ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல
தலையங்கம்
ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல
மாண்புமிகு அமித்ஷாஜி நவ இந்தியாவுக்குக் கிடைத்த அரிய அரசியல் வித்தகர். சர்தார் வல்லபபாய் பட்டேல் முதல் ராஜ்நாத் சிங் வரையான, இதுகாறும் பதவியிலிருந்த உள்துறை அமைச்சர்கள் எவரையும்விடத் தீவிரமான தேசபக்தர். எழுபது ஆண்டுக் காலம் ஏங்கிக்கிடந்த பின்னர் வாராதுபோல வந்த மாமணி. அவரது அப்பழுக்கற்ற ஜனநாயக உணர்வே, அகண்ட பாரதம் சிதறுண்டு போகாமல் ஒற்றைச் சட்டகத்துக்குள் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றுகிறது. ஒருவேளை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிஜி போட்டியிட விரும்பவில்லையெனில் நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வைத்திருப்பவர் அமித்ஷாஜி. இவரது குரலை மோடி எதிரொலிக்கிறாரா இல்லை மோடியின் எண்ணங்களை இவர் எடுத்துரைக்கிறாரா என்பது புதிரானது. எதுவானாலும் இரண்டு குரல்களும் ஒரே கருத்தியலிலிருந்து எழுபவை என்பதில் ஐயமில்லை. ஒரே கருத்தின் இரட்டை முகங்கள் இருவரும் என்பதும் வெளிப்படை.
இந்தியால் மட்டுமே நாட்டை ஒன்றுபடுத்த முடியும், ஒரே தலைமையால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் விரைந்து கொண்டு செல்லமுடியும் என்பவை வெவ்வேறாகத் தெரிந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இந்தக் கருத்துகள் சில ஐயங்களைப் பாமரக் குடிமக்களிடையே ஏற்படுத்துகின்றன.
ஒரே தலைமையால்தான் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க முடியுமென்றால் கடந்த எழுபத்திரண்டு ஆண்டுகளாக இது துண்டுபட்டுக் கிடந்ததா? மொழியால் மட்டும்தான் இந்தத் தேசம் இதுவரை இணைக்கப்பட்டிருந்ததா? மொழி அல்லாத வேறு காரணங்களால் பிரிந்திருக்கும் மாநிலங்களை மொழிப் பசையால் ஒட்டவைத்துவிட முடியுமா? இந்தக் கேள்விகள் எழும் நிலையிலேயே தேச விரோதமானவை என்று முத்திரையிடப்படுவதையும் கேள்வி எழுப்புபவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையும் அண்மைக் காலங்களில் பார்த்துவருகிறோம். அவை மறைக்கப்படும் ஓர் உண்மையைப் பகிரங்கப்படுத்துகின்றன.
ஒரே மொழியைக் கொண்ட நாடு என்ற கருத்தாக்கம் காலனிய அதிகாரத்தைச் சார்ந்த ஒன்று. மாறாகப் பன்மைத்துவம் கொண்டதுதான் ஒரு நாடு என்ற நடைமுறை உருவாகி வருகிறது. அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பது காலனிய ஆதிக்கம் என்றும் அதிகாரப் பங்கீடுதான் நவீன ஆட்சிமுறை என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சரின், இப்போதைய மத்திய அரசின் ஒருமைவாதம், காலனிய அதிகாரத்தை அமலாக்கும் எண்ணத்தைக் கொண்டது.
காலனிய அதிகாரம் பன்மைத்துவத்தை ஏற்க அச்சப்படும்; இது வரலாறு நிரூபித்திருக்கும் உண்மை. அது கம்யூனிச அரசாகவோ சர்வாதிகார அரசாகவோ ராணுவ ஆட்சியாகவோ வலதுசாரி ஆட்சியாகவோ எதுவாக இருப்பினும் பன்மைத்துவத்தை நிறுத்த அஞ்சும். சமகால உலக அரசியல் வரலாற்றில் இதற்கான எடுத்துக்காட்டுக்களைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் நிலவும் பன்மைத்துவம் இன்றைய அரசை அச்சுறுத்துவதையே அமித்ஷா போன்றவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
எனவே ஒரு மொழியை மட்டுமே அதிகாரம் கொண்டதாக மாற்றுவதன் மூலம் இந்தப் பன்மைத்துவத்தை மறுக்கவும் இல்லாமலாக்கவும் முற்படுகின்றனர். ஒரே மொழி என்ற திட்டத்தின் வழியாக அவர்கள் செயல்படுத்த விரும்புவது ஒருமைப்பாட்டை அல்ல; மாறாக, அதிகாரக் குவிப்பையே. பல மொழிகள் என்றால் அது பல கலாச்சாரங்கள், பல சமூக மரபுகள், பல நாட்டாரிய அறிவுகள், பல வரலாறுகளின் தொகுப்பு. ஒற்றை மொழியின் பெயரால் நிலைநாட்டப்படும் அதிகாரம் மேற்சொன்னவற்றை அழித்துவிடும். பல மொழிகள் நிலவுவது எதிர்ப்பின் அடையாளம்; சமூக அதிகாரம் பெறலின் அடையாளம். எனவேதான் அதிகார வேட்கைகொண்ட அரசுகள் அவற்றைத் துடைத்தழிக்க விரும்புகின்றன. அதன் வாயிலாகப் பெரும்பான்மை மக்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் மரபுகளையும் அறிவையும் இல்லாமலாக்குகின்றன.
இந்தியாவைப் பொருத்தமட்டில் அதை ஒரு நாடாகக் கட்டமைப்பது மொழியோ, புவியியல் எல்லைக் கோடுகளோ அல்ல. வெவ்வேறு கூறுகளாக இருப்பவற்றை ஒன்றிணைக்கும் மானுட உணர்வு. ஒற்றை அதிகாரத்தை நடைமுறையாக்குவதன் வாயிலாக முதலில் அழிவது இந்த உணர்வாகவே இருக்கும் என்பதும் உறுதி. மத்திய அரசு இதைப் பொருட்படுத்தாமைக்குக் காரணம் மானுட உணர்வைவிட அதிகாரக்குவிப்பை விரும்புவதால்தான். பன்முகத்தன்மை என்பதை இந்த நாட்டின் அடையாளமாகக் காண்பதற்குப் பதிலாக அதனை அபாயமாகக் காண்பதினாலும்தான்.
அமித்ஷா மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு மொழி, ஒரு நாடு, ஒரு தலைமை என்ற கருத்துகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாட்டில் பேசப்பட்டு வரும் பல மொழிகளை அழிவுக்குத் தள்ளும். அவற்றை அடிப்படையாகக் கொண்ட பண்பாடுகளையும் வரலாறுகளையும் காணாமற் போக்கும். அவை மூலம் திரண்ட அறிவுக் களஞ்சியங்களைக் காலி செய்யும். அவை அனைத்தையும் இணைக்கும் மானுடப் பொது உணர்வை மறைந்துவிடச் செய்யும். அப்படியான ஒரு சூழலே குத்தகை முதலாளியம் எதிர் நோக்கியிருப்பது. அதைப் பிற அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் எடுத்துக்காட்டிய மகத்தான பெருமை மாண்புமிகு அமித்ஷாஜிக்கு உரியது.
அமித்ஷாவின் ஒரு மொழி, ஒரு நாடு கருத்துக்கு நாடு முழுவதுமிருந்தும் பரவலான எதிர்ப்பு கிளர்ந்தது இயல்பானது, கூடவே எதிர்பாரா விளைவுகளையும் உருவாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராகத் திராவிடக் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் மட்டுமே எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. அமித்ஷாவின் உபயத்தால் இடதுசாரி இயக்கங்களும் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பில் இறங்கின. அரசியல் காரணங்களால் தனித்தனியாக எதிர்ப்புக் காட்டிய எல்லாரையும் ஒன்றுசேர்த்த பெருமை உள்துறை அமைச்சருக்கு உண்டு. இது தனித்த அரசியல் பிரச்சனை அல்ல, மாநிலத்தின் பொதுப் பிரச்சனை என்று உணரச் செய்ததில் அவருடைய பங்கு முக்கியமானது. இங்கு மட்டுமல்ல, இந்தித் திணிப்பு ஒரு பிரச்சனையாக இதுவரை கருதப்படாத மாநிலங்களிலும் இம்முறை கடும் எதிர்ப்பு எழுந்தது. மேற்கு வங்கமும் கேரளமும் ஒடிசாவும் எதிப்பைத் தெரிவித்தன.
அமித்ஷாவின் உபதேசத்தால் அதிகார அப்பத்தைப் பிடுங்கிக்கொண்ட கர்நாடக மாநில அரசும்கூட தீவிர எதிர்ப்பைத் தெரிவித்தது. மிருக பலம் கொண்ட மத்திய அரசுக்கு எதிராக இத்தனை பரவலான எதிர்ப்பு உருவானதன் மூலம் அரசின் ‘எதேச்சாதிகார’ செயல்பாட்டுக்கு இடைவேளை விடப்பட்டது. ஒருவகையில் இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைக்கும் இடமளிக்கிறது.