தோப்பில் காக்கா
அஞ்சலி: தோப்பில் முஹம்மது மீரான் (1944 - 2019)
தோப்பில் காக்கா
களந்தை பீர்முகம்மது
தமிழிலக்கியத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற அதிரடி வருகையாளர்களில் ‘கடலோரக் கிராமத்தின் கதை’யைக் கொண்டுவந்த தோப்பில் முகம்மது மீரானும் அடங்குகிறார். நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலும் கவன ஈர்ப்புகளுடன் நுழைவதுதான் வழக்கம். அந்த இழை அறுபடாமல் தோப்பிலாரின் வருகை நிகழ்ந்தது.
மிளகாய் வியாபாரி என்ற வணிகப்பெயரோடு இலக்கிய இருப்பு அமைவதற்குப் பல தியாகங்களை அவர் செய்திருக்கிறார். புரட்சிகரமான நோக்கம் இல்லாமல் புரட்சி செய்வதைத் தோப்பிலாரின் எழுத்துக்களில் காண முடியும்; அவருடைய கதாபாத்திரங்களும் அவருமே அத்தகைய தன்மைகளோடு நம்முன் வந்தார்கள். தோப்பிலார் படைப்புகளின் ஊடாகச் செல்லும் குறுக்குப் பாதைகள், நெடும் பாதைகள், சந்துபொந்துகள் எங்கணும் அவரும் அவர் கதாபாத்திரங்களும் ஒன்றிலொன்றாகக் கைகோத்து நிற்பார்கள். பிரிவதெனில் நிழலும் உடம்புமாக இருப்போரை எப்படி பிரிக்க முடியும்? ‘கடலோரக் கிராமத்தில்’ அலைந்த மனிதர்கள் அலைகளோடும் அலைகளையொத்த இதர மனிதர்களோடும் போராடிப் போராடி வாழ்ந்திருந்த கதைதான் அந்த நாவல். எந்தவொரு பக்கத்தைப் புரட்டினாலும் அங்கெல்லாம் மனிதப் பெருமூச்சுகள் இருக்கும். புழுதிக்காடும் புழுதிக்காட்டையொத்த சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். மதம் தூய்மையானதாய் இருக்கலாம்; ஆனால் மனிதர்கள்தான் அதனை வாழ்ந்து அதற்கோர் அழகை வர்ஷிக்க வேண்டும். அவர்கள் புரிந்துகொண்டது எதுவோ அதுதான் அவர்தம் மதம்; அந்த மதம்தான் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இங்கே அதிகாரப் பீடத்தை எதிர்ப்பவன் அல்லாஹ்வை எதிர்ப்பவனாக அடையாளப்படுத்தப்படுவான்; மதத்தின் துவேஷியாக உருவகிக்கப்படுவான். அந்த எடுத்துரைப்புகள் அப்படியே ஒவ்வொரு துவேஷியின் வாழ்க்கையையும் சூறையாடிவிடும்; பூமியிலிருந்தே அப்புறப்படுத்தியும் விடும். விசித்திரமாக இருக்கும் இந்த அம்சங்களை விவரிப்பதில் தயக்கமில்லாமல் அவர் பேனா எழுதிச்சென்றது.
‘கடலோரக் கிராமத்தின் கதை’யையோ ‘கூனன் தோப்பு’வையோ ‘அஞ்சுவண்ணம் தெரு’வையோ என்று அவருடைய படைப்புகளை எங்கே அகழ்ந்தாலும் மனிதாயம் செத்து அழுகி நாறும்; அந்த வீச்சம் ஒவ்வொருவரின் குடலையும் புரட்டியெடுத்துவிடும். பள்ளிவாசல்கள் வழிபாட்டு அடையாளத்துக்குள் ஒளிவீசாமல் கருத்தியல்களின் இருட்குகைகளாக மாறிவிடும். ஆன்மிகம் எனப்படுவது அதன் எதேச்சாதிகாரத்தின் கருக்குமட்டைகளாக நம் உடல்களைக் கீறி இரத்த விளாறலில் உறைய வைக்கும். அவரின் படைப்புகளின் அடிநாதம் இது!
அவருடைய நாவல்கள் நிலப்பிரபுத்துவக் காலத்தின் ஆங்காரத்தை அழியாச் சித்திரமாக்கியிருக்கின்றன. வேதம் இன்னதென்று அறியாமலேயே ஒவ்வொருவரும் தம் வேதத்திற்கான நடைமுறை வடிவத்தை உருவாக்குகிறார்கள். அஹமதுக் கண்ணுவை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு மனிதனாக இல்லாமல், ஒரு காலமாக உறைந்திருப்பதைப் பார்க்கலாம். அந்தக் காலம் தன்னால் எவ்வளவு தூரத்துக்கு முன்னகர முடிகிறதோ அதுதான் அன்றைய மதத்தின் விளக்கம். அந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். வேறு தேடல்கள், வேறு நடைமுறைகள் தேவையில்லை. அது அப்படியெல்லாம் இருக்கப்போய்த்தான் அஹமதுக் கண்ணுவின் சாம்ராஜ்யத்தைச் சரித்தெடுக்கப் பெரும் கடப்பாறைகளோ புரட்சிப்படைகளோ வரவில்லை. சாதாரணமான மஹ்மூத் அதற்குப் போதுமானவனாயிருக்கிறான். காஃபிர்களை உருவாக்கும் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துக்கு ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய முப்பது செண்ட் நிலத்தை வழங்கும் மஹ்மூதுவைத் தண்டிக்க புனிதமான பள்ளிவாசலையும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையும் பயன்படுத்துகிறார் அஹமதுக் கண்ணு. அது எப்படி தன்னுடைய சொந்தப் பகைமையைத் தீர்க்கவும் எதிரியைத் தண்டிக்கவும் பள்ளிவாசலைப் பயன்படுத்த இயலும் என்று எவரொருவரும் கேள்வி கேட்கவில்லை. அப்படி கேட்பதற்குக் குர்ஆன் அனுமதிக்கிறதா என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
அஹமதுக் கண்ணு முதலாளி வெறும் அதிகார மையம் மட்டுமல்ல, அவரே மதத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பவர். எனவே மஹ்மூதுவைத் தண்டிக்கின்ற அந்தக் காட்சியைக் காண இதர ஜும்ஆ தொழுகைக்கு வராதோரெல்லாம் வந்து குழுமுகிறார்கள். மஹ்மூத்தும் வாராமல் வந்தவன். ஆனால் தொழுகை முடிந்ததும் மொத்த ஆண்மக்களும் குழுமியிருக்கும் அந்தப் பள்ளிவாசலிலிருந்து மூச்சுக்காட்டாமல் இறங்கிநடக்கிறான் மஹ்மூத். ஆத்திரம் பொறுக்காமல் அவனைப் பிடித்துவரச் சொல்லி அவுக்காரை ஏவுகிறார் அவர். மஹ்மூதைப் பிடிக்க முனைந்த அவுக்காரை நோக்கித் தன் மடியிலிருந்த சிறு கத்தியை மட்டுமே எடுத்துக்காட்டுகிறான் மஹ்மூத். இந்தச் சிறிய செய்கைதான் அந்த நொடியில் அஹமதுக் கண்ணுவின் சாம்ராஜ்யத்தைத் தகர்க்கிறது.
இது எப்படி பெரிய அதிகார மையத்திற்குச் சவக்குழி தோண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்குத்தான் அஹ்மதுக் கண்ணு வெறும் மனிதராக மட்டுமே அல்லாமல் ஒரு காலத்தின் படிமமாகவும் இருக்கிறார் என்று சொல்ல வந்தது. அந்தப் படிமம் அதன் இறுதிக்கட்டத்தில் சிதிலமாக இருந்தது. அதை அஹ்மதுக்கண்ணோ மஹ்மூதுவோ உணர்ந்தும் இருக்கவில்லை. ஆனால் காலம் தன் பலவீனத்தினடியாக இந்தச் சிறு அசைவையும் தாங்காமல் நொறுங்கிவிடுகிறது. இதைத் தோப்பில் என்ற தனிமனிதன் அதீதமான சித்திரமாக உருவாக்கவில்லை. இயல்பான வாழ்வை அதன் தன்மை குன்றாமல் எழுதிச் சென்றதால் அந்தப் படைப்பாளியைக் கேளாமலே அத்தகைய வீழ்ச்சிகள் நேர்ந்துவிடுகின்றன. இதனால்தான் தோப்பிலாரின் எழுத்துகளின் வீரியத்தைப் பேசுகிறோம்.
அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்புவோர்க்குத் தன்னருகில் கல்விகற்று வருபவர்கள் குறித்த அச்சம் எப்படிப்பட்டதாயிருக்கும்? ஊருக்குள் வந்துவிட்ட இங்கிலீஷ் பள்ளிக்கூடம் குறித்து அஹமதுக் கண்ணு உணர்வதைப்போலவே அந்த மக்களும் உணர்வது நிலவுடைமையின் வெற்றி. இந்தச் சூழல்களைத் தோப்பில் விவரிக்கும்போது அவரின் உள்ளார்ந்த மனவிருப்பம் நமக்குத் தெரிகிறது. ஆனால் தன் மனத்துக்குள்ளிருக்கும் வண்ணத்தைத் தன் முனைப்பில் எங்கும் தீட்டிவிடவுமில்லை. பள்ளி வாத்தியாராக வரும் மஹ்பூப் கான், அவருடைய மனைவி நூர்ஜஹான் ஆகிய பெயர்கள்கூட கிராமத்து முஸ்லிம்களுக்கு இங்கிலீஷ் பெயர்களாகவே படுகின்றன. இவ்வாறான நுட்ப வெளிப்படுத்தல்கள் தோப்பிலின் ஆனைபலமாக அவருடைய படைப்புகளில் உருக்கொள்கிறது.
1987ஆம் ஆண்டில் எட்டயபுரத்துப் பாரதி வாழ்ந்த தெருவில் இந்தப் படைப்பாளி நுழைகிறார். அதுவரையிலும் எவர் கண்ணிலும் படாமல், எவராலும் வாசிக்கப்படாமல் இருந்த ஒருவர் அந்த நிமிடத்து வெளிச்சத்தில் வெளியுலகின் நட்சத்திரமானார். கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதிவிழாவில் அவ்வாண்டின் சிறந்த நாவலாகத் தோப்பிலாரின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. மிளகாய் வியாபாரி மீரான் நாவலாசிரியராகப் பரிமாணம் பெற்றது அங்குதான்.
அந்தச் செய்தி தமிழிலக்கியப் பரப்பில் பெரும் அதிர்வை உண்டாக்கிற்று. “யார் அந்த தோப்பில் மீரான்? நீங்கள் அறிவீர்களா?” என்று எனக்கு அஞ்சலட்டை எழுதிக் கேட்கிறார் வல்லிக்கண்ணன். நான் அப்போது திருச்செந்தூரில் இருக்கிறேன். ஜனசக்தியில் அப்படியான செய்தியை வாசித்திருந்தேன். அவ்வப்போது பாரதிவிழாவுக்கு திருச்செந்தூர் கலை, இலக்கியப் பெருமன்றத் தோழர்களோடு நானும் போய்வருபவன். ஆனால் அந்த ஆண்டு எப்படியோ தவறிவிட்டது. ஆதலால் என்னால் உடனடியாக வல்லிக்கண்ணனுக்கு விவரம் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது. “விரைவில் விவரம் தெரிந்து பதில் எழுதுவேன்,” என்று வல்லிக்கண்ணனுக்கு எழுதியதாக ஞாபகம்.
ஆனால் அடுத்த சிலநாள்களில் மீண்டும் வல்லிக்கண்ணனின் அஞ்சலட்டை வந்தபோது அதில் தோப்பிலாரைப் பற்றிய பல விவரங்களும் திரண்டிருந்தன. அவருக்கு அந்தத் தகவலை தி.க.சி. தெரிவித்திருக்கிறார். ஆச்சரியமென்னவெனில் தி.க.சி எந்தச் சாலையின் உள்ளடுக்கில் வாழ்கிறாரோ அதே சாலையில் கொஞ்ச தூரத்தில்தான் தோப்பிலார் மிளகாய்த் தரகராக வணிகம் செய்கிறார். தினசரியும் தோப்பிலார் தி.க.சியின் சுடலைமாடன் கோயில் தெரு தாண்டித்தான் இரு சக்கர வாகனத்தில், தான் அப்போது வாழ்ந்த பேட்டையிலிருந்து வரவும் போகவுமாக இருந்திருக்கிறார். பாரதிவிழா விருதுபெற்ற செய்தியை அறிந்தவுடன் தோப்பிலாரைச் சென்று தி.க.சி சந்தித்திருக்க வேண்டும். இப்படியாகத் தன்னுடைய இரட்டையரான வ.க.வுக்கு விவரங்களை எழுதினார் தி.க.சி.
அதிலேயே அடுத்த செய்தி எனக்கு மிகவும் பரவசம் தரக்கூடியதாக இருந்தது. தான் விரைவில் திருநெல்வேலிக்கு வரவிருப்பதாகவும் அப்போது தி.க.சியோடு தோப்பிலாரையும் அழைத்துக்கொண்டு தங்களைப் பார்க்க வருகிறோமென்றும் வ.க. எழுதியிருந்தார். ரொம்பவும் புல்லரித்துப்போய்விட்டேன். அவர்கள் மூவரும் ஒருசேரச் சந்திக்கவிருக்கும் அந்த முதல்நாளில் அவர்கள் மேற்கொள்ளும் முதற்பயணம் என்னுடைய வீட்டுக்குத்தான். அந்தக் காலத்தில் சின்ன இலக்கியவாதியாக இருந்த எனக்கு இந்தச் செய்தி எப்படியான உணர்வுகளைத் தந்திருக்கும்!
சொன்னதுபோல மூவரும் அடுத்த சில நாட்களுக்குள் திருச்செந்தூரில் என் வீட்டுக்கு வந்தார்கள். கலை, இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் சார்பில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது நாங்கள் திருச்செந்தூரில் பெரிய அமைப்பாக இருந்தோம். துடிப்பான இளைஞர்கள் பலர் ஒன்றுகூடியிருந்த காலம் அது. (இப்போது அத்தோழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தின் முக்கியமான ஊடக, அரசுத் துறைகளில் பணிபுரிகிறார்கள்; கட்சியின் அமைப்புகளில் பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள்.) வாரம்தோறும் நாங்கள் கூடியிருந்து இலக்கியம் பேசியிருக்கிறோம். அந்தப் பயிற்சியின் தேர்ச்சியில் முப்பெரும் ஆளுமைகளுடனும் நாங்கள் அனைவரும் கலந்துரையாடினோம். காயல்பட்டினம் பகுதித் தோழர்கள், ஆறுமுகநேரி தோழர்களுடனான சந்திப்புகளை அவ்வூர்களில் ஏற்பாடுகள் செய்திருந்தோம். தோப்பிலாருக்கு அந்த அனுபவம் இனிமையானதாக இருந்தது. ஏனெனில் அவருக்கு இதற்குமுன் இப்படியான இலக்கியச் சுற்றுலா அமைந்திருக்கவில்லை.
தோப்பிலார் அங்கு வந்தபோது அவர் அதற்கும் முன்னமே நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியையும் திருவனந்தபுரத்தில் நீல. பத்மநாபன், ஆ. மாதவன் ஆகியோரையும் சந்தித்திருந்தார். அதில் நீல. பத்மநாபன் என்னைப் பற்றிய தகவலையும் முகவரியையும் கொடுத்து என் கதைகளைக் குறித்தும் சற்றே அளவளாவியிருக்கிறார். அவருடைய சிபாரிசுகளில் ஒன்று, “நீங்கள் களந்தையைச் சென்று சந்திக்க வேண்டும்; உங்களின் நாவலை அவருக்கும் கொடுக்க வேண்டும்,” என்பதாகும். இதைத் தோப்பிலார் என்னிடம் சொல்லிச் சிலாகித்தார். “பீர்மொம்மது நீங்க இஸ்லாமிய பத்திரிகையில ஒன்னும் எழுதலியோ,” என்று வினவியபோது சற்றே திகைத்தேன். “இல்லை காக்கா, நம்ம கதைய அவங்கள்லாம் போடுவாங்களான்னு தெரியல்ல... அதோடு அந்த பத்திரிகைகளையெல்லாம் நான் கண்ணாலேயே பாத்ததில்லை,” என்றேன். “அதெல்லாம் எழுதுங்கோ... என் கதைய முதல்ல அங்கதான எழுதினேன்,” என்று சொல்லி ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’யையும் ‘அன்புக்கு முதுமை இல்லை’ சிறுகதைத் தொகுப்பையும் தந்தார்.
இப்படியாகத்தான் காக்காவும் தம்பியுமானோம். அப்புறம் அதன்பேரில் அடிக்கடி சந்தித்துத்தானே தீர வேண்டும். இந்த உறவுகளோடு காலம் இணைந்துவந்தது. எங்களுக்குள் இலக்கிய ரீதியான ஒன்றித்தல்கள் இருந்ததால் உறவுமுறையும் பிசிறின்றி இருந்தது. சில மாதங்களுக்கு முன் நானும் கண்ணனும் அவருடைய பேட்டை வீட்டுக்குச் சென்றிருந்து அவருடைய உடல்நலத்தை விசாரித்துவிட்டுத் திரும்பினோம். திரும்பும்போது எங்களுடைய காரின் முன்பகுதியில் அவர் ஏறிக்கொண்டார். ரோடுவரைக்கும் வந்து அனுப்பிவைக்கிறேன் என்றார். சும்மா பத்துநிமிட நடையில் சென்றுசேரும் ரோடு அது. அவர் வரவேண்டிய தேவையிருக்கவில்லை; ஆனாலும் வந்தார். இறங்கும்போது கண்ணனிடம் சொன்னார், “நீங்க போய்ட்டு வாங்கோ; பீர்மொம்மத நல்லாப் பாத்துக்கிடுங்கோ.”
கடைசி வார்த்தைகளாகக் கேட்டுக் கடைசிப் பயணமாகப் பிரிந்துவருகிறோம் என்று உணராமல் நாங்கள் திரும்பிவிட்டோம். “தோப்பில் சீரியஸா இருக்காராம். நாம காலையிலேயே போயி அவரைப் பாத்துட்டு வந்துருவோம்,” என்று ஒன்பதாம் தேதி இரவில் அழைத்து அவசரம் அவசரமாகச் சொன்னார் கண்ணன். “காலையில் ஏழு மணிக்குப் புறப்பட்டுறணும்,” என்றவுடன் அப்போதே பயணத்துக்குப் புறப்பாட்டு வேகத்தை நானும் அவரும் கொண்டிருந்தோம். அவரோ அதற்கும் முன்னரே அதிகாலைப் பயணமாகப் புறப்பட்டுவிட்டார்.
மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com