இந்திய வாக்காளர்களை உணர்ச்சிவசப்படுத்துதல்
EPW பக்கங்கள்
இந்திய வாக்காளர்களை உணர்ச்சிவசப்படுத்துதல்
வெற்றிக்கு அதன் பக்கம் நியாயமான காரணங்கள் இருக்கையில், தோல்விக்குத் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள உணர்வுகளைத் தூண்டிவிடுவது அவசியமாகிறது
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தோல்விகள்மீது கவனத்தைக் குவித்திருக்கின்றன. பாஜக குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எந்த அளவிற்குப் பாஜகவின் தோல்விகள் சரியென்று காட்டுகின்றனவோ அந்த அளவிற்கு விமர்சனங்களுக்கு அற முக்கியத்துவம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வாக்காளர்களிடம் முறையிடுகையில் அவர்களது உணர்ச்சி வேகங்களின் ஆதரவை நம்பியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் பக்கம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளின் விஷயத்தில் வாக்காளர்களின் உணர்ச்சிவேகங்களையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 2014இல் கொடுத்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தால் அதை வாக்காளர்களிடம் பகட்டாக வீசிவீசிக் காட்டியிருப்பார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களது தோல்விகளிலிருந்து எழும் அறச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகப் பெருமளவு உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது என பாஜக தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.
இதன் மூலம், ஏன் இவ்வாறு ஆனது என்று தங்களிடம் கேட்கும் வாக்காளர்களின் தர்க்க அறிவைத் திசை திருப்புகிறது. போர்க்குணம்கொண்ட தேசியத்தின் மீதான பக்திபோன்ற உணர்வெழுச்சி மிகுந்த விஷயங்கள் பாஜகவின் பிரச்சாரத்தில் மிகுந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பான கணிப்புகள் தந்த நம்பிக்கையைத் தவிர்த்து, வேறு நம்பிக்கை கொள்வதற்குப் பாஜகவிற்கு ஏதுமில்லை என்று உள்ளூர உணர்ந்த பிறகு, தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உணர்வெழுச்சியைத் தூண்டும் விஷயங்களில் பாஜக இறங்கிவிட்டது. அச்சு ஊடகத்தில் அளவிற்கதிகமான விளம்பரங்களைத் தனக்காக உறுதிசெய்துகொண்ட பிறகு எலெக்ட்ரானிக், சமூக ஊடகங்களைத் தன்வசப்படுத்தித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துத் தனது தேர்தல் வெற்றிக்குச் சாதகமாக வாக்காளர்களைத் திரட்ட முயன்றுகொண்டிருக்கிறது
.
பிரச்சாரத்திற்குரிய முக்கியமான மூலாதாரங்களைப் பெருமளவிற்குக் கைப்பற்றி, அக்கட்சியின் தலைவர்கள் ஆவேசமான உரைகளை நிகழ்த்துகையில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தங்களது பேச்சைக் காதுகொடுத்து கேட்கப்போவதில்லை என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறார்கள். இத்தகைய உரைகளில் நேர்மையானது அல்லது உண்மையானது எது, விஷத்தனமானது அல்லது மேம்போக்கானது எதுவென அறிவுபூர்வமான வாக்காளர்கள் தங்களது நிர்ணயமான அறிவாற்றல் மூலம் பிரித்தறிவார்கள். சமீபத்தில் நிரூபணமானபடி இத்தகைய உரைகளில், பேச்சுகளில் உணர்ச்சியும் ஆவேசமும் நிரம்பியிருக்கிறதே தவிர அறிவுபூர்வமான விஷயங்கள் அல்ல என்பதை வாக்காளர்கள் உணருமளவிற்கு அறிவுபூர்வமாக இருக்கிறார்கள். இந்த உரைகளில் உமிழப்படும் வெறுப்பைப் பார்க்கையில் இத்தகைய கட்சிகளுக்கு மற்றொரு வாய்ப்பளித்தால் மக்களாட்சிப் பண்பைச் சீர்குலைத்துவிடுவார்கள் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளைத் தீமையாகக் காட்ட அவற்றின்மீது வெறுப்பை உமிழ்ந்து அவற்றிற்கு அற ரீதியாகக் காயமேற்படுத்த ஆளும் கட்சி முயற்சி செய்கிறது. ஆனால் இத்தகைய உணர்ச்சிரீதியான தாக்குதல் அறிவுபூர்வமாக அல்லாமல் நேர்மையின்மையுடன் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு முன்னரும் நாம் பார்த்திருப்பதைப் போல் இத்தகைய சண்டைக் குணம் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் தீவிரமடைகின்றன. தேர்தல் அரசியல் உணர்ச்சிமயமாவது அதிகரித்துவரும் பின்னணியில் ஒருவர் கேட்கவேண்டிய கேள்விகள் இவை: வாக்காளர்களைப் பற்றிய பாஜகவின் பார்வை என்ன? வாக்காளர்களுக்குத் தங்களைப் பற்றிய பார்வை எப்படியிருக்க வேண்டும்? வாக்காளர்களுடைய பிரச்சனைகளைக் கட்சி தீர்மானிக்க வேண்டுமா? அதைவிட முக்கியமாக அத்தகைய ஒரு நிலையை வாக்காளர்கள் ஏன் ஒப்புக்கொள்ளவேண்டும்?
வாக்காளர்களுக்கு முக்கியமான பிரச்சனைகள் எவை, அவை எந்தெந்த அளவிற்கு முக்கியமானவை எனப் பாஜக முடிவுசெய்கிறது. அக் கட்சிக்கு எது முதன்மையானதோ அது வாக்காளர்களுக்கு முதன்மையானதாக இருக்க முடியாது. இத்தகைய ஒருதலைப்பட்சமான அறிவிப்புகள் வாக்காளர்களுக்குத் தங்களது கண்ணியமான இருப்பிற்கு எவை முக்கியமானவை என்பதை முடிவு செய்யும் அறிவாற்றலை மறுதலிக்கிறது. கட்சியின் இத்தகைய பார்வை அறிவுத்தெளிவுபெற்ற வாக்காளர்களை அறிவற்றவர்கள் என்ற நிலைக்கும், எது அவசரம் & எது அவ்வளவு அவசரமில்லை என்பதை அறியாதவர்கள் என்ற நிலைக்கும் குறைத்துவிடுகிறது. ஆளும் அரசின் பேரழிவுகொண்ட கொள்கைகளால் தங்கள் வாழ்க்கையில் பெரும் இடர்களை, கஷ்டங்களை அனுபவித்தவர்கள் வாக்காளர்கள். இதுவே நிலையான யதார்த்தம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எதையும் செய்திராவிட்டாலும் தனக்கும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதன் மூலம் ஒரு கட்சி வாக்காளர்களை அறிவற்ற பொருட்களாகக் கருதுகிறது. இந்தப் பின்னணியில் வாக்காளர்கள் அறிவுபூர்வமான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். சொன்னதைச் செய்ய முடியாத கட்சியிடம் மீண்டும் நம்பிக்கை வைப்பது வீணானது என்று உணர வேண்டும். இதற்கு முன்னரும் வாக்காளர்கள் இதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள்; இப்போதும் அவர்கள் அதை உணர வேண்டும். சொன்னதைச் செய்யக்கூடிய கட்சிக்கு வாக்களிப்பது மட்டுமல்ல அப்படி செய்ய முடியாவிட்டால் அதற்காக மன்னிப்பு கோரும் அற ஆற்றல் இருக்கும் கட்சிக்கே வாக்களிக்கும் சரியான முடிவை எடுப்பதற்கான ஆற்றல் தமக்கிருப்பதை வாக்காளர்கள் காட்ட வேண்டும்.
ஆகவே கட்சிகளைத் தகுதிகாண் பருவத்தில் வைக்க வேண்டிய பொறுப்பும் வாக்காளர்களுக்கு இருக்கிறது. கட்சியின் செயல்திறனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமல்ல, அவ்வப்போதும் மதிப்பிட வேண்டும்.
பொய்யான வாக்குறுதிகளைத் தந்து அவற்றை நிறைவேற்ற முடியாததற்கான காரணத்தையும் சொல்லாத கட்சிக்கு வாக்களிக்க ஏழைகளின் அவசியத் தேவைகள் அனுமதிக்காது. இத்தகைய ஒரு கட்சியை மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியில் அமரவைத்துப் பரிசோதிப்பது அறிவுபூர்வமற்ற செயல், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வேலை.
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் சந்தைப் பொருளாதாரம் எந்த மேம்பாட்டையும் கொண்டுவராத நிலையில் மக்களிடையேயான சமத்துவமின்மையைக் குறைக்க மறுபகிர்வு செய்யும் ஓர் அரசு இந்தப் பிரிவினருக்கு மிக முக்கியமானது. சாதி, மொழி, வகுப்புவாதச் சித்தாந்தங்களின் அடிப்படையில் செய்யப்படும் தெரிவானது குறுகிய அரசியல் கொண்ட, உண்மையானதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுமானஅரசைத் தர முடியாத கட்சிகளுக்கு உதவியாக அமைந்துவிடும். மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழும் அம்சமான தனிநபர் நலனைப் பொதுநலனாக மாற்றிச் சாதிக்கக்கூடிய உண்மையான, பொறுப்பான அரசிற்காகக் கூட்டாக வாக்களித்தால் மட்டுமே தனிநபர்களின் நலன்கள் பாதுகாப்பாக இருக்கும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஏப்ரல் 13, 2019
தமிழில்: க. திருநாவுக்கரசு
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com