வென்றவள்
சாயங்கால வெய்யில் வழக்கத்தைவிடவும் மிருதுவாக இருந்தது. வெண்மஞ்சள் நிறம் தானே மாறிச் செம்மஞ்சளாகச் சகலத்தின் மீதும் கவியத் தொடங்கிவிட்ட மாயா ஜாலத்தை ரசித்தவாறே கோபுரவாசலைத் தாண்டி நுழைந்தாள். சுற்றுச்சுவரையொட்டிப் பதினைந்தடி இடைவெளிவிட்டுக் கட்டிய கம்பிவேலிக்கு உட்புறம் விரிந்திருந்த நந்தவனத்தில் உலகத்தின் அத்தனை நிறங்களையும் சுமந்து நின்ற பூச்செடிகள் இவளை வரவேற்றுத் தலையாட்டிய மாதிரி இருந்தது. அங்கீரிப்பவள்போல, தானும் தலையசைத்துக் கொண்டாள். ஆனால் செடிகள் வழங்கிய குதூகலம் அதிகநேரம் நீடிக்கவில்லை. வேலியைத் தாண்டி இந்தப்புறம் பிரகாரத்தை நோக்கித் தலைநீட்டிய பகுதிகளைத் தரித்திருந்தார்கள். வாரிப்போடப்படாத தாவரக் கழிவுகள் வேலியையொட்டி நெடுகக் கிடந்தன. வெட்டுப்பட்டுக் கிடந்த குட்டிக் கிளைகளில், முழுசாக மலர்ந்த பூக்களும் இருக்கத்தான் செய்தன. அதைவிட அரும்புகளின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. இளஞ்சிவப்பும் வெளிற ஆரம்பித