வளமிக்க உளமுற்ற தமிழ்
வளமிக்க உளமுற்ற தமிழ்
1966இல் மலேசியாவில் நடந்த முதல் மாநாடு தொடங்கி இந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆண்டுகளில், சில இடைவெளிகளுடன் உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு இம்முறை சிகாகோவில் ஜூலை 6, 7ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த மாநாடுதான் அமெரிக்க மண்ணில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாடாகும். தமிழின் உலகளாவிய வீச்சுக்கு இது சான்று பகர்ந்தது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபெட்னா’வின் ஆண்டு மாநாட்டுடன் இது இணைந்து நடந்ததால் இந்த இரண்டு நாள் மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழரின் கூட்டம் அலைமோதியது. இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் தமிழார்வலர் பலரும் ஒருங்குகூடினர்
இந்த மாநாட்டிற்குத் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தது. மத்திய அரசிலிருந்து மாநாட்டுக்கான ஆதரவு எதுவுமில்லை. இந்தியை முன்வைத்துப் புதிய கல்விக்கொள்கையை வரைந்துகொண்டிருக்கும் அரசிடமிருந்து தமிழுக்கு ஆதரவு கிடைக்காததில் வியப்புமில்லை. மைய அரசின் சார்பைக் கேள்விகேட்கும் அதே நேரம் தமிழக மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை ஆய்வதும் நம் கடமை. தமிழக அரசின் சார்பில் அரசுப் பணத்தில் சென்ற பெருங்குழுவால் என்ன ஆக்கப்பூர்வமான பங்களிப்பு ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள விழைவதும் முக்கியம்.
சிகாகோ பல்கலைக்கழகத்துக்கும் தமிழாய்வுக்கும் அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு. தெ.பொ.மீ., ஏ.கே. ராமாநுஜன், கு. பரமசிவன் முதலான அறிஞர்களுடன் உறவுகொண்ட பெருமை அப்பல்கலைக்கழகத்துக்கு உரியது. தமிழ்மொழி அங்கு விடாமல் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ், தமிழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான ஆய்வுகள் அங்கு நடந்துவந்துள்ளன. எனவே உலகத் தமிழ் மாநாட்டை சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாநாட்டிற்கு முன்னர் அப்படியான விழைவு சிகாகோ பல்கலைக்கழகத்திடம் இருந்ததாகவும் அறிய முடிகின்றது. தமிழர்களுக்கே உரித்தான கேளிக்கை உணர்வுகளும் பெருமிதத் தம்பட்டங்களுமே அப்பல்கலைக்கழகத்தை விலக்கிவைத்ததாக அறிகிறோம்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தமிழ் சார்ந்த சிறந்த ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் இரண்டொருவரே இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்திருக்கின்றனர்; இதுவும் வருத்தத்திற்குரியது.
தமிழ் வாழ்வின் பல முனைகளும், பாரம்பரியமான நீண்ட தொடர்ச்சியைக் கொண்டிருப்பன. செம்மொழித் தகுதியைச் ‘சிறுகை அளாவிய கூழாக’ அது பெறவில்லை. வரலாற்றின் தொடர்ச்சி முழுவதும் இலக்கியச் சாறாகத் தமிழில் இறங்கியுள்ளது. தன் வாழ்வைக் கிணற்றுத் தவளையாக இருந்து தமிழ்மொழி செதுக்கவில்லை. ‘தமிழ்’ என்ற சொல்லையே உணர்ச்சிமயமாக உரைப்பவர்களுக்கு இதுவெல்லாம் தெரியும். ஆனால் மாநாட்டுக் கட்டுரைகளின் குவிமையம் சங்க காலமும் அதற்கு முற்பட்ட காலமுமாகப் பெரிதும் அமைந்திருந்தது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பெருமிதம் தமிழின் சமகாலச் சாதனைகள் தவிர்த்துப் பெரிதும் பழம் பெருமைகளில் குவிந்திருப்பதைக் காட்டுகிறது. தமிழ் மாழிக்கு முன்னோர் செய்ததே போதும் என்ற எண்ணத்தில் விழுந்துவிட்டார்களா? அதனால்தான் உயிரைத் தமிழுக்கு வைத்துவிட்டு அதன் செம்மாந்த வாழ்வையும் வளர்ச்சியையும் ஆய்வுத்தன்மையோடு பரிசீலிக்க மறுக்கிறார்கள் போலும்.
இந்த உண்மை உலகத் தமிழ் மாநாட்டில் கையளிக்கப்பட்ட கட்டுரைகளில் காணக் கிடைத்தது. கையளிக்கும் கட்டுரைகள் அனைத்துலக அறிஞர்களால் கவனத்தில் கொள்ளப்படும் என்ற உணர்வு இங்கு மேலிடவில்லை; சொல்லப்போனால் உழைப்பும் செழுமையும் மிளிரும் ஆய்வுக்குள் செல்ல முடியா தவிப்பே வெளிப்பட்டது. இதில் தாம் செலவழிக்கும் நேரம், தமிழின் ஒளியை மெருகூட்டும் என்ற எண்ணம் வராதது வியப்பளிக்கிறது. கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல் பயன்பட்டது, தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் யார் யார் என்ற புதிர்கள் விடுவிக்கப்படுவது நல்லது.
ஆய்வாளர்கள் இம்மாநாட்டை அணிசெய்ததைவிடவும் பிரமுகர்களே அணிசெய்ய முயன்றார்கள். தங்கத்தின் ஒளியை முலாம்பூசி அடையப் பார்த்த பாமரத்தனம் மாநாட்டைப் பலவீனப்படுத்திற்று. நானூறு கோடி ரூபாய் செலவில் கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடந்தபோதும் பிரமுகர்களின் வருகை குறைவுபடாமல் இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ளலாம். வந்திருந்த பலருக்கும் நிறைவான பரிசில்கள் கிடைத்தன; அவற்றைப் பெருமகிழ்வோடு பெற்றுச் சென்றனர். ஆனால் மாநாட்டினை உயிர்த்துடிப்பாக்குவது பரிசில்கள் அல்ல. எவ்வகையில் தமிழின் பரிமாண வளர்ச்சியைச் செம்மொழி மாநாடு பெற்றுக்கொடுத்தது என்ற கேள்வியையே சமூகம் முன்வைக்கும். அம்மாநாட்டின் பின் தமிழுக்கான ஆய்வு உந்துதல் கிடைத்ததற்கான ஆதாரம் இல்லை. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவாக இருந்தது என்பதற்குப் பத்தாவது தமிழ் மாநாடு சாட்சியமாக இருப்பதாகக் கருதலாம்.
தமிழ் ஆய்வுப் பாரம்பரியம் விடுபட்டுப்போன சிகாகோ மாநாட்டுச் சூழலில் புரவலர்கள், பிரமுகர்களின் டாம்பீகப் பாரம்பரியம் விடுபடவேயில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் அவர்களின் பிரசன்னம் நீடிக்கிறது. தமிழ் சிந்தனைத் தளத்தில் மலிவான பங்களிப்புகளைச் செலுத்திவரும் குழுவினர் பட்டிமன்றமாகவும் கேளிக்கை நிகழ்வுகளின் ஊடாகவும் இதுபோன்ற ஆராய்ச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தமிழன்னைக்குக் கௌரவம் சேர்க்குமா?
தமிழக அரசு நாற்பது பேராளர்களை அனுப்பிவைத்தது. அவர்கள் மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகள் பெரும்பாலானவை முடிவுற்றபின்னரே வந்தனர். பயணம், கடவுச் சீட்டுக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்ட சுணக்கமே இதற்குக் காரணம் என்று அறிகிறோம். பயண ஏற்பாடுகளே சுணங்கும்போது அறிவார்ந்த தயாரிப்பு மிளிரும் வாய்ப்புக் குறைவு. அவ்வாறு வந்தவர்களிலும் துறைபோகிய வல்லுநர்கள் குறைவு. இப்படியான நடவடிக்கைகளால் ஒரு செம்மொழிக்கு எவ்விதமான மேல்நிலை கிடைக்க முடியும்?
‘ஃபெட்னா’ ஆண்டு மாநாட்டுடன் இணைந்து நடந்ததால் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் திரண்டு சென்றுள்ளனர். இந்த ஆர்வலர்களைக் கேளிக்கை நிகழ்வுகளிலும் மேலோட்டமான சொற்பொழிவுகளிலும் இருத்தி வைப்பது தமிழ் அறமன்று. இம்மாநாட்டின் பெருமிதத்தை அளக்கும் காணொளிக் காட்சி ஒன்றைப் பார்க்க முடிந்தது. தமிழ் குறித்தோ அதன் ஆய்வுகளின் முடிவுகள் குறித்தோ மகிழத்தக்க செய்திகளாக எதுவும் சொல்லப்படவில்லை. மாநாட்டு ஏற்பாடுகள், விருந்துப் பரிமாற்றங்கள், உணவு வகைகள் போன்றவை பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆறாயிரம் தமிழர்களை அந்நிய மண்ணில் திரளச் செய்தபின் நம்மால் பேச முடிந்தது இத்தகைய சாதனைகளையே.
தமிழின் மேம்பாடு குறித்து நாம் அடையும் உணர்ச்சிகள் இருவகையாக அமைகின்றன. முதல்வகை, தமிழை விரும்பாதவர்கள் அல்லது அதன் அரசியல் பேசுவோரைக் கடுமையாக விமர்சிக்கும் முறையில் அமைகின்றது. தமிழார்வலர்களின் ஒரு பகுதியினரின் போர்முறை இது; அவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பிறிதொரு வகையினர் தமிழின் அறிவார்ந்த புலம் குறித்தோ அது நமக்களித்திருக்கின்ற வாய்ப்புகள் குறித்தோ அலட்டிக்கொள்ளாமல், பிறமொழி எதிர்ப்புகளைக் கைக்கொண்டு நம்மை மேன்மைப்படுத்துவதில் சென்று நிற்கிறார்கள்.
தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கையில் நாம் நம்முடைய வருங்காலத் திட்டங்களை வகுப்பதிலும் அதனைச் செய்முறைகட்குக் கொண்டுவருவதிலும் தீர்க்கமாக இருந்தாக வேண்டும். தமிழுக்கு இன்னல் வருமாயின் அதனைத் தம் உயிர்கொடுத்தேனும் தடுத்தாட்கொள்ள இளைஞர்கள் சித்தமாயிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்துபெறும் பயன்கள் என்ன? தமிழைப் பகைவர்கள் சூழ்ந்திருப்பதாகக் கருதும் நம் மனங்களில் தமிழின் வேர்கள் பட்டுப்போகாமலிருக்க நீரூற்றும் தேவை ஆழமாக உணரப்படவில்லை.
உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படவுள்ள நிலையில் அவை அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த ஒரு மாநாடு நடைபெற்றிருந்தால் தமிழுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்; அந்த வாய்ப்பு கைநழுவியிருக்கிறது.
தனிநாயக அடிகளாரின் முன்னெடுப்பில் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி மன்றம் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்குப்பின் மறைந்துவிடவில்லை என்பதற்கு மேல் பத்தாம் உலகத் தமிழ் மாநாடு பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.