பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி
தலையங்கம்
எல்லாரும் கல்வியறிவு பெற்றிட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கிய நாம் ஆரம்பக் கல்வியைப் பற்றியே அதிகம் பேசி வந்திருக்கிறோம். அவற்றோடு ஒப்பிடுகையில் உயர்கல்வி பற்றி அதிகம் விவாதிப்பதில்லை. ஆனால் ஆரம்பக்கல்வியை வலியுறுத்துவதன் நோக்கம், அது உயர்கல்வியை நோக்கிச் செல்கிறது என்பதாலேயே. வேலைவாய்ப்பு என்ற உச்ச இலக்கு உயர் கல்வியை முடித்தால்தான் கை கூடுகிறது. நம்மை ஆளும் அதிகார வர்க்கம் அதிலிருந்துதான் உருவாகி வருகிறது. அதிக நிதியும் உயர்கல்விக்கே ஒதுக்கப்படுகிறது . மொத்தத்தில் சமூகத்தின் எதிர்காலம் உயர்கல்வியின் நலனோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்திருப்பினும் பெரும் சிந்தனையாளர்கள் கல்வியாளர்களாக இருந்தனர். அவர்கள் பெரும் கனவை விதைத்துச் சென்றார்கள். ஆனால் இந்தியாவில் உயர்கல்வியின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. உலகமயமாக்கச் சூழலுக்குப் பின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உயர்கல்வி குறிப்பாக பல்கலைக்கழகங்களின் நிலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன் வெளிப்பாடுகளைத் தமிழகத்திலும் காண்கிறோம்.
துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் முன்பு அரசியல் தலையீடுகள் இருந்த நிலையோடு தற்காலத்தில் பணம் கொடுப்பது வெளிப்படையான நடைமுறையாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணம் கொடுத்தே தான் பதவிக்கு வந்ததாகத் துணைவேந்தர் ஒருவர் வெகுஜன ஏடு ஒன்றிற்கு அளித்த நேர்காணல் வெளியானது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கடைசியாக இருந்த இரண்டு துணைவேந்தர்கள் நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். கோடிகளைக் கொடுத்துத் துணைவேந்தராக வரும் ஒருவர் பேராசிரியர் நியமனத்திற்காகப் பணம் வாங்கி அதனை ஈடுகட்டிக்கொள்வது வெளிப்படையானது. இதில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுமே விதிவிலக்குகளல்ல. ஓர் ஆட்சியின்போது வாங்கப்பட்ட தொகையைவிட அடுத்துவரும் ஆட்சியில் தொகை அதிகரிக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாகப் பதவிகள் அனைத்துமே அரசியல் நியமனங்களைப்போல் வழங்கப்படுகின்றன. இதில் பணம், அரசியல், சாதி என அனைத்துக் காரணிகளுக்கும் சமப் பங்குகள் உள்ளன. இந்த ஊழல் நீரோட்டம் மேலிருந்து கீழ் பாயக்கூடியதாக இருப்பதால் பல்கலைக்கழகத் துணைவேந்தரிலிருந்து அடிமட்டம்வரை பாய்கிறது. இதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். அதன் விளைவாகக் கல்விப்புலமானது முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாகிப்போனது. அதனால் பல்கலைக்கழகங்களுக்கென விதிக்கப்பட்ட கற்பித்தல், ஆராய்ச்சி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள் போன்ற மரபான பணிகள் நடைபெறுவதில்லை. முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்விதம், அறிவுத்திருட்டு ஆய்வுகள், தொலைதூரக்கல்வி நிலையங்களில் வழங்கப்படும் அவசர அட்டைகள் (பட்டங்கள்), பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், பல்கலைக்கழகத்தின் மோசமான நிர்வாகத்தை விமர்சிக்கும் பேராசிரியர்கள், சங்க நிர்வாகிகள் பழிவாங்கப்படல் எனப் பல பிரச்சினைகளால் உயர்கல்வித் துறை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத் தாள் திருத்தத்தில் நடைபெற்ற ஊழலில் பல பேராசிரியர்கள் பணி நீக்கமும் இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.
சீர்கேடுகளைக் கண்டு ஜனநாயக வழி அறச்சீற்றம் கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை எளிதில் அப்புறப்படுத்துவதற்கு (தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ) பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரம் உதவுகிறது. பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாகக் குழுவான சிண்டிகேட் உறுப்பினர்கள் துணைவேந்தரைச் சார்ந்து ஆதாயம் பெறுபவர்களாக இருப்பதால், அவர்கள் கையெழுத்து போடும் எந்திரங்களாக ஆகிப்போனார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக ரீதியான சங்கச் செயல்பாடுகளுக்கு எழுதப்படாத தடைவிதிக்கப்படுகிறது. மாணவர், ஆசிரியர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீறிப் போராடும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். புதிய தலைமுறைப் பேராசிரியர்கள், அலுவலர்களின் தொழிற்சங்கச் செயல்பாடுகள்மீது மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். தாம் உண்டு, தமது வேலை உண்டு என்றிருப்பதையே சிறந்த பேராசிரியப் பண்பாக வரித்துக் கொண்டுள்ளனர். அதிகாரத்திடம் மக்கள் எதையும் உரிமையாகக் கேட்கக்கூடாது என்ற அரசின் நிலையும், தயவால் மட்டுமே பெற முடியும் என்ற மக்களின் அவநம்பிக்கையும் இணைந்து போராட்டக் குணத்தை மங்கிப்போகச்செய்கிறது. இந்த எதிர்ப்பற்ற சூழல் உயர்கல்வியை மேலும் சீரழிவிற்குத் தள்ளுகிறது.
இன்று அரசு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி நாடிவரும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையினர், கிராமத்தினர், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இவர்கள் வெறுமனே பட்டம் பெறுபவர்களாக இல்லாமல் உயர்கல்விக்கான அறிவைப்பெற வேண்டும். பிற தனியார் பல்கலைக்கழகங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுடன் போட்டியிடும் தகுதியைப் பெற வேண்டும். அதற்கு இப்போதைய பல்கலைக்கழகச் சூழல் எதிராகவே உள்ளது. உயர்கல்வியின் சீரழிவை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் அரசின் மாற்றத்தை முடிவு செய்யும் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு அக்கறையில்லை என்றே அர்த்தமாகும். இன்னமும் காலம் இருக்கிறது; இதையெல்லாம் சரிப்படுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முழுமையாகச் சரிந்துவிடாமல் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும். பணத்திற்கு விற்கப்படும் எந்தப் பதவியும் ஊழலின் உறைவிடமாகவே இருக்கும். பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர், ஆசிரியர், அலுவலர், ஓய்வூதியதாரர் என்று இப்படி எந்தத் தரப்பிலிருந்தும் வரும் புகார்களுக்கு அரசு உடனே செவிசாய்க்க வேண்டும். இன்னமும் மாணவர்கள் மீது அக்கறைகொண்ட பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்; அவர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அண்மையில் சில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் பணம் வாங்காமல் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று அறியமுடிகிறது. இது தொடர வேண்டுமென்பது நமது விருப்பம். ஒரு நாட்டின் வளம் அறிவைக்கொண்டே அளவிடப்படும். அந்த அறிவை உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருப்பதே நாட்டின் வளமாகும்.