மீண்டும் மோடி
மீண்டும் மோடி
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையொட்டி எழுதப்பட்ட காலச்சுவடு தலையங்கம் (இதழ் 174, ஜுன் 2014) இப்போதைய சூழ்நிலையிலும் பொருத்தமாகவே உள்ளது. அன்றைய தலையங்கத்தில் சொல்லப்பட்டவற்றில் அடிப்படையான எந்த மாற்றமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்துவிடவில்லை என்பது கசப்பான உண்மை. 2014இன் தொடர்ச்சியாகவே 2019 தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. முந்தையத் தேர்தலில் 282 இடங்களைத் தனித்துப்பெற்ற பாஜக இம்முறை 303 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்த வெற்றி விகிதம் அச்சமூட்டும் உண்மையையும் எடுத்துக்காட்டுகிறது. வரலாறு காணாத இந்த விகிதாச்சாரம், பெரும்பான்மை ஜனநாயகத்தின் அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என்பது அச்சமளிக்கிறது.
2014 தேர்தலில் கடைப்பிடித்த உத்திகளையே இந்தத் தேர்தலிலும் பாஜக பின்பற்றியது. முந்தைய தேர்தலில் கிடைத்த ஆட்சி அதிகாரம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் பெரிதும் உதவியிருக்கிறது. ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் இந்த உத்திகளை மோடி - அமித்ஷா கூட்டணி, நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தியே பெரும் வெற்றியை ஈட்டியது ரகசியமானதல்ல. இருவரணியின் உத்திகளை முறியடிக்கும் மாற்று உபாயங்களை மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் தவறிவிட்டதும் ரகசியமல்ல. மோடியின் தேர்தல் வெற்றி இவற்றை உறுதி செய்கிறது. ஒருவேளை ஈடுகொடுக்கும் உத்திகளுடன் எதிர் அணி அமைந்திருக்குமானால் இப்போது பாஜக பெற்றிருக்கும் இடங்களில் கணிசமானவற்றை எதிர் அணி பெற்றிருக்க முடியும். வலுவான கூட்டணியை வலுவான கூட்டணியால்தான் எதிர்கொள்ள முடியும் என்ற எளிய பாடத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கைவிட்டன. இந்த நிலை மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியது. ஒருவேளை வலுவான எதிரணி அமைந்திருக்குமானால் பாஜக வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். எதிர்க்கட்சசிகளின் குரல் நாடாளுமன்றத்தில் உரக்க ஒலிப்பதற்கான வாய்ப்பு உருவாகியிருந்திருக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டது. அந்தப் பின்னடைவைப் பாஜகவின் ஒட்டுமொத்தத் தோல்வியாகக் கருதி எதிர்க் கட்சிகள் மெத்தனமாக இருந்தன. உண்மையில் இந்தப் பின்னடைவுகள் மூலம் எதிர்க்கட்சிகளை அற்ப மகிழ்ச்சியில் ஆழ்த்தித் தனது தந்திரங்களை மோடி & - அமித்ஷா அணி வலுப்படுத்திக் கொண்டதாகவே தோன்றுகிறது.
கடந்த ஐந்தாண்டுக் காலம் நடைபெற்ற நரேந்திர மோடியின் அரசு இந்தியாவில் பொற்காலத்தைக் கொண்டு வரவில்லை. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் எதையும் மோடி அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பதிலுக்கு எதிர்பாராத செயல்பாடுகளால் மக்களை இடர்களில் ஆழ்த்தியது.
இந்தியாவின் பன்மைத்தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று மோடி அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டது. நவீன அறிவியல் பார்வைக்குப் பதிலாக புராதன நம்பிக்கைகள் சார்ந்த மீட்புவாதத்தை முன்னிறுத்துகிறது என்று பழிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அவலம் சுட்டிக் காட்டப்பட்டது. கருத்துரிமை நெரிக்கப்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டது. எளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்குப் பதிலாகக் கார்ப்பொரேட்டுகளின் கைப்பாவையாக இயங்குகிறது என்று விமரிசிக்கப்பட்டது. பண மதிப்பிழப்பின்மூலம் தேசத்தின் பொருளாதாரம் முடக்கப்பட்டதாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே குறைகூறப்பட்டது. கல்வி, கலாச்சாரத் துறைகளில் அடிப்படைவாதம் தலைதூக்க இடமளித்ததாக ஆதாரங்கள் அளிக்கப்பட்டன.
மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் எதையும் கவனத்தில் கொள்ளவோ அதற்குப் பரிகாரம் காணவோ கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு முற்படவில்லை. மாறாகத் தனது பிழைகளைப் பொறுத்துக்கொண்டு அடங்கிப்போகும் மனநிலைக்குக் குடிமக்களைத் தள்ளிவிட்டிருந்தது. அரசின் தவறுகளைச் சரியென்று ஆமோதிக்கும் சகஜ நிலைக்கு அவர்களைப் பழக்கியது. இப்போது பெற்றிருக்கும் வெற்றி இந்தத் தவறுகள் அனைத்தும் தவறுகளே அல்ல என்ற நியாயத்தை உருவாக்குமோ என்ற பீதியை ஏற்படுத்துகிறது.
ஐந்தாண்டு காலம் நடைபெற்ற நரேந்திர மோடி அரசு ஒரு பாஸிச அரசு என்று இடதுசாரிகளால் மட்டுமல்ல நடுநிலை அரசியல் நோக்கர்களாலும் கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. அடிப்படைவாதத்தை நோக்கித் திரும்புவது, சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினரின் அதிகாரத்தைத் திணிப்பது, மாற்றுக் கருத்துகள் எழவிடாத அரசியலை உருவாக்குவது, அதிகாரத்தைப் பரவலாக்காமல் ஒருமுனையில் குவிப்பது, அதிகாரத்தின் மூலமும் பரப்புரை மூலமும் தங்களது கருத்தியலுக்கு நீண்டகாலப் புழக்கத்தை ஏற்படுத்துவது, வளர்ச்சியின் பெயரால் பொது நன்மைக்கு ஊறு விளைவிக்கும் கார்ப்பொரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என பாஸிச அரசின் குணங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மோடி அரசின் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அவரது கட்சியும் ஆதரவாளர்களும் மறுக்கலாம். தனது செயல்பாடுகள் வாயிலாக மட்டுமே மோடி அதிலிருந்து விடுபட இயலும். இந்த வெற்றியை அதற்கான வாய்ப்பாக அவர் கருதுவாரா--?
நரேந்திர மோடி என்ற அரசியல்வாதி பின்பற்றும் வலதுசாரிச் செயல்பாடுகள் சரியான பொருளில் உலகளாவியத்தன்மை கொண்டவை. புதிய குத்தகை முதலாளியம் வலதுசாரி ஒற்றைத் தன்மையையே எதிர்பார்க்கிறது. அதுவே அவர்களின் ஆதாயத்துக்கும் வணிக நோக்கத்துக்கும் உகந்தது. பன்மைத் தன்மை அதன் பொருளாதாரச் சந்தைக்கு உதவிகரமானதல்ல. எல்லாவற்றையும் ஒரு குடைக்குக்கீழ் கொண்டுவருவதன் மூலமே சந்தை வணிகத்தைப் பெருக்க முடியும். அந்த அளவில் மோடியின் வலதுசாரி நிலைப்பாடுகள் குத்தகை முதலாளிகளுக்கே துணை செய்பவை.
வட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சொல்லப்பட்ட பாஜக இன்று பூதாகரமாகத் தேசம் முழுவதும் காலூன்றியிருக்கிறது. அதன் கைகளில் இதுவரை எந்த மத்திய அரசுக்கும் வாய்க்காத அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது வெளிப்படை. தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகியவை பா-ஜக காலூன்ற இடமளிக்காத விதிவிலக்குப் பிரதேசங்களாய் இருப்பது ஆறுதல் தரக்கூடியது.
மதச்சார்பின்மை என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தியே எதிரணி தேர்தலைச் சந்தித்தது. ஆனால் இந்த நிலைப்பாடு மக்களிடையே பரவலாக ஏற்றக்கொள்ளப்படவில்லை என இந்தத் தேர்தல் சுட்டிக்காட்டுகிறது. மதச்சார்பின்மை என்ற கருத்து ஒரு பேதமற்ற கருத்தாகவே கருதப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்நிலை குறித்துப் புதிய கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றியையொட்டி பாஜக தொண்டர்கள் நடுவே பேசிய நரேந்திர மோடி “கடந்த முப்பது ஆண்டுகளாக போலி மதச்சார்பின்மை பேசியவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டது இதைத்தான்.
பொருளாதாரம், சமூகம், பண்பாடு, கல்வி, வளர்ச்சி ஆகிய துறைகளில் மோடியின் முந்தைய அரசு கடைப்பிடித்த வழிமுறைகள் உலக அளவில் அவரை நாட்டின் பிளவுச் சக்தியாக சித்தரிக்க உதவின. அதை நிராகரிக்கும் வகையில் மோடியின் புதிய அரசு செயல்படுமா? இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது இந்தியாவின் எதிர்காலம்.