கடிதங்கள்
புத்தகம் ஓர் அறிவுக்கருவி, வாசிப்பு அதன் அறிவார்ந்த செயல், பதிப்புச் செயல் ஒரு பண்பாட்டுக் கடமை என்ற புதிய அர்த்தங்கள் மிகச்சரியானவை. வாசகர்களின் மனவோட்டம் அதுவே. மதுரை புத்தகக் கண்காட்சியில் நாங்கள் சொல்ல நினைத்ததைத் தலையங்கம் உணர்த்தியுள்ளது. பபாசி மனம் மாறவேண்டும்.
இளங்கோவின் இயக்கக்காரியும் ஆசி. கந்தராஜாவின் ஆண் குழந்தையும் காகங்கள் கூட்டத்தை நினைவுபடுத்தின. நேர்மையற்ற இடஒதுக்கீடு தலையங்கத்தில் பின்தங்கியிருத்தல் குறித்த தெளிவான அளவுகோல் இல்லை. சமகால ஆயுளைக் குறைத்து, நோய்களை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். இது அரசின் அக்கறைமீது சந்தேகங்களை எழுப்புகிறது என்பதில் சந்தேகமில்லை. சுவாசத்தின் விலை தலையங்கம் இன்றைய
நிதர்சனம்.
எம். சிவபாரதி, மின்னஞ்சல் வழி
ஆசி. கந்தராஜாவின் ‘ஆண்குழந்தை’ ஆணித்தரமான கருத்தைக் கூறும் பயனுள்ள கதை. பெண் குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றால் பெண்களையே குறை சொல்லும் அறியாமையும் ஆணவமும் கொண்ட பெரும்பான்மை ஆண்வர்க்கத்தினருக்கு இக்கதை மரண அடியாக இருக்கும்.
கதை இடம்பெறும் களமும் பலதார மணம் புரியும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி ஊடாகச் சொல்லப்படும் விதமும் கதையின் கருவுக்குக் கனகச்சிதமாகப் பொருந்துகின்றன. கதையின் முடிவு அமர்க்களம். ஜோர்தானின் மரணக்கடல் பற்றிய விளக்கங்கள் பயனுள்ளவை. களத்தின் அழகு கதாசிரியரின் கண்களூடாக வாசகரின் பார்வைப் புலத்தில் விரிகிறது. இதுபோன்ற தரமான பலபடைப்புகளைத் தரும் காலச்சுவடு சஞ்சிகைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ரஞ்ஜனி சுப்ரமணியம்,கொழும்பு (மின்னஞ்சல் மூலம்)
“போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்”- கதை மிகவும் அற்புதம். எஸ். ராவின் அனுபவம் ஒவ்வொரு வரியிலும் மிளிர்கிறது. “மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா?”- ஓர் உதாரணம். “சஞ்சாரம்” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்காக எஸ். ராக்கு வாழ்த்துகள்!
சுந்தர ராமசாமி மூலம் ‘நெடுங்குருதி’யில் ஆரம்பித்த எழுத்தாளர்- வாசகர் பந்தம், எஸ்.ராவின் புத்தகங்கள் வழி இன்றும் தொடர்கிறது. பிதாமகர் அசோகமித்திரன் பற்றிய எஸ்.ராவின் எழுத்துகள் அனைத்தும், அமி-யின் வாசகர்கள், அவருடன் கழித்த நாட்களை நினைவுபடுத்தி, உணர்ச்சிவசப் படவைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கதை படித்த நிறைவு, காலச்சுவடில்! அனுபவ எழுத்தாளர்களின் படிப்பனுபவமும் அவர்களின் வாழ் வனுபவமும் அந்தந்தக் கதைகளில் தெரிகின்றன.
கேசவ ரவி,சென்னை-94
தற்போதுதான் நம் பதிப்பகத்துக்கு விருது கிடைத்ததை வாசித்தேன்.வெகு மகிழ்ச்சி. பத்திநாதன் அண்ணாவிடம் கூட ஒருமுறை சொன்னேன், காலச்சுவடில் வேலை தருவதென்றால் (எவ்வளவு எளிய/கடின வேலை என்றாலும்) தற்போதைய எழுத்தர் பணியை விட்டுவிட்டு வருவதாக. ஆனால்...கொஞ்சம் வசவு வாங்கியதே மிச்சம் ஐயா.
சாரு ஐயா சொன்னபோதும், ஏன்அதன்முன்னரும்கூட நம் பதிப்பகத்தின் அர்ப்பணிப்பையும் உண்மையான தமிழ்ச் சேவையையும் எண்ணி உவகை அடைந்துள்ளேன்.
பொறுப்பாசான் அவர்களின் ‘பெருவலி’புதினத்தின் அட்டைப்பட வடிவமைப்பிற்கு விருது கிடைத்தது கூடுதல் மகிழ்வே (வாசித்ததில் சற்று வேறுபட்ட வரலாற்றுப் புதினமும் கூட). ‘கிடைக்க வேண்டிய விருது கிடைக்க வேண்டிய இடத்திற்குக் கிடைத்து இருக்கிறது’. வெகுமகிழ்வு. எனை வளர்த்ததில் பெரும்பங்கு காலச்சுவடு பதிப்பகத்திற்கு உண்டு. அனைத்து அன்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். சேவை தொடரட்டும்.
பசி புதல்வன், மின்னஞ்சல் வழி
சமகாலத்தில் நிகழ்ந்த வர்க்கப் போராட்டங்களும் பட்டினிச் சாவுகளும் மிர்ணாள் சென்னின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட அவரது சிறந்த படங்களின் காட்சிப் படிமங்களும் போராட்டங்களும் பட்டினிச் சாவுகளும் திரும்பத் திரும்பக் குறியீடுகளாகப் பதிவு பெற்றன. இவரது கதையின் பின்புலத்தோடு கூடிய வசனம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காலகட்டம் அது. காட்சியின் சூழலுக்கேற்ப மனோதத்துவ இயலுக்கு நெருக்கமாகக் கதைக்கான பின்புலத்தை வென்றெடுத்த சினிமா மேதைகளில் இவரை முக்கியமானவராகக் கருதுகிறேன்.
பா. செல்வவிநாயகம்,சென்னை - 600 068
எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ‘போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்’ அருமையான சிறுகதை என்று ஒற்றை வரியில் கூறி மனநிறைவுகொள்ள முடியாது. அதிசயம், புதிர், அதிர்ச்சி, நம்பிக்கை போன்ற பல்வேறு உணர்வுகளூடே வாசகன் வழி தவறிவிடாமல் கரம்பற்றிச் செல்லும் பொறுப்புமிக்க வழிகாட்டியாக அவர் இருக்கிறார்.
‘இந்தியர்களுக்கு மதம் என்பது அணிந்துகொள்ளும் சட்டையன்று. உடலின் மேல்தோல் போன்று பிரிக்கமுடியாத அம்சம்’ என்பது போயர்பாக் வழியாக எஸ். ராமகிருஷ்ணன் கூறுவதாகவே உணர முடிகிறது. கடவுள்கள் குறித்து எத்துணை தத்துவ விசாரணைகள்!
‘மூன்று தலை கொண்ட மரம்’ போன்று எங்கள் ஊருக்கு வடமேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதறுண்ட குன்றின் அடிவாரத்தில், சதங்கைகள் ஒலிக்க சப்த கன்னியர் வருவதும் அருகிலுள்ள சுனையில் நீராடுவதும் வழக்கமென்றும் விவரித்து, அதன் கிளைக் கதைகள் சிலவற்றைக் கண்மாய் மதகடியில் இரவு நேரத்தில் அமர்ந்து என் மாமா ஒருவர் ‘பயப்படாதீங்க, பயப்படாதீங்க’ என்று கூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
மறுநாள் சாமுவேலைக் காணவில்லை. போயர்பாக் தேடியலைந்தும் சாமுவேல் மாயமான விதம் தெரியவில்லை. பாதி வரைந்த நிலையில் படம் இருந்தது. மரத்தை வரைய முற்பட்டதே சாமுவேலின் திடீர் மறைவுக்குக் காரணமென கிராம நிர்வாக அதிகாரி கூறியது போயர்பாக்குக்கு நம்ப முடியாததாக இருந்தது.
போயர்பாக்கின் மழைக்கோவிலைப் பற்றிய சொற் பிரயோகம், ‘வெல்லத்தைக் காய்ச்சும்போது அது பாகுபோலாகிவிடும். அப்போது அதை நூல்போல் இழுக்க முடியும். அப்படியொரு மொழிநடை’ என எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ள உவமை வேறெவரும் இதுவரை கையாளாதது.
‘தார்ப் பாலைவனத்தின் நடுவே முடிவற்ற மணற்பரப்பில் ஆண்டு முழுவதும் மழைபெய்துகொண்டேயிருக்கும் புராதனமான கோயில் ஒன்றிருக்கிறது’ என்பதை வாசித்ததும் சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் கிருஷி கூறிய சம்பவம் நினைவுக்கு வந்தது. தென்காசி தாண்டி கடனா நதி அணை இருக்கிறது. அங்கிருந்து மேலே இரண்டு கிலோமீட்டர் நடந்தால் ஒற்றை மரம் உள்ளது. சித்திரா பவுர்ணமிக்கு முன்னும்பின்னுமாக மூன்று நாட்கள் அந்த மரத்தைச் சுற்றி மழை பெய்யுமாம்!
தொடர்ந்து போயர்பாக் மேற்கொண்ட பயணம் நம்மை உலுக்குகிறது. பாலைவன நடுவில் மூன்றுநாள் உணவுடன் தனியே நடக்கும்போது அவன் ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா’ என்று எழுந்த கேள்விக்கு ‘கடவுள் இருக்கிறார்’ என்று தன்னையறியாமல் சப்தமிட்டான். அதற்குப் பிறகு அவன் பட்ட கஷ்டங்களை விவரிக்கும்பொழுது நாமும் அவற்றை உணர்கிறோம்.
மீதியை வாசிப்பதற்குள் நாம் போயர்பாக்காக மாறிவிடுகிறோம். நம் நினைப்பு இப்படியிருக்க ‘போயர்பாக்கை ஓர் அந்நியனாக உணர முடியவில்லை. அவன் ஓர் இந்தியன் ஆகிவிட்டான் என்றே தோன்றியது’ என முடிக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கதை.
தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு - 626 132
எப்போதைக்காட்டிலும் சமீப காலங்களில் பல்வேறு இடங்களில் புத்தகக் காட்சிகள் நடந்துவருவது மகத்தான காலமாற்றத்தின் அறிகுறியாகும். புத்தகக் காட்சி வெறும் வருடாந்திரச் சந்தை என்றும் மற்ற பொருள்களைப்போல் புத்தகங்களையும் சந்தைப்படுத்தும் செயல் என்றும் மேலெழுந்தவாரியாகச் சிந்திப்பது எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் வியாபார நோக்கில் எடைபோடும் முற்றிலும் பொருந்தாச் செயலாகும். அறிவுப்புலமும் அதுசார்ந்த அறமும் இவ்வாறான போக்கினால் பலவீனப்பட்டுத் தாழ்நிலைக்கே தள்ளப்படும். இதனை ‘மாறும் புத்தகப் பண்பாடு’ தலையங்கம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. புத்தகப்பதிப்பு என்பது பண்பாட்டுக்கடமை. மாறிவரும் புத்தகப்பண்பாட்டிற்கு தலையங்கம் மேலும் மெருகூட்டிள்ளது.
எழுத்தாளனின் படைப்பாற்றலும் வாசகர்களின் நாட்டமும் பதிப்புப் பணியும் மனிதயுகத்தின் மகத்தான வரங்கள். இவற்றை உள்ளீடாகக் கொண்டுள்ள தலையங்கம், மானுட வர்க்கத்தின் புதிய மலர்ச்சியையும் சீரிய வளர்ச்சியையும் அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் இதழியல் தர்மத்தை நிலைநாட்ட முயற்சிசெய்துள்ளது.
தேர்ந்த மனப்பக்குவமும் நல்ல கல்வி வளர்ச்சியும் கால மாற்றங்களுக்கேற்ற நாகரிகமும் ஏக காலத்திலேயே கைவரப் பெற்ற மேல்தட்டுச் சமூகத்திலும் பொருளாதார வறுமை உண்டு என்பது உண்மைதான். இதனைப் போக்குவதும் நல்ல அரசின் கடமைதான். இதற்கான பொருத்தமான பிற நடவடிக்கைகள் பற்றி முற்றிலும் புதிய கோணங்களில்தான் அரசு சிந்திக்க வேண்டும். இதைவிடுத்து, காலங்காலமாய் அழுந்திக்கிடந்து பரிதாபவிளிம்புகளில் இன்னும் சிக்கித்தவித்துவரும் கீழ்த்தட்டு மக்களுக்கான நெறிசார்ந்த இட
ஒதுக்கீட்டில் வைத்து சீண்டிப்பார்ப்பது ஓட்டு வங்கி விஸ்தரிப்புக்கான அரசியல் சித்து விளையாட்டு. மாறாக, இது மாபெரும் வறுமை ஒழிப்புப் பிரகடனம் அல்ல. இதனை ‘நேர்மையற்ற இடஒதுக்கீடு’ கட்டுரை ஆழ்ந்து விவரிக்கிறது.
சி. பாலையா, புதுக்கோட்டை
ஜனவரி மாத இறுதியில் ஏற்பட்ட மனஅழுத்தத்தை காலச்சுவடு அறவே நீக்கிவிட்டது. தலையங்கம் சென்னை புத்தகக் காட்சி குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியது. நேர்மையற்ற இட ஒதுக்கீடு தலையங்கம் நல்ல பதிவு. சமூக அளவில் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவே இட ஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி வாக்கு வங்கி அரசியலுக்காக இதுபோன்ற அபத்தத்தை மத்திய அரசு செய்திருக்கிறது. பொதுவில் ஒட்டுமொத்தமாகத் தீங்கு விளைவிக்கும் செயல்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. சுவாசத்தின் விலை தலையங்கம் இதையே உணர்த்துகிறது. மிர்ணாள் சென் குறித்த பதிவுகள் என் போன்றவர்களுக்கு ஒரு நல்ல திரைக்கலைஞனை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளித்தன. எஸ்ராவைக் காலச்சுவடில் தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. குணசேகரனின் கட்டுரை விரிவாக நன்முறையில் எழுதப்பட்டிருக்கிறது. காமத்திற்கும் ஆபாசத்திற்குமான வேறுபடுதலை அறியமுடிந்தது. நடைபாதையில் கடை வைத்து இலக்கியப் பணி செய்த ஆழ்வாருக்கு அஞ்சலி
செலுத்திக் காலச்சுவடு மரியாதை செய்திருக்கிறது. இளங்கோவின் ‘இயக்கக் காரி’ பெண் குழந்தைகள் மீதான உறவினர்களின் அத்துமீறலை அதிர்ச்சியுடன் விளக்கியது. குழந்தையின்மைக்கும் ஆண் குழந்தை பிறக்காமைக்கும் பெண்களையே குற்றம் சாட்டும் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் ‘ஆண்குழந்தை’ கதையில் உள்ளது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற வகையில் அமைந்திருந்தது சலபதி குறித்த பெருமாள் முருகனின் கட்டுரை. தலைப்பு வெகு சிறப்பு. பத்திநாதன் முகநூலில் தொடர்ச்சியாக அகதி முகாம்கள் குறித்த வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது ‘கதையல்ல’ கதை அதேபோன்ற துயரைப் பேசியது. மேதைமை மிகுந்த அம்பேத்கரை ஒரு சமூகம் மட்டுமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவல நிலை நமது நாட்டிற்கே உரிய சிறப்பு போலிருக்கிறது. பப்ளிஷிங் நெக்ஸ்ட்
விருதினைக் காலச்சுவடு பெற்றமைக்கு வாழ்த்துகள்.
சரவணன் , மதுராந்தகம்
காலச்சுவடு பிப்ரவரி 2019 இதழில் வெளியாகியுள்ள ‘கொக்கோகமும் தமிழர் காமமும்’ கட்டுரையில், லேனா தமிழ்வாணன் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் அவர் தந்தை தமிழ்வாணன் எழுதியவை. தவறாகப் பிரசுரம் ஆகியுள்ளது!
ஜெ. பாஸ்கரன், சென்னை - 600 083
பிழைக்கு வருந்துகிறோம் - பொறுப்பாசிரியர்
இந்த இதழ் அச்சுக்குப் போகும் நிலையில் நண்பர் ஓவியர் கருணா வின்சென்ட்டின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாக வந்து துளைத்தது. ஓவியர், ஓவிய விமர்சகர், இலக்கிய வாசகர், நட்புக்கினிய தோழர். காலச்சுவடு நூல்கள், இதழ்கள் சிலவற்றுக்கு ஓவியப் பங்களிப்புச் செய்தவர். கலை இலக்கியம், ஈழம் பற்றிப் பேசுகிற எல்லாரையும் அவருக்குத் தெரியும். அவரைத் தெரிந்தவர்களுக்கு அவரது மனமும் கனிவும் விளங்கும். நான் இழந்தது ஒரு தொலைதூர நண்பரை. கருணாவுக்கு நெருங்கியவர்கள் இழந்திருப்பது அவரவர் நிழலை.
போய்வாருங்கள் கருணா.
- சுகுமாரன்