கடிதங்கள்
கடிதங்கள்
‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ க. திருநாவுக்கரசுவின் கட்டுரை பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு 370இன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் பெரும்பான்மையான இந்தியர்கள் கொண்டாடினர்; அது உண்மை; எனினும் வேதனைக்குரியது. இந்திரா காந்தி மேற்கொண்ட நீல நட்சத்திர நடவடிக்கை சீக்கியர்களால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டது. சீக்கியரல்லாத பிற மக்கள் அறியாமையால் அதைத் தங்களுடைய வெற்றியெனக் கருதினர். ராஜீவ் காந்தியின் இந்திய அமைதிப் படை ஈழத்தில் அட்டூழியங்கள் செய்தபோது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் எதிர்க்குரல் எழுப்பினரே தவிர பிற மாநில மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஈழ இறுதிப் போரில் இந்திய அரசு புலிகளுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் இறங்கிய நேரத்தில் தமிழகத்தவரைத் தவிர வேறு எந்த மாநிலத்தவரும் இந்திய அரசைக் கண்டிக்கவில்லை. இத்தகைய போக்கில் நமக்கும் பங்குண்டு. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவச் சிறப்பு உரிமைகளைக் கண்டித்து அம்மக்கள் போராடியபோது நாம் அவர்களுக்கு ஆதரவாகக் கண்டனக் கூட்டங்கள் நடத்தினோமா? உண்ணாவிரதம் இருந்தோமா? கடையடைப்புச் செய்தோமா? “இந்திய ராணுவமே! எங்களை வன்புணர்ச்சி செய்” என்ற பதாகையுடன் நிர்வாணமாகப் பெண்கள் ஊர்வலம் வந்தபோது நாம் என்ன செய்தோம்?
இக்கட்டுரை காஷ்மீர்ப் பிரச்சினையின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் தெளிவாகக் காட்டுகிறது. தனிக்கொடி, தனி அரசியலமைப்புச் சட்டம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்ட காஷ்மீரை வெறும் நாடாளுமன்றப் பெரும்பான்மை, ராணுவம் ஆகியவற்றால் இந்திய அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அமித் ஷா அசட்டுத் தைரியத்தில் காஷ்மீர் என்னும் குளவிக் கூட்டில் கல்லெறிந்துவிட்டார்.
“ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு” நோக்கிய அமித் ஷாவின் ஆபத்தான பயணம் இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை வரலாறு பதிவு செய்யும்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
‘தமிழ் வடமொழிகள் மற்றும் கீழடி’ கட்டுரை ஆழமான செய்திகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் பதிவு செய்துள்ளது.
கட்டுரையாளர் தேர்ந்த ஆராய்ச்சியாளர். அதே சமயம், உணர்ச்சிவயப்பட்டு மேலோட்டமான கருத்துகளை சிலர் ‘துள்ளிக்குதித்துக்கொண்டு வெளியிட்டு வருகிறார்கள்’ என்று குற்றங்காண முயன்றுள்ளார். ஆனால் இவரே அவ்வாறானவர்களை ‘அறிவிலிகள்’ என்றும், ‘பேராசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்’ என்றும், சில ஊடகங்களை ‘அறிவு சார்ந்த எதனுடனும் சிறிதுகூடத் தொடர்பே இல்லாதவை’ என்றும், கடுமையாக விமர்சித்துள்ளார். இவரது இப்பதிவுகள் உணர்ச்சிவயப்பட்டனவாக இல்லையா? தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகளில், முழுமையான ஆதாரங்கள் கிடைக்கும்வரை யாரும் தத்தமது ஆய்வுச்சுருக்கங்களை வெளியிடக்கூடாது என்று அறிவுசார் யுகத்தில் எவ்வாறு தடைபோட முடியும்? ஆய்வுச் செய்திகளில் மாறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை.
“ஆரியம்போல் வழக்கொழிந்து” என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று மகாகவி பாரதியும் எப்போதோ கூறிவிட்டார்களே. அவர்களை யார் எப்படி கடிந்து கொள்வது? ‘தமிழ் வரலாறு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழுக்கும் வடமொழிகளுக்குமிடையே உள்ள உறவு’ என்றும், ‘சமஸ்கிருதத்தில் குறைந்தது மூவாயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இலக்கியம் இருந்திருக்கிறது’ என்றும் கூறுவதற்குக் கட்டுரையாளருக்குச் சான்றுகள் கிடைத்திருக்கும்போது, மற்ற பிற ஆய்வாளர்களும் தமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
அசோகரின் கிர்னார் கல்வெட்டு வாசகத்தை எடுத்தாண்டு, ‘அது மொழிக்கும் பொருந்தும்’ என்று கட்டுரை முடிகிறது. அப்படியானால், ஒரு காலத்தில் தேவ பாஷையான சமஸ்கிருதம் சாதாரண மக்கள் மத்தியில் புழங்கலாகாது என அந்த மொழியையே தங்கள் ஆளுகைக்குள் வசப்படுத்தி வைத்திருந்தார்களே, அதை எப்படி எடுத்துக்கொள்வது? சிந்துச் சமவெளி ஆய்வுமுதல் கீழடி ஆய்வுவரை ஆராய்ச்சிக் கருத்துகளை அவ்வப்போது பொதுப்பார்வைக்குக் கொண்டுவருவதே பிறருக்கும் வெளிச்சமாகும். சமஸ்கிருதம், தமிழ் இருமொழிகளுக்கும் இக்கால நடைமுறையிலுள்ள வளமும் பயனும் அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட வேண்டும். இதில் உள்நோக்கம், பாரபட்சம், தேவையில்லாத திணிப்பு ஆகியன நமது பன்மைத்துவத்திற்கு நன்மை பயக்காது.
சி. பாலையா
புதுக்கோட்டை
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய பழ. அதியமானின் கட்டுரை அருந்தமிழ் நூல்களைத் தேடிப்பிடித்துப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ‘நை’யின் முயற்சியும் அவரின் பங்களிப்பும் பாராட்டிற்குரியன.
பி.ஏ. கிருஷ்ணனின் கட்டுரை, தமிழர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க எழுதப்பட்ட தகவல் திரட்டு. இன்னும் எவ்வளவு காலத்திற்கு ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ என்று கூவிக்கொண்டிருக்கப் போகிறோம்? காஷ்மீர் பிரச்சனையைத் தெளிவுடன் இதுவரை தமிழில் எவரும் வெளியிடவேயில்லை. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ க. திருநாவுக்கரசு, ‘இந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்’ வி.டி. அருண் - தகவல் களஞ்சியம்; சிந்திக்க வேண்டியவை. ஆனால் மக்களாட்சியின் மகத்துவத்தை மோடி அரசு எங்கே மதிக்கப் போகிறது?
வைத்தியநாதேஸ்வரன்
தஞ்சாவூர்
‘நான் போரின் சாட்சி’ எழுத்தாளர் தொ. பத்தினாதனின் நேர்காணல் என்னைக் கூறுபோட்டது. எழுத்தாளரின் பதில்கள் என்னை எப்படி வருத்தியது என்பதை எழுதத் தெரியவில்லை. அவரின் வலி புரிந்தது. நல்லவேளை அவர் எழுத்தாளராக இல்லாவிட்டால் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். தமிழகத்தில் ஈழத்தையும் இலங்கையையும் பற்றிப் பேசிப் பேசியே பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளை எண்ணிப் பார்க்கிறேன். ஏன் இவர்கள் ஏதிலியர் முகாம்களுக்குச் செல்லவே இல்லை; உதவி செய்யவே இல்லை என்ற வினாக்கள் என் உள்ளத்தில் எழுகின்றன. யார் பதில் தருவார்?
‘தமிழ், வடமொழிகள், கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்’ கட்டுரையாளர் சமஸ்கிருதத்திற்கு முட்டுக்கொடுக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஞா. சிவகாமி
போரூர்
காலச்சுவடு இதழில் வெளியான ‘தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி’ கட்டுரை தொடர்பில் சில செய்திகள்:
ஆங்கிலத்தில் e எழுத்து பிற எழுத்துக்களைவிடப் பெரிதும் புழங்கும். Q என்ற எழுத்திற்கு அடுத்து வரும் எழுத்து பெரும்பாலும் u ஆகத்தான் இருக்கும். தமிழில் ங் அருகில் வருவது க-வின் இன எழுத்தாகவே பெரும்பாலும் அமையும். இதுபோன்ற பல தரவுகளைக் கொண்டு, ஒவ்வொரு மொழிக்கும் Conditional Entropy என்ற எண்ணைக் கணக்கிட இயலும். என்ட்ரோபி என்பதை ஒழுங்கின்மை எனலாம்.
இசைக் குறியீடுகளும் கணினி மொழிகளும் கட்டுப்பாடான ஒழுங்கிற்கு உட்பட்டவை என்பதால், இவற்றின் conditional entropy குறைவாக இருக்கும். சீரற்ற வரிசைகளில் அமைந்த குறியீடுகளின் தொகுப்பிற்கு conditional entropy மிகுதியாக இருக்கும். மனித மொழிகளின் conditional entropy மேற்குறிப்பிட்ட வகைகட்கு இடைப்பட்டதாக இருக்கும்.
சிந்துவெளி குறியீட்டுத்தொகுப்பின் conditional entropy மனித மொழிகளுக்குரிய அளவில் இருப்பதோடு அது சுமேரிய மொழி, பழந்தமிழ் இவற்றிற்கு அருகில் உள்ளது.
இச்செய்திகள் பி.என் ராஜேஷ், ராவ், நிஷா யாதவ், மாயன்க் என். வஹியா, ஹ்ரிகேஷ் ஜோக்லேகர், ஆர். அதிகாரி, ஐராவதம் மகாதேவன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்ட Science மே 2009 இதழில் வந்துள்ள ‘Entropic Evidence for Linguistic Structure in the Indus Script’ என்ற கட்டுரையில் உள்ளன.
இனி எழுத்து முறை தொடர்பான என் எண்ணங்கள்:
க, ங, ச, ஞ, ட, ண, த, ந என்ற வரிசை தமிழ் மொழியின் இயல்போடு நெருங்கிய தொடர்பை உடையது.
Ka வை ga வாக மாற்றும் செயலைச் செய்வது ங்
cha வை ja வாக மாற்றும் செயலைச் செய்வது ஞ்
ta வை da வாக மாற்றும் செயலைச் செய்வது ண்
tha வை dha வாக மாற்றும் செயலைச் செய்வது ந்
இந்த அடிப்படையில், வடமொழி வரிசை தமிழ் வரிசையின் விரிவாக்கமாக இருப்பதற்கான வாய்ப்பு, தமிழ் வரிசை வடமொழி வரிசையின் சுருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பைவிடக் கூடுதல் எனத் தோன்றுகிறது.
மேலும் உயிர்மெய் எழுத்துக்களுக்கான தனிக் குறிகளை உருவாக்கும் முறை எங்கெல்லாம் காணப்படுகிறது என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும். பல இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இல்லாத இவ்வழக்கம் வடமொழிக்கு எப்படி வந்திருக்கலாம் என அறிய முயற்சி செய்யவேண்டும்.
தமிழ் ‘உ’ வரிசையின் சிக்கலும் வடமொழி ‘உ’ வரிசையின் எளிமையும் ஆராயப்படவேண்டியவை.
த. செங்கதிர்
திருவாரூர்
காலச்சுவடு இதழ் 237இல் வெளியான பி.ஏ. கிருஷ்ணனின் ‘தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்’ கட்டுரைக்கான எதிர்வினைகளும் கட்டுரையாளரின் பதிலும் அடுத்த இதழில்...