வரும் ஒரு நூற்றாண்டு
தலையங்கம்
வரும் ஒரு நூற்றாண்டு
இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் இருப்பு இன்று பெரும் சவாலுக்குள்ளான சமயத்தில் மார்க்சீயச் சித்தாந்தம் புதிய கோணத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்திய மரபுகளுக்கெதிராக மார்க்சீயம் தொழிற்படுவதாகச் சொல்லும் சிலரின் அந்தரங்கமான ஆசைகளைப் பகுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைக்கும். உண்மையில் இந்தியா போன்ற பல்சமய இனங்களின் நாட்டிற்குத்தான் மார்க்சீயச் சிந்தனை இன்னும் வலுவாகத் தேவைப்படுகிறது. அது இந்திய மண்ணில் விதையாக விழுந்ததற்கான நூற்றாண்டைக் கௌரவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது முயன்றுவருகிறது.
“அப்பட்டமான சுயநலத்தைத் தவிர, உணர்ச்சியற்ற ‘ரொக்கப் பட்டுவாடா’வைத் தவிர, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் அது செய்துவிட்டது” என்று கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுவது முதலாளித்துவ வர்க்கத்தின் செயல்பாடுகளைத்தான். உலகமயம் இப்போது கார்ப்பரேட் மயமாக மறுவடிவம் எடுத்திருக்கும் கட்டத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் வலதுசாரி இயக்க உறவைப் பரிசீலிப்பது அவசியம். ஒன்றிலொன்று பொருந்தாத இந்த முரண் உறவுகள் இந்தியாவின் நெடுகிலும் மதவாதத் தன்மை மிக்க அரசியலுக்கு உதவுவதை மார்க்சீயமே அம்பலப்படுத்த முடியும்.
மார்க்சீயத்தின் தேவையை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டுமெனில் எண்பதுகளின் இறுதியில் சோசலிச நாடுகள் வீழ்ந்ததைக் கணக்கிலெடுப்பது அவசியம். அதற்கு எதிர்முகாமிலிருந்த நாடுகளில் சோசலிச இயக்கங்கள் வலுவாக இல்லாதபோதும் சோசலிசத்தின் நடைமுறைகள் பலவும் அமல்செய்யப்பட்டிருந்தன. அவை இலவசக் கல்வி, சுகாதாரம், தொழிலாளர்களின் உரிமைகள் போன்ற சமூக நலத் திட்டங்களில் வெளிப்பட்டன. இவை தத்தம் நாடுகளில் செயல்படுத்தப்படவில்லையெனில் தம்மைச் சோசலிச முகாம் வீழ்த்திவிடுமென்ற அச்சமே அதன் மூல காரணம்.
சோசலிசம் வீழ்ந்ததும் இனி பனிப்போர் இல்லை, வறுமை இல்லை, முழு அமைதி கோலோச்சும், தரமான பொருள்கள் மக்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப கிடைக்குமென உலக வல்லரசுகள் முன்வைத்த கணிப்புகள் இன்று முழுமையாகப் பொய்த்துவிட்டன. கடந்த முப்பதாண்டுகளில் ஒற்றைத் துருவத் தலைமையான அமெரிக்காவே கடும் பொருளாதார மந்தத்தில் வீழ்ந்தது. நாளதுவரை அதனால் மேலெழ முடியவில்லை. கூடவே அதற்கெதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிய ஐரோப்பிய நாடுகள் பத்தாண்டுகளுக்குள்ளாகவே தம் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டுவிட்டன. டாலரின் ஆதிக்கத்தை முறியடிக்க வந்த யூரோ தன்னாதிக்கத்தைக் கொஞ்சமேனும் நிறுவ முடியாமல் போனது. ஐரோப்பாவின் கதகதப்புக்குள் இருந்துவிடலாம் என்றெண்ணிய கிரீஸ் நாடு திவாலாகவே ஆகிவிட்டது. இவற்றைவிடவும் பண்பாட்டுத் தளத்தில் அது மக்களின் சிந்தனைகளைச் சுயநலம் படைத்ததாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. விஞ்ஞானமும் நாகரிகமும் மேலோங்கிவரும் கட்டத்தில் மக்களின் எண்ணவோட்டங்கள் அதற்கு நேரெதிரான திசையில் செல்கின்றன. இவ்விரண்டுக்கும் பொருத்தப்பாடு இல்லையெனில் உலகம் தன் இருப்பைத் தொலைத்துவிடுமென்ற உண்மை நம்மை உலுக்குகிறது.
இதன் தொடர் வீழ்ச்சியாக உலகெங்குமுள்ள தொழிலாளிகள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், கறுப்பினத்தவர், மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற பிரிவினர் கொடுமையான அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். சமூக நலத் திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முதலாளித்துவம் தன்னை மென்மேலும் உயிர்ப்பித்துக்கொள்ள கார்ப்பொரேட் யுகத்திற்குள் நுழைந்துவிட்டது. இது ஏற்கெனவே மையத்திலும் விளிம்புநிலையிலும் இருந்த நடுத்தர வணிக நிறுவனங்களை மட்டுமல்லாமல் பல பெரிய நிறுவனங்களையும் முழுவதுமாக உட்செரித்துவிட்டது. செல்வம் மென்மேலும் ஒருசில கைகளில் மட்டுமே குவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்திய அரசியல் சூழல் தன் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் நுழைந்துசெல்ல முயல்கிறது. இந்தியாவில் பேரளவில் விரிவடைந்திருந்த நடுத்தர வர்க்கம் இதற்கிடையில் சிக்கிப் பலியாடாகியிருக்கிறது. இவ்வர்க்கத்தின் தலையில் உணர்ச்சிமயமான அரசியலைத் தூக்கிவைத்திருக்கிறது வலதுசாரி இயக்கம். மத வேறுபாடுகளும் நிற வேறுபாடுகளும் இதர நாடுகளின் அமைதியை நாசப்படுத்திவருகிறதெனில் இந்தியாவின் கோரம் சாதியப் பாகுபாடுகளாலும் நிரம்பியுள்ளது. நாட்டின் தொன்மையான மரபுகளின் வழியே ஊடாடியிருந்த பொதுநல வேர்கள் இன்று கோடரிகளால் துண்டிக்கப்படுகின்றன. எல்லாருக்குமான கல்வியை நோக்கிச் சென்றிருந்த நிலை முற்றிலும் அழிக்கப்படுகின்றது. திறமையே முதன்மை பெற வேண்டுமென்று சொல்லப்படுவதன் கீழே எல்லா நிலைகளிலும் பொதுத் தேர்வுகளும் வடிகட்டல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வியைத் தவிர வேறெந்த ஆர்வமும் இருக்கக் கூடாதென்பதாகவும் வேறெதுவும் இல்லையென்பதாகவும் நம் அரசு சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது. மருத்துவம் முற்றிலும் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. வேளாண் நிலங்களைத் தற்காலிகமான பலன்களுக்காக மலட்டுத்தனமாக்குகிறது; கூடவே வேளாண் வாழ்வும் நிர்மூலமாக்கப்படுகிறது.
இந்தியா பெரிய வளமார்ந்த நாடாக இருந்தபோதிலும் இன்னும் அதன் உள்ளார்ந்த ஆன்ம பலம் தட்டியெழுப்பப்படவில்லை. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதன் மூலமே இந்தியா உலக நாடுகளின் வரிசையில் முதன்மை பெற முடியும். ஆனால் வர்ண, சமய வேறுபாடுகளோடு முட்டிமோதித் தன் வல்லமையை இழந்துவிடும் நெருக்கடி இப்போதும் இங்கே தீவிரப்பட்டிருப்பதே அதன் துரதிர்ஷ்டம். அதை வலுப்படுத்தும் முனைப்பில் இந்திய அரசும் முன்னிற்பது பேரழிவுக்குரியதாகிறது. 2014இல் மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பதற்கு மாறாக அதனைப் பிளவுபடுத்தி வருகிறது.
இவ்வாறு இந்தியாவும் இதர நாடுகளும் தத்தம் வளர்ச்சியையும் அமைதியையும் பறிகொடுத்துவிட்டுப் பெறப்போகும் பலன்கள் என்னென்னவாக இருக்கும்? பொதுநலன் நாடாத கார்ப்பொரேட் வளர்ச்சி நம்முலகின் இயற்கையைச் சூறையாடி அதன் அழிவுக்கு வித்திட்டிருப்பதில்தான் வந்து முடிந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் மார்க்சீயச் சிந்தனைகளின் தேவையை உலகம் உணர்கிறது. ஆனால் சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் அக்கட்சிகள் சமூக ஜனநாயகக் கட்சிகளாகச் சிறுத்துப்போயின. அவை மார்க்சீயச் சிந்தனைகளைக் கைவிட்டுவிட்டதால் நிர்க்கதியான சூழல் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இது களையப்பட வேண்டுமானால் மார்க்சீயச் சிந்தனைகள் மீண்டும் துலக்கம் பெற்றாக வேண்டும்.
ஏனெனில் மார்க்சீயம், அப்போது நிலவிய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் சுரண்டலையும் மக்களை அது உபகரணங்களாக மாற்றியிருந்ததின் குரூரத்தையும் கணக்கில்கொண்டே தோன்றியது. அந்த நிலை இன்றுவரை மாறவில்லை; இன்னும் சொல்லப்போனால் அது வலுவடைந்திருக்கின்றது. எனவே முதலாளித்துவம் தளர்ச்சியடையாத இச்சமயத்தில் அதன் நோய்க்கூறுகளைக் கண்டறிந்து மருத்துவத்தை முன்வைத்த மார்க்சீயம் மட்டும் எப்படி காலப் பொருத்தமற்றதாகிவிடும்? முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்த பல்வேறு உத்திகளிலுமாக எழுநூறாண்டு காலத்திற்கும் மேல் போராடியது. இது மார்க்சீயம் நிலைபெறுவதற்கான முதல் பாடமும் ஆகும். மார்க்சீயக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் அதனை வெற்றிபெற வைப்பதிலும் சோவியத் சோசலிச மாதிரி மட்டுமே ஒரே வழிமுறையென்று நம்பவேண்டிய அவசியமில்லை. காலம், இடம், சூழல்களுக்கேற்ப அதுவும் பலவகையான தடங்களை உருவாக்கித் துலக்கம்பெறக்கூடிய வாய்ப்புகள் பல்கியிருப்பதே உண்மை.
ஆனாலும் வாய்ப்புக்கேடாக இந்தியாவில் மார்க்சீயச் சிந்தனையாளர்களும் அமைப்புகளும் தத்தம் மனப்போக்கில் தாறுமாறாகச் சிதறுண்டுள்ளனர். மார்க்சீயத்தின் எதிர்நிலையினர் திடமாக நிற்கும்போது மார்க்சீயவாதிகளும் ஓருருவாகத் திடமாக நிற்க வேண்டியிருக்கிறது. பல்வேறு வழிமுறைகளை முன்வைத்து விவாதித்துச் சிதறியபின்னரும் இந்த நூறாண்டுகளில் அவர்கள் வலுப்பெற முடியாமல் போய்விட்டதைக் கருத்தில்கொள்ள வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியில் வீழ்ந்த பின்னரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பில்லையென்று சொல்கின்ற பேதமையை எப்படி எடைபோடுவது? மண்ணுக்கேற்ற மார்க்சீயத்தை முன்னெடுத்தால் அதன் வெற்றி நிச்சயம். புத்துரு பெற்று மீண்டும் எழுச்சியோடு தன் பயணத்தைத் தொடர்வது மார்க்சீயத்தின் தேவையன்று, நாட்டுமக்களின் தேவை.
படம்: இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் உருவாக்கம், எம்.என். ராய்