தங்கப்பா கடிதங்கள் (ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதியவற்றிலிருந்து)தங்கப்பா
25.6.1986
அன்புமிக்க வேங்கடாசலபதி
மடல் பெற்றேன். விடுமுறையிற் சென்னை வரத்தான் எண்ணியிருந்தேன். முடியவில்லை. வேறு செய்ய நினைத்த
வேலைகளும் செய்யவில்லை. பொதுவாக நான் இரு மூன்று அளவை நிலைகளிலிருந்து (dimensions) மாறிமாறிச்
செயற்படுகின்றேன். எனக்கே உரிய அளவை நிலையிலிருந்து இயற்கையோடு பொருந்த வினையாற்றுதற்கான சூழல் இல்லை. வினையாற்றுதலை மட்டுமே குறியாய்க் கொள்ளும் வாழ்க்கை பிழையுடையது. ஆயினும் வினைநலம் கருதினால் நான் மற்றோர் அளவை நிலைக்கு இறங்கி வரவேண்டியுள்ளது. இடையில் உள்ளம் என்னை இங்கு விட்டுவிட்டு முன்னதற்குப் போய்விடுகின்றது. இதனாலேயே வேலைகள் தடைப்படுகின்றன.
தமிழ்நாட்டில், தக்கவினைகளைத் தக்கப்படி செய்வதற்கு ஆளின்மை மிக வருந்தத்தக்கது. தனக்குரிய ஏதேனும் ஒரு பணியை எடுத்து அதனைச் செம்மையுடன் செய்து முடிக்கும் திறமும் நல்லுள்ளமும் படைத்தோர் துறைதோறுந் துறைதோறும் வரவேண்டும். தன்னலமற்ற ஒருமேற்கொள்ளலாக இப்பணி அமைதல் வேண்டும். இதற்கான எண்ணச் சூழலும் அடிப்படைத் தகுதியும் முதலில் உருவாக்கப்பெறல் வேண்டும். அவையின்மையே சிறந்த படைப்பாளர் உருவாகாமைக்குக் காரண