கவிதைகள்
கவிதைகள்
ஜான் சுந்தர்
ஓவியம்: K.K. Hebbar
செஃபியா
செத்த நொடியை
சாகா நிலைக்கு மாற்றும்
காலாதீதம் செஃபியா டோன்
என்றான் புகைப்படக்காரன்
அலாதியாக அவன் துவங்க
தேனீரும் அந்தியும் கூட
உன்னித்திருந்தன
செம்பரிதிக் கூந்தல் புரள
இழுத்துச் செல்கிறது
செஃபியக் குதிரை
பழுப்பு மலைகளில்
பழுப்பு மண்ணில்
பட்டுப் புற்களில்
உருண்டோம்
கறுப்பு வெள்ளையின்
பழங்காலத்திலிருந்து
பழுத்த காலத்துக்கு
எங்களைக் கடத்தியிருந்தது
மரத்தை
புழுவை
வெளியை
பழமைக்கு சுமந்து செல்கிறது செஃபியா
கணத்தை புழுதியில் புரட்டி
தின்னத் தருகிறது
கழுத்து வெட்டி
நினைவு தப்பி
நகரத்துள் வந்து விட்ட பிறகும்
செஃபியா டோனுக்கு அலையுமென் மனம்
ஆத்மநேசனோடு
புகையருந்திக் கிடந்தபோது
செஃபிய பானம் குவளையில் பயணிக்க
தொடர்ந்தேன்
ஷட்டர் சார்த்திய
கடையின் முன்னமர்ந்து
அதைப் பருகுவது அவன்தான்
உடையும்
முடியும்
உணர்வும்
விழியும்
ஒரே நிறம்
செம்புழுதி செஃபியன்!
நகரத்தில்
ஆங்காங்கே செஃபியர்கள் திரிகிறார்கள்.
பேருந்து நிலையத் தூண்களில்
தொட்டிக்குப்பையில்
பாதசாரிப் பாதைகளில்
புகையிரத இருக்கையினடியில்
நிலத்தில்
பிராணிமுகங்களில்
அந்தர வெளியில்
தொடுவானில்
அவர்கள் தேடுவதென்ன
செஃபியா செஃபியா
ஏதிலிகளின் ஆண்டவரே
உமது ஜெபக்கூடத்து
வாசலண்டை
பலூன்காரனின் சிலுவை மரத்தை
துளிர்க்கப் பண்ணினீரே
உமக்கு ஸ்தோத்திரம்
ஓடும் ரயிலில்
காட்சியிழந்தவனின் கைமூங்கிலின்
ஒன்பது கண்களையும் திறந்தீரே
உமக்கு கோடான கோடி நன்றியப்பா
தேவஅக்கினி அசைவாடும்
தாரோடையில்
தேயாத துடுப்புகளாக
செருப்புகளை
மாற்றித்தந்தீரே ஆண்டவரே
பரியாசக்காரர்கள்
கண்ணுறாதபடிக்கு
வாலிபப்பிள்ளையின்
காலுறைப் பொத்தல்களை
காத்துக் கொள்ளும் கர்த்தாவே
குணமளிக்கும் கூட்டத்தின்
கைகளுக்கு சிக்கவிடாமல்
ஆண்டவரே
உமது தேவ ஜனங்களை
தப்புவியும் ராஜா
கடுங்காப்பி
துக்க விசாரணைக்கு
இடையில்
காப்பி வந்தது
வழக்கமாக காப்பியை
மறுக்கும் யாரும்
அப்படிச் செய்யவில்லை
காப்பியை குறித்து
பேசும் எவரும்
அது பற்றி பேசவில்லை.
காப்பியும்
வழக்கம் போலிருக்கவில்லை
நாசியைச் சீண்டும்
மணமின்றி ஒளிகுன்றி
சிறுகுமிழிகள் விம்மி வெடிக்க
முகம் கறுத்து
இரண்டு கைகளுக்கும்
இடையிலொரு
கசந்த பிரார்த்தனையைப் போலிருந்தது.
குரல்வளையை இறுக்கிப்பிடிக்கும்
இந்த திரவ துக்கம்
முன்னறையிலிருந்து ஓடோடி
படுக்கையில் விழுந்து
அழும் சிறுமியுமாயிருக்கிறது
மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com