இவ்விதமிருக்கும் காலம்
கவிதை
பா. வெங்கடேசன்
ஓவியம்: K.K. Hebbar
இவ்விதமிருக்கும் காலம்
இந்த மதியம் முப்பரிமாணம் கொண்டிருக்கிறது
காலம் இவ்விதமிருப்பது விரும்பத்தக்கதல்ல
ஒரு தேநீர்க் கடை நேற்றைக்கப்பாலிருந்து
அடையாமல் வந்துகொண்டேயிருக்கிறது
உரையாடல் வெய்யிலுக்குள் உள்வாங்குகிறது
யாரும் யாரையும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது
இதெல்லாம் நல்லதற்கல்ல
சிவா விடுதிக்கருகே
எரிகாடொன்று இத்தனை சீக்கிரமாக இருக்குமென்று
எங்களுக்குத் தெரியவே தெரியாது
அம்மாபேட்டைச் சாலைகளில்
நாற்பத்தைந்து வருடங்கள் உதிர்ந்து விழுந்துகொண்டேயிருந்ததற்கும்
நாங்கள் பொறுப்பல்ல
நாங்கள் வெறுமே ஒரு மலர் மதுக்குடுவையில்
செருகப்பட்டிருக்கும் அழகை
2013லிருந்து பார்த்துக்கொண்டேயிருந்தோம்
சேலத்தை நோக்கிப் பல இருப்பிடங்களின் தொலைவு
இப்படியொரு மதியப் பொழுதாகச் சுருங்குமென்று
நாங்கள் அப்போது எப்படி அறிந்திருக்க முடியும்
நாங்கள் எப்படி வெறுக்கப்பட முடியும்
நாங்கள் எப்படி மௌனத்திற்குள் கைவிடப்பட முடியும்
காலம் இவ்விதம் முப்பரிமாணம் கொள்வது
ஒரு அநீதியான நிகழ்வல்லவா
ஒரு அநீதியான நிகழ்வின் உடனடி விளைவு
பதற்றத்தில் அது
மோசமான கவிதைகளை உருவாக்கிவிடுவதல்லவா
விவாதிக்க விடுதியும் ஆட்களுமற்ற
மோசமான அனாதைக் கவிதைகளை.
நண்பன் ‘தக்கை’ வே. பாபுவின் இறுதிப் பயண நாளின் நினைவில்
மின்னஞ்சல்: b.venkatesan@sacl.co.in