நம்பிக்கை நாடகர்
நம்பிக்கை நாடகர்
தேசிய நாடகப்பள்ளி, காலச்சுவடு, நிகழ் நாடக மையம் ஆகியன இணைந்து 2007ஆம் ஆண்டு நடத்திய ஒருமாத கால நடிப்புப் பயிற்சியில் தனது நாடகப் பயணத்தைத் தொடங்கியவர் சந்திரமோகன். நிகழ் நாடக மையத்தின் இயக்குநர் சண்முகராஜாவின் மாணவராகத் தனது நாடகச் செயல்பாடுகளை உத்வேகத்துடன் தொடர்பவர். சுவிட்சர்லாந்து நாட்டு நாடகக் கலைஞர்களிடம் அழகியல் கல்வி, நாடகக்கல்வி, நாடக விளையாட்டுக்கள் போன்றவற்றில் தனித்துவமான பயிற்சிகளைப் பெற்றவர். திரிபுராவில் தேசிய நாடகப்பள்ளி தொடங்கிய ‘கல்வியில் நாடகம்’ (Theatre in Education) பிரிவில் பட்டயப்படிப்பை நிறைவு செய்தவர். பாலுமகேந்திரா சினிமா பட்டறை, போஸ்கோ நடிப்புப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பயிற்றுநராகப் பணியாற்றியுள்ளார்.
திருவண்ணாமலை டி.வி.எஸ். பள்ளியில் கௌரவ நாடக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘சிகப்பு யானை நாடகக்குழு’வை நிறுவி, நாடகப் பயிற்சிகள், நாடக ஆக்கங்கள், நாடக அளிக்கைகள் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ‘கைதி’, ‘அறம்’, ‘யாவரும் கேளிர்’, ‘புலிக்கலைஞன்’, ‘யாருக்குத் தெரியும்’ முதலானவை இவரது குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகள். நாடகத்தை வாழ்க்கையாகவும் வரித்துக்கொண்டிருக்கக்கூடிய சந்திரமோகன் வளரும் நாடகக் கலைஞர்களின் முன்மாதிரி. அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, 2019ஆம் ஆண்டுக்கான ‘நம்பிக்கை நாடகர் விருது’ வழங்கப்படுகிறது. சந்திரமோகனுக்கு வாழ்த்துகள்.