நடுப்போரில் தீவைப்பவர்
கரிச்சான் குஞ்சு 100
நடுப்போரில் தீவைப்பவர்
கல்யாணராமன்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், கலாச்சாரத் தலைநகரமாகக் கும்பகோணம் திகழ்ந்தது. வித்வான் தியாகராச செட்டியார், உ.வே. சாமிநாதையர், கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் போன்ற மிகப் பெரும் ஆளுமையாளர்கள் அங்கிருந்தனர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் பிரசித்திபெற்ற இரட்டையராக அறியப்பட்ட ந. பிச்சமூர்த்தி - கு.ப. ராஜகோபாலனோடு, மௌனியும் அப்போது அங்கே வாழ்ந்தார். இவர்களில் பிறர் யாரைவிடவும் அதிகமாகக் கு.ப.ரா.தான் இளைஞர்களை ஈர்த்தார். அவரிடமிருந்து எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், ஆர். நாராயணசாமி என்ற மூன்று இளைஞர்களும் பெரும் உத்வேகம் பெற்றனர்.
இவர்கள் மூவரையும் வெவ்வேறு விதங்களில் கு.ப.ரா. பாதித்தார். இந்திய இதிகாசப் புராண மரபின் அடித்தளத்தினுள் உறைந்திருந்த மானுட உணர்ச்சிகளைத் தம் எழுத்தால் கு.ப.ரா. மறுஉயிர்ப்பு செய்தார். இந்த மறுஉயிர்ப்பின் மறுவிளைவாகவே எம்.வி. வெங்கட்ராம் என்ற இளைஞரால், ‘நித்திய கன்னி’ போன்ற மகத்தான படைப்புகளைத் தர முடிந்தது. ஆண் - பெண் பாலுணர்வுச் சிக்கல்களைக் கூர்ந்தாராயும் கு.ப.ரா.வின் உளவிசாரம் தி. ஜானகிராமனுக்குத் தூண்டுதலளித்துப் புதுத்தடம் போடவைத்தது. வரலாற்றிலும் சமகாலத்திலும் மானுட மனங்கள் எவ்வாறு குறுகியும் விரிந்தும் இயங்குகின்றனவென்பதை விசாரிக்கும் நடப்பியல் சார்ந்த தத்துவ நோக்கைக் கரிச்சானான கு.ப.ரா.விடமிருந்து கடன்பெற்றுக் ‘கரிச்சான் குஞ்சு’ ஆனார் ஆர். நாராயணசாமி.
1902 - 1944 எனும் மிகக் குறுகிய நாற்பத்திரண்டு ஆண்டுக் காலத்தில் கு.ப.ரா. சாதித்தவை அதிகம். கவிதை, சிறுகதை, நாடகம், பூர்த்திபெறாத நாவல், கட்டுரைகள் எனப் படைப்பிலக்கியச் சாதனைகளுடன் அமையாது, இந்த மூவரையும் மாபெரும் கலைஞர்களாக உந்திவிட்டதும் கு.ப.ரா.வின் வெற்றியாகும். சோதனை முயற்சியாகக் கு.ப.ரா. எழுதிப் பார்த்த நாடக வடிவத்தைத் தி.ஜா., எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு என்ற மூவருமே மேலெடுத்துச் செல்ல முயன்றனர். தம் எழுத்துகளுக்குப் பெரும் வாசகர் கூட்டத்தைக் கொண்டிருந்த தி.ஜா., ‘சேவா ஸ்டேஜ்’ சகஸ்ரநாமம் தொடர்பால் பாரம்பரியமான, ஆனால் மிக ஆழமான செவ்வியல் நாடகங்களை எழுதினார். எம்.வி.வி., உள்மனக் குரலின் தீவிரத்தன்மையைத் தம் நாடகங்களிலும் தொடர்ந்தார். ஆனால் சமூக வரலாற்றுப் புராண இதிகாச விமர்சன நோக்கைக் கைக்கொண்டு, கு.ப.ரா.வின் நிஜ வாரிசாக நாடகங்களில் செயல்பட்டவர் என்று க.கு.வையே குறிப்பிட வேண்டும். கு.ப.ரா.வின் பூடகமான கவிதைகள் எம்.வி.வி.யிடமும், சிறுகதைகள் தி.ஜா.விடமும், விமர்சனங்களும் நாடகங்களும் க.கு.விடமும் அதிகப் பாதிப்பை நிகழ்த்தின என்று உத்தேசமாகச் சொல்லலாம்.
இன்றுவரை, பிறர் இருவருடனும் ஒப்பிடும்போது அவ்வளவாகக் கவனிக்கப்படாத படைப்பாளியாகவே நீடிக்கும் க.கு.வின் நாடகங்கள் மிகவும் காத்திரமானவை. அவை முறையாகத் தொகுக்கப்படும், வாசிக்கப்படும், நிகழ்த்தப்படும் காலத்தை இன்னும் எதிர்நோக்கியுள்ளோம். பகிர்தலையும் தெளிவையும் அறுபடாத மரபின் தொடர்ச்சியாகப் பேணிக்கொண்டே, தம் பார்வையின் விரிவால் புதிய நிலங்களையும் தொட்டுவிடும் சூட்சுமமான நாடகத் தொனி கைக்கூடியவராகக் க.கு.வை அவரின் நாடகங்கள் காட்டுகின்றன. இன்று க.கு.வின் ‘வில் எங்கே?’, ‘ஈசுவர அல்லா தேரே நாம்’ (ஸமரசம்), ‘மேதினி’, ‘ரஸியா சுல்தான்’, ‘கழுகு’, ‘காலத்தின் குரல்’ (காலத்தின் படைப்பு) ஆகிய நூல் உருவிலான ஆறு பிரதிகளுடன் ஏழாவதாகப் ‘புகல்’ என்ற பிரதியும் (ஜூன்12, 1955, சுதேசமித்திரன்) எங்கள் மூவர் (ராணி திலக், தனசேகர்) தேடலில் கிடைத்துள்ளன; இன்னும் சிலவும் இருக்கலாம்; பழைய இதழ்களில் தேட வேண்டும். இவற்றைக் கொண்டு, எத்தகைய கூரிய மரபைப் புனரமைக்கும் விமர்சன நோக்குடன் க.கு. செயல்பட்டாரென்று விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், மிலேச்சர் என்பதாக மனிதர்களுக்குள் நிகழும் உள்மன மோதல்களையும் வெளிப்புழுக்கங்களையும் குமைச்சல்களையும் அத்துமீறல்களையும் கழுத்தறுப்புகளையும் வலித்திழுப்பு அழுத்தங்களையும் ‘ஈசுவர அல்லா தேரே நாம்’ விவாதிக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டுவாக்கில் தொடங்கிவிட்ட இந்து - இஸ்லாம் விரோதத்தின் ஊற்றுகளைக் க.கு. மோப்பம் பிடிக்கிறார். சாதி, மதம் என்ற வெறும் பிரமையால் கசக்கிப் பிழியப்பட்டுச் செத்துவிட்ட, ஏன் புதைத்தேயாகிவிட்ட உடலைக்கூடத் தோண்டியெடுத்து வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் பிராணிகளை, வரலாற்றுப் பிரக்ஞையுடனும் சமகாலக் கருத்தொளியிலும் நின்று க.கு. விமர்சிக்கிறார். சமயத்திற்கு ஏற்பப் பொருத்தமாய்ப் பேசி அனைத்தையும் குழப்பிவிட்டுத் தம் அவஸ்தை தீர்க்க அல்லாவைக் கிருஷ்ணனாக்கும் பிராமணோத்தமரைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடுகிறார்.
வருணாஸ்ரமவாதிகள் படுத்திய பாட்டுக்கு அந்நியனாவது நன்மை செய்யட்டுமே, இழிவாவது செய்யாமல் இருக்கட்டுமே என்பது ஒரு குரல். “அடியில் நெருப்பை வைத்துக்கொண்டு, அதன் மேல் ஆயிரக்கணக்கில் விராட்டிகளை அடுக்கிவிட்டால்.... (சற்று நேரம்) அதன்மேல் படுத்திருந்தாலும் நெருப்பு ஒன்றும் செய்யாதுதான். ஆனால், காலம் செல்லச் செல்ல...” எனத் துல்லியமாய் நியாயம் கேட்கிறது அக்குரல். துவேஷத்தை வளர்த்துப் பரப்பாமல், அடித்தீயையே அணைக்க வழிதேடக் கூடாதா என்பது மறுகுரல். அதிகாரப் பீடங்களின் சம்பிரதாய அழுக்குகளைக் கொளுத்தி எரிக்காமல் பிரச்சனை தீராது என்கிறது புரட்சிக் குரல்.
‘இஸ்லாமும் அல்லாவும்’, ‘பக்தியும் கிருஷ்ணனும்’ ஒன்றுதான் என்கிறது வைதீகச் சந்தர்ப்பவாதம். “யார் எதைச் சொன்னால் என்ன? பாகவதமும் கீதையும் இதையேதான்... (சொல்கின்றன)” என்கிறான் ஆத்மாராம் (ஹரிதாஸ்) என்ற பிராமணன். “இந்தப் பாகவதமும் கீதையும் இதற்கு முன் என்னவெல்லாம் சொல்லியிருக்கின்றன? இன்னும் என்னவெல்லாம்தான் சொல்லப் பாக்கி வைத்திருக்கின்றனவோ!” என்கிறான் க்ஷத்திரியன் கோபிநாத். “அல்லாவை ஈசுவரனாகவும் கிருஷ்ணனாகவும் ஆக்க இவர் படுகிற பாட்டை... நம்மையும் சேர்த்துக்கொண்டு... நமக்கும் பங்குகொடுத்து... ஒற்றுமையாய் நின்று அந்நியனை விரட்டுவதற்கும், அந்நிய மதம் மாறுவதைத் தடுக்கவும் படட்டுமே” என்கிறான் வைசியன் சிவலால். “ஏன்? அவரென்ன அண்ணாவி?... அவர்கள் எத்தனை பேர்? நாம்தான் இருக்கிறோம் நிறையப் பேர். நாம் சேர்ந்து...” என்கிறான் சூத்திரன் தத்தன். “இனிமேலா முடியும்? அந்நியன் வேரூன்றிவிட்டானே! ஆனால் இவர்கள் படுத்தும்பாட்டிற்கு, அவனாவது...” என்கிறான் சிவலால். “அவனாவது நம்மை இழிவு செய்யாமல் இருக்கட்டுமே என்று அவனை விரும்பலாம் என்கிறாயா? அது சரியில்லை. நமக்குள் இருக்கும் பகைமையும் மற்றதும் நியாயம்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஆத்மாராம் போன்றவர்களால் கஷ்டப்படுகிறோம். என்றாலும்...” என்று இழுக்கிறான் கோபிநாத்.
பதறும் ஆத்மாராம், “கோபி! அவர்களுக்குச் சொல்வது போல் மெல்ல நடுப்போரில் தீ வைக்கிறாயே!” எனக் குலைநடுங்குகிறான். என்றாலும், திறமையாகச் சமாளித்துக்கொள்கிறான். “பிராமணன் நான்... நான் சொல்கிறேன், கேள்...” என்கிறான். “இந்த ‘நான் சொல்கிறேன்’ இருக்கிறதே, இதுதான் நம் ஆபத்துக்கு எல்லாம் மூல காரணம்” என்கிறான் கோபிநாத்.
இது என்ன வெறும் பதினைந்தாம் நூற்றாண்டு உரையாடலா? இத்தகைய ஓர் உரையாடல், நம் சமகால மேடையில் ஒலிக்க வேண்டாமா? ஒரு வெளிப்பேச்சான பாவனையாக அல்லாமல், உள்ளாழ்ந்த கரிசனத்துடன் இக்குரலைக் க.கு. எழுப்புவதுதான், ‘ஈசுவர அல்லா தேரே நாம்’ நாடகத்தைப் படிக்கவும் நடிக்கவும் வேண்டிய சமகாலப் பிரதியாக்குகிறது. “நம் சந்ததிகள் இந்த நாட்டில் வளர்ந்து இன்புற வேண்டும். யார் ஆண்டால் என்ன? நமது உடமைகளும் பெண்டு பிள்ளைகளும்..... பிழைத்தால் போதும் என ஒவ்வொருவரும் நினைத்ததால்தான், அச்சமரசத்தால்தான், எளிதாக நாடு அந்நியர் வசப்பட்டது!”
“ஆத்ம ராமரே! உங்களுக்கெல்லாம் கூர்மையான புத்தியைக் கொடுத்த ஆண்டவன், சற்றே சமூகப் பொதுநோக்கும் வைத்திருந்தால்...” என்ற க்ஷத்திரியக் குரலுக்குக் க.கு. பிரதியில் கூடிய அழுத்தம் தந்துள்ளார். “எந்தத் தேசத்தவர் ஆனாலும், எங்கள் சாத்திரப்படி, மண்ணை ஆளும் மன்னன் மகாவிஷ்ணுவின் அம்சம். மேலும் நீங்கள் பின்பற்றும் மதமும் அல்லாவும் எங்கள் வேத சாத்திரங்களில் இலைமறை காயாய் இருப்பவையே. பெயரும் உருவமும் எப்படியிருந்தால் என்ன? வளையும் மோதிரமும் எல்லாம் பொன்னே! அல்லா பரம்பொருள்... ஈசுவரன்... இஸ்லாம் - அவனுக்கே அனைத்தையும் அர்ப்பணம் செய்து அமைதி பெறும் பக்தி மார்க்கம்...” என்கிறான் ஆத்மாராம்.
ஆனால் இந்தச் சந்தர்ப்பவாதம், அதன் வேடத்தால், இனி வரலாற்றில் மீண்டெழ முடியாத தோல்வியைத் தழுவுகிறது. “சாமி, நான் ஒன்றும் தெரியாதவன் என்பது உங்கள் நினைப்பு. உமது கத்தியேதான் உம்மை வெட்டுகிறது. ஒழுக்கத்தையும் உண்மையான ஆதாரத்தையும் தத்துவத்தையும் பிரித்துவிட்டுச் சமயம் உள்ளபடிக்கு எல்லாம் பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்து வாழ்ந்து சமூகத்தைக் குட்டிச் சுவராக்கிய தீவினைதான் உம்மைத் தண்டித்துக்கொண்டிருக்கிறது...” என்கிறான் கோபி.
பூணூலைத் துறந்து இஸ்லாமியனாக மாற மறுக்கும் ஆத்மாராம் கொல்லப்படுகிறான். இங்கே க்ஷத்திரியன் கோபிநாத் குரலில் பின்வருமாறு க.கு. பேசுகிறார்: “எதையும் சமரசம் செய்துவிடும் மனப்பான்மை - அசட்டுச் சமர்த்து, தன் அழிவு வேலையைத் தொடங்கிவிட்டது. கேலிக்கூத்து! பொய்யான சாத்துவிகத்தால் பிரத்தியட்சமாயிருக்கும் மிருக பலத்தை எதிர்க்க முடியுமா? சத்தியத்தைத் தேடு... பொய்யான சமரசத்தால் அழிந்துவிடாதே...” என்கிறார். “இந்நாடகத்தில் கண்ட சம்பவம், பி.பி. Dodwell என்ற சரித்திர ஆசிரியரால் குறிக்கப்படுகிறது” என்ற ஒட்டுடன் இந்நாடகம் முடிகிறது.
ஜுன் 5, 1946இல், கலாமோகினியில், ‘ஸமரசம்’ என்ற பெயரில் வெளிவந்த இப்பிரதி, 1989இல் வாசவன் பதிப்பகம் வழி நூலுருப் பெற்றபோது, சில திருத்தங்களைப் பெற்றது. ‘ஸமரசம்’ என்ற தலைப்பு, ‘ஈசுவர அல்லா தேரே நாம்’ என்றாகியது; ஸ்வர்ணத்தைப் பொன்னாக்கியவர், ஈஸ்வரதாஸை ஆத்மாராமாகப் பெயர் மாற்றிவிட்டார்; அனர்த்தத்தை ஆபத்தாக்கிவிட்டார்; சாமர்த்தியத்தைச் சமர்த்தாகச் சுருக்கிவிட்டார்; தமோ பலத்தை மிருக பலமாக்கி, ஸமூகத்தைச் சமூகமாக்கியுள்ளார். இத்திருத்தங்கள் காலம், கருத்து, மொழி சார்ந்த அரசியல் சரிநிலை நோக்கிச் செய்யப்பட்டுள்ளன எனக் கருதுகிறேன்.
இந்நாட்டின் சீரழிவிற்குப் பிராமணர்களை ‘ஈசுவர அல்லா தேரே நாம்’ பிரதிவழிப் பொறுப்பாக்கிய க.கு., அதற்கு ராஜபுத்திரர்களைப் பொறுப்பாக்குவதை ‘மேதினி’யில் காணலாம். ராஜ குலத்தைப் புகழும் முகஸ்துதி வாழ்வையும் யாசகப் பிழைப்பையும் வெறுத்தவள் மேதினி. பாட்டுப் பாடும் தன் குலத்துப் பிற யுவதிகள் போல், அவள் ஆரூடமும் சொல்வதில்லை. ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு அண்ணாந்து நிற்பாள். சந்திரனைப் பார்த்துவிட்டு அது இது என்பாள். அள்ளிக் குடிக்கும் ஜலத்தைப் பற்றி ஏதாவது அளப்பாள். பைத்தியம்போல் திரிவாள். இப்படித்தான் நாடகத்தில் வரும் பிற பாத்திரங்களால் மேதினி விமர்சிக்கப்படுகிறாள். யுவராஜா சாங்காவால் விரும்பப்படும் மேதினியைப் புதுமைப் பெண்ணாகப் படைக்கக் க.கு. யத்தனித்துள்ளார். தமிழ் நாடகப் பிரதிகளில் புனையப்பட்டுள்ள வலுவான பெண் மாந்தருள் ஒருத்தி எனத் தயக்கமின்றி மேதினியைக் குறிப்பிடலாம்.
ஆணின் வெற்றியை உறுதிசெய்யப் பெண்ணின் மகிழ்ச்சி பலியிடப்படுவது, இடைக்காலத்தில் மட்டுமில்லை, ராமாயணக் காலத்திலேயே தொடங்கிவிட்டதைக் க.கு.வின் ‘வில் எங்கே’ காட்டுகிறது. ஸ்ரீராமனுடன் காடு வந்ததைப் பெரிய தியாகமாகச் சீதையின் மீதேற்றுகின்றனர் முனிவர்கள். கருடனாய்ப் பறந்து, காற்றாய் விரைந்து, மின்னல்போல் நிலையற்றுத் தோன்றி, ஆனால் பொதுவாய் அம்பாய்க் குத்துவதாம் பெண்களின் மனப்போக்கு! இதற்குச் சீதை விதிவிலக்காம். தன் குணங்களால், பெண் குலத்திலேயே அவள் ஓர் அபூர்வப் பிறவியாம்! இதைச் சீதை மறுக்கிறாள். பிறரை விமர்சிப்பதுடன், தன்னைத் தானே விமர்சித்துக்கொள்வதற்கும் அவள் சுணங்குவதில்லை. “குற்றமில்லாதவர்களே இல்லை என்பது, என் கருத்து” எனச் சீதை பேசும்போது, அவள் தெய்வீகப் பெண் அல்லள், சாதாரண மானுடப் பெண்தான் என்று அப்படத்தைச் சரியாகக் க.கு. காட்டிவிடுகிறார்!
இப்பிரதியின் இறுதியில், சுனைக்குள் வீசியெறிந்த வில்லைத் தேடிப் பிடித்து லக்ஷ்மணன் எடுத்துவருகிறான். எல்லாரும் சிரிப்பதாகக் காட்டி முடிக்கிறார். வில்லின் வெறுமையையும் சொல்லின் கைப்பையும் தொனிப்படுத்திய விதத்தால் இப்பிரதி, நவில்தொறும் நனிநயமுடைய நவீனப் பிரதியாகிறது.
மரபான ஆண் நோக்கின் இன்னொரு குரூர வடிவத்தைக் ‘காலத்தின் படைப்பு’ பிரதியில் க.கு. காட்டுகிறார். அமுதசுரபி ஆண்டுமலர், ஏப்ரல்1949இல் வெளியான இந்த நாடகம், க.கு.வின் மறைவுக்குப் பின், ‘காலத்தின் குரல்’ எனத் தனிநூலாகவும் வெளிவந்துள்ளது. ‘மணிமேகலைத் துறவு’ பற்றிய ஒரு சமூகவியல் விசாரணையாகப் பிரதி உருப்பெற்றுள்ளது. மூலபௌத்தம் தோன்றும்போதே சமுதாயத்தை நேரடியாகச் சந்தித்ததென்றும், ஆனால் அமைக்கப்படும்போதே ஆட்டம்கண்டுவிட்டது வர்ணாசிரமப் பாகுபாடென்றும் இதன் முன்குறிப்பில் க.கு. பதிகிறார்.
“தண்ணீர் மக்கள் குடிக்கவே இருக்கிறது. அது போலத்தான் நீயும்” என்கிறான் அரசன். “அசட்டுச் சம்பிரதாயங்கள் அறிவைக் கெடுப்பன; வளர்ப்பன அல்ல” என்கிறாள் மாதவி. விஷயப் பற்றின் காமாலையையும், சம்பிரதாய அழுக்கின் கீழ்மையையும் கடியும் பௌத்தக் குரலைப் பிரதியில் காண்கிறோம். கணிகை துறவு பூணுவதைப் பெரிய அதர்மமாகக் கண்டு பழிக்கும் அரசனிடம், “இது என் சித்தச் செம்மை. நிமிர்ந்து நடப்பது, என் எண்ணத்தின் தூய்மையையும் செயலின் நேர்மையையும் காட்டுகிறது... இனி உயர் குலத்தின் ஒழுங்கீனங்களுக்காகப் பிறர் துன்பமடைவது கிடையாது” என்பதுடன், “பொய்யை, பாவத்தைப் பேச நாவடக்கம் வேண்டும். அநீதியை எடுத்துரைக்க அது வேண்டாம்” என்றும் சீறுகிறாள் மணிமேகலை.
விசால மனமும் விரிவான சிந்தனையும் துளியுமில்லாத ஓர் ஆட்சியில், “இடிந்து பாழாகிவிட்டது பழைமை; அதை நிலைநிறுத்த முயல்வது வீண் பிரமை” எனச் செவி அறிவுறுத்துகிறாள். புத்திர சோகத்தில் வருந்தும் அரசியால், அறங்கூறும் கணிகையின் குரலைச் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. “நாங்கள் என்ன செய்வது?” என்கிறாள் அரசி. “என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்! ஏன் செத்துப்போங்களேன்!” என்கிறாள் மணிமேகலை. நவீன நாடகமாக நடிக்கப்பட்டுள்ள இன்குலாப்பின் மணிமேகலையிலும் ஒலிக்காத எதிர்ப்புக் குரலாக இதை உள்வாங்கலாம்.
சுதேசிப் பார்வையிலிருந்து மட்டுமல்லாமல், விதேசி விழிப்பிலிருந்தும் ஆகிவந்த பரதேசிப் பண்பாட்டிலிருந்தும் இந்திய வரலாற்றைக் க.கு. பார்த்தார். ஆண் வல்லாண்மையே இங்குச் சாதி மத பேதமற்றுப் பரவியிருக்கும் அபத்தத்தைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கு, ‘ரஸியா சுல்தான்’ பிரதியைச் சான்றுகாட்டலாம்.
கொடுங்கோலரிடம் பொதுஜனம் சிக்கித் தவிப்பதைக் ‘கழுகு’ காட்டுகிறது. தமிழகத்தில் ஆங்கிலேய அரசு ஏற்படாதபோது, புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு தலையெடுத்து ஊன்றிக்கொள்ள முனைந்த காலத்தைப் பேசுகிறது. “பைசாத் தர வேண்டாம். அவன் பாட்டில் அனுப்பட்டும்“ என்கிறான் மராட்டியன். எத்தனை எளிதில் பிரெஞ்சுக்காரர்கள் மராட்டியர்களை வளைத்துவிட்டார்கள்! இதை நாம் வாசிக்கையில் இன்றைய டாஸ்மாக் உங்கள் நினைவுக்கு வரலாம். அதுதான் கரிச்சான் குஞ்சுவின் நடுப் போரில் தீவைக்கும் சமகாலப் படைப்பாளுமை!
இந்த நவீன நோக்கின் வலிமையைச் சாதி மதம் தாண்டிய சமநோக்கைப் ‘புகல்’ பிரதியினூடேயும் அறிகிறோம். ஆனால் அப்பிரதி, முற்றெதிர் நிலையிலிருந்தே அணுகப்பட்டுள்ளது. ஒரு நல்லாசிரியனை, சீர்திருத்தவாதியை, கலகக்காரனை, சம்பிரதாய எதிர்ப்பாளனைச் சமூகம் எவ்வளவு எளிதாகப் புறக்கணித்துத் தூக்கியெறிந்துவிடுகிறது என்பதைப் ‘புகல்’ முன்வைக்கிறது. கஷ்டத்தைப் ‘பாடு’ என்றும், அகண்ட காவேரியைப் ‘பிரிவறு பொன்னி’ என்றும் கூறத் தன் மகன் முத்துவைப் பழக்கிய தமிழ்ப் பற்றாளன், கடவுள் மறுப்பாளன், நீலாவைச் சீர்திருத்தத் திருமணம் செய்தவனான தங்கையாவுக்குக் கடைசியில் நடப்பது என்ன? “பிறந்த வீடு மட்டுமா, நாம் பிறந்த நாடே இப்படித்தான் அறியாமை இருளில் ஆழ்ந்துகிடக்கிறது’’ எனக் காலத்தைச் சரியாகவே கணிக்கிறான் தங்கையா. “அந்த வெளிச்சத்தைத் தடுக்கும் சாஸ்திரச் சம்பிரதாயங்களைக் கிழித்து எறிய வேண்டும். தெய்வம் சடங்கு பூசை புரோஹிதங்களையெல்லாம் கல்லி எறிந்தாக வேண்டும்... தெய்வத்தையும் தீய மதத்தையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும்... மறைக மறைகள்; புதைக கோயில்கள்...’’ எனக் கணவனின் வழியில் அவனைக் காட்டிலும் படுவேகத்துடன் முன்னேறுகிறாள் நீலா.
அற்பர்களுக்கு அறிவூட்டினால் என்ன ஆகும்? அதேதான் இங்கும் நடக்கிறது. புரட்சிக்கும் பள்ளிக்கும் பொருந்தாது எனப் பணி நீக்கப்படுகிறான் தங்கையா. மிகுவறுமை சூழ்கிறது. கோவிலை இடிக்கவும் குலத்தைப் பழிக்கவும் சொன்னதற்குப் பரிசு இது என்கிறது ஊர். ‘மலை புரண்டாலும் மனம் தளரக் கூடாது’ எனக் கூறத் தம்பையாவுக்கு வாயில்லை. குளத்தில் மூழ்கி உயிர்விடுகிறான். தனக்கு உதவாத ஊரையும் ஏசாது, சொந்தத் தாயின் சாவுக்குக்கூடச் சொல்லிவிடாத அண்ணனையும் பகைக்காது, ஒண்ட ஓரிடம் தேடிப் பரிசலில் அக்கரைக்குப் போகும் நீலா, அப்பாவை இழந்துவிட்ட தன் மகன் முத்துவிடம், “மாமாதான் இனி நம்மைக் காப்பாற்றுவார்! அவர்தான் இனி நமக்குப் புகல்!’’ என்கிறாள். மீக்கூர்மையான நடுத்தீ! இதுவே கரிச்சான் குஞ்சு இயங்குமிடம். எது புகல் என்ற கேள்விக்குச் சாதியும் மூடத்தனமுமே புகல் எனக் கிண்டலடிக்கிறார். இது நவீன நாடகமில்லையென்றால், வேறு எதுதான் அது என்று விவரமான வாசகர்கள் கேட்கக்கூடும்!
மின்னஞ்சல்: sirisharam73@gmail.com