காலச்சுவடு புதிய வெளியீடுகள்
காலச்சுவடு புதிய வெளியீடுகள்
நாவல்
கலாபன் கதை
தேவகாந்தன்
ரூ. 240
கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல்.
குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறை கடல் வாழ்வு, மரணபயத்தை உண்டாக்கும் கடல் நோய்மைகள், தீராததும் கட்டறுந்ததுமான காமம், உறவுகளின் முகம் பார்ப்பதன் காத்திருப்பு, நாளையின் எதிர்பார்ப்புகள், நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதர்கள் என கலாபனின் வாழ்வுபற்றி உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவுகொள்கிறது நாவல்.
கடல் அள்ளியும் கொடுக்கிறது; பரிதவிக்கவும் விடுகிறது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. நெருக்கமானவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறது; பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சன்னதம் கொண்டு தாயங்களை உருட்டி விளையாடிப் பகடி செய்கிறது.
கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள் தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள் போன்றனவோடு புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன். நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன.
கட்டுரைகள்
மோகத்திரை
உமா வரதராஜன்
ரூ. 240
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக்கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்கு வழங்கியிருக்கின்றன. சொந்த அனுபவங்களின் வலுவில் மட்டுமே உமா வரதராஜன் தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது திரையெழுத்தின் தனித்துவம் இது.
- சுகுமாரன்
தோன்றாத்துணை
பெருமாள்முருகன்
ரூ. 200
நகர வாழ்க்கையிலிருந்து தேவையானவற்றைத் தன்னோடு இருத்திக்கொண்டு, புதிதாக அமைந்த கிராம வாழ்க்கையில் தன்னை இரண்டறப் பொருத்திக்கொண்டு, நேரிட்ட பல சோதனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் தாயை மாறாத சித்திரமாகக் காட்டுகிறது இந்நூல்.
கவிதைகள்
அஞ்சனக்கண்ணி
சஹானா
ரூ. 125
கவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார்.
இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
‘அவ்வளவு பெரிய மலைகளைப் பார்க்கும் சின்னக் கண்களுடன்’ சஹானாவாக வேண்டும்; அன்றாடங்களின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகின்றன இத்தொகுப்பைப் படித்தால். சூழலியலுக்கும் சஹானாவுக்கும் ‘பூனையின் மீசை’ அளவுக்குக்கூட இடைவெளி இல்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. சஹானாவின் கவிதைகள் வழியாகக் கேட்பது பலநேரம் ஒரு குழந்தைமையின் தூய இசைக்குரல், சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லிய கேவல். உண்மையில் சஹானாவின் அந்தச் சின்னக் கண்கள் வழியாக இந்தப் பெரிய வாழ்க்கையை, இயற்கையைப் பார்க்க வேண்டும். இன்னும் நிதானமாக ஒரு பூனையைப்போல வாசிக்க வேண்டும் மறுபடியும்... மறுபடியும்...
- சந்தோஷ் நாராயணன், ஓவியர்
ரவிக்கைச் சுகந்தம்
ஜான் சுந்தர்
ரூ. 90
ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோ கலைஞன். பேருந்தில் நம் மடியில் இருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர்.
சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் அவர் நடுச் சுவரில் வரைந்த ஒன்று.
கணத்தைப் புழுதியில் புரட்டித் தின்னத் தரும் அவருடைய வரிகள் அந்தரவெளிகளில் செபியாவைத் தேடுகின்றன. இது அவருடைய செபியா நிறச் சொந்த ரயில். செபியா நிற பிஸ்கட் நிலா. செபியா நிறச் சுகந்தம். மற்றும் செபியா நிறச் செபியா.
- கல்யாண்ஜி
தனித்திருப்பவனின் காதில் திடீரென விழுந்து சூழலை மாற்றும் தேன்சிட்டின் கூரிய கீச்சொலிகள் போல, வாசிப்பவரின் எல்லாப் புலனுக்குள்ளும் நுழைந்து நலம் விசாரித்து அமைதி படர்த்தும் கவிதைகள் இவை. அப்படியொரு கனவமைதிக்குள் ஆழும் போது, காகங்களின் மரண கானா போல மனம் பேதலிக்கச் செய்பவர்கள், ஜான்சுந்தரின் கவிதை மனிதர்கள். தானியங்கிப் பண இயந்திரங்களைக் கிழட்டு பூதங்கள் என நெருப்பாய் பெரு மூச்சுகள் விட்டபடி காவல் காக்கும் முதியவர்கள், பதறப்பதற பொதியை வாங்கி கனலை அணிந்து பறக்கும்,பசிப்பிணி தீர்க்கும் சிறு தெய்வங்களான ஸ்விக்கிப் பையன்கள், நாலங்குல பிரஷ்ஷால் சுவர்களில் வர்ணம் பூசி டர்பன்டைனில் வாழ்வைக் கழுவிக்கொள்பவர்கள் என, உப்புக்கடலை ரப்பைக்குள் ஒளித்து வைக்கும் அவரின் கவிதை மனிதர்கள் நம் மன அமைதியைக் குலைப்பவர்களும் கூட.
ஏதிலிகளின் ஆண்டவர் தன் முன் பிரார்த்திக்கும் எளிய ஜனங்களின் வார்த்தைகளனைத்தையும் இந்தக் கவிஞனின் நாவில் தோன்றச் செய்திருக்கிறார். அவை சாரங்கி வில்லின் இசைக்கு முன் தோளுயர்த்தி எதிர்க்கிறவனைத் தோற்று அழச் செய்பவை. சில கணங்கள் பொறுத்தால் அழுகையை வெல்ல தீக்காய்ச்சப்படும் அவரது பறையில் இசையாயும் துடித்தெழும்.
கடக்கும் ஒவ்வொரு இறந்த கணமும் நிகழ்வுகளை கறுப்பு வெள்ளை நினைவுகளாக்குவதை செப்பியா டோன் படங்களாக்கி காலாதீதம் தாண்ட செப்பியா குதிரயேறும் ஜான் சுந்தர், ஒலிவாங்கியை அரங்கம் ருசிக்கும் ஐஸ்க்ரீமாக்கும் தேர்ந்த இசைஞனும் கவிஞனுமாக இருப்பது தமிழின் கொடுப்பினை.
- கலாப்ரியா
கதை
ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்
அம்பை
ரூ. 175
மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் நான்கு நீண்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
வல்லமை வெளியீடு
காதலின் புதிய தடம்
ஆனந்த்
ரூ. 150
ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும் மானுடத்தின் மீது அக்கறைகொண்ட உளவியல் ஆலோசகராகவும் ஆனந்த் எதிர்கொண்டிருப்பது இந்தச் சவாலைத்தான். அதைப் பொறுப்புணர்வுடனும் பக்குவத்துடனும் மனித மனம் குறித்த ஆழமான புரிந்துணர்வுடனும் எதிர்கொண்டிருப்பதன் சாட்சியமே இந்த நூல்.
- அரவிந்தன்