மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிட பல கட்சிகளிலிருந்தும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சொல்வதெனில் காங்கிரஸ், திமுக, அதிமுக, அமமுக கட்சிகளைச் சொல்லலாம். இதைக் குற்றச்சாட்டாக முன்வைப்பதிலும் தயக்கமில்லை. வேட்பாளர் பட்டியல்கள் வெளியான பின் இது தமிழக அளவில் பேசுபொருளாக மாறியது. முஸ்லிம்களுக்கு எப்போதும் அரணாக இருந்துவரும் திமுக தனது தரப்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்த முன்வராதது தற்செயலானதல்ல. விஷப்பரீட்சையை விரும்பவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
திமுக உறுப்பினர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள்தாம் என்று பகிரங்கமாக அறிவிக்கக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வந்தது எதனால் என்று யோசித்தால் சில உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். தன் மனைவி கோவிலுக்குச் சென்று வருபவர் என்று குடும்பத்தில் நிலவும் ஆன்மிகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலை ஸ்டாலினுக்கு ஏன் ஏற்பட வேண்டும்?
தமிழகத்தில் தன்னைப் பிரம்மாண்டமான கட்சியாக வெளிக்காட்டியதோடு, தாமரை மலர்ந்தே தீரும் என்று தினமும் சொல்லத் தயங்காத பாஜகவை ஐந்தே இடங்களுக்குள் முடக்கிப்போட முடிந்தது சக்தியற்ற எடப்பாடி பழனிசாமியால். நாளும்நாளும் பகுத்தறிவையும் பெரியாரியத்தையும் பேசிவந்த திமுகவுக்கு ஏன் முஸ்லிம்களை நிறுத்தமுடியாமல் போயிற்றென்ற கேள்வியை எவராலும் தவிர்க்க முடியாது. இந்துத்துவ சக்திகள் தம் ஓயாத கூச்சலால் ஏற்படுத்திவிட்ட சூழலுக்குக் கழகம் அஞ்சியிருந்தால் அது எள்ளலுக்குரியதாகும். அதே சமயம் சர்வதேசச் சூழல்கள் முஸ்லிம் சமுதாயத்திற்குச் சாதகமாக இல்லையென்ற அச்சம் திமுகவிற்கு இருந்திருக்கவும் கூடாது. இந்தச் சூழலைத் தன் கருத்தாயுதத்தால் முறியடித்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவுக்கும் திராவிடர் கழகத்திற்குமே இருக்கிறது.
தமிழக அரசியல் சூழலைத் தன் ஒற்றைக் குரலால் மாற்றமுடிந்த பெரியாரின் வழிவந்த இயக்கம், முஸ்லிம்களை வேட்பாளராக நிறுத்த முடியாமைக்கு வருந்த வேண்டிய தருணம் இது. ஒரு பகுத்தறிவு இயக்கமாக முன்னெழுந்த திமுக இந்தப் பாரபட்சமான நிலையை அனுசரிக்க முன்வரலாமா? கட்சியின் நிறுவனர் சி.என். அண்ணாதுரையின் காலத்திலிருந்து முஸ்லிம்களுக்கும் அக்கட்சிக்குமான இணக்கமான போக்கை வர்ணிப்பது அவ்வளவு சுலபமான காரியமன்று. மத உணர்வுகள் குறுக்கிடாத நெருக்கமும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிற அதன் முழக்கமும் இரண்டறக் கலந்த உறவை, உணர்வை திமுக இவ்வளவு குறுகிய காலத்திற்குள் கைவிட வேண்டிய அவசியம் வெறும் மத பேதங்களால் மட்டும்தானா அல்லது இதில் வேறு பங்கும் உண்டா?
எண்பதுகளின் நடுவில் தமிழகத்தில் மெல்ல ஊடுருவிய வஹாபிய இயக்கம் தமிழக முஸ்லிம்களிடையே காத்திரமான பிளவுகளையும் வெறுப்புணர்வையும் ஊன்றியது. இஸ்லாத்தின் தூய வடிவை அது சவூதியிலிருந்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டதாக முஸ்லிம்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டது. இயல்பான சமூக உறவுகளோடும் வெள்ளந்தித்தனத்தோடும் இருந்த முஸ்லிம்களைத் தவறான வழிகளுக்கு அழைத்துச் சென்றது. பொதுவெளியில் இஸ்லாத்தை உரைப்பதற்கு அது தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள் அதன் ஆன்மிகத்தைத் தோலுரித்துக் காட்டியது. முஸ்லிம்களின் வாயில் பழகியிராத பாலியல் வக்கிரங்களைப் பொது மொழியாக்கியதில் அது முதன்மைப் பங்காற்றியது. இஸ்லாமிய வழிமுறைகளோடு வஹாபிய அமைப்பை எதிர்கொண்டு உரையாட முனைந்தவர்களின் குடும்பங்களை ஒழுக்கக் கேடாகச் சித்திரித்துப் புதிய ‘ஆன்மிக ஒளி’யை ஏற்றியது. இஸ்லாத்தின் விழுமியங்களைப் புறமொதுக்கியது. பொருந்தாத வன்முறையையும் சமூகப் பிளவையும் விதைத்து அச்சமூகத்தையும் ஊர்தோறும் பிளவுபடுத்தியது. தன் சமூகத்தைப் பிளந்த வஹாபிய இயக்கம் இதரச் சமூகங்களின் உறவாடல்களையும் கத்தரிப்பதை நோக்கித் தன் செயல்பாடுகள் நகர்ந்ததைக் கவனிக்கவில்லை. பின்னர் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பின்னடைவுகளை வஹாபிய நடைமுறைகளால் எதிர்கொள்வதுபோன்ற பாவனையில் அது இன்னும் அடிப்படைத் தன்மைக்குள் மூழ்கியது.
இங்கு வஹாபியம் முன்வைத்த கருத்தியல்களை அதன் இயங்குமுறையே கேள்விக்குரியதாக்கியதுதான் மிகச் சிறந்த வீழ்ச்சியை அதற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஒன்றுகூடி ஆன்மிக ரீதியில் எழுந்த வஹாபியம் தனக்குள்ளேயே உலகின் அற்பப் பொருண்மைகளுக்குப் பலியானது; துண்டுதுண்டாகச் சிதைந்தது. இன்று அதன் உயிர்த்தலம் எங்கேயென்று அதன் நிறுவனர்களுக்கும் தெரியவில்லை; அதனை நம்பிப் பின்பற்றியோருக்கும் தெரியவில்லை. அது காட்டிய வழிமுறைகளை அவ்வியக்கமே சிதைத்து எறிந்ததில் தமிழக முஸ்லிம்கள் ஏராளமான இழப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தனியொரு இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் காங்கிரஸ், திமுக ஆகியவற்றிலும் பேரளவில் செயல்பட்டார்கள். கட்சிகளின் முக்கிய ஆளுமைகளாகத் திகழ்ந்தார்கள். யூனியன் முஸ்லிம் லீக்கில் இருப்பதுதான் தனக்கான சமூக அந்தஸ்து என்று முஸ்லிம்கள் கருதியதில்லை. ஆனால் வஹாபிய இயக்கம் தலையெடுத்த பின்னர் முஸ்லிம்களின் சமூக இயக்கம் பெருங்குழப்பத்தில் முடிந்தது. இளைய தலைமுறையினர் பொதுவான அரசியல் இயக்கங்களில் பங்கெடுப்பதற்கு மாறாக வஹாபிய இயக்கங்களுக்குள்ளேயே நுழைந்தனர். ஒன்றைத் தொட்டால் பிறிதொன்றும் அதுவே என்று ஒடுங்கினர்; அதாவது மதமும் அரசியலும் வஹாபியம் மட்டுமே என்று கருதியது அத்தலைமுறை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பொதுவெளியில் உருவான முஸ்லிம் அரசியல் ஆளுமையாக எவரையும் காண இயலவில்லை.
தமது இயக்கத்திற்குள்தான் தமிழ் முஸ்லிம் சமூகம் கட்டுண்டிருப்பதாகக் கூறிய வஹாபிய அரசியல் கட்சிகள் தேர்தலில் தம் வலுவை நிரூபிக்க முடியாமல் சுருண்டன. ‘தூய்மை இஸ்லாமே தூய்மை அரசியல்’ என்று பகட்டுக் காட்டிய அவ்வியக்கங்களுக்கு முஸ்லிம்களே தண்ணீர் காட்டினர். அற்ப சொற்ப வாக்குகளால் காப்புத் தொகையைக்கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒதுக்கப்பட்ட தொகுதிகளைக்கூடக் கையளித்துவிட்டு அவ்வியக்கங்கள் ஓடியதும் உண்டு. வேறுவேறு சாதிய அமைப்புகள் தம் வலிமையைத் திரட்டிக் காட்டிய அளவிற்கும்கூட இந்த வஹாபிய இயக்கங்களால் தம் வலிமையைக் காட்ட முடியவில்லை.
இதற்கிடையில் காலத்திற்கேற்ற அரசியல் நடைமுறைகளை வகுக்கத் தெரியாததாலும் பெருந்தலைவர்கள் இருந்து வழிநடத்த முடியாமையாலும் யூனியன் முஸ்லிம் லீக்கும் குறுகியது. இதன் விளைவாக முஸ்லிம்களால் தம் சமூக இயக்கங்களுக்குள்ளும் ஜொலிக்க முடியவில்லை; இதர கட்சிகளுக்குள்ளும் பங்களிப்பைச் செலுத்திட முடியவில்லை. எந்தவொரு முஸ்லிம் ஆளுமைக்கும் இது அரசியல், இது மார்க்கம், இது கலை, இது இலக்கியம், இது வழிபாடு என்ற பாகுபாடுகள் இருப்பதைக் கண்டுணர முடியவில்லை. எதைப் பேசினாலும் அவர்கள் அற்பமாகப் புரிந்துகொண்ட இஸ்லாம் வந்து அவர்களை இடித்தது. ஆக வழியும் இல்லை, தெளிவும் இல்லை என்ற ஈரெட்டான நிலையில் முஸ்லிம் சமூகம் பரிதவித்துக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு குழப்பங்களும் பேதைமைகளும் நிரம்பியிருக்கின்ற முஸ்லிம்களுக்குத் தாம் வாய்ப்பளிக்க விரும்பினாலும் இதர கட்சிகளால் அது முடியாமல் போகின்றது என்றே கருத வேண்டியிருக்கின்றது. தம் சமூகத்தைத் தாமே பலங்குன்றியதாக்கிய அமைப்பைக் கொண்டு இதர சமூகத்தின் வாக்குகளைத் திரட்டிப் பலம் பெறுவது பெரிய கடினமான பணி என்று அக்கட்சிகள் அஞ்சுகின்றனவா? இந்நிலையில் சமூகத்தில் தம் இயங்குமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் பரிசீலனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதற்கு முதல்படி அது மதத்தையும் அரசியலையும் எந்த இடத்தில் ஒன்றிணைய வைத்து எவ்வகையில் பிரித்தெடுப்பது எனத் திட்டமிடல் நன்று. சமூகத்தில் இணக்கம் கொண்டு வர வேண்டிய வழிமுறைகளை நாட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் தன்னை முழுதும் தயக்கமின்றி ஈடுபடுத்தி உறவாடிச் சென்றது. அத்தகைய நிலைபாடொன்றே அதனை உத்வேகப்படுத்தும்.
இந்துத்துவச் சக்திகளின் வெற்றுக் கூச்சல்களுக்கு அஞ்சாமல் திராவிட இயக்கங்களும் இனிவரக் கூடிய தேர்தல்களில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கான இடங்களை வழங்க வேண்டுவது அவசியம். நாட்டின் வலிமைமிக்க சிறுபான்மைச் சமூகம் அரசியல் சாசன அமைப்பு களில் தன் இடத்தையும் குரலையும் இழக்குமானால் அது நாட்டைப் பலவீனமாக்குவதில்தான் போய்முடியும்.