கடலோரப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள்
கடலோர ஒழுங்குமுறை மண்டலம், 2018 கொள்கை சுற்றுச்சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வர்த்தக லாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
சுற்றுச்சூழல், காடு - பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (கஒம) 2018, அறிவிப்பானது அதன் சில கடுமையான சட்ட விதிகளை நீக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் ரீதியாகப் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுவரையிலும் இந்தச் சட்ட விதிகள் தடையாய் இருந்துவந்தன. கஒம எல்லைகளின் அளவு, வளர்ச்சி இல்லாத மண்டலத்தின் எல்லைகளைக் குறைத்தல், மக்கள்தொகை அடர்த்தியின்படி கடலோர மண்டலப் பகுதிகளை வகைப்படுத்தல் ஆகியவை இந்தப் புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களாகும். ராணுவம், பொதுமக்களின் பயன்பாடுகளுக்கான ‘நீண்டகாலத் திட்டங்களு’க்கு கஒம 1-ன் கீழ்வரும் சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதிகள் கூட விலக்களிக்கப்படவில்லை. மீனவர்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல், விநியோக நீதிகளின் பார்வையில் புதிய கஓம விதி கூறுவது என்ன?
எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலிருக்கும் கடலோரப் பகுதிகளில் வர்த்தகம், தொழிற்துறை ரீதியாகப் பெரும் திட்டங்களை அனுமதிப்பதன் மூலம் புதிய கஒம விதியானது இப்போதுள்ள சூழலியல் சமநிலையை எதிர்மறையாகப் பாதிக்கும். இது கடல் சூழலியலை மேலும் மோசமடையச் செய்வதுடன் கடல்வளத்தை நம்பியிருக்கும் மக்களை, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் சிறு மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும். உலகம் முழுவதிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையானது ஏற்கெனவே பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, கடலோர அரிப்பு போன்ற காரணங்களால் பெரும் ஆபத்திலிருக்கும் நிலையில் இந்தப் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகின்றது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரமும் ஆற்றுக் கழிமுகங்களையொட்டியுள்ள பகுதிகளும் எளிதில் அதிகபட்சமாகப் பாதிக்கப்படும் நிலையிலுள்ள பகுதிகள் என்று அறியப்பட்டவை. அப்படி யெனில் யாருடைய நலன்களுக்காக இந்தப் புதிய அறிவிக்கை?
மத்திய அரசின் பிரம்மாண்டத் திட்டமான சாகர்மலா திட்டம் நிறைவேறுவதை இந்தக் கொள்கை எளிதாக்கும். கடலோரப் பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகள் வாங்க முடிவதைச் சாத்தியமாக்கு
வதுடன் உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், சுற்றுலா ஆகியவற்றையும் அதிகரிக்கும். சாகர்மலா திட்டத்தின் மூலம் உருவாகக்கூடிய வர்த்தக வாய்ப்புகளின் மதிப்பு 8.5 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்துக் கடலோரச் சூழலியலுக்கும், பல நூற்றாண்டுகளாகக் கடலோரப் பகுதிகளின் பாதுகாவலர்களாக இருந்து, கடலைப் பொருளாதார வளமாக மட்டும் பார்க்காத மீனவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதற்கும் இந்தக் கொள்கை வழிகாட்டுகிறது. இதன் விளைவாக மீனவர்களின் நலன்களுக்கும் கடலோர வளங்களை வர்த்தகத்திற்காகக் கட்டுப்
பாடின்றிச் சுரண்டி இலாபம் காண நினைப்பவர்களின் நலன்களுக்கும் இடையே மோதல் எழுகிறது.
மும்பை, சென்னை போன்ற கடலோர மாநகரங்களில் அதிகரித்துவரும் நகரமயமாக்கம், நிலத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுவரும் மாற்றம், கடலோரங்களில் நடக்கும் ஆக்கிரமிப்புகளாலும் சாலைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளாலும் தாழ்வான நிலப்பகுதிகள், நீர்நிலைகள், கடல் ஆகியவை சரிசெய்ய முடியாத அளவிற்குப் பெரும் பாதிப்பிற்குள்ளாகிவிட்டன. இந்தப் பாதிப்புகளின் விளைவாக மீன்பிடிப்பு குறைந்துபோய்விட்டதை ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் சிறு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவர்கள் அந்நியமாதலுக்கு ஆட்படுவதுடன் சமூகத்திலுள்ள சமத்துவமின்மையும் மேலும் மேலும் அதிகரித்துவருகிறது.
மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் இந்தப் புதிய கஒம கொள்கையானது கடலோர வளங்களைப் பயன்படுத்துவதில் மீனவர்களுக்குள்ள பாரம்பரிய நெறிகளை மீறுவதைச் சட்டபூர்வமாக்குகிறது. இது வளங்களின் மீதான மோதல்களைத் தீவிரமாக்கி, இறுதியில் மீனவர்களின் உரிமைகளை நசுக்கி, கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்க சட்டங்களும் இல்லாத நிலையில், மீனவர்கள் தம் வாழ்வாதாரங்களிலிருந்து அந்நியமாக வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக நடக்கும் இடப்பெயர்வும் பெருமளவு வாழ்வாதார இழப்புகளுக்கு எதிராக மீனவ அமைப்புகள் தெரிவிக்கும் அச்சங்களும் ஆதாரமற்றவையல்ல. சமீப காலங்களில் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திட்டங்களான சர்வதேச கண்டெய்னர் பரிமாற்ற முனையங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற நேர்ந்தது. அவர்களது மறுவாழ்விற்கான முறையான திட்டமோ திட்டங்களை அமலாக்குவதற்கான செயல்முறையோ எவையுமில்லை. பிற குழுக்களின் வர்த்தகத் திட்டங்களுக்காக, நலன்களுக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்துச் சமத்துவமற்ற சமூகத்தில் ஏற்கெனவே விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டிருக்கும் மீனவச் சமூகத்தின் நிலையை இது மேலும் மோசமடையச்செய்யும்.
இதற்கு முன்னர் கூட அரசானது மீனவர் அமைப்புகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்ததில்லை. பெரும்பாலான சமயங்களில் கஒம விதிகளைக் கடைப்பிடித்ததில்லை அல்லது அவை மீறப்படுகின்றபோது தடுத்ததில்லை. ஆனால் கடலோர மண்டலங்களை நிர்வகிக்கும் விதிகளை இப்போது மாற்றியமைத்திருப்பது தனியார் இலாபத்தை மட்டுமே குறிவைத்துச் செய்யப்பட்டிருக்கும் அரசியல் நடவடிக்கை. தேசிய மீனவப் பணியாளர்கள் கூட்டமைப்பு போன்ற மீனவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ, சமூக சூழலியலைப் பாதுகாப்பதிலோ அரசு அக்கறை காட்டவில்லை. கார்ப்போரேட் மூலதனத்தால் உந்தப்படும் அரசியல் கொள்கைகள், இயற்கை வளங்களைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கடலோரச் சூழலியலமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நீண்ட கால நோக்கில் இதற்குச் சமூகம் பெரும் விலைதர வேண்டியிருப்பதுடன், உரிமைகளைப் பறிக்கும் போக்கை அதிகரிக்கச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் கேடாக முடியும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஜனவரி 19, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு