மைப் பதிவுகளின் அரிய சங்கமம்
கட்டுரை
மைப் பதிவுகளின் அரிய சங்கமம்
பழ. அதியமான்
காதில் விழுந்ததும் மனத்தில் வியப்பு மின்னியது. சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டாம். நம்பவே முடியவில்லை. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு காலம்தான் எப்படி ஓடுகிறது? நேற்று முன்தினம்தான் மாநிலக் கல்லூரியின் ஆய்வு மாணவனாகக் கோட்டையூர் சென்றுவந்தது போலிருக்கிறது. வ.ரா.வின் எழுத்துகளைத் தேடித் தொகுக்கும் பணியில் திரிந்துகொண்டிருந்த காலத்தில் (1984-88) அது நிகழ்ந்தது. டோரதி - கிருஷ்ணமூர்த்தி இணையர் மூலமாக நூல் சேகரிப்பாளர் ரோஜா முத்தையா (1926 - 1992)வைப் பற்றி முதலில் அறிய வந்தேன். அவரது சேகரிப்பில் திரண்டிருந்த வ.ரா.வின் நூல்களைப் பார்க்க விரும்பிக் கடிதம் எழுதினேன். ஆய்விற்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்திச் சேகரிப்பைப் பயன்கொள்ளலாம் என்று தட்டச்சு செய்து அரைத்தாளில் பதில் அனுப்பினார். ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் இரா.கு. நாகுவிடம் விவரம் சொன்னேன். உதவித்தொகை அற்ற ஆய்வாளனாக இருந்த என்னை, இத்தொகை செலுத்த அனுமதிக்கவில்லை. ‘அறிவைத் திரட்டிக்கொள்ளப் பணம் செலவழிப்பது வீண் அல்ல’ என்று வெறும் எழுத்தரான என் அப்பா பணம் தந்து கோட்டையூருக்கு அனுப்பினார்.
ரோஜா முத்தையா
ஒருநாள் பிற்பல் நான்குமணி அளவில் கோட்டையூர் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த அவரது வீட்டின் திண்ணையில் இருந்தேன். வீடென்ன வீடு, மாளிகை என்று சொல்ல வேண்டும். கை வைத்த ஒரு மர நாற்காலியில் முத்தையா அமர்ந்திருந்தார். காபி இருவருக்கும் வந்தது. கூடவே நான்கு பாதாம் பருப்பு சின்னத் தட்டில் அவருக்கு முன் இருந்தது. பார்க்க வந்த காரணத்தைச் சொன்னேன். வ.ரா.வின் பல புத்தகங்களை உடனே எடுத்துவந்து காட்டினார். அப்போதுதான் வைத்த பொருளை எடுத்துவருவது போல் இருந்தது அவரது நடவடிக்கை. பலதும் நான் பார்க்காதவை. ‘பர்டோலி சத்தியாகிரகம்’, ‘நடைச் சித்திரங்கள்’ பிரதிகளில் சிவப்புமையில் என் பெயரை எழுதிப் பரிசாக அளித்தார். முத்து முத்தான எழுத்துகள். முத்தையா என்பது காரணப் பெயர்தான் போலும். பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். வேண்டும் நூல்களைப் பார்க்க அனுமதித்தார். அன்று ஆய்வு நடக்கவில்லை, அறிமுகம்தான் நிகழ்ந்தது.
சென்னையில் ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஓவியக் கம்பெனி நடத்தியதையும் அப்போது கிளுகிளுப்பூட்டும் ஒரு நூலை எழுதி வெளியிட்டதையும் சொல்லி வெட்கத்துடன் அவர் சிரித்தது மறக்கவில்லை. எஸ்.எஸ். வாசன்கூட பிரபலமாகாத காலத்தில் அப்படி ஒரு நூலை எழுதியதைச் சொன்னேன், முறுவலித்தார் முத்தையா. அவரைப் பார்த்த சென்னை நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். சலபதியே பார்த்ததில்லை. ‘சங்கராபரணம்’ தெலுங்குப் படத்தில் வருவாரே சோமயாஜுலு, அவரைப்போல் சாயல் என்று சொல்லலாம். சென்னை திரும்பியதும் அவரைப் பற்றியும் சேகரிப்பு பற்றியும் தினமணி கதிரோ, குங்குமமோ, எதிலோ எழுதியதாக நினைவு. கடிதப் போக்குவரத்தில் இருந்தோம். சில கடிதங்கள் இருக்கின்றன என நினைக்கிறேன். தேட வேண்டும். சேகரிப்பை வாங்கிப் பொதுவாக்கிப் பயன்படுத்தலாம் என்று பாவைசந்திரன் உள்ளிட்ட சிலருக்கு எழுதினேன். யார் எவர் என்று பெயர் நினைவில்லை. பயன் எதுவும் விளையவில்லை, அது மட்டும் நினைவிருக்கிறது.
பிறகொரு நாள், முத்தையாவின் மறைவிற்குப் பிறகு தேவதூதனைப்போல ஒருவர் வந்தார். சிகாகோ பல்கலைக்கழக நூலகர் ஜேம்ஸ் நைதான் அவர். அந்தச் சேகரிப்புக்குப் பயன்பாட்டுக் காலம் பிறந்தது. நையை நான் பார்த்ததில்லை. புதுக்கோட்டை, கோட்டையூர் போன்ற இடங்களுக்கு அவர் வந்துபோனார். அவர் வந்துபோன சில ஆண்டுகள் வரை, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி எப்போது போனாலும் ‘நை நை’ என்பார். தாளைப் பார்த்துவிட்டுப் புத்தகம் வெளியான தசாப்தத்தை நை சொல்வாராம். வை. கோவிந்தனின் சக்தியைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் பேசவில்லை, உள்நாட்டுத் தயாரிப்புதானா என்று திரும்பத் திரும்ப நை கேட்டார் என்று பூரித்தார் கிருஷ்ணமூர்த்தி. கோட்டையூரின் கருவூலங்கள் நையால் உலகுக்குக் கிடைத்தன. அதுதான் கதையின் இரண்டாம் பாகமும் முக்கியமான பாகமும்.
தென்னிந்தியாவின், குறிப்பாகத் தமிழ்நாட்டின் 19ஆம் நூற்றாண்டின், 20ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி வரையிலான இலக்கிய, சமூக வரலாற்றை முத்தையாவின் சேகரங்களிலிருந்து ஒருவர் எழுதிவிட முடியும். பழம் இலக்கியம், மருத்துவம், நாட்டுப்புறவியல், சமயம், திரைப்படம், பெண்கள் தொடர்பான மைவழிப்பட்ட பதிவுகள் அவரது சேகரங்கள். வெறும் அச்சிடப்பட்ட புத்தகம் மட்டுமல்ல, சினிமா பாட்டுப் புத்தகங்கள், நோட்டீசுகள், கடிதங்கள், தபால் வில்லைகள், தான, கடன் பத்திரங்கள், செட்டிநாட்டு மக்களின் வீட்டுக் கணக்குகள் இப்படி ஒன்றரை நூற்றாண்டுக்காலத் தமிழகம் கண்ட வாழ்வு அவரது சேகரங்கள். நூற்றைம்பதாண்டு பண்பாட்டின் மேல், நடுத்தர வர்க்கக் காலச்சுவடுகளை இந்தச் சேகரங்களில் ஒருவர் காண இயலும்.
ரோஜா முத்தையா பழ. அதியமானுக்கு எழுதிய கடிதம்
சிகாகோ பல்கலைக்கழகம், இந்தச் சேகரங்களை வாங்கியமுறை அதுவரையில் நிகழாத புதுமை. பொருளை வாங்குவோர், அதைத் தம் இடத்திற்குக் கொண்டு செல்வதுதானே உலகெங்கும் உள்ள காலம் தழுவிய நடைமுறை. அப்பல்கலைக்கழகம், வாங்கியவற்றை நகலெடுத்துக்கொண்டு மூலத்தைத் தமிழ்நாட்டிலேயே நூலகமாக்கிவிட்டுச் சென்றது. இப்பணியை நிறைவேற்ற நை நான்குமுறை 1990களில் கோட்டையூர் வந்தார். பேராசிரியர்கள் ஏ.கே. ராமானுஜன், நார்மன் கட்லர், அர்ஜுன் அப்பாதுரை, ரால்ப் நிக்கோலஸ் போன்றோர் அடங்கிய வழிகாட்டுக் குழு இப்பணியை அங்கிருந்து இயக்கியிருக்கிறது. சேகரிப்புப் பற்றிய அம்பையின் அவதானிப்புகள்தாம் இம்முயற்சிக்குப் பெரும் அறவலுவாக இருந்திருக்கிறது. மொழி அறக்கட்டளையின் க்ரியா ராமகிருஷ்ணன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ப. சங்கரலிங்கம் ஆகியோர் ரோஜா முத்தையா நூலகம் அமைய இந்திய அளவில் பின்புலமாக அமைந்தனர்.
1994ஆம் ஆண்டின் ஏப்ரல் 23ஆம் தேதி ரோஜா முத்தையாவின் வாரிசுகளோடு சிகாகோ பல்கலைக்கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, சேகரம் கை மாறியது. பெரும் தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அத்தொகை, தமிழ்நாட்டுப் புத்தகச் சேகரிப்பாளர் பலருக்கும் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதாகச் சிலர் கருதுகின்றனர். நியாயமானதாக அது இருக்கலாம், அறிவுக்கு விலைமதிப்பு உண்டா என்ன? இன்னும் பல தனியார் நூல்சேகரிப்புகள், இவ்வகையில் பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நூற்றாண்டு நூலகத்தினர் அப்படி ஒரு முயற்சியில் இருந்ததை நான் அறிவேன். அது இன்னும் வெற்றி பெறவில்லை. ‘நை’ முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை, கல்கத்தா தேசிய நூலக ‘அசுடோஷ் முகர்ஜி’ நினைவு நூல் பாதுகாக்கும் முறையைக்கூடப் பின்பற்றலாம். பலரது முயற்சியும் சிலரது புத்தகங்களை மதிக்கும் பேருள்ளமும் இணைந்தால் இக்கனவுகள் மெய்ப்படலாம். உ.வே.சா., மறைமலை அடிகள், ஞானாலயா, ரோஜா முத்தையா போன்ற நூலகங்கள் தமிழ் அச்சுப் பண்பாட்டின் நிகழ்காலச் சின்னங்கள். இவர்களுக்கு உதவுவது, இவர்களுக்கு உதவுவது அல்ல, நமக்கு நம் வரலாற்றின் பராமரிப்புக்கு உதவிக்கொள்வதாகும்.
ஜேம்ஸ் நை
ரோஜா முத்தையாவின் சேகரங்களை நூலகமாக மாற்றும் பணிகள் கடும் ஈடுபாட்டுடன் நிகழ்ந்தன. 1994 முதல் சென்னை முகப்பேரில் இச்சேகரங்கள் பயன்பாட்டில் இருந்தன. பிறகு 2005இல் தற்போது இயங்கும் தரமணிக்குத் தமிழ்நாட்டரசின் கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. மொழி அறக்கட்டளையோடு இணைந்திருந்த நூலகம் தவிர்க்க இயலாமல் 2004இல் ரோஜா முத்தையா ஆய்வு நூலக அறக்கட்டளையை உருவாக்கிக்கொண்டது. ஆய்வாளர்க்குத் தரமணி ஒரு வசதியான இடமானது. மறைமலையடிகள் நூலகம் அழிவின் பாதையில் பயணித்த சூழ்நிலையில் பழம் நூல்களின் சங்கமமான ரோஜா முத்தையா நூலகம் மட்டுமே தமிழர்க்கு ஆபத்பாந்தவன். ஆய்வாளர்க்குக் கிடைத்த பாலைவனச் சோலை.
சிந்துவெளி ஆராய்ச்சித் திட்டமொன்றும் நூலகத்தில் இயங்கி வருகிறது. ஐராவதம் மகாதேவன் மறைவிற்குப் பிறகு ஆர். பாலகிருஷ்ணன் பொறுப்பெடுத்திருக்கிறார். கிஃட் சிரோமணி (மானுடவியல், சமூக அறிவியல்), ஈராஸ் பாதிரியார் (திராவிட இயல்) பெயர்களில் இரு அறக்கட்டளைகளை ஐராவதம் மகாதேவன் உதவியுள்ளார். மு. அனந்தகிருஷ்ணன் (சமூக அறிவியல்), ப. சங்கரலிங்கம் (நூலகவியல், செய்தி பரிமாற்றம்), வீ. அரசு (தமிழியல்) பெயரிலான அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இவற்றின் மூலம் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. மு. ராகவையங்கார் பெயரிலான பத்மாசினி அம்மாள் நிறுவிய அறக்கட்டளை சமீபத்தில் முடிவுபெற்றது. அண்மையில் காலச்சுவடு எம்.எஸ். (எம். சிவசுப்பிரமணியன்) பெயரில் ஒரு நினைவுச் சொற்பொழிவை நிறுவியுள்ளது. அப்போது வெளிவந்ததுதான் ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’; இந்த அறக்கட்டளைகள் நூலகத்தை அறிவுச் சூழலுக்குள் கொண்டுவந்துள்ளன. சென்னைநாள் விழாக்களை நூலகம் தொடர்ந்து கொண்டாடிவருகிறது.
முற்போக்காளர்களோடு இணைந்து ஆய்வரங்கங்களை நிகழ்த்துகிறது. ரோஜா என்ற செய்தி ஏடு ஒன்றுகூட குறைந்த பக்கங்களுடன் வந்துகொண்டிருந்தது. இதைத் தவிர, சில பதிப்புப் பணிகளையும் மேற்போட்டுக் கொண்டு இயங்க முயல்கிறது நூலகம். விழுந்து விழுந்துதான் எழ வேண்டியிருக்கிறது. நூலகத்தின் பதிப்பு முயற்சிகளுள் மகத்தானது, திருக்குறள் முதல் பதிப்பின் மறுஅச்சு. புள்ளியில்லாத தமிழ் எழுத்துகளால் இயன்ற அப்பதிப்பில் திருக்குறள் நூல் தலைப்பு ‘திருககுறள’ என்றுதானிருக்கும். இன்றைய வாசகரால் படிக்கவியலாத, அந்தச் சேகரிப்புப் பிரதியின் விலை ரூ. 1330.
தமிழ்நாட்டிலிருந்தும் வெளியிலிருந்தும் பெருமக்கள் பலரது சொந்த சேகரிப்புகளைப் பெற்று நூலகம் வளர்ந்துகொண்டே வருகிறது. மு. அருணாசலம், ஏ.கே. ராமானுஜன், தெ.பொ.மீ., மில்டன் சிங்கர், கிஃட் சிரோமணி, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சிட்டி போன்றோர் நான் அறிந்த அவ்வகை பெருமக்கள். கிஃட் சிரோமணி, தான் பணியாற்றிய தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் புள்ளியியல் துறை உதவியுடன் திருக்குறள் சிறப்பு நூலை வெளியிட்டார். காலந்தோறும் மாறிவந்த தமிழ் வரிவடிவத்தில் திருக்குறளைப் பதிப்பித்திருந்த அந்நூலை ‘ரோஜா முத்தையா’வில்தான் பார்த்தேன். வட்டெழுத்து வடிவத்தில் குறளை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அங்கே அது கண்ணிற்குக் கிடைக்கும். இதைப் போல பல ஆச்சர்யங்கள் ‘ரோஜா முத்தையா’வில் காத்திருக்கின்றன வாசகரைப் பரவசப்படுத்த.
முகப்பேரில் சேகரங்கள் நூலகமாக மாற்றும் பணிகள் நடந்த காலப்பணிகளைப் பற்றி இவர்களோடு பேசும்போதெல்லாம் சங்கரலிங்கம் (மறைவு: 1997) என்ற மாமனிதரைப் பார்க்கும் வாய்ப்பை இழந்த துக்கம் மேலோங்கும். அகால மரணங்கள் தமிழின் துர் சகுனங்களுள் ஒன்று.
தற்போதைய இயக்குநர் கணேசன் சுந்தர் இருமொழியில் எழுதும் நூலாசிரியரும்கூட. அவர் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். திட்டமிட்டும் யோசித்தும் அமைதியாகவும் நவீனமாகவும் இயங்குவது ரோஜா முத்தையா நூலகத்தின் செயல்பாட்டு முறை. எந்த நிலை ஊழியரிடமும் அலட்சியத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. அவர்கள் நடத்தும் கூட்டங்கள் கூட திட்டமிட்ட, ஒத்திகை பார்க்கப்பட்ட, மிகையற்ற நாடகம் போலவே எனக்குத் தோன்றும்.
ரோஜா முத்தையாவின் மக்களான நாராயணனும் வள்ளிக்கண்ணுவும் ‘ரோஜா’ என்ற அடைமொழியோடு தான் தம்மை அழைத்துக்கொள்கின்றனர் (நகரத்தார் திருமகள், 2014 ஆனி). முத்தையாவின் புத்தக ஈடுபாடு, அதனால் விளைந்த கடும் உழைப்பு இன்ன பிற ‘ரோஜா’வை இன்னும் அவர்கள் பரம்பரையில் வாடாமல் பார்த்துக் கொள்கிறது. ‘நை’யின் முயற்சியால் சென்னையில் ரோஜா மணம் வீசுகிறது, இருபத்தைந்து ஆண்டைத் தொட்டு, நூற்றாண்டை நோக்கி...
மின்னஞ்சல்: athiy61@yahoo.co.in