ஜாஃபாவைப் பார்த்தபோது...
கட்டுரை
ஜாஃபாவைப் பார்த்தபோது...
சிவராஜ் பாரதி
அன்பு மகளே,
அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா? அச்சத்தம் தினமும் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. சில சமயம் அலறலாகவும், சில சமயம் சோகப் பாடலாகவும், சில சமயம் மரண ஓலமாகவும் ஒலிக்கின்றது. ஏன் என்று கேட்கிறாயா? உனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. இங்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதுநாள்வரையில் அனுபவித்துவந்த மரண பயத்தைவிட இந்த வாழ்வுதான் மிகவும் அச்சுறுத்துகிறது. வழக்கமாகச் சந்தேகப்படும்படியான ஆட்களை இந்திய ராணுவம் விசாரிப்பது எல்லாரும் அறிந்ததே. கடந்த சிலநாட்களாகப் பலரைக் கைதுசெய்து ‘நன்கு’ விசாரிக்கிறார்கள்; கூடவே ஒலிபெருக்கி மூலம் அவர்களின் வலிகளை ஊரார் கேட்கச் செய்கிறார்கள். எப்போது நம்மை மனிதர்களாக நினைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
என்ன நடந்ததென்று கேட்கிறாயா? எனக்கும் அதுதான் புரியவில்லை. போன மாதம் வழக்கத்தைவிடக் கூடுதலாக ராணுவத்தினர் ஊருக்குள் வந்தனர். வீட்டின் ஜன்னலுக்கொரு சிப்பாய் என்ற கணக்கில் குவிந்திருந்தனர். அரசியல் தலைவர்களெல்லாரும் வீட்டுச் சிறையிலிருக்கிறார்கள் என்று ரஹீம் பாய் சொன்னார். மெஹபூபா கூட்டணி வைத்தபோதே நினைத்தேன், இப்படி ஏதாவது நடக்குமென்று. சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டார்களாம். எனக்குப் புரியவில்லை. நமக்கு என்ன அந்தஸ்தைக் கொடுத்துவைத்திருந்தார்கள் என்று முழித்துக்கொண்டிருந்தேன். மாநிலச் சட்டமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றிணைந்த பிரதேசங்களாகப் பிரிக்கப் போகிறார்கள் என்றார் ரஹீம் பாய். நம்மைக் கேட்டா சேர்த்தார்கள் என்றேன். ராணுவம் தெருவுக்குள் வந்த அன்று வீட்டுக்குள் நுழைந்தவன்தான், இன்றுவரை கதவைக்கூட திறக்கவில்லை. ஜன்னல் ஓட்டை வழியாகவும் கூரை ஓட்டை வழியாகவும் வரும் ஒலிகளை வைத்துத்தான் வெளியில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்கிறேன்.
பெருநாளின்போது உனக்காகக் கொடுக்கும் குர்பானி இம்முறை விடுபட்டுப்போய்விடுமோ என்று பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளையாக, கொஞ்சம் இரக்கம் காட்டினார்கள். அன்றும் அந்த அலறல் சத்தம் எனக்குக் கேட்டது மகளே. சில மாதங்களுக்கு முன்பு புல்வாமாவில் ராணுவத்தினர்மீது தாக்குதல் நடந்தது. கிட்டத்தட்ட நாற்பது சிப்பாய்கள் உயிரிழந்தனர். இங்கு ஒரே பரபரப்பு, மாலை ஆறு மணிக்கு மேலே ஆண்கள் வெளியே எங்கும் செல்லமுடியவில்லை. தொழுகையை முடித்துவிட்டுப் பள்ளிவாசலில் அமர்ந்து இதைப்பற்றித்தான் பேச்சு. “அவ்வளவு பாதுகாப்பையும் மீறி இயக்கத்தைச் சேர்ந்தவன் எப்படி உள்ளே வர முடிந்தது,” “எதற்காக நாற்பது சிப்பாய்களை ஒரே வாகனத்தில் அழைத்துவந்தார்கள்,” “ஏன் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் இப்படி நடக்க வேண்டும்,” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதுபற்றி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பையன் அடில் அகமது தாரைத் தெரியும். சின்னப் பையன்தான். இந்திய ராணுவத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டமொன்றில் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டவன். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆலையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். தினமும் ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டும், எதிர்த்துப் பேசிவிட முடியாது, எப்போதும் ஒருவித அச்சத்தைச் சுமந்துகொண்டே திரிகிற சூழலில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகத் தாக்கப்பட்ட அந்தச் சிறுவன் போராளிக் குழுக்களைத்தான் தேடிச் செல்வான். அதிலும் புர்கான் வானி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் எத்தனை இளைஞர்கள் போராளிக் குழுக்களில் தங்களை இணைத்துக்கொண்டார்களென்று உனக்கே தெரியும். அவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. உன் அண்ணனைப்போல் மாற்றுவழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் மிகச் சிலரே. ராணுவத்தைக்கொண்டு மக்களின் உரிமைகளை மறுக்கும் அதிகாரம் எந்த அரசிடமும் இருக்கக்கூடாது.
ராணுவ பலம் மட்டுமா, ஊடகப் பலத்தையுமல்லவா இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய ஊடகங்களில் தற்போதிய காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கவனிக்கிறேன். பெரும்பாலான ஊடகங்கள், இந்த ‘மறுசீரமைப்பு’ நடவடிக்கையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை; விளைவுகள் போகப்போகத்தான் தெரியும் என்று ஈயம் பூசிக்கொண்டிருக்கின்றன.
உனக்கு அந்தச் சத்தம் கேட்கிறதா மகளே. லேவில் ஒலிக்கும் சுர்னாவின் இசை. அங்கே மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நம் அன்வருக்கு லே மக்கள்மீது எப்போதும் வெறுப்புதான். கேட்டால் காஃபிர்கள், துரோகிகள் என்பான். அங்கிருக்கும் மூமின்களைக்கூட ‘ஷியா’ என்று ஒதுக்குவான். காழ்ப்புணர்வில் நம்மவர்களும் சளைத்தவர்களில்லை மகளே. எனக்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது. 90களுக்குப் பிறகு உலகெங்கிலும் ஆளும் தரப்புக்குப் பொது எதிரி கட்டமைக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களாக இருக்கிறார்கள். தீவிரவாத அடையாளத்தைச் சுமத்தி அவர்களைச் சுரண்டுகிறார்கள்; ஒடுக்குகிறார்கள். இதைவிட ஆபத்தானது, ஒரு பொது எதிரியை முன்னிறுத்திப் பிறரை மறைமுகமாகச் சுரண்டுவது. இவர்கள் பெரும்பாலும் பழங்குடியினராக இருக்கிறார்கள். காஷ்மீரில்கூட இசுலாமியர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள் என்று மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இசுலாமியர்களை முன்னிறுத்தி லே, கார்கில் பகுதியிலிருக்கும் பழங்குடியினரை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என்று பழங்குடிகள் விரட்டப்பட்ட நிகழ்வுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. வரலாற்றில் பெயர்களும் காலங்களும் வேறுபடுமேயொழிய நிகழ்வுகள் ஒன்றுதான் மகளே. இதையெல்லாம் வெளியே சொல்லமுடியாது. கைது நிச்சயம், வாய்ப்பிருந்தால் மரணமும் நிச்சயம். இவ்வளவு கோழையாக இருக்கிறேன் என்று நினைக்காதே, இந்த தஜ்ஜால் கூட்டத்தினர் மத்தியில் வாழ்வதே வீரம்தான். “உலகத்தின் எப்பகுதியிலும் ஒரே தேசியச் சமுதாயம் என்பது ஒரே மதம் என்று பொருள் கொண்டிருந்ததில்லை,” என்பது தெரிந்திருக்க வேண்டும் அல்லது “ஒரு தேசத்துக்குள் இரு தேசிய இனங்கள் நீண்டகாலம் இருக்கமுடியாது,” என்பதையாவது புரிந்துகொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகள் முன்னெடுக்காவிட்டாலும் சிந்தனையாளர்கள் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையினரின் வினைக்கு எதிர்வினையாக மட்டுமே நம் சிந்தனையாளர்கள் செயற்படுகிறார்கள். “எண்ணெய் டேங்கரின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலைவணங்குகிறார்கள்,” என்று பெர்டோல்ட் பிரெக்ட் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
அண்மையில் ஓர் ‘அறிஞர்’ காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியதில் அம்பேத்கருக்கு மாற்றுக்கருத்து இருந்திருக்கிறது; சட்ட அமைச்சராகத் தனக்கு அதில் உடன்பாடு இல்லையென்று அம்பேத்கர் சொன்னதாக உரையாற்றியிருக்கிறார். அம்பேத்கரை மேலோட்டமாக வாசித்தவருக்குக்கூட இது உண்மெய்யல்ல என்று தெரியும். “அரசன் ஆளுவதற்கு எவ்வாறு தெய்வீக உரிமை ஏதும் கிடையாதோ அவ்வாறே பெரும்பான்மையோர் ஆள்வதற்கும் தெய்வீக உரிமை ஏதும் கிடையாது,” என்ற கருத்துடையவர் அம்பேத்கர். இசுலாமியர்களுக்கெதிராக இந்திய - லடாக்கிய தலித்துகளையும் பவுத்தர்களையும் ஒன்றிணைப்பதற்கான துருப்புச் சீட்டாகத்தான் அம்பேத்கரை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இங்கே ஒரு பழங்கதை உண்டு. ‘நாகர்களுக்கும் ஆரியர்களுக்கும் இந்த அழகான பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டிருந்த காலம். நாகர் இளவரசன் நாகிராய். ஆரிய இளவரசி ஹீமால் அவன்மீது காதல்கொண்டாள். இவர்கள் பெயரில் இங்கே இரண்டு ஊற்றுகள் உள்ளன. உள்ளூர் மணம் வீசும் இக்கதை காஷ்மீரிகள் பொதுநினைவில் பதிந்து தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்பட்டு வருகிறது. நமது தேசிய வாழ்வின் பல மறைபொருட்களை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அது என்ன மறைபொருள் தெரியுமா? நாகர்கள்தான் காஷ்மீரிகளின், பூர்வ இந்தியர்களின் மூதாதையர்கள். இவர்களின் எழுச்சியிலிருந்துதான் இந்திய வரலாறு தொடங்குகிறது. இந்த நாகர்களை அடக்க ஆரியர்களால் இயலவில்லை. ஆதலால் நாகர்களோடு சமாதானம் செய்துகொண்டதோடு இவர்களைச் சமமாக மதிக்கும் கட்டாயத்திற்கும் ஆளானார்கள். அரசியல் களத்தில் பண்டைக்கால இந்தியா பெற்றிருந்த பேருக்கும் புகழுக்கும் முழுக் காரணமானவர்கள் ஆரியரல்லாத நாகர்களே. இதையே மத, பண்பாட்டுரீதியில் பார்த்தால் பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டமே இந்திய வரலாறாகும். இதை இன்னும் எளிமையாகச் சொல்லவா, இந்தியக் கொடியில் மூவண்ணத்தோடு நீல அசோகச் சக்கரமும் இருக்கிறது. ஆனால் இந்தியர்கள் தங்கள் கொடியை மூவர்ணக் கொடி என்றேதான் கூறி வருகிறார்கள். ‘நீலம்’ புறக்கணிக்கப்படுகிறது.
உனக்கு அந்த ஓலம் கேட்கிறதா மகளே. மரணங்களின் ஓலம். குப்வாரா மலைப்பகுதியிலுள்ள எலும்புக்கூடுகளின் ஓலம். காஷ்மீர் முழுதும் கேட்கிறது. அதிகாரத்தின் காதுகளுக்குக் கேட்கவில்லை. அதிகாரத்துக்கு நிலம்தான் முக்கியம்; மக்கள் அல்லர். அதிகாரத்திற்கான குறியீடாய் நிலமே பார்க்கப்படுகிறது. காஷ்மீர் அளக்கப்பட்டது; பிரிக்கப்பட்டது; ஆக்கிரமிக்கப்பட்டது; இறுதியாக அரவணைக்கப்பட்டது. எழுபத்தைந்து லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்நிலம் இனி எத்தனை கோடான கோடிகளுக்குப் பரிசளிக்கப்படப் போகிறதோ தெரியவில்லை.
பிரிவினைக் காலத்தில், நிலம் பிரிக்கப்படும்போது காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவிருந்ததாம், தெரியுமா உனக்கு! மவுண்ட்பேட்டன் (அ) எட்வினா உதவியோடு தன் பிறப்பிடமான காஷ்மீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள், தன் அன்பர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார் நேரு. இந்தக் கதை தெரியுமா! சரி அதெல்லாம் நமக்கெதற்கு, இருந்த பன்முக வரலாறுகளை இழந்து, கட்டமைக்கப்பட்ட ஒற்றைமுக வரலாற்றுக்குள் இருத்தப்பட்ட மக்களின் கதை கேட்கிறாயா?
இவை வெறும் கதைகள், உண்மெய்யல்ல என்கிறாயா. உண்மெய்யை வைத்துக்கொண்டு என்ன செய்வது மகளே. காந்தியின் உண்மெய் வேறு, ஜின்னாவின் உண்மெய் வேறு, அம்பேத்கரின் உண்மெய் வேறு. உண்மெய்யும் பன்முகத்தன்மை கொண்டதுதான். உலகியல் வரலாற்றில் நிரந்தர உண்மெய்யும் இல்லை, நிரந்தரப் பொய்யும் இல்லை. இந்தக் கதைகளும் உண்மெய்களாக இருக்கக்கூடும்.
அதோ நீ படித்த பள்ளி தெரிகிறது. உன்னை மருத்துவராக பார்க்க விரும்பினேன். நொடிப்பொழுதில் எல்லாமே மாறிவிட்டது. யாருமே கவனித்திராத பொழுதில் விளையாட்டு ஆர்வத்தில் உன் கால்பட்டு வெடித்தது கல் அல்லக் கண்ணிவெடி என்பதும் கதையா மகளே! ஆயுதப்பயிற்சி மேற்கொண்டவர்களின் குண்டுதான் தவறுதலாக உன்னைத் தாக்கிவிட்டதென்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். இதுவும் கதையா? சீருடைகளையும் கலாஷ்னிகோவையும் மிரண்டுபோய் நீ பார்க்கும் பார்வை கண்களைவிட்டு அகலவேயில்லை. எதற்காகச் சண்டை போடுகிறார்கள், யாருக்காகப் போராடுகிறார்கள் என்று எந்தத் தெளிவும் இல்லாமலிருந்த எனக்குச் சிதறிக்கிடந்த உன் விரல்கள்தான் இதன் அரசியலைக் கற்றுக்கொடுத்தன.
அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை மக்கள்மீதான சுரண்டல் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். வன்முறைக்கான நிலைத்த இயந்திரம் இல்லாமல் சமுதாயத்தின் பெரும்பாலான பகுதியைச் சமுதாயத்தின் மற்றப் பகுதிக்காக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்த முடியாது. அதற்காகத்தான் இந்த ராணுவமும் காவல்துறையும். மன்னராட்சி, குடியாட்சி, உயர்குடியாட்சி என்று வடிவங்கள் மாறினாலும் அவை மக்களைச் சுரண்டுகிற அடிமைமுறை அரசாகவே இருக்கும். தற்போதிய முதலாளித்துவக் குடியாட்சியில் முதலாளிகளுக்கு அரசு என்ற அமைப்பும் வேண்டும், அதற்கு எதிரான அமைப்பும் வேண்டும். எதிர் அரசுக்கான வன்முறை இயந்திரங்கள்தான் தீவிரவாதிகள்.
சுரண்டலுக்கான வாய்ப்பு இல்லாமல் போகும்போது, நிலத்தின்மீது யாரும் உரிமை கோராதபோது, படிநிலைச் சமூகங்கள் ஒழியும் நாளில்தான் அரசு என்னும் அமைப்பைத் தகர்க்க முடியும். அதுவரையில் இப்போராட்டங்கள் தொடரும் மகளே.
எப்போதும்போல உன்னைப் பேசவிடாமல் நானே பேசிக்கொண்டிருக்கிறேன். சரி உனக்காக இரண்டு வரிகள் இடம் தருகிறேன்,
.............................................................................
.............................................................................
உன் அம்மா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவளைப்போல இங்கு பலர் மன அழுத்தப் பாதிப்பால் (PTSD) தவித்துக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் இந்த மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். ‘வணிகச் சோலையாக இருந்த காஷ்மீரை இன்று மனநோய் விடுதியாக’ மாற்றிவிட்டார்கள். இன்னும் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. உனக்குப் பிடித்த கவிதையைச் சொல்லவா,
நானோ வளர்ந்தவள்
கிட்டத்தட்ட நாலுவயது
போதிய அளவு நான்
வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்
ஆனால் அவளோ சின்னக் குழந்தை
எதுவும் அறியா சின்னக் குழந்தை
பார்த்தாயா! வழக்கமான விசாரிப்புகள்கூட இல்லாமல் இவ்வளவு பேசிவிட்டேன். உனக்கும் எனக்குமான வார்த்தைகளைச் சுமந்துவரும் இந்த ஜிப்ராயீலை நன்றாகக் கவனித்துக்கொள். அண்மைக்காலமாக இவரைப் பார்ப்பதே கடினமாகிவிட்டது. ஆனால் உலகமே பரபரப்புச் செய்திகளால் நிரம்பி வழியும்போது அவரையும் ஏதும் சொல்வதற்கில்லை. ஹூரூலீன்களுடனான நட்பெல்லாம் எப்படி இருக்கிறது? சரி, மற்ற நிலவரங்களைப் பிறகு பேசிக்கொள்ளலாம். அங்காவது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். கேட்க மறந்துவிட்டேன், ரசூலும் அல்லாவும் நலமா? நலமறிய ஆவல்.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com