சுரா கணிமை விருது
சுரா கணிமை விருது
ராமசாமி துரைப்பாண்டி, தமிழ்நாடு திண்டுக்கல் நகரின் அருகிலுள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் 1967 மே 7ஆம் நாளில் பிறந்தார். இவர் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும் MA (Econ), கணினிப்பயன்பாடுகளில் முதுகலைச்சான்றிதழும் (PGDCA), வரவு செலவு கணக்கு மேலாண்மை சார்ந்த படிப்பில் (Graduated in CWA)தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
கல்வித் தகுதிகள் நிறையப்பெற்றிருந்தும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்வதைவிட்டுவிட்டு 1988இல் இருந்து கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழுக்குப் பணியாற்றி வருகிறார். 1988இல் விண்டோஸ் 3.1க்கான தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தல், 1999இல் தமிழருவி என்கிற விலையற்ற மூல நிரல் கொண்ட மென்பொருளை வெளியிடுதல், 2004இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் தமிழ்ப்பொறி என்கிற மென்பொருளைத் தமிழக முதல்வர் முன் வெளியிடுதல், 2009இல் பனேசியா என்கிற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்தும் Sangam Pro மென்பொருள், R4U தமிழ்ச் சொல் செயலி உட்பட 14 மென்பொருட்களும் 200 TAM எழுத்துருக்களும், 50 TAB எழுத்துருக்களும் மூல நிரல்களுடன் வெளியிட்டமை தமிழ்க்கணிமை வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்புகளுக்குச் சில உதாரணங்கள். 2018இல் இவரின் எழுத்துருக்களின் மூலநிரலை அடிப்படையாகக் கொண்டு ‘பாரதி புத்தகாலயம்’ 808 தமிழ் எழுத்துருக்களை Unicode ஒருங்குறி முறையில் வெளியிட்டு உள்ளது. 2016 முதல் www.tamilpulavar.org என்கிற வலைதளத்தைத் துவக்கி வீரமாமுனிவரின் அகராதி முதல், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அகராதிகளை இணைத்துள்ளார்.
1988 முதல் இன்றுவரை தொடர்ந்து தன் கணினித் தொழில்நுட்பத் திறமைகளால் தமிழ் சார்ந்த மென்பொருட்கள், எழுத்துருக்கள் போன்றவற்றை வடிவமைத்து அவற்றைத் தமிழ்ச் சமூகத்தின் பயன்பாட்டிற்காய் இலவசமாய்த் தந்து உதவியமைக்காக, 2018ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருதை ராமசாமி துரைபாண்டிக்கு வழங்குவதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை அடைகிறது.