நம்பிக்கையிழக்கத் தேவையில்லை
EPW பக்கங்கள்
நம்பிக்கையிழக்கத் தேவையில்லை
தேர்தல் பின்னடைவை எதிர்கொள்ளும்போது நிலைமை மேலும் மோசமாகாதிருப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்ப்பது எப்படி?
பாரதீய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ள தேர்தல் வெற்றியானது அளவிலும் வாக்கு வித்தியாசத்திலும் பிரம்மாண்டமானது. இதற்கு யாரும் உடனடி எதிர்வினை அல்லது அதி தீவிர எதிர்வினையாற்றக்கூடாது. அவ்வாறு செய்வது ஆழமான பகுப்பாய்விற்கு அதை உட்படுத்துவதைத் தடுத்துவிடும். அந்த மாதிரியான பகுப்பாய்வை அவசரகதியில் செய்யவும் முடியாது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதும் மக்களாட்சியில் பங்குகொள்ளும் அனைவராலும் செய்யப்பட வேண்டிய பகுப்பாய்வு அது. தேர்தல் முடிவுகளை நிறுத்தி, நிதானமாக ஆழ்ந்த பரிசீலனைக்குட்படுத்த வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆதரவாளர்களும் கட்டுக்கடங்காத கொண்டாட்டத்துடனும், எதிர்க்கட்சியினர் கணிசமாக நம்பிக்கை இழந்த நிலையிலும் இந்த முடிவுகளைப் பார்க்கின்றனர். இவ்வெற்றியை உருவாக்க தேஜகூ பயன்படுத்தியதையும் அதன் வசமிருந்த மூலாதாரங்களையும் கணக்கில் கொண்டால் நியாயமாக நமது கவனம் எதிர்க்கட்சிகளை நம்பிக்கையிழந்த நிலைக்கு இட்டுச்சென்ற சூழல்கள்மீதே குவிய வேண்டும். மக்களாட்சி உயிர்ப்புடன் இருக்க எதிர்க்கட்சிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நெறி சார்ந்த காரணங்களுக்காக நமது கவனத்தைத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் தாம் இருக்கக்கூடிய நிலைமீது குவிக்க வேண்டும்.
இந்த நம்பிக்கையிழந்த நிலை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்நிலையானது தம்மீது எந்தத் தவறும் இல்லையெனும் விமர்சனமாகி, அதன் விளைவான ஆலோசனை, பிற கட்சிகள் மீது, பழிபோடுவதாக வெளிப்படுகிறது. பாரம்பரியமாக பாஜக வலுவாகவுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது உண்மையே. பாஜகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேராக மோதிய தொகுதிகளில் 2014 பொதுத் தேர்தலின்போது இழந்த தொகுதிகளைவிட இந்த முறை அதிகமாக இழந்திருப்பதிலிருந்தே அது தெரிகிறது. வலுவாக இருந்த பகுதிகளான கர்நாடகா, மகாராஷ்டிராவோடு அமேதி போன்ற தொகுதிகளைக்கூடத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை; அதைப் போலவே சமீபத்தில் நடந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளையும் காங்கிரஸால் தக்கவைத்துக்கொள்ள முடியாததும் மிகுந்த கவலைக்குரிய விஷயம். இந்த மாநிலங்களில் காங்கிரஸைத் தவிர்த்த எதிர்க்கட்சியும் மாற்றாக இல்லாத நிலையில் இது இன்னும் கவலைக்குரியதாகிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் போனதில் காங்கிரசின் பொறுப்பை விமர்சிக்க முடியும்; என்றாலும் உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும்கூட கூட்டணிக் கட்சிகளால் சமூகக் கூட்டணி ஒன்றை உருவாக்க முடியவில்லை.
மேலும் பாஜகவின் வெற்றிகளில் வடக்கு-தெற்கு இடையே காணப்படும் வேறுபாட்டைக் காட்டித் திருப்தியடைவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். கர்நாடகாவில் பாஜக பெரும் வெற்றி பெற்றதுடன், மேற்கு வங்கத்திலும் தெலங்கானாவிலும் வலுவாகக் கால் பதித்திருப்பது ஆகியன, இவ்வாறு திருப்திப்பட்டுக்கொள்வது தவறு என்று காட்டுகிறது. பாஜக, தேஜகூ அல்லாத கட்சிகள் பெற்றுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஆறுதல் தேடிக்கொள்வது தவறானது. 31 சதவீதத்தை 69 சதவீதத்துக்கு எதிராக நிறுத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி செய்யப்பட்டுவந்தது. அதிக வாக்கு பெறுகிறவர் வெல்வார் என்ற தேர்தல் முறையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள மறுப்பதுடன், பாஜகவின் அரசியல் கதையாடலுக்குக் கிடைத்துள்ள மக்கள் வரவேற்பையும் காணத் தவறுகிறது; இது தங்களை ஆறுதல்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கூறும் காரணங்கள். இது பாஜகவின் கதையாடலுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டுவதை விடுத்து அரசியலைக் கூட்டல், கழித்தல் விஷயமாகப் பார்க்கிறது.
எதிர்க்கட்சிகள் தம்மைத் தாமே கடுமையாகத் தாக்கிக்கொள்வதும் அல்லது அதற்கு நேரெதிராகச் சென்று பொதுமக்களின் பண்புமீது இறுதித் தீர்ப்புகளை வழங்குவதுமான போக்குகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தமக்குள்ளேயே விமர்சித்துக்கொள்கிற போக்கு பாஜகவிற்காகவே கிடைத்துள்ள நேர்மறையான வாக்குகளின் அளவை கவனிக்கத் தவறுவதாகும். ஐம்பது சதம் அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பாஜக பெற்றுள்ள மாநிலங்களிலும், குறிப்பாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றிபெற்றுள்ள இந்தியாவின் மத்திய மாநிலங்களிலும் இது தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் வழிமுறைகளின் மூலமோ அல்லது சங் பரிவாரத்தின் அரசியல் சித்தாந்தத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ ஆளும் கட்சியாக வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் உள்நோக்கம் கொண்ட வழிமுறைகளுக்கு நேர்மறையான ஆதரவு கிடைத்திருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது. இதை ஒப்புக்கொள்வதால் சங் பரிவாரத்தின் திட்டத்தில் மக்கள் சிக்கிவிட்டார்கள் என்று பழிபோடுவதில் நம்மை இட்டுச்செல்லக்கூடாது. இத்தகைய பழிபோடும் தந்திரங்கள் அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன; அது ஆற்றலற்ற உண்மையின் புகழ்பாடுவதற்கு இட்டுச்செல்லும் அபாயமாகும். அரசியலில் பொதுமக்கள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருப்பவர்கள் அல்லர், மாறாக அவர்களைத் தயார் செய்வதுதான் அரசியல் செயற்பாடு. புதிய ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு எப்போதுமே இருந்ததில்லை. பாஜக/தேஜகூவிற்கு வாக்களித்த அனைத்து மக்கள் பிரிவினரையும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களையும் எதிர்க்கட்சிகள் திரட்ட வேண்டும்.
பாஜகவின் திட்டங்களையும் அதன் அரசியல் சமூகப் பண்புகளையும் கருத்தில் கொள்கையில் அது கட்டியமைக்க விரும்பும் வெகுஜன விருப்பம் ஏதோ ஒரு வடிவில் இந்திய சமூகத்தில் இருக்கிறது. அது உறுதியான வடிவத்தில் இல்லையென்றாலும் உருப்பெறாத ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை ஒப்பீட்டளவில் பாஜகவிற்கு நல்ல விளைநிலமாகிறது. மறுபுறத்தில், எதிர்க்கட்சிகள் நெறிசார்ந்த (நியாயம், இணக்கம் தொடர்பான கருத்துகளையொட்டி) அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு அதற்கான அரசியல் நிலத்தைப் பண்படுத்தியாக வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தங்களுடைய பணியைச் செய்ய வேண்டுமெனில், மற்றவர்களே தவறு செய்வதாகக் கூறிப் பீறிட்டெழும் உணர்ச்சிகளோடு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதையும் அதீதமான முறையில் தங்களையே விமர்சித்துக் கொள்வதையும் மீறி வெளிவர வேண்டியதே முன் தேவையாகும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, மே 25, 2018
தமிழில்: க. திருநாவுக்கரசு
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com