நவீனம் கட்டுடைக்கும் சாஸ்திரத்தின் புருஷ உடல்
சந்நியாசமும் தீண்டாமையும்
சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள் பற்றிச் சில குறிப்புகள்
ராமாநுஜம்
வெளியீடு:
புலம் வெளியீடு
72, மதுரை நாயக்கன் தெரு,
சின்னமேட்டுக்குப்பம், மதுரவாயில்
சென்னை & 600 095
பக். 244
ரூ.200
இந்தியச் சூழலில் சாதியைப் பற்றிய விசாரணையானது பெருமிதத்தின் வெளிப்பாடாக இருக்கும் அல்லது அதன்மீதான எதிர்வினையாக இருக்கும். சாதி ஒருவருக்கு நன்மையைக் கொடுக்கும்போது அது எதிர்க்கப்படுவதில்லை; மாறாக, பாதுகாக்கப்படுகிறது. எதிரிடையில் யாருக்குத் தீமையை ஏற்படுத்தியதோ அந்தப் பாதிக்கப்பட்ட தளத்திலிருந்து சாதியின்மீது கடும் எதிர்ப்பு எழுகிறது. உண்மையில் அரவணைப்பைக் காட்டிலும் அதன்மீதான எதிர்ப்புச் சாதியை இறுகச்செய்து இன்னும் கடினமாக்குகிறது. அறிவியல் ரீதியில் இதனை ஆராய்ந்தாலும் பொதுவாசிப்புக்கு உட்படாத மிக உயர்ந்த அறிவுசார் வாசிப்பாகப் போய் முடிந்துவிடுகிறது. எவ்விதத்தில் சாதியை அணுகினாலும் அது தன்னை மிகப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள இதர சக்திகளைத் தன்மீதான பாதுகாப்பு அரணாகக் கட்டமைத்துக்கொள்கிறது. அதன் மையம் தீண்டப்படாத எல்லை; அதன் காரணம் அணுகுமுறை. தன்னை ஆராய ஒரு குறிப்பிட்ட வகையான அணுகுமுறையைச் சாதியக் கட்டமைப்பு கோருகிறது போல் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அணுகுமுறைக்கு மீறிய சாதி பற்றின விசாரணை அதற்கு இன்னும் பலம் சேர்க்குமோ, அதன் உண்மை நிலையை அப்பட்டமாக்கிக் காட்டாதோ எனவும் எண்ணச் செய்கிறது.
இந்த வகையில் ராமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டாமையும்: சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள் பற்றிச் சில குறிப்புகள் நூல் ஒரு குறிப்பிட்ட வகையான அணுகுமுறையில் தேர்ந்த சொல்லாடலில் தன் விசாரணையைச் சாதியத்தின்மீது நடத்துகிறது. இந்த அணுகுமுறையைக் ‘கட்டுடைத்தல்’ எனலாம். புத்தகம் எந்தச் சொல்லாடல் கோணத்தில் வைத்து நடத்தப்படுகிறதோ அதன் அச்சுக்கோணத்தில் பிசகு தவறாமல் வாசிக்கப்பட வேண்டும். எளிய விமர்சனப் பார்வையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தால் யானையைப் பார்க்கப் போன குருடர்கள் கதையாகிவிடும். காரணம், ஒரு மாபெரும் உருவம் (சாதி) கட்டுடைத்தலாக ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் வைத்து ஆராயப்படுகிறது. அந்தச் சட்டகத்தின் எல்லை புத்தகத்தில் பயன்படுத்தப்படும் சொல்லாட்சி. ஒருவிதத்தில் மார்க்சியத்தின் சொல்லாட்சியே இப்புத்தகச் சட்டகத்தின் வடிவமைப்பைத் தீர்மானிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மார்க்சியச் சொல்லாடல்கள் எப்பேர்ப்பட்ட இறையியல் சம்பந்தப்பட்ட விவாதத்தையும் பௌதீகத் தளத்திற்குள் இறக்கி அதனை அதன் தெய்வீக நிலையில் அல்லாது பௌதீக நிலையில் வைத்து ஆராய்வனவாகும். எனவே இப்புத்தகத்தின் வாசிப்புக்கு மையம், விளிம்புநிலை, சட்டகம், உற்பத்தி, உபரி, உரையாடல், முதலீடு போன்ற சொல்லாடல்களின் பரிச்சயம் தேவைப்படுகிறது. இவை ஒரு சட்டகத்தைக் கட்டமைக்கச் செயல்படும் கருத்தியல் சார்ந்த சொல்லாடல்கள். குறிப்பிட்ட இந்த அணுகுமுறையின் வழி மாத்திரமே சட்டகத்திற்குள் கையகப்படுத்தப்பட்டிருக்கும் யானையின் ஆகிருதியை முழுவதும் பார்க்கச் சாத்தியப்படும்.
கட்டுடைத்தல் ஒரு மேற்கத்திய அணுகுமுறை. அவர்களுக்குச் சட்டகம் சார்ந்த அணுகுமுறை சாத்தியப்பட்டதற்குக் காரணம் மொழியை அவர்கள் அமைப்பியல் ரீதியில் ஆராய்ந்தார்கள். மொழியின் மீதான அமைப்பியல் பார்வை தொடர்ச்சியாக அதன் உச்சத்தில் பல தளங்களில் பின் அமைப்பியலாகச் சென்று முடிந்தது. சாதி எப்படி ஓர் அதிகாரச் சக்தியாகச் செயல்படுகிறதோ அதே போன்று மேற்கத்தியர்களுக்கு மொழியின் ஆதார நம்பிக்கையான ‘லோகோ’ என்பது அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. இப்புத்தகம் முன்வைக்கும் மையம் x விளிம்புநிலை அமைப்பைப் புரிந்துகொள்ள லோகோவின் நிலையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மேற்கத்தியர்களுக்கு ‘வார்த்தை’ (logo) என்ற பதத்தைத் தொடுவது அச்சத்திற்குரிய செயலாகும். அதனுள் பிரபஞ்சம், படைப்பு, இறைவன் என அனைத்தும் சாரப்படுத்தப்பட்டிருக்கிறது. மதப் பின்புலத்தில் உன்னதமான, தொடக்கூடாத ஒன்றாகவிருந்து வியாக்கியானத்திற்கும் விவரிப்புக்கும் அப்பாற்பட்டியங்கும் சொல். இதனோடு தொடர்புபட்ட மொழியும் தெய்வீகமானது. எழுத்து-மொழி தெய்வீகமானதாகவும் இறையியல் சார்ந்ததாகவும் அசுத்தத்திற்கு நீங்கலாகி நின்று வந்தது. வார்த்தையை அதன் பௌதீகத்தளத்தில் அறிந்துகொள்ளவதற்கு தொடுவதற்கும் அதன்மீது கட்டமைத்திருக்கும் அனைத்து விழுமியங்களையும் அகற்ற வேண்டியிருக்கிறது. வியாக்கியானத்திற்கு உட்படாத அந்த லோகோவே ஐரோப்பியர்களின் பலமும் பலவீனமும். ஐரோப்பாவைச் சக்திவாய்ந்த சர்வாதிகாரமாகக் கட்டமைத்து வைத்தது இந்த லோகோ. மேற்கத்தியர்கள் இந்த சூட்சமத்தின் மையத்தைப் பாதுகாப்பாகக் கட்டமைத்துப் பிரபஞ்சம், இறைவன் என அனைத்தையும் பல அடுக்குகளாக வைத்திருக்கின்றனர். சக்திவாய்ந்த அதே நேரத்தில் எளிதில் உதிர்ந்து சிதறக்கூடிய மையத்தை அணுக அதன்மீது போர்த்தப்பட்டிருக்கும் அடுக்குகளைக் களைய வேண்யிருக்கிறது.
அப்படிப்பட்ட மையத்தை நோக்கிய பல அடுக்குகளின் கலைவு நடந்த தருணம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த அறிவியல், சமூகச் சிந்தனைகள் அனைத்தும் பௌதீகத்தை நோக்கிய பயணமாக இருந்தது. இதில் லோகோவையும் நவீனத்தின் முன்பு அதன் பௌதீக நிலையில் ஆராயப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவரையில் லோகோவின் மீதான வாசிப்பு அதன் மீதானதாக அல்லாமல் அதன்மீது போர்த்தப்பட்டிருந்த விழுமியங்கள் மீதாக இருந்துவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, நவீனப் பார்வையின் விழுமியங்களைக் கலைத்து மையத்தின் அப்பட்ட நிலையை நோக்கியது.
விழுமியங்கள் கலைந்த லோகோவின் நிலை எழுவாய், பயனிலை; அப்படியில்லையெனில் தாடையின் அசைவில் உண்டாகும் உச்சரிப்பு. இதனை பெட்ராண்ட் ரசல் தன்னுடைய An Inquiry into Meaning and Truth’ என்ற புத்தகத்தில் இவ்வாறு விவரிப்பார். Words, from the earliest times of which we have historical records, have been objects of superstitious awe. The man who knew his enemy’s name could, by means of it, acquire magic powers over him. We still use such phrases as ‘in the name of the Law’. It is easy to assent to the statement ‘in the beginning was the Word’ … Before we can understand the language, we must strip it of its mystical and awe inspiring attributes.(21)
இங்கு ரசல் கூறும் Striping of its mystical and awe inspiring attributesஎன்பது மையத்தின்மீது அதாவது ‘வார்த்தை’யின் மீது போர்த்தப்பட்டிருக்கும் இழையடுக்குகள் ஆகும்.
ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்போது அதன் தாக்கம்/பொருள் பல விதங்களில் உச்சரிப்பவருக்கும் கேட்பவருக்கும் இடையில் ஏற்படுகிறது. ரசல் சொல்லுவது போன்று எதிரியின் மீதான ஆதிக்கம் அவன் பெயரை உச்சரிப்பதில் இருக்கிறது. எனினும் ஒரு சொல்லையோ சொற்றொடரையோ ஆய்வுக்கு உட்படுத்தி மிக அருகில் சென்று வாசிக்கும்போது அது பொருளற்ற இயந்திரத்தனமான வார்த்தைகளின் கட்டமைப்பான, எழுவாய் + பயனிலை என பொருளற்ற நிலையில் நிற்கும். எனினும் இது ஒரு காலகட்ட நிகழ்வு; அதாவது நவீனத்தில் நடந்த நிகழ்வு.
‘சந்நியாசமும் தீண்டாமையும்’ எப்படி ஒரு மொழியின் அணுக்கத்தில் செல்லாமல் தூரத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றனவோ அதே போன்று சந்நியாசமும் தீண்டாமைக்குமான ஆதாரமாக இருக்கிற பௌதீக உடலை அதன் இருப்பு நிலையில், மாபெரும் பிரம்மனாக வர்ணங்களைப் பிறப்பிக்கும் உடலாகக் காட்சிப்படுத்திக் கடைசியில் அது எவ்வாறு பௌதீக உடலாகச் சந்நியாசியின் உடலாகவும் கிரகஸ்தன் உடலாகவும் பார்க்கப்படுகிறது என்பதுவரை தன் ஆய்வை முன்நோக்கி நகர்த்துகிறார்.
இந்த முழுப் புத்தகமும் அதன் ஆய்வியல் தொடர்ச்சியில் சாஸ்திரம் காட்டும் ஓர் உடல் எவ்வாறு சமூக உடலாகவும் குடும்ப உடலாகவும் சந்நியாசத்தின் உடலாகவும் தன்னை முக்கோண நிலையிலான உடலாக வைத்துக்கொண்டு வரலாறு முழுவதும் பிராமண உடல் என்ற பெயரில் எப்படி பயணிக்கிறது என்பதைப் பேசுகிறார்.
சந்நியாசம் தீண்டாமைக்குள் நடக்கிறது. பௌத்தத்திலும் சந்நியாசம் உண்டெனவும் அந்தச் சந்நியாசம் தீண்டாமையை உற்பத்தி செய்யவில்லை என்றும் ராமாநுஜம் கூறுகிறார். ஆனால் பிராமணர்களின் சந்நியாசம் தீண்டாமையை உண்டுபண்ணுவது கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது. முதல் கட்டத்தில் பூத உடல் அசுத்தம் எனத் தன்னையே தீண்டாமைக்குள் வைத்துக்கொண்டு துறவறம் மேற்கொண்டு மீட்சியை அடைய முற்படுகிறது. இது பாகவதக் காலத்தில் ஏற்பட்ட உடல் பற்றிய சுத்தம், அசுத்தம் என பார்க்கப்பட்டது.
பாகவத மரபு வேத மரபிற்கு எதிராக உண்டானது என ராமாநுஜம் கூறுகிறார். வேத மரபு, குடும்பஸ்தனுக்கான கடமைகளாக மூன்றை முன்வைக்கிறது. இந்த மூன்றும் பிரபஞ்ச ஒழுங்கைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆசிரியர். முதல் கடமை வேள்வி செய்தல், இரண்டாவது ஆசிரியர்களிடம் கல்வி கற்றல், மூன்றாவது கடமை மகனைப் பெற்றெடுத்து மூதாதையர்களை விடுதலையாக்குதல்.
ஆயினும் பாகவத மரபு, குடும்பத்தை உடலின் அசுத்தத்தின் களமாகக் கண்டு, அதன் பிடியிலிருந்து தன்னை விடுதலையாக்கிக் கொள்ள முற்படுகிறது; ஆரண்யத்தை நோக்கி உடல் பயணிக்கிறது. ராமாநுஜம் இந்த ஆரண்யம் கிராமத்திற்கும் விவசாய உற்பத்தி நிலத்திற்கும் மிக நெருக்கத்தில் இருக்கிறது எனவும், இந்த இரண்டு நிலப்பரப்பும் சேர்ந்து அரசாங்கத்தோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார். இன்னும் அரசர்களின் பழிபாவங்களையும் சுமக்கச் சந்நியாசியின் உடலே தீண்டாமையில் ஆரண்ய வாழ்வை மேற்கொள்கிறதெனவும், வேத மரபும் பாகவத மரபும் அடிப்படையில் கிராமத்தையும் ஆரணியத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார். கிராமம் ஆரண்யங்களைச் சார்ந்திருக்கும் பிராமணர்களின் சந்நியாச வாழ்க்கைக்கு எதிர்க் கலாச்சாரமாகப் பௌத்தமானது நகரத்தில் செயல்படுகிறது என்கிறார்
ராமாநுஜம்.
நகரம் என்பது கங்கைக் கரையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களால் உண்டானது: உபரி உணவு, மக்கள்தொகைப் பெருக்கம், வியாபாரம், அரசாட்சி, நகரங்களின் வளர்ச்சியினால் தனிமனித அடையாளம் இல்லாமல் போகிறது. இரத்தச் சம்பந்தமான உறவுகள் தகர்க்கப்பட்டுப் பொதுச் சமூகம் உருவாக்கப்பட்டது. கிராமம் சார்ந்த விழுமியங்கள் அனைத்தும் நகர அமைப்பில் இல்லாமல்போகின்றன. இந்தச் சூழலில்தான் கிராமங்களில் வேத மரபிற்கு எதிராகப் பாகவத மரபு உண்டானது. இந்தப் பாகவத மரபு பௌத்தத்துடனான உரையாடலாகக்கூடக் கருதலாம். வேத மரபு தனிமனிதனின் மூன்று கடமைகளைக் குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் வைத்திருந்தது. ஆனால் பாகவத மரபு தனிமனித அசுத்தத்தைக் களைய குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோருகிறது.
இது அப்படியே பௌத்தத்தின் கருத்தியலைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பௌத்தம், வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுதலையாக இல்லறத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்தும் விடுதலையாக வேண்டும் எனச் சொல்கிறது. இதன் விளைவாகப் பௌத்த மடாலயங்கள் தோன்றின.
பௌத்தம் சந்நியாசத்தை முன்வைப்பதற்கான காரணம் சித்தார்த்தர் புத்தராக மாறும் கதையில் இருக்கிறது. சித்தார்த்தர் நகர்வலம் வரும்போது நோயுற்றவர்களையும் பிணத்தையும் பார்ப்பது நகரம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தது என ஊகிக்க முடியும்.
இது ஒருபுறம் இருப்பினும் நகரத்தின் வளர்ச்சி வேத மரபிற்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்தது. வேள்வியை நகரம் என்ற எதிர்க் கலாச்சாரம் எதிர்க்க ஆரம்பித்தது. வேள்வியும் குடும்பமும் தனிமனித விடுதலைக்கு வழி தராதவை. குடும்பம் என்ற கட்டுக்குள் இருந்து விடுதலையடைய ஆரண்யம் அவசியப்பட்டது. விடுதலைக்கு வேள்வியைக் காட்டிலும் கர்மா என்பது முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.
இது பௌத்தத்தினுடனான உரையாடலில் ஏற்பட்ட ஓர் எதிர்வினையாகப் பார்க்க வேண்டியுள்ளது. நகரம் எப்படி
தனிமனித விடுதலையைத் தேடி மடாலயங்களைத் தோற்றுவித்தனவோ அதுபோன்று அதன் உரையாடலில் பார்ப்பனியம் வேதமரபை விட்டுவிட்டு விடுதலைக்கு ஆரணியத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. இதுதான் சந்நியாசத்தின் பிறப்பிடம். இதனால் உண்டான தீண்டாமை என்னும் கருத்து சுத்தம், அசுத்தம் சார்ந்ததாக இல்லாமல் தனிமனித உடலின் விடுதலையாகவே பார்க்கப்பட்டது. எனவே பிராமணன் என்பது உடலாகவும் கருத்தியலாகவும் வேதகாலம் முதல் பாகவத காலம் தொடர்ந்து பின்பு சங்கராச்சாரியார் உண்டாக்கிய அத்வைத்திய மரபுவரை தொடர்ந்துகொண்டே செல்கிறது. இதில் புறவயமான கருத்தியல் நிலைப்பாடுகள் மாறினாலும் அகவயமான கருத்தியல் அதாவது பிராமணன் என்ற கருத்தியல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு தொடர்ந்து செல்கிறது.
இந்த அகவயம், புறவயமான கருத்தியலை அம்பேத்கர் சூட்சும தீண்டாமை, ஸ்தூலத் தீண்டாமை என வரையறுக்கிறார். அம்பேத்கரின் எதிர்க் கலாச்சாரக் குரல் ஸ்தூலமாக இருக்கிற தீண்டாமையை மாத்திரம் விமர்சிப்பதாக இல்லாமல் அது ஸ்தூல நிலையிலிருக்கிற பிராமணன் என்ற தீண்டாமையின் கருத்தியலை விமர்சிப்பதாக இருக்கிறது. இன்னொரு வகையில் ஸ்தூலமான தீண்டாமைக் கருத்தியலை அதிகம் விமர்சிக்க முயலும்போது அது ஒருபோதும் ஸ்தூல நிலையிலிருக்கும் கருத்தியலைப் பாதிக்கவே பாதிக்காது. அம்பேத்கர் இதனை அணுகும் நிலைப்பாட்டை ராமாநுஜம் ‘அற்புதமான’ நிலைப்பாடு என்கிறார். அம்பேத்கர் தீண்டப்படாதவர் என்ற கருத்தியலை மிக காத்திரத்தோடு எதிர்கொண்டதின் காரணம், அதற்கு ஆதாரமாக இருக்கிற ஸ்தூலமான பார்ப்பனியம் என்ற கருத்தியலைத் தெளிவாகப் பார்த்ததுதான் என்கிறார்.
பார்ப்பனியம் என்ற கருத்தியலை அதன் சூட்சம நிலையிலிருந்து ஸ்தூல நிலையில் பௌதிகத்தில் வைத்துப் பார்த்தது சுயமரியாதை இயக்கம். எப்படி பௌத்த மரபிற்கு எதிர்க் கலாச்சார மரபாக வேதம் செயல்பட்டதோ அதேபோன்று பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஓர் எதிர்க் கலாச்சாரமாகச் செயல்படுகிறது. இது நேரடியாகப் பார்ப்பனன் என்ற உடலை மாத்திரம் விமர்சனம் செய்யாமல் அதன் பிரபஞ்சமளாவிய நிலையிலிருக்கிற வருணாஸ்ரமத்தைப் பிறப்பித்த பிரபஞ்சப் புருஷனையும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. பார்ப்பன உடல் பௌதிகத்தில் தனிமனிதனாக வைத்துப் பார்க்கப்படுகிறது; அதேபோன்று இப்பிரபஞ்ச புருஷனான பிராமணன், சூத்திரன் என்ற பிரிவுகளைப் பிறப்பித்த சூட்சம உடலையும் எலும்பும் சதையுமாக்கி அதன்மீது காத்திரமான விமர்சனத்தைச் சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்தது. இதுவே மையம் தன் பலவீனத்தை அப்பட்டமாகக் காண்பிக்கும் தருணம். இந்தப் பிரபஞ்சப் புருஷனைத் தவிர்த்து அதன் முக்கிய பாகமான பிராமண உடலைத் தவிர்த்து எந்த ஒரு சாதியும் தீண்டாமை பற்றின விமர்சனமும் இலக்கு இல்லாமல் முடிவுக்கு வராமல் சுற்றிக்கொண்டிருக்கும்.
இப்போது ஆபத்து என்னவெனில் பார்ப்பனியம் எப்போதும் தன் மூச்சுக்காற்றை அதன் எதிர்க் கலாச்சாரத்திலிருந்தே எடுத்துக்கொள்கிறது. விளக்கிச் சொன்னால் வேத மரபு விடுதலையாக எவற்றையெல்லாம் கூறியதோ அவற்றைப் பௌத்தம் தனியொருவனின் கர்மாவே காரணம் என்று எதிர் நிலையில் வாதிட்டது; அதன் பின்பு பாகவதம் தன்னுடைய கருத்தியலாகப் பௌத்தத்தின் சுவாசத்தைத் தன் பிரேத உடலுக்குள் செலுத்திக்கொண்டது. வைதீக மரபு தன் இருப்பையும் உயிர்ப்பையும் தன்னுடைய எதிர்க் கலாச்சாரதிலிருந்து எடுத்துக்கொண்டு தன் புருஷ உடலைக் காலம்தோறும் உயிர்ப்போடு வைத்துக்கொள்கிறது.
நூலை வாசித்து முடிந்த பின்பு தீண்டாமையின் ஒரு சூட்சமம் மாத்திரம் துணுக்குறுகிறது: முதலில் தன்னுடலைத் தியாகத்தின் பொருட்டுத் தீண்டாமைக்குள் தள்ளும்போது இயல்பாக அது தன்னைத் தீண்டாமையிலிருந்து விடுவித்துக்கொண்டு முரணியக்கத்தில் மற்றொரு தீண்டாமையை உற்பத்தி செய்கிறது. தியாகத்தின் பொருட்டு ஆட்படுத்திக் கொள்ளும் தீண்டாமை உண்மையில் தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சமூகத்தின் உபரியைத் தனக்குள்ளேயே தள்ளுகிறது. இறுதியில் சட்டகத்தின் மையத்தில் சுய தீண்டாமை தன்னைப் புனிதமாக்கி இதர விளிம்புநிலை அனைத்தையும் அசுத்தமாக மாற்றிவிடுகிறது. இது தீண்டாமை/புனிதம் எனும் மையம் உற்பத்தி செய்யும் அசுத்தத்தின் உற்பத்தி நிலையாகும்.
இப்போது நவீனத்திலுள்ள பிரச்சினை, கலக மரபாக இருக்கும் சுயமரியாதை மரபு மீண்டும் ஏதோ ஒருவகையில் வைதீக மரபால் விழுங்கப்படும் வாய்ப்பு இருக்குமோ எனத் தோன்றுகிறது. எனினும் நவீனத்தில் செயல்பட்ட அம்பேத்கர், பெரியாரின் பார்வையும் சாதியைக் கட்டுடையச் செய்யும் விமர்சனப் பார்வையாக இருக்கும் என நம்பிக்கை ஏற்படுகிறது. காரணம் நவீனப் பார்வை சூட்சமத்தையும் ஸ்தூல நிலையில்தான் வைத்துப் பார்க்கிறது.
இதே பார்வையில் ஒரு மொழி நவீன மொழியியல் ஆய்வில் எப்படி அதன் எழுவாய், பயனிலை, பண்பு எழுவாய் என பகுதிப் பகுதியாகப் பிரிந்து கடைசியில் சூன்ய நிலையை அடைகிறதோ அதே போன்று சாதியக் கட்டமைப்பும் அதன் சூட்சம நிலையிலிருந்து ஸ்தூல நிலைக்குத் தள்ளப்பட்டு உதிரிபாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. மொழியின் இந்தச் சிக்கலைப் பின் அமைப்பியலாளர் ரோலண்ட் பார்த்ஸ் தன்னுடைய Style and its Image என்ற கட்டுரையில் வெங்காயம் உரிக்கப்படுவதோடு ஒப்பிட்டுப் பேசுவார். மொழியின் Style ஐப் பிரித்துப்பிரித்து ஆராய முற்படும்போது கடைசியில் நிற்பது ஒன்றுமற்றது என்பார்.
பார்த்ஸ் கூறுவது போன்று சாதியையும் அதன் அடுக்குகளையும் தோலுரித்துக்கொண்டு செல்லச்செல்ல கடைசியில் எஞ்சுவது no heart, no kernel, no secret, no irreducible principle. இதையேதான் பெரியாரும் தன்னுடைய மேடைப்பேச்சுகள் அனைத்திலும் better see it as an onion’ என சாதியைப் பற்றிப் பேசியிருப்பார்.
புத்தகத்தின் கடைசியில் ராமாநுஜம் ‘கட்டுடைத்தல்’ என்ற உத்தியை சுந்தர் சருக்கை, ராஜன் குறை போன்றவர்களிடம் விளங்கிக்கொள்ள முயன்றதை விவரித்திருக்கிறார். முழுப் புத்தகமும் ஒரு வாசிப்பாக ஸ்டாலின் ராஜாங்கம் புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பில் சொல்வது போன்று “நிலைகொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்குமுறைகள், விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் இயங்கிவருவதைப் போன்ற சாதியம் பற்றித் தமிழில் கோட்பாடு ரீதியான பார்வைச் சட்டகத்தில் அறிமுகப்படுத்தி” கட்டுடைத்தல் என்ற வாசிப்பை நடத்தியிருக்கிறார் ராமாநுஜம்.
துணை நூற் பட்டியல்
Bathes, Roland. “Style and its Image”. Literary Style: A Symposium. Ed. Seymour Chatman. New York: Oxford University Press, 1971. 3-15. Print
Russell, Bertrand. An Inquiry into Meaning and Truth.Maryland: Penguin Books, 1965.
மின்னஞ்சல்: arulscott@gmail.com