்ல ஏற்பாடுபோலத் தோற்றமளித்தாலும் அது உண்மையில் பெரிய சுரண்டும் திட்டம். நாள்முழுதும் வேலை செய்தாலும்கூட உரிமையாளரின் வயல்வேலைகள் முடிவதில்லை. அதிலேயே மூழ்கிக்கிடக்கும்படியான நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொண்டார்கள். தனக்குரிய நிலத்தில் வேலை செய்ய நேரமே எஞ்சுவதில்லை. தம் உணவுத்தேவையைக்கூட அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழல் நிலவியது. அவர்களின் வாழ்க்கை தீராத வறுமையில் மூழ்கி அழிவதை யாராலும் தடுக்க முடிந்ததில்லை.
பெஞ்சமின் என்னும் விவசாயியிடமிருந்து தொடங்குகிறது ஒரு பரம்பரை. அவன் பின்லாந்து தேசத்தின் மாதிரிப் பாத்திரம். பிறகு அவனுடைய மகன் யூகா தொய்வாலா வழியாக நீண்டு அவன் பிள்ளைகள் வழியாகத் தொடர்ந்து செல்கிறது. யூகாவின் பிறப்பில் தொடங்கும் நாவல் அவனுக்கு வழங்கப்படும் மரணதண்டனையில் முடிவடைகிறது. அறுபது எழுபது ஆண்டுகால வாழ்வு அச்சமூகத்தில் எவ்விதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. 1917 அக்டோபர் புரட்சியையொட்டி அந்நாட்டில் உருவான எழுச்சி யூகாவின் வாழ்க்கையை மரணத்தை நோக்கித் தள்ளுகிறது. செய்யாத கொலையுடன் அவனைத் தொடர்புபடுத்தி, அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. கரைசேரக்கூடும் என நினைத்த கப்பல், எதிர்பாராத கணத்தில் நீரிலேயே மூழ்கி அழிகிறது.
‘சாதுவான பாரம்பரியம்’ வாசிக்கும்போதே இடையிடையே சிவராம காரந்த்தின் கன்னடப்படைப்பான ‘சோமன துடி’ யை நினைத்துக்கொள்ளத் தோன்றியது. அப்படைப்பில் இடம்பெறும் சோமன் ஏறக்குறைய பெஞ்சமின் போன்ற விவசாயத்தொழிலாளி. அவனும் ஊர்ப்பண்ணையின் வயல்களில் வேலை செய்பவன். எதிர்பாராமல் ஒருநாள் அவனுக்குச் சொந்தமாக விவசாயம் செய்யும் எண்ணம் உருவாகிறது. பண்ணையிடம் துண்டு நிலம் கேட்கிறான். ஆனால் அன்றைய சூழலில் நிலவிய நிலவுடைமை மரபு அதற்கு இடமளிக்கவில்லை. முடிவை நேரடியாகச் சொல்லத் தயங்கும் பண்ணை உரிமையாளன், தன் பதிலை நாளை நாளை எனத் தள்ளிப்போடுகிறான். இறுதியில் சொந்த வாழ்வில் நேர்ந்த பல்வேறு தோல்விகளால் சோமனே மறைந்துபோகிறான். ஒரு கோட்டில் உலகியல் இயக்கத்தைக் காட்சிப்படுத்தும் சிவராம காரந்த் இன்னொரு கோட்டின் வழியாகத் துயர்நிறைந்த சோமனின் அகமன இயக்கத்தையும் காட்சிப்படுத்திச் சின்ன மனமோதலை நோக்கிப் படைப்பை நகர்த்திச் செல்கிறார். இறுதியில் நிலம் தொடர்பான பெரிய கேள்வி திரண்டெழ நாவல் முடிவடைகிறது. நிலம் என்பது என்ன, வாழ்க்கையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக அது எப்போது மாறுகிறது, மனிதனுக்கும் அதற்கும் உள்ள உறவு எத்தகையது என ஒன்றையடுத்து ஒன்றெனப் பல கேள்விகள் முளைத்தெழும் களமாக மாறுகிறது. பிறகு அவை நீண்டு மதம், தெய்வம் எனப் பல புள்ளிகளை நோக்கி விரிவுகொள்கின்றன.
சீலன்பா சித்திரிக்கும் பெஞ்சமின், யூகா எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சோமன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் ஏறத்தாழ ஒரே தன்மையுள்ளவை; சோமனின் மன இயக்கமும் யூகாவின் மன இயக்கமும் வெவ்வேறாக உள்ளன. நாவல் பெஞ்சமின் தலைமுறையில் தொடங்குகிறது. பிறகு யூகாவின் தலைமுறைக்குள் அடியெடுத்துவைக்கிறது. அடுத்து யூகாவின் பிள்ளைகளாகிய மூன்றாவது தலைமுறையை நோக்கிக் கடந்துசெல்கிறது. பெஞ்சமின்னைத் தொடர்ந்து யூகாவைக் காட்டும் நாவல் யூகாவிடமிருந்து பிரிந்துசென்று நகரத்தில் வாடகை வண்டியோட்டிப் பிழைக்கும் யூகாவின் மூத்த மகனைத் தொடர்ந்து சென்றிருக்கக்கூடிய சாத்தியப்பாட்டைச் சீலன்பா தவிர்த்துவிடுகிறார். திருமணத்துக்கு முன்பாக தன் மனைவி சுமந்த கருவால் விளைந்தவன் அவன் என்பதுகூட யூகாவின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கலாம். காலம் முழுதும் மீட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பாத்திரம் அதற்கான வாய்ப்பு கைக்கருகில் அமையும்போது அதைப் பற்றிக்கொள்வதே இயற்கை. ஆனாலும் யூகா அந்த வாய்ப்பை உதறுகிறான். அவனுக்கு அது உகந்ததாக இல்லை. வண்டி ஓட்டி வாழ்கிற நகர வாழ்க்கை அவனுக்கு உவப்பானதாக இல்லை. அவன் தன் வெற்றியைப் பரம்பரைபரம்பரையாக தன் மூத்தோர் வாழ்ந்த மண்ணில் அடைய விரும்புகிறான். நிலத்தைவிட்டு வெளியேறுவதை அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. மகனாகவே இருப்பினும், அவனை நகர மனிதனாகக் கருதி அருவருப்பில் முகம் சுளிக்க அவன் தயங்கவில்லை. அவன் அளிக்கும் பணத்தை ஏற்றுக்கொள்வதிலும் விருப்பமில்லை. அந்த அளவுக்கு நிலத்தின்மீது பற்றுகொண்டவன். சோமனுக்குள் கிளர்ந்தெழும் மனக்கொந்தளிப்புகள் எதுவும் யூகாவிடம் இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் அவன் தடுமாறுகிறான், குழம்புகிறான், தத்தளிக்கிறான், திகைப்பில் மூழ்கிவிடுகிறான், உறைந்துபோகிறான். இப்படி யூகாவை வேறொரு விதமான முன்மாதிரிப் பாத்திரமாக வடிவமைக்க சீலன்பா முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது. அதாவது, மண்புழுவைப்போல இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணிலேயே மடிகிற எளிய விவசாயப்பரம்பரையின் படிமமாக மாற்றமடைகிறான் யூகா.
பின்லாந்து சமுதாய அமைப்பைக் கற்பனையால் கட்டியெழுப்பப் போதுமான அளவிற்கு நாவல் முழுதும் பலவிதமான குறிப்புகளை வழங்குகிறார் சீலன்பா. ஒன்றுடனொன்று ஒருங்கிணைப்பு அற்ற சிதறுண்ட வாழ்க்கையமைப்பில் விவசாயிகள் சிக்கிக்கிடக்கிறார்கள். அது பெரிய தடை. அதுவே அவர்களைத் துணிவற்றவர்களாகவும் முகமற்றவர்களாகவும் மாற்றிவைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதினைந்து மணிநேர உழைப்பு எளிய புழுக்களாக்கிவிடுகின்றன அவர்களை. நாவலின் இறுதிக்கட்டத்தில் யூகாவுக்கு மரணதண்டனை விதிக்கப்படும்போது, அவன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று எடுத்துச்சொல்லி வாதாட ஓர் உயிர்கூட அந்த மண்ணில் இல்லை.
நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி பலவகைகளில் தனித்துவம் மிக்கதாகத் தோன்றியது. பண்ணையில் ஒருமுறை கடுமையாகப் புயல் வீசுகிறது. மேய்வதற்கு வெளியே அனுப்பப்பட்டிருந்த பசு வீட்டுக்குத் திரும்பவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகும் வரவில்லை என்பதால், யூகா அதைத் தேடிச் செல்கிறான். புதருக்கருகே அதைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனைக் கண்டு அது நெருங்கி வருவதற்கு மாறாக மூர்க்கத்துடன் ஓடத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் பசுவின் இருப்பை மோப்பம் பிடித்துவிட்டு ஓநாய்கள் அங்கே பாய்ந்துவருகின்றன. கடவுளிடம் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தபடி மழையில் சேறாகிக்கிடக்கிற பாதையில் பசுக்களைத் தொடர்ந்து ஓடுகிறான் யூகா. இந்தப் பசு-ஓநாய் உறவைப் பின்லாந்து விவசாயப் பரம்பரை- பண்ணை உரிமையாளர்கள் உறவின் படிமமாக நினைத்துப் பார்க்கலாம்.
பஞ்சத்தின் அவலத்தைச் சில காட்சிகள் வழியாகவே வாசகர்கள் உணரும்வண்ணம் சித்திரித்திருக்கிறார்; நுட்பமான அவருடைய சித்திரிப்புமொழி அதற்கு உதவுகிறது. தேவாலய வட்டாரத்தில் கிறிஸ்துமஸ் தொடங்கிவிடுகிறது. ஆயினும் பஞ்சத்தின் காரணமாக விவசாயிகளின் வீட்டில் சமைக்க ஒரு தானிய மணிகூட இல்லை. அவன் நம்பிச் செல்லும் தேவாலயத்தில் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கிறிஸ்துமஸை முன்னிட்டு ஊர்விட்டு ஊர் வந்திருக்கும் பிச்சைக்காரர்கள் அவன் வீட்டில் தங்குவதற்காக இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் பீன்ஸ்களும் சிறிது தானியமும் இருக்கின்றன. பிச்சைக்காரர்கள் தமக்கென உணவு சமைத்து முடித்ததும், அந்த உணவை பெஞ்சமினின் குடும்பத்துடன் பங்கிட்டுக்கொள்கிறார்கள். மரணம் பற்றி எழுதுகையில் சீலன்பாவின் சொற்கள் உயிர் கொண்டெழுந்து துயரோவியமாய் நெஞ்சில் நிலைகொண்டு நின்று கொல்கின்றன.
வாழ்வின் எல்லாத் தருணங்களையும் ஒருவித இயலாமையுடனும் வேதனையுடனும் மட்டுமே எதிர்கொள்கிறான் யூகா. நோயாலும் வறுமையாலும் வாடிக் குலைந்துபோயிருக்கிற மகள் ஹில்டாவின் வாட்டத்தைப் போக்க இயலாத தந்தையாக இருக்கிறான் அவன். அவளுக்குத் தேவையான சத்தான உணவை ஒருநாள் கூட அவனால் வயிறார அளிக்க இயலவில்லை. அத்தருணத்தில் நகரத்தில் வாழும் ஒரு குடும்பத்தில் பணிப்பெண் வேலைக்காக அவளை அனுப்பும்படியான சூழல் ஏற்படுகிறது. எங்காவது பசியில்லாமல் உயிருடன் இருந்தால் சரி என்னும் எண்ணத்தில் அவளை அனுப்பிவைக்கிறான் யூகா. துரதிருஷ்டவசமாக அவள் ஏரியில் மூழ்கி இறந்துவிடுகிறாள். இறுதிக்கணத்தில் பெற்ற மகளின் முகத்தைக்கூட அவனால் பார்க்க இயலவில்லை. அவளுடைய இறுதிச்சடங்குச் செலவைக்கூட அவளுடைய சம்பளப்பணத்தில் கழித்துக்கொண்டு எஞ்சிய சிறுதொகையை அனுப்பிவைக்கிறார்கள். கையறு நிலையில் அத்தருணத்தை எதிர்கொள்ளும் யூகாவின் மனநிலையைச் சீலன்பா மிகக்குறைந்த சொற்கள் வழியாக உணர்த்திவிடுகிறார். பொதுவாக மரணம் எத்தகைய கொடுமைக்காரர்களையும் சற்றே இளகவைத்துவிடும் என்னும் பொதுவான நம்பிக்கை பொய்த்துப்போகும் முக்கியமான வாழ்வியல் தருணத்தை சீலன்பா பகிர்ந்துகொள்கிறார். எந்தவிதமான குறுகுறுப்போ கருணையோ இல்லாத பணக்காரர்களின் அபாயகரமான மனப்போக்குக்கு அக்காட்சி மௌனமான சாட்சி. பசிமிகுந்த சூழலில் தனக்கு இருப்பிடம் வழங்கிய ஏழைகளுடன் உணவைப் பகிர்ந்துகொண்ட பிச்சைக்காரர்களின் மனப்போக்கையும் பணக்காரர்களின் மனப்போக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாசகர் சற்றே திகைப்பில் மூழ்கிவிடக்கூடும்.
நாவலின் முதன்மைப் பாத்திரமான யூகா குழந்தைப்பருவத்திலிருந்தே பசியும் பட்டினியுமாக வளர்கிறான். அவன் வயிறார உண்ட நாள் இல்லை. நிலத்திலிருந்து காட்டுக்கும் காட்டிலிருந்து நிலத்துக்கும் அவன் எப்போதும் நடந்தபடி இருக்கிறான். எப்போதாவது கிட்டும் ஓய்வு நேரத்தில் தன் பசுவையும் குதிரையையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறான். பஞ்சகாலத்தில் அதற்குப் போதிய உணவு இல்லாதபோது வெகுதொலைவிலிருந்து உலர்ந்த புல்லைத் திரட்டியெடுத்து வருகிறான். உழைப்பதற்காக மட்டுமே பிறந்தவனைப்போல வேலைசெய்துகொண்டே இருக்கிறான். அவன் செய்யாத கொலையில் அவனைத் தொடர்புபடுத்தி, அவனுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்ட சூழலில், நாவலில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாத்திரங்கள் அனைத்துமே ஒதுங்கி நின்று மௌனம் சாதிக்கும் விதம் திகைக்கவைக்கிறது. பசுவைக்கூட அடித்து விரட்டத் தெரியாதவன் அவன் என்று தெரிந்த நிலையில்கூட அவனுக்கு ஆதரவாக ஒரு குரல்கூட எழாத அளவுக்குத் தன்னலம் அவர்கள் கண்களை மறைத்துவிடுகிறது. எவ்விதமான குற்ற உணர்ச்சியோ பரிவுணர்ச்சியோ இல்லாத சமூகத்தில் யூகாவைப் போன்றவர்களின் இருப்புக்கும் பொருளில்லை; மறைவுக்கும் பொருளில்லை.
வாசிக்கத் தொடங்கியதுமே வாசகர்களைத் தம்மை நோக்கி இழுத்துக்கொள்ளும் படைப்புகளுக்கு நடுவில் மிகச்சாதாரணமாகத் தொடங்கி, கதாபாத்திரங்களை மெல்லமெல்ல அறிமுகப்படுத்தி மெதுவாகக் கதையைச் சித்திரிக்கும் எழுத்துமுறையை சீலன்பா பின்பற்றுகிறார். அதனால் பல பக்கங்கள் கடந்த பிறகும் பிடி கிட்டாத தவிப்பை வாசகர் அடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். நாற்பது ஐம்பது பக்கங்களுக்குப் பிறகே நாவலின் திசையையும் போக்கையும் உய்த்துணர முடிகிறது. நாவலை வாசித்து முடித்த பிறகு மொத்த கதையையும் கலைத்துப்போட்டுப் பின்னோக்குப் பார்வையில் வெவ்வேறு விதமாக அடுக்கி அசைபோடும்போதுதான் உண்மையில் நாவலின்
மேன்மையை உணரமுடிகிறது. நாவலிலிருந்து புதுப்புது அர்த்தங்களையும் அனுபவங்களையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடிகிறது.
நாவலை முற்றிலும் வேறு புள்ளிக்கு நகர்த்தும் ஆதாரமான சம்பவங்களை ஒன்றிரண்டு வரிகளில், சொற்களில் கூற முடிகிற திறன் சீலன்பா என்ற கலைஞருக்கு இந்த நாவலில் கைகூடியிருக்கிறது. கடந்தகால நினைவுகளும் கனவுகளும் நிகழ்கால சம்பவங்களும் முயங்கியும், முன்னும் பின்னுமாக நகர்ந்து வேகவேகமாக விலகியும் கூடியும் ஊடாடியும் தொடர்பற்ற துண்டுக் காட்சிகளாய் நாவலில் சிற்சில பகுதிகள் இன்னும் முழுமையாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாத திரைப்படக் காட்சிகள்போல் உள்ளன. வாசகமனத்தின் படைப்புணர்வை வேண்டும் பகுதிகள் இவை. கவனத்துடனும் நுண்ணுணர்வுடனும் வாசிக்கும் ஒருவருக்கு நாவல் தரும் ஆனந்தம் அபூர்வமானது; வாசிப்பனுபவம் ஆழமானது.
முடவன்குட்டி முகம்மது அலியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு பாராட்டுக்குரியது. வலிமை குறைந்த நாவலின் கதையோட்டப் பகுதியைக்கூட, தவிர்த்துச் செல்லவிடாமல் தொடர்ச்சியாகப் படிக்கவைக்கும் சக்தியுள்ள மொழி முகம்மது அலிக்கு வசப்பட்டிருக்கிறது.
மின்னஞ்சல்: paavannan@hotmail.com