ஜீன் அரசநாயகம் கவிதைகள்
கவிதைகள்
ஜீன் அரசநாயகம் கவிதைகள்
தமிழில்: எம்.ஏ. நுஃமான்
1958...’71...’77...’81...’83
அது ஒரு நீண்ட பயணம்
இன்னும் முடியவில்லை
எத்தனையோ அடையாளங்கள்
ஒவ்வொன்றும் ஒரு நடுகல்
ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலும்
வதைக்கப்பட்டோரின் வரலாறு
அந்த வருடங்களை நான் குறிப்பிட முடியும்
அவற்றின் ஊடாக நான் பயணித்திருக்கிறேன்
அப்போது அது என் அக்கறைக்கு உரியதல்ல
எனக்கு ஒரு சொந்த அடையாளம் இருந்தது
கொலைஞரிடமிருந்து அது என்னைப் பாதுகாத்தது
நான் தொலைவிலிருந்து அவதானித்தேன்
நெருப்பு என் அருகில் வரவில்லை
அடுத்தமுறை துப்பாக்கிகள் முழங்கின
அவற்றின் எதிரொலிகள் தொலைவில்
நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும்
காடுகளிலிருந்தும் கேட்டன
ஆண்கள் பக்கத்தில்
துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு தூங்கினர்
காயப்பட்டவர்கள் ஊர்ந்தனர்
குருடாகிச் செயலிழந்தனர்
தேங்காய்கள் போல், மிதக்கும்கட்டைகள் போல்
உடல்கள் ஆற்றில் மிதந்தன
அழுகும் சடலங்கள் வெள்ளத்தில்
கூளங்கள் போல் அள்ளுண்டு சென்றன
அல்லது தெருக்களில் வரிசையில் கிடந்தன
பொதுச் சந்தை இடங்களில்
அழுகிய காய்கறிகளாகின
அது மீண்டும் நிகழ்ந்தது
மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது
தொடரும் வன்முறை, பெருகும் குருதி
நொறுங்கிய கண்ணாடிகள்
சிதைந்த சுவர்கள், எரியும் சுவாலைகள்
கவியும் புகை, கொள்ளை, திருட்டு
நாள் முழுதும் ஒலி எழுப்பி விரையும்
தீயணைப்பு வாகனங்கள்
எரியும் நகரங்கள் ஊடாகச் செல்கின்றன
மலைகளின் மேல் துப்பாக்கி ஓசை
வரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்துகிறது
அல்லது எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது
அது வன்முறையைப் பொறுத்தவரை மட்டும்தானா?
யுத்தகளங்கள் பெயரற்ற சடலங்களால் நிரம்பியுள்ளன
ஒவ்வொரு புதைகுழியும் இடம் மாற்றிவைக்கப்பட்ட ஒரு கோப்பு
இழந்த அடையாளங்கள்
வரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்துகிறது
அவ்வாறு அது தொடர்கிறது
தீயிடல், கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை,
தாக்குதல், அடித்தல், கத்திக்குத்து, எரித்தல்
எண்ணற்ற வகையில் இரத்தம் சிந்தப்படுவதை
எண்ணிக் கணக்கிடு
மீண்டும் மீண்டும் எண்ணிக் கணக்கிடு
உன் கை விரல்களாலாவது எண்ணு
மரணத்தைத் தொடு
நாம் எல்லாரும் மறக்கும்முன் புள்ளிவிவரத்தை வெளியிடு
இவையெல்லாம் முன்பு நடந்தது
அது மீண்டும் நடக்கும்
நாம் பார்வையாளராக இருந்தோம்
ஆனால் இப்போது நான் அதற்குள்.
அது எனக்கு நடந்திருக்கிறது
நீ பலியாளாகும்போது
நீ தோற்கடிக்கப்பட்டவராகும்போது
கடைசியாக வரலாறு அர்த்தம் பெறுகிறது
பாலம் தகர்க்கப்பட்டுள்ளது
உன்னால் அதைக் கடக்க முடியாது
பயம்
பயம் தொண்டையை அடைக்கிறது
நாக்கை வறட்டுகிறது
கும்பலுக்குப் பயம்
இரவுக்குப் பயம்
சூரிய வெளிச்சத்துக்குப் பயம்
பகலுக்குப் பயம்
இவை எதிரியைக் காட்டித் தருகின்றன
பயம் உடம்பை நடுங்கச் செய்கிறது
காய்ச்சலாய் எரிக்கிறது
திமிர்த்த கண்விழிகள்
மரணத்தின் விம்பங்களால் நிறைந்து
கல்லைப்போல் குருடாகின்றன
தூக்கத்தில் பயம், கனவில் பயம்
பேசும்போது பயம்
தெருவில் நடக்கும்போது பயம்
காவலாளிகள் காத்திருக்கும்போது,
எங்களைப் பார்க்கும்போது பயம்
ஒவ்வொரு பார்வையிலும்
ஒவ்வொரு நிலையிலும் பயம்
தொடங்கும் கணத்தில் பயம்
அவர்கள் எம்மைக் கொல்ல வரும்போது பயம்
நாம் தப்பி ஓடும்போது பயம்
அஞ்சி ஒடுங்குவதற்கு இன்னும் தசையில்லாதபோது
நாம் இங்கு தொடர்ந்திருக்கும்வரை
எனது ஆவிக்கு இன்னும் வலு இருக்குமா?
பேரழிவு
ஒவ்வொரு சொல்லும்
கவிஞனின் தொண்டையைப்
பிழிந்துகொண்டு வெளிவரட்டும்
ஒவ்வொரு குரல் நாணும்
அதன் தொனியை உரத்து ஒலிக்கட்டும்
இந்தப் பைசாசத் தீங்கினை நிராகரிக்கட்டும்
அவர்கள் நகரங்களை
மண்ணோடு மண்ணாக்குகிறார்கள்
இறந்தவர்களுக்குப் புதைகுழி தோண்டுகிறார்கள்
நரகக் குழிகள் அகலத் திறந்துள்ளன
பிசாசுகளின் சுட்ட இறைச்சி விருந்துக்காக
பெருநெருப்பு மேலே மேலே எழுகிறது
துப்பாக்கி வெடிக்கையில்
அலறல்கள் மூச்சுத் திணறுகின்றன
எரியும் உடல்களின்
சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன
மரணத்தின் பரவசத் துடியாட்டம்
அவர்கள் மனிதர்
நம்மைப் பழிவாங்குவோர்.
நாம் அல்ல
மின்னஞ்சல்: manuhman@gmail.com
ஜீன் அரசநாயகம் (2.12.1931 - 30.7.2019) இலங்கையின் பிரசித்திபெற்ற ஆங்கில எழுத்தாளர், கவிஞர். டச் வம்சாவளியைச் (Dutch Burgher) சேர்ந்த இவர் தன் 88 ஆவது வயதில் அண்மையில் காலமானார்.