ஒட்டாத செருப்பு
கரிச்சான் குஞ்சு 100
கதை
ஒட்டாத செருப்பு
கரிச்சான் குஞ்சு
ஓவியம்: மணிவண்ணன்
ஆறு மாதங்களுக்கு முன் சாமா ஒரு செருப்பு வாங்கினான். ரொம்ப ஒஸ்திச் செருப்பு. எட்டு ரூபாய் விலை. அது எங்கோ காணாமற்போய்விட்டது. பத்து நாள்கூடப் போட்டுக்கொள்ளாமல் அது பறிபோய்விட்டதில் அவனுக்கு ரொம்ப வருத்தம். செருப்பைத் திருடுகிறவன்கூட இருக்கிறானா உலகத்தில் என்று அவன் ஆச்சரியப்பட்டான். அந்தச் செருப்பை வாங்குவதற்கு முன்னும், வாங்கிய பின்னும் சாமா காசுக்குப் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. அப்புறம் செருப்பே வாங்க முடியவில்லை. பல நாட்கள் செருப்பே இல்லாமல் காலம் தள்ளினான். முடியவில்லை. விலை மலிவாக வாங்கினான் ஒரு ஜோடி. அது காலைக் கடித்துப் புண்ணாக்கிவிட்டது. புண் ஆறிய பிறகு அதைப் போட்டுக்கொண்டு இரண்டு, மூன்று நாள் நடந்தான். ஊருக்குள்ளேயே வீட்டுக்கும் கடைத்தெருவுக்கும் போய்வந்தான். அவ்வளவுதான். தையல் பிரிந்தது; ஆணி பிடுங்கிக் கொண்டது; அட்டைகள் உதிர்ந்தன!
“படுபாவிப் பய மவன், ஐயாவை இப்படி ஏமாத்திப் போட்டானே. எல்லாம் கடுதாசு அட்டையும் துண்டுத் தோலுங்க சாமி. அதுவும் பழைய குப்பைத் தோலு. நான் தர்றேன் பாருங்க. வருடம் ரெண்டானாலும் அசையாது. உம் இதைப் போடுங்க...” என்று பந்தலடி மூலையில் ஒருவன் பிரமாதமான உறுதியோடு இரண்டே ரூபாய்க்கு ‘உயர்ந்த செருப்பை’க் கொடுத்தான். சாமாவுக்கு ரொம்ப சந்தோஷம். ‘உலகத்திலே நல்லவனும் இருக்கிறான் எதிலும்...’ என்று ஸமாதானப் படுத்திக்கொண்டான். ஆனால் அதைப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும்போதே என்னவோ சொத்தென்றும், பட்டென்றும் சப்தம் கேட்டது. காலில் இரண்டு மூன்றிடங்களில் சதையைக் கிள்ளிக் கசியவும் வைத்திருந்தது. மெதுவாய்ப் பக்குவம் பண்ணி உபயோகித்தான். பதினைந்து நாட்களுக்குள் நான்கு தடவை பழுது பார்க்க நேர்ந்தது. பன்னிரண்டணாவரை செலவு. கடைசியில் உருப்படவில்லை செருப்பு. ஆனால் ஒரு லாபம். பழுது பார்க்கும்போதெல்லாம் அருந்ததி பரம்பரையினரான அந்தத் தோல் தொழிலாளர்கள் செய்த விமரிசனங்களால், செருப்பு சம்பந்தமான சில விஷயங்கள் தெரிந்தன சாமாவுக்கு.
அடிக்கடி யாருக்காவது வியாதிகள் வந்து டாக்டரிடம் போய்வந்தால் வியாதியின் பெயர்கள், மருந்து விவரங்கள் எல்லாம் தெரிவதைப்போலச் சில செருப்பு லட்சணங்கள் தெரிந்தன சாமாவுக்கு.
வாங்கினால் நல்ல செருப்பாய், அழுத்திப் பதமாக்கின ‘கான்பூ’ரில், இங்கிலீஷ் பட்டையோடு, ஒரே ஸோலில் நைஸ் ஒட்டியும் தைத்தும் இருக்கும் நல்ல செருப்பாய் வாங்க வேண்டுமென்று தீர்மானித்தான். பொருளாதார வசதி கூடிவரவில்லை. காத்திருந்தான்; காலம் வந்துவிட்டது. எதிர்பாராத விதமாய் அந்த வருஷம் ஆறாவது சிறுகதையை எழுதிவிட்டான் சாமா. பத்திரிகாசிரியருக்குப் பரம சந்தோஷம். பதினைந்து ரூபாய் பணமனுப்பிவிட்டுப் பக்கம் பக்கமாய்க் கடிதம் விளாசியிருந்தார். சாமாவின் மனைவி அந்தப் பணத்தை அப்படியே கொண்டுபோய்ப் பெட்டியில் வைத்துவிட்டாள். “போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் ஐந்தே கதைகள்தான் எழுதினதாக நினைத்துக்கொள்ளுங்கள். இது ஆபத்து ஸம்பத்துக்கு இருக்கட்டும்” என்றாள் அவள்.
“அப்படியானாள் நான் இன்னொரு கதை எழுதிவிடு வேன். இன்னும் இரண்டரை மாதம் இருக்கு. இந்த வருஷம் முடிய” என்று பயமுறுத்தினான் சாமா.
“செய்யுங்களேன், புண்ணியம் உண்டு. என்னாலானதை நான் உதவி செய்கிறேன். காப்பியா, டீயா என்ன வேண்டும்? பணமோ வேண்டியிருக்கு; எழுதக் கூடாதோ?”
“ஆமாம், என்னடி பணம் கொடுத்துவிடுகிறார்கள். அதிகமாய் வேண்டாம். ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுக்கக் கூடாதோ ஒரு கதைக்கு?”
“அப்போ மட்டும் எழுதிக் குவித்துவிடுவீர்களோ? வருஷத்துக்கு ஐந்து எழுதுவது போய் இரண்டாய் விடும்... கொஞ்சம் தயவுபண்ணி மெனக்கிட்டுப் பாருங்களேன். செலவு ரொம்ப இருக்கிறது...”
“ரொம்ப சரி, கட்டாயம் எழுதிவிடுகிறேன். ஒரு பத்து ரூபா கொடு. செருப்பு வாங்கணும், ரொம்பக் கஷ்டமாயிருக்கு.”
“இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கலாம், கதை யெழுதுங்கோ...”
“நீ தர மாட்டாயா பணத்தை...”
“உங்களிஷ்டம்” என்று பத்து ரூபாயைக் கொடுத்து விட்டாள் மனைவி. ஆனால் தான் சொல்ல வேண்டியதைப் பின்னால் சொல்ல நினைப்பவள்போல் வெடுக்கென்று உள்ளே போய்விட்டாள்.
“பிய்ந்த செருப்பு பிராணனை வாங்கிற்று; நல்லதாய் ஒன்று வாங்கினால் குடியா முழுகிவிடும். பிரமாதப்படுத்துகிறாளே...” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் சாமா. சமாதானம் ஆகவில்லை. அவளைக் கூப்பிட்டான்; அவள் வரவில்லை. கிளம்பிச் சென்றான் கடைத்தெருவுக்கு. கரீம் சாயபு கடையில் நுழைந்தான். மேலே மின்சார விளக்கு ஜ்வலிக்க. விசிறி சுழல, நாற்காலியில் உட்கார்ந்தான், கடைப் பையன் போட்டுப் போட்டுக் கழற்றினான். கடைசியில் அழகே உருவெடுத்தது மாதிரி ஒரு ஜோடியை சாமா விரும்பினான். “எடுத்துக்கங்க சாமி, ‘ஸுபீரியர் குவாலிடி’!” என்று தொடங்கி, அதனுடைய உயர்ந்த லட்சணங்களைச் சொல்லிக்கொண்டே போனார் சாயபு. சமீப காலத்தில் ஓரளவு லட்சிய ஞானம் பெற்றிருந்த சாமா அந்த உண்மை விவரங்களை அறிவதாகக் காட்டிக்கொண்டான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேரம் செய்து அதை ஏழரை ரூபாய்க்கு வாங்கினான். கடைப் பையனைத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி கால்களைச் சுத்தமாய்க் கழுவிக்கொண்டு, காய்ந்த பிறகு செருப்புகளை அணிந்துகொண்டு நேரே வீட்டுக்கு வந்தான். ரேழியில் கழற்றினான் மெல்ல. இரண்டையும் சேர்த்து வைத்தான்; பிரகாசமான வெளிச்சத்தின் கீழ் செருப்பின் மெருகு பளபளத்து, பட்டை வாரெல்லாம் பட்டு மாதிரி இருந்தன. பொத்தான்களும், வெள்ளி போன்ற ஆணிகளும் மின்னின. குத்துவார்களின் அந்தக் கொத்தவரைக் காய்ப் பின்னல்தான் எவ்வளவு அழகு! சாமா ரஸித்துக்கொண்டிருந்தான். மனைவி வந்து பார்த்தாள். குழந்தைகளும் எட்டிப் பார்த்தார்கள். அவள் சிரித்தாள். அவனும் சிரித்துவிட்டு “ரொம்ப அழகாய் இல்லை இது?” என்றான்.
“நன்றாயிருக்கிறது, என்ன விலை?”
“ஏழரை ரூபாய். ஆனால் ஒரு விஷயம்; தேயாது. அறுகாது, நல்ல அழுத்தம்...”
“கடைக்காரன் சொன்னானாக்கும். சரி, சாப்பிட வரலாம் அல்லவா?”
சாப்பாட்டுக்குப் பிறகு குழந்தைகள் தூங்கியதும் ஒரு வாக்குவாதம் வந்தது.
“குழந்தைகளுக்குப் பளிச்சென்று ஒரு நல்ல சட்டை இல்லை. நான்தான் அரைப்பழசைக் கட்டிக்கொண்டு நிற்கிறேன். ஒரு ஆறு கஜம் வாயில் வாங்கினாலும் உண்டு. ஏழெட்டு ரூபாய்க்குச் செருப்பு வாங்குவது அநாவசியம். அக்கிரமம் என்றுகூடச் சொல்வேன்” என்றாள் மனைவி.
“அதற்கென்ன நிறைய வாங்குவோமே? வாங்கிக் கொடுக்காமலா இருக்கப்போகிறேன்?”
“அப்படித்தான் காசைக் கொட்டி வாங்கியாகிறதே, பத்திரமாக வைத்துக்கொள்ளத் தெரிகிறதா? இதையாவது கெட்டுப் போக்காமல் வைச்சுக்கணுமே!”
“அதைச் சொல்லு, வாஸ்தவம். நானும் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கப்போகிறேன்” என்றான் சாமா.
எங்கே போனாலும் செருப்பு ஞாபகம். கோவிலுக்குப் போகும்போது போட்டுக்கொண்டே போவதில்லை. யார் வீட்டுக்காவது போனால் கண்ணெதிரில் கழற்றிவைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பது. ரேழியில் போட்டால், உள்ளே இருக்கிறவரை செருப்பு ஞாபகம்தான். இப்படிக் கண்ணும் கருத்துமாய்க் காத்து வந்தான். செருப்பை. ஒரு மாதங்கூட ஆகவில்லை. ஊரில் பெரிய பிரமுகர் வீட்டில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் வந்தது. பஜனையும் உபந்யாசங்களும் நாட்டிய சங்கீதக் கச்சேரிகளுமாக ஏக தடபுடல், சாமாவுக்குப் பக்தி உண்டு கொஞ்சம். அதை இன்னும் திடப்படுத்திக்கொள்ளவும், இம்மை, மறுமை இரண்டுக்கும் சுகம் தேடவும், முழு உத்ஸவத் திலும் பங்குகொள்ள நினைத்தான். ஒருநாள் பகலில் மூன்று மணிக்கே ஆரம்பித்து, உபந்யாஸம், பஜனை, நாட்டியம் எல்லாம் நடத்தினார்கள். நல்ல வெய்யில் நேரம்; போகாமல் இருக்க முடியாது. ஆனால் கூட்டத்தில் செருப்புத் தொலைந்து விடுமே! முன்பும் இப்படித்தான் ஒரு உபந்யாஸத்திற்குப் போனபோது ஒஸ்திச் செருப்பு போய்விட்டது. அந்த ஞாபகம் வந்ததும் சற்றுத் தயங்கினான். இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு செருப்போடு கிளம்பினான், மனைவியிடம் சொல்லிக்கொண்டு.
“சரி போயிட்டு வாருங்கள். கூட்டம் அதிகம். செருப்பு ஜாக்கிரதை. முன்பு இப்படித்தான்.”
“சரிதான் போ, அபசகுனம் மாதிரி. பஜனைக்கு வருகிறவன் எவனும் செருப்பைத் திருடமாட்டான்.”
“பத்திரமாக வைத்து ஞாபகமாய் போட்டுண்டு வரணுமேன்னு சொன்னேன். எனக்கென்ன வேறே.”
“அப்படியானால் வெய்யில் தாழப் போகிறேன். ஒருவழி யாய் ஆகாரமும் செய்துகொண்டு கிளம்பிவிடலாம்...”
“சேசே, எம்மென் அய்யவர்வாள் ‘லெக்சர்’ இருக்கு இன்னிக்கு; ‘அத்வைதாநுபவம்’ என்று எடுத்துக்கொண்டிருக்கிறார். வா சாமா போகலாம்” என்று இரைந்து பேசிக்கொண்டே வந்தார் ராமய்யா மாமா. சாமாவும் கிளம்பிவிட்டான் கௌரவமாய். ‘எப்படியாவது செருப்பைக் காபந்து பண்ணிவிட முடியாதா?’ என்று நினைத்துக்கொண்டே நடந்தான். மாமா இரைந்து பேசிக்கொண்டே வந்தார்:
“இன்னிக்கு ரொம்ப விசேஷம். மயிலாப்பூர் கோஷ்டி பஜனையாம். யார்யாரோ பெரிய மனுஷ்யாளெல்லாம் வந்திருக் காளாம். அந்த பஜனையே புது சம்பிரதாயமாம். ஹைக்கோர்ட்டு ஜட்ஜுகளும் வக்கீல்களும் பண்ணுகிறார்கள் என்றால் அது விசேஷமாகத்தானே இருக்கணும்? என்ன நான் சொல்வது?”
‘தனியா ஒரு மூலையில் வைத்துவிட்டு, ஞாபகமாகப் போட்டுண்டு வரணும்’ என்று நினைத்தான் சாமா, மாமா சொன்னதும் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்துவிட்டு அவரைக் கேட்டான்:
“யார் லெக்சர்? எம்மென் அய்யர்வாளா?”
“ஆமாம், தெரியாதோ உனக்கு? நம்மூர்ப் பக்கத்தில் எண்பது வேலி ஏகபோக கிராமம் வாங்கியிருக்கிறார் எஞ்சினியராயிருந்து ரிடையர் ஆனவர். மஹா பக்திமான். வேதாந்தமெல்லாம் வாசிச்சியிருக்கிறாராம். அவருடைய பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் கலெக்டருக்குக் குறைஞ்சு உத்தியோகம் பார்க்கவில்லை இப்போ. எல்லாம் ஈசுவராநுக்ரஹம். வேதாந்த உபந்யாஸம் அவர் பண்ணிக் கேட்கணும்; அடாடா... என்ன பேச்சு!”
உத்ஸவம் நடக்கும் தெருவில் நுழைந்தார்கள் சாமாவும் ராமையாவும். எதிரில் சாமாவின் பால்ய ஸ்னேஹிதனான முத்து வந்தான். பார்த்ததும் இருவரும் பேச ஆரம்பித்தார்கள் ஸ்வாரஸ்யமாய். ராமையா விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.
“ஏண்டா, எப்போ வந்தாய்? டாடாவில்தானே இருக்கிறாய்” என்றான் சாமா.
“டாடாவும் இல்லை மண்ணுமில்லை. சும்மாத்தாண்டா இருக்கிறேன்” முத்து அலுத்துக்கொண்டான்.
“ஊருக்கு வந்து எத்தனை நாள் ஆச்சு? நீ வந்திருக்கிறதே தெரியாதே எனக்கு?”
“ஆடிப்பாடி அலைஞ்சு திரிஞ்சு திரும்பி வந்தேன். ஒரு வாரமாச்சு சாமா, நானும் வாத்தியாராயிடலாமென்று...”
“பாக்கியெல்லாம் பார்த்தாய்விட்டது! வந்து தொலை! அதிருக்கட்டும், லெச்சர் நடக்கிறது அங்கே; நீ கிளம்பிவிட்டாயே?”
“இன்னும் லெச்சர் ஆரம்பமாகவில்லை. இன்னும் கால்மணி ஆகும்.”
“இப்போ என்ன நடக்கிறது அங்கே?”
“அட என்னவோ கத்திக் கிழிக்கிறானுகள். பண்டரிபுர பஜனையாம். நாலரைக்கட்டையில் கூத்துக்கட்டிண்டு...”
“அடே ரஸிகப் பிரபு, அப்படியே இருக்கையேடா ஏதோ பகவந் நாமம்; பேத்தாதே. வாயேன் போவோம்...”
“பறக்காதேடா, போவோம்...”
“ஊருக்கு வந்துவிட்டாய். அரட்டைக்கு நேரமா கிடைக்காது? வாயேன்...”
இருவரும் சென்றார்கள். உபந்யாஸம் நடந்தது. நன்றாய் இருட்டியும்விட்டது. சாமா உபந்யாஸத்தை உணர்ந்து கேட்கவில்லையென்று சொல்லமுடியாது. ஆனால் ரேழி மூலையில் விட்டு வந்திருக்கும் செருப்பின் ஞாபகம் மட்டும் மறக்கவில்லை. வாஸ்தவம்தானே. ஏகக்கூட்டம். மறக்காமல் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமே. எம்மென் அய்யர் முத்தாய்ப்பு வைத்துக் கொண்டிருந்தார், அத்வைதாநுபவத்திற்கு.
“ஆதலால் பரம்பொருள் உருவான மஹாஜனங்களே, உலகில் எந்தப் பொருள் மேலும் எள்ளளவுகூடப் பற்று வைக்காமல், மனைவி, மக்களென்று பாசம் கொள்ளாமல், ஒட்டாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் நாமெல்லாம். பரமாசார்யர் இதைத்தான் உபதேசிக்கிறார் ‘பஜ கோவிந்தம்... கோவிந்தம் பஜ முடமதே’ ஓம் சாந்தி...”
அத்தனை பேருக்கும் வாசலுக்குச் சென்றுவிடும் வேகம்தானே. ஆனால் அவசரமாய் எழுந்து சென்றான் சாமா. வைத்த இடத்தில் செருப்பைக் காணோம். சற்றே அதிர்ச்சி. கூட்டத்திலே யாராவது தள்ளி இருக்கலாம். சற்று அப்பால், இப்பால், எதிரில் எங்கும் பார்த்தான். கண்ணில் படவில்லை. இதற்குள் கூட்டம் வேறு இடித்துத் தள்ளுகிறது. நெருக்கம் தாங்கவில்லை. புழுக்கம் வேறு. எல்லோருமே சற்று சிரமப்பட்டுத்தான் தேடியெடுத்தார்கள் தங்களுடைய செருப்புகளை. சாமாவும் தேடினான், தேடினான்; அகப்படவில்லை. முத்து வாசலில் காத்துக்கொண்டிருந்தான். எட்டிப் பார்த்தான்; ரேழியில் சாமா தேடிக்கொண்டிருந்தான்.
“ஏண்டா, செருப்பைக் காணோமோ?”
“ஆமாண்டா, இருநூறு ஜோடி செருப்பைத் தள்ளித் தள்ளித் தேடியாச்சு. என்னுடையதைக் காணும்...”
“வேறெங்காவது போட்டிருப்பாய்.”
“இல்லையே, ஞாபகமாய் இங்கேதானே வைத்தேன். அதே ஞாபகமாகத்தானே இருந்தேன்...”
“ஏன்? புதுச் செருப்போ?”
“ஆமாண்டா இழவு. ஏழரை ரூபா விலை, இன்னும் புதுக்கருக்கு அழியவில்லை. எவனோ கொத்திக்கொண்டு போய்விட்டான்.”
“சீச்சீ, உளறாதே சாமா. யாராவது மாற்றிப் போட்டுக் கொண்டு போயிருக்கலாம். தானே கொண்டுவந்து விடுவார்கள்...”
“எப்படித் தெரியும் நமக்கு? எப்போ கண்டுபிடிக்கிறது?”
“அடுத்தாப்போல ராதா கிருஷ்ணா நாட்டியம் இருக்கு. புரொபஸர் ஜேயெஸ்ஸுடைய பெண்களாம். அதனாலே யாரும் போயிருக்கமாட்டார்கள். வந்து தானே ஆகணும்?”
“எனக்குத் தோன்றவில்லை. யோக்யர்களாயிருந்தால் உடனே இங்கே வரணும்.”
“பீடை தொலைந்ததென்று விடேன் சாமா?”
“முடியாதுடா. அழுகை வருதுடா. ஒன்று செய்வோமே முத்து? இப்படியே போவோம்... யார் காலிலாவது...”
“கிரஹசாரம்தான். ஊரில் இருக்கிறவன் காலையெல்லாம்... அடே பித்து!”
“அதுக்கென்ன பண்ணுகிறது?”
“பண்றது என்னத்தை? இனிமேல் செருப்பே வாங்கப் போறதில்லை நான். நாசமாப் போறவனுக; பஜனைக்கென்று வந்து பஞ்சமாபாதகம் செய்கிறானுகளே?”
“சாமா உள்ளே கூட்டம் கூடிவிட்டது. அப்புறம் இடம் அகப்படாது. வா உள்ளே போவோம்...”
“மண்ணாங்கட்டி! புத்தம் புதுச் செருப்பு போய்விட்டது. ஏழரை ரூபாடா.”
“பீடை போச்சு. வாடா உள்ளே.”
“நீ உள்ளே போ. நான் முன் தாழ்வாரத்திலேயே உட்கார்ந்து...”
“வருகிறவன் போகிறவன் காலையெல்லாம் பார்க்கப் போகிறாயோ? சாமா... பைத்தியம்...”
“வீட்டுக்குப் போனால் அவள் வேறு கொல்லப் போகிறாள். தெய்வ பக்தியாம். திருட்டுப் புத்தி உள்ளவனுக்குத் தெய்வ பக்தி...”
“திரும்பிப் போகிறபோது, தானா வந்து கிடக்கும். அப்படியே தொலைஞ்சுதான் போகட்டுமேடா, குடியா முழுகிடும்...”
“திரும்பி வந்து போட்டுவிடுவானுகளா? ஈசுவரன் மட்டும் சர்வ வல்லமை உடையவனானால்...”
“உன் செருப்பைக் கொண்டுவந்து உன் காலில் மாட்ட வேண்டுமாக்கும்! சிரிக்கப் போறான் எவனாவது? பேசாமே வா...”
“நீ உள்ளே போயேன். எனக்கு ஒன்றும் ஓடவில்லை.”
கடைசியில் இருவருமே முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்தார்கள். நாட்டியம் ஆரம்பமாயிற்று. முத்து லயித்துவிட்டான் நாட்டியத்தோடு. சாமாவோ மிக்க வேதனையோடு உள்ளே வருகிறவர்கள் காலையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். சங்கடமான நிலைமை. வேறு யாராவது தன்னைக் கவனித்துவிடக்கூடாதே என்ற வெட்கம். அரித்துப் பிடுங்கும் அவல நினைவுகள். பைத்தியம் பிடித்தது மாதிரி கால்களையும் செருப்புகளையும் பார்த்துப் பார்த்து அலுத்துக்கொண்டிருந்தான். அலுப்பு அருவருப்பாயிற்று. அப்படியும் பித்துத் தீரவில்லை. அநேகமாய் வீடு நிரம்பிவிட்டது. வெளியே யாருமே மீதி இருக்க மாட்டார்கள். ரேழியிலேயே இரண்டொருவர் நின்றுகொண்டிருந்தார்கள். ரேழி நிறையப் பழசும் புதுசும் மட்டமும் ஒஸ்தியுமாய் ஒரே செருப்பு மயம். கையால் துழாவிப் பார்க்கும் அவ்வளவு ஆர்வத்தோடு சாமாவினுடைய கண்கள் ரேழியைத் துழாவின, அவனுடைய செருப்பைக் காணவில்லை. மெல்லத் தேய்த்தாற்போல் நடந்துக்கொண்டு யாரோ ஒருவர் உள்ளே வந்தார்.
சட்டென்று சாமா அந்தக் கால்களைப் பார்த்தான். “ஹா” என்றான். உண்மையிலேயே அவனுடைய செருப்பேதான். சந்தேகமே இல்லை. கவனித்து உற்றுப் பார்த்தான். பின்னல், பித்தான், பாலிஷ் எல்லாம் அப்படியே இருந்தன. அகப்பட்டுவிட்டதென்று துள்ளிற்று மனம். காலைப் பார்த்தான் மறுபடியும். கால் - கால் - கால் ஒரு மாதிரியாய் இருந்தது. அப்பொழுது ஏற்பட்ட அருவருப்பில் ஒரு க்ஷணம் சாமா மரத்துப்போய்விட்டான். மெல்லக் கண்களை இழுத்தான். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டான். அது தன் செருப்பில்லையென்று நினைத்துப் பார்த்தான்; நினைக்க முடியவில்லை. ‘அது எப்படி முடியும்? அப்படியே அச்சு என் செருப்புதான் அது. வெகு நன்றாய்த் தெரிகிறது. சந்தேகமே இல்லை. என் செருப்புத்தான்’ என்று உறுதிகொண்டது நினைப்பு.
வந்தவர், திண்ணையருகிலேயே செருப்பைப் போட்டு விட்டு, ரேழியில் வந்து ஓரமாய் ஒதுங்கி நின்றார். சாமா எழுந்து வாசலுக்குப் போனான். போகும்போது ‘அது என் செருப்பாக இல்லாமல் இருக்க வேண்டுமே ஈசுவரா’ என்று நினைத்துக்கொண்டே போனான். திண்ணையருகில்போய் குனிந்து பார்க்கும்போது, அந்தச் செருப்பைப் போட்டவர் ரேழியில் எதையோ தேடிவிட்டு, முன்போலவே தேய்த்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். சாமாவுக்கு உடம்பெல்லாம் கூசிற்று அவரைப் பார்த்ததும்.
“இந்த செருப்பு உங்களுடையதா ஸார்’ என்றார் அவர்.
“ஆமாம். ஆனால்...” என்று இழுத்தான் சாமா.
“மன்னிச்சிகணும் ஸார். இது உங்கள் செருப்புத்தான். நானும் ரேழியில் போட்டிருந்தேன் சாயங்காலம். வீட்டுக்குப் போகிறபோது இந்த மூலையில் கிடந்தது. என்னுடைய செருப்பும் இதே அச்சு. ஆனால் இவ்வளவு புதிசு இல்லை. மாட்டிக்கொண்டு போய்விட்டேன். ரேழியில் இப்போ தேடினேன். அதைக் காணோம். ஒருக்கால் நீங்கள்..? எங்கே போட்டிருக்கிறீர்கள்..?”
“அதெல்லாமில்லை, கெட்டுப்போனதுதான் என் செருப்பு. இது உங்களுடையதுதான்” என்றான் சாமா. முத்துவிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல் ராமையா மாமாவுக்குக்கூடக் காத்திராமல் நேரே வீட்டுக்கு வந்தான்.
மனைவி வந்து கதவைத் திறந்தாள். காலைப் பார்த்தாள். “செருப்பெங்கே?” என்றாள். அவளும் அதே ஞாபகத்தில்தான் இருந்திருக்கிறாள்!
“இனிமேல் செருப்பே வாங்கப் போவதில்லை நான். வேறொன்றும் கேட்காதே” என்றான் சாமா.
“இனிமேல் ஒஸ்தியாய் வாங்க வேண்டாம். சனியன் ஒட்ட மாட்டேனென்கிறதே!” என்றாள் மனைவி.
காலச்சுவடு வெளியீடாக விரைவில் ‘கரிச்சான் குஞ்சு கதைகள்’.
தொகுப்பாசிரியர்கள்: ராணி திலக், தனசேகர்