யாழ்ப்பாணத்தின் மெய்யுரு
கட்டுரை
யாழ்ப்பாணத்தின் மெய்யுரு
மு. நித்தியானந்தன்
யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பைக் குறித்து நிற்கும் டச்சு ஓவியமே நமக்குக் கிடைக்கக்கூடிய முதல் எண்ணெய் வர்ண ஓவியம். நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரிஜ்க்ஸ் அருங்காட்சியகத்திலுள்ள இந்த ஓவியம் 1668 ஆம் ஆண்டில் ஜோஹான் தே லா ரொக்கெற் என்ற ஓவியரால் வரையப்பட்டிருக்கிறது. ஒரு ஓவியச் சட்டகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் 141 செ.மீ உயரமும் 176 செ.மீ அகலமும் கொண்டதாகும்.
“பிலிப்பஸ் பால்டேயஸ், கெரிற் மொசோபொட்டம் ஆகியோரின் மெய்யுரு (Portrait) க்கள், ஜோஹான் தே லா ரொக்கெற், 1668” என்று இந்த ஓவியத்தில் தலைப்பிடப்பட்டிருக்கிறது. ஓவியத்தைப்பற்றி ரைக்ஸ் மியூசியம் பின்வருமாறு விளக்கம் தருகிறது:
“பிலிப்பஸ் பால்டேயஸ் டச்சு ஐக்கிய கிழக்கிந்தியக் கம்பெனிக்காக இலங்கையில் 1645க்கும் 1665க்கும் இடையில் மதகுருவாகப் பணியாற்றியவர். நெதர்லாந்திற்குத் திரும்பியபின் வெளிநாடுகளில் தான் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும்விதமாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் அமர்ந்திருக்கும் பால்டேயஸ் ஆசியாவிலிருந்து தான் கொண்டுவந்த ஆடையை அணிந்திருக்கிறார். இவருக்கருகில் காணப்படும் கெரிற் மொசோபாட்டம் நெதர்லாந்தில் பால்தேயஸுடன் வாழ்ந்திருக்கிறார். கிறிஸ்தவ நூல்களை மொழிபெயர்ப்பதில் இவர் உதவிபுரிபவராக இருந்திருக்கலாம்.”
“பிலிப்பஸ் பால்டேயஸ் (1632-1671), அவரது சிங்கள மொழிபெயர்ப்பாளர் கெரிற் மொசோபாட்டம் ஆகியோரின் வித்தியாசமான நிலத்தோற்றப் பின்னணியில் சித்திரிக்கப்பட்டுள்ள இரண்டு மெய்யுருக்கள். பால்டேயஸின் காலடியில் மூன்று நாய்கள் காணப்படுகின்றன. ஓவியர் ஜோஹான் தே லா ரொக்கெற் (1640-1694), கான்வஸில் எண்ணெய் வர்ண ஓவியம்” என்று இன்னுமொரு குறிப்பு கூறுகிறது.
“பிலிப்பஸ் பால்டேயஸ் (1632-1671), அவரது சிங்கள மொழிபெயர்ப்பாளர் கெரிற் மொசோபாட்டம் ஆகியோரின், வித்தியாசமான நிலத்தோற்றத்தின் பின்னணியில் சித்திரிக்கப்பட்டுள்ள இரண்டு மெய்யுருக்கள். பால்டேயஸின் காலடியில் மூன்று நாய்கள் காணப்படுகின்றன. ஓவியர் ஜோஹான் தே லா ரொக்கெற் (1640-1694), கன்வஸ்ஸில் எண்ணெய் வர்ண ஓவியம், 1668” என்று இன்னுமொரு குறிப்பு கூறுகிறது.
“வட இலங்கையின் யாழ்ப்பாணப் பட்டணத்தின் பண்டத்தரிப்பு கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்னால் வண. பிலிப்பஸ் பால்டேயஸ் தனது மொழிபெயர்ப்பாளர் கெரிற் மொசோபாட்டம் என்பவருடன் காணப்படுகின்றார்” என்று ‘The Gentiles, A History of Sri Lanka’ (1498-1833) என்ற நூலில் அக்னீஸ் பத்மினி தம்பிநாயகம் குறிப்பிடுகிறார்.
பிலிப்பஸ் பால்டேயஸ்
பிலிப்பஸ் பால்டேயஸ் (1632-1671) நெதர்லாந்தில் டெல்ஃப்டில் பிறந்து, தனது இருபத்தோராம் வயதில் அம்ஸ்டர்டாமில் இறையியல் கல்வியை முடித்துக்கொண்டு, புரொட்டஸ்தாந்து திருச்சபையில் மதகுருவாக திருநிலப்படுத்தப்பட்டார். பால்டேயஸ் டச்சு மதகுருவாக 1656இல் இலங்கைக்கு வந்தபோது, போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து விரட்டும் யுத்த முஸ்தீபுகளில் டச்சுக்காரர் தீவிரத்துடன் ஈடுபட்டிருந்தனர். டச்சு இராணுவம் மேற்கொண்ட போர்த் தாக்குதலின்போது அவர்களுடன் பயணம்செய்து நிலைமைகளை நேரடியாகவே அவதானித்திருக்கிறார் பால்டேயஸ். 1658இல் இலங்கை டச்சு நிர்வாகத்தின்கீழ் பூரணமாக வந்ததும் போர்த்துக்கேயர் நிறுவியிருந்த கத்தோலிக்கத் திருச்சபைகளை புரொட்டஸ்தாந்து சமய அமைப்புகளாக மாற்றுவது, இலங்கையில் புரொட்டஸ்தாந்து சமயத்திற்குச் சுதேசிகளை மாற்றுவது போன்ற முக்கிய பணிகள் பால்டேயஸின் பொறுப்பில் விடப்பட்டன.
பால்டேயஸ் யாழ்ப்பாணத்தில் சமயப்பணியை ஆரம்பித்தபோது, ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களும் நூற்றைம்பது கிறிஸ்தவ தேவாலயங்களும் அங்கு இருந்தனர். இந்தத் தேவாலயங்களில் போர்த்துக்கேய மொழியில் ஆராதனைகள் நடைபெற்றன. போர்த்துக்கேயர் காலத்தில் மதம் மாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தாரில் பலர் அம்மொழியில் பயிற்சிகொண்டவர்களாகவும் திகழ்ந்தனர்.
போர்த்துக்கேய மொழியிலும் புலமைகொண்டிருந்த பால்டேயஸ், டச்சுமொழியில் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாறாக, அந்த மக்களின் மொழியைப் பயின்று அம்மொழியில் சமயப்போதனைகள் செய்வது உகந்தது என்று கருதினார். தமிழிலும் போர்த்துக்கேய மொழியிலும் சிறந்த தேர்ச்சி கொண்டிருந்த பிரான்ஸுவா என்ற மொழிபெயர்ப்பாளரின் துணையுடன் பால்டேயஸ் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார். தமிழ் மக்களின் பாரம்பரிய கற்றல்முறைப்படி, மணலில் தமிழ் எழுத்துகளை எழுதியும் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதியும் தமிழ் பயின்றார். ‘ஆண்டவரின் பிரார்த்தனை’, ‘பத்துக்கட்டளைகள்’, ‘விசுவாசக் கட்டுரைகள்’ ஆகிய கிறிஸ்தவப் பிரசுரங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்து 1671இல் ரொட்டர்டாமில் அச்சிட்டு வெளியிட்டார்.
பால்டேயஸ் எழுதிய ‘A Description of East India Coasts of Malabar and Coromandel with their adjacent kingdoms and Provinces and of the Empire of Ceylon and of the idolatry of the Pagans in the East Indies’ (1672) என்ற விரிவான நூலில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் தந்து ஆரம்பத் தமிழ் இலக்கண விதிகளையும் கூறுகிறார். தமிழ் பயில்வதற்குக் கடினமானது என்று கூறும் பால்டேயஸால் தனது பாரிய சமயப்பணிகளுக்கு மத்தியில் தமிழ்மொழியைப் பூரணமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்வகிப்பதிலும், பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடத்துவதிலும் இலங்கையின் டச்சு நிர்வாகத்திற்கும் பால்டேயஸிற்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தன. சமய நடவடிக்கைகளில் அரசியல் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் தான் பணியாற்ற இயலாதென்று கூறி, தன்னை இப்பணியிலிருந்து விடுவிக்குமாறு பட்டேவியாவில் அமைந்திருந்த தலைமையகத்தைக் கோரினார். மதப்பணியில் தலைசிறந்த முன்னோடியாகத் திகழ்ந்த பால்டேயஸ் மிக இளவயதில் இத்தகைய முடிவை எடுத்தது டச்சு நிர்வாகத்திற்கு வியப்பை அளித்ததாயினும், பால்டேயஸ் “கூலிக்கு வேலைசெய்யும் ஒருவரே தவிர, அவர் நல்ல மேய்ப்பன் அல்லர்” என்று கூறி அவரை உடனடியாகவே நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்தது. 1666இல் நெதர்லாந்து திரும்பிய பால்டேயஸ் தெற்கு ரொட்டர்டாமில் அமைந்திருந்த ஒரு சாதாரணமான தேவாலயத்தில் போதகராகச் சேவையாற்றி, தனது 39ஆவது வயதில் மரணமுற்றார்.
மனமுடைந்தவராக நெதர்லாந்து திரும்பிய பால்டேயஸ் யாழ்ப்பாணத்தில் தான் சேவைபுரிந்த காலப்பகுதியை வெகுவாக நினைவில் பதிந்திருக்கிறார். பண்டத்தரிப்பில் தான் வாழ்ந்த காலத்தை நினைவுகூரும் முகமாக ஜோஹான் தே லா ரொக்கெற் என்ற டச்சு ஓவியரை அணுகி, இந்த எண்ணெய் வர்ண ஓவியத்தைத் தீட்டித்தருமாறு கேட்டிருக்கிறார். ஓவியத்தில் காணப்படும் மற்றவர் இலங்கையர் ஆயினும் அவர் சிங்களவர் என்று கூறப்பட்டுள்ளது. அவரை பால்டேயஸ் கிறிஸ்தவ நூல்களை மொழிபெயர்ப்பதற்காகத் தன்னுடன் நெதர்லாந்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஓவியர் ஜோஹான் தே லா ரொக்கற் (1640 - 1694)
பால்டேயஸின் மெய்யுருவைத் தீட்டிய ஓவியர் ஜோஹான் பதினேழாம் நூற்றாண்டின் டச்சு ஓவியத்தின் பொற்காலத்திற்குரியவர். நெதர்லாந்தின் ஹேக் நகரிலேயே பிறந்து அங்கேயே மறைந்த ஜோஹான், மார்டின்ஸ் லெங்கல் என்ற பிரசித்திபெற்ற ஓவியரிடம் ‘கான்ஃப்ரெரி பிக்ட்ரா’ என்ற ஓவியக்கூடத்தில் இணைந்து ஓவியம் பயின்றிருக்கிறார். மெய்யுருக்கள், நிலத்தோற்ற அமைவு போன்ற ஓவியங்களைத் தீட்டுவதில் திறன்மிக்க ஜோஹான் இராணுவத்தில் கேப்டனாகச் சேர்ந்தபின், ஓவியத்தைக் கைவிட்டுவிட்டார் என்று தெரிகிறது. இவரின் மிகச்சில ஓவியங்களே நமக்குக் கிடைக்கக்கூடியனவாக உள்ளன. அழகிய கபிலநிற ஆடையில், முத்துமாலை அணிந்து, மென்பச்சை, வெள்ளை நிற இறகுகள் கொண்ட சிகை அலங்காரத்துடன் காணப்படும் ‘A Portrait of a Lady’ என்ற எண்ணெய் வர்ண கன்வஸ் ஓவியம் ஜோஹானின் பிரசித்திபெற்ற ஓவியம். பால்டேயஸின் ஓவியத்தைத் தீட்டிய அடுத்த ஆண்டில் (1669) தான் ஜோஹான் சீமாட்டி ஓவியத்தை வரைந்திருக்கிறார். வெர்மேர், ஃப்ரான்ஸ் ஹல்ஸ், ரெம்ப்ரண்ட் போன்ற ஓவியர்கள் அணிசெய்த டச்சு ஓவியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த ஜோஹான், ஓவியர்கள் மிகுந்த வறுமையில் உழன்ற அக்காலப்பகுதியில் ஓவியத்தை விடுத்து, இராணுவத்தில் இணைந்திருக்க வேண்டும். பால்டேயஸின் ஓவியம் ஒப்படைப்புப் பணி ஆகும்.
பண்டத்தரிப்பு யாழ்ப்பாணத்தில் அப்போதிருந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தரும் பால்டேயஸிற்குப் பண்டத்தரிப்பு தேவாலயம் நன்கு பிடித்திருக்க வேண்டும். பண்டத்தரிப்பு கிறிஸ்தவ தேவாலயத்தைப்பற்றி அவர் தன் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“வட்டுக்கோட்டையிலிருந்து அரைமணி நேரப்பயணத்தில் பண்டத்தரிப்பு தேவாலயத்திற்கு வந்துவிடலாம். நேர்த்தியான, பிரம்மாண்டமான கற்கோபுரத்தையும் வளைவுகளோடு கூடிய அழகிய இல்லத்தையும், இரண்டு விசாலமான அறைகளையும் மண்டபத்தையும் ரம்மியமான தோட்டத்தினையும் மீன் குளத்தையும் கொண்ட இடம் இது. இங்கு அமைந்திருந்த பாடசாலையில் அறுநூறு மாணவர்கள் பயின்றனர். பாவங்களைப் போக்குதல், ஜெபம், பாவமன்னிப்புச் சலுகை, செவிவழி கூறப்படும் பாவமன்னிப்பு போன்ற போப்பாண்டவரின் கத்தோலிக்க சமயமுறை சார்ந்த தவறுகளை எடுத்துரைப்பதில் இந்தப் பாடசாலை மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். ஸ்கூல் மாஸ்டராக இருந்த திரு அன்ரு என்பவரும் அவரது உதவியாளரும் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். பண்டத்தரிப்பு சனங்கள் நிறைந்த சமயப்பக்தி கொண்டவர்கள். பூஜை நேரங்களில் பன்னிரண்டு பேருக்குக் குறையாமல் ஆயிரத்து முந்நூறு பேர் வரையும்கூட மக்கள் கூடுவார்கள்.”
கத்தோலிக்கச் சமயத்திற்கு எதிராக, டச்சு புரொட்டஸ்தாந்து சமயக் கருத்துகளைத் தீவிரமாகப் பரப்புவதில் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் பால்டேயஸ். உருவ வழிபாடுகளில் இந்து சமயத்திற்கும் கத்தோலிக்கச் சமயத்திற்கும் பொதுத்தன்மைகள் இருந்ததால், கத்தோலிக்கச் சமயத்திலிருந்து புரொட்டஸ்தாந்து சமயத்திற்கு மாற்றுவது சிரமமாக இருந்திருக்கிறது. தனது காலத்தில் பண்டத்தரிப்பில் கல்விநிலை நல்ல வளர்ச்சியைக் கண்டது என்கிறார். பண்டத்தரிப்பு ஓவியத்தின் பின்னணி நிலத்தோற்ற அமைவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்க வேண்டும். பால்டேயஸ் விவரித்த நிலத்தோற்ற அமைப்பை ஓவியர் ஜோஹான் தனது ஓவியத்தில் தீட்டியிருக்கிறார். ஜோஹான் நெதர்லாந்தைவிட்டு வெளியில் எங்கும் சென்றது கிடையாது. அவரது பண்டத்தரிப்பு சித்திரம் பால்டேயஸ் கொடுத்த விவரங்களை அடிக்கொண்டதாகும்.
பால்டேயஸ் யாழ்ப்பாணத்தைப்பற்றி, “கமத்தொழிலையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டிருந்தனர். பசுமாடுகள், உழுவதற்கான எருதுகள், செம்மறியாடுகள், ஆடுகள், எருமைகள் என்று நிறையவே கால்நடைகளைக் கொண்டிருந்தனர். அவர்களது வீடுகள் வசதியானதாகவும் சுத்தமானதாகவும் அமைந்திருந்தன. வீடுகளைச் சுற்றி இனிய பூங்கன்றுகளும் பசுமை நிறைந்த செடிகொடிகளும் வெற்றிலைச் செடிகளும் காணப்பட்டன.அருமையான கிணறுகள் இருந்தன. நாங்கள் ஒல்லாந்தில் வெண்ணெய் தயாரிப்பது போன்றே வெள்ளாளர்கள் வெண்ணெய் தயாரித்தனர். காய்ச்சல், சின்னம்மை நோய்க்காலங்களில் குளுமை தரும் நிவாரணியாக தயிர் இருந்தது” என்று எழுதுகிறார்.
பால்டேயஸின் மெய்யுரு
ஜோஹானின் வரைந்த இந்த எண்ணெய் ஓவியத்தின் வலதுபுறத்தில் பளிச்சென செம்மஞ்சள் ஆடையில், தலையில் அலங்காரமான தலைப்பாகை அணிந்து பால்டேயஸ் காணப்படுகிறார். கூர்மையான மூக்கும் நீண்ட விழிகளும் சிவந்த உதடுகளும் கொண்ட முகம் ஐரோப்பியன் ஒருவனின் பிம்பத்தைக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை அவர் ஆசியாவிலிருந்து கொண்டுவந்திருந்ததாக ஓர் ஓவியக்குறிப்பு கூறுகிறது. அந்த ஆடையை அணிந்து, தலைப்பாகை தரித்து பால்டேயஸ் ஓவியரின் முன்னால் அமர்ந்திருக்க வேண்டும். பால்டேயஸ் இந்த ஓவியத்தில் கீழைத்தேய மனிதராகத் தோற்றம்தர விரும்பியிருக்க வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடையில் இடையைச் சுற்றி ஒரு கறுத்த பட்டி காணப்படுகிறது. ஆடையின் மடிப்புகள் மிக நுட்பமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. செம்மஞ்சள் நிற ஆடையில் பொன்னிற ஜிகினாக்கள் அழகாகப் பொருந்தி நிற்கின்றன. அவரின் தலைமயிர்க் கற்றைகள் முன்புறத் தோற்பட்டையில் புரள்கின்றன. தலையில் அவர் அணிந்திருக்கும் தலைப்பாகை ஆசியவகையைச் சார்ந்தது.நிறைந்த வேலைப்பாடுகள் கொண்ட இந்த தலைப்பாகை அவரது செம்மஞ்சள் ஆடைக்கு ஒரு முரண் அழகைத் தருகிறது. அவரது இளமை ததும்பும் முகம் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. இளவயதிலேயே அவர் இறந்துபோனாலும், நமக்குக் கிடைக்கும் பால்டேயஸின் பிறிதொரு மெய்யுருவுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது இது இளமைச் சாயலைக் கொண்டிருக்கிறது.
கெரிற் தமிழரா?
இந்த ஓவியத்தில் இலங்கையராகத் தீட்டப்பட்டுள்ள கெரிற் மொசோபாட்டம் என்ற பெயரிலிருந்து எந்த அனுமானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கெரிற் ஒரு சாதாரண டச்சுப்பெயர். மொசோபாட்டம் என்ற பெயரை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அழகிய தலைப்பாகை அணிந்து, வெற்று மேலுடம்புடன் அவர் காணப்படுகிறார். வலதுபுறக் காதில் காணப்படும் நீண்ட துளையும் அதில் காணப்படும் மூன்று வெள்ளிக் கடுக்கன்களும் அவர் தமிழரா, சிங்களவரா என்று சொல்வதற்கு எவ்வளவு தூரம் உதவுமென்று தெரியவில்லை. லுங்கி அணிந்திருக்கிறார். இடையில் அவர் செருகியிருப்பது எழுத்தாணியாக இருக்கலாம். அதில் தொங்குவதுபோலத் தெரியும் வட்ட உருளைபோன்ற பொருள் என்னவென்று தெரியவில்லை.
கிறிஸ்தவ நூல்களை மொழிபெயர்ப்பதற்காக நெதர்லாந்தில் பால்டேயஸுடன் வாழ்ந்துவருவதாக அந்த ஓவியக்குறிப்பு கூறுகிறது. பால்டேயஸ் இலங்கையில் காலியில் தரித்திருந்தாராயினும், யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் வாழ்ந்தவராதலால் அவர் தமிழ் மொழிபெயர்ப்பாளரையே தன்னுடன் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்ற ஊகம் அவ்வளவு தவறாகாது. அத்துடன் பால்டேயஸ் நெதர்லாந்திலிருந்து தான் எழுதிய நூலில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் உறுப்பாக எழுதியிருக்கிறார். இந்த அழகிய தமிழ் எழுத்தின் வடிவமைப்பில் இத்தமிழர் உதவியிருக்கலாம். பால்டேயஸின் நூலில் சிங்களமொழி எழுத்துகள் எதுவுமேயில்லை.
பச்சைக்கிளி
கெரிற் என்னும் இலங்கையர் ஒருதூண்போன்ற நிலைமேடையில் வலது கையை மடித்துவைத்தவண்ணம் காணப்படுகிறார். அவருக்கு முன்னால் சிவந்த அலகையும் நீண்ட வாலையும் கொண்ட ஒரு பச்சைக்கிளியைக் காணலாம்.
பச்சைக்கிளி போர்த்துக்கேய நாட்டார் பாடல்களில் பிரபல்யமாகப் பேசப்படும் பறவையாகும். Papagaio Verde என்ற பச்சைக்கிளி பற்றிய போர்த்துக்கேய நாட்டார் பாடல் அம்மொழியின் பாரம்பரிய இசையில் பாடப்படும் மிகப்பழைய, பிரபல்யம் மிகுந்த பாடலாகும். பச்சைக்கிளிப் பாடல் துரித கோலம் காட்டுவதாய், மூதுரை போதிப்பதாய், போக்கிரியைக் கையாள்வதாய், விமர்சிப்பதாய், நிந்திப்பதாய், காதலிக்குக் கீதம் இசைப்பதாய், சிறகடித்து நடன இசை வழங்குவதாய் சிறப்புப்பெறுவது.
பச்சைக்கிளிப் பாடல் போர்த்துக்கேய ஆட்சிக்குள்ளான அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் வழங்கிவந்துள்ளது. இந்தியாவில் மங்களூர், கொச்சின் ஆகிய இடங்களில் பச்சைக்கிளி மக்கள் அதிகமாகப் புழங்கும் ஒரு பொருளைத் தனது அலகினால் எடுத்து, சமூகத்திற்கு ஒரு செய்தியைக்கூறும் முன், தனது சிறகுகளை அடித்துக்கொள்வதாகப் பாடல்கள் உள்ளன.
இலங்கையில் வழங்கிய பச்சைக்கிளி பற்றிய போர்த்துக்கேயப் பாடல் இது:
Green Parrot
On top of the fence
Picks a green mango
Gives to Lady Mary
வேலியின் மேல்
ஒரு பச்சைக்கிளி
பச்சை மாங்கனியைப்
பறித்து
மேரி நோனாவிடம்
கொடுக்கிறது
மூன்று நாய்கள்
பால்டேயஸின் காலடியில் மூன்று நாய்கள் வெவ்வேறு திசைகளில் பார்த்தபடி உள்ளன. கறுப்பு, வெள்ளை, கபில நிறம் கொண்ட இரண்டு நாய்கள் இடது புறமும் வலது புறமும் பார்த்த வண்ணமிருக்க, கறுப்புநிறநாய் பால்டேயஸிற்கு எதிர்ப்புறமாய் வலதுபக்கம் சற்று உயரே நோக்கியவண்ணம் காணப்படுகிறது. ஓவியர் ஜோஹான் தான் வரைந்த ‘சீமாட்டியின் மெய்யுரு’ ஓவியத்திலும் ஒரு நாயைத் தீட்டியிருக்கிறார்.
துப்பாக்கி
பால்டேயஸின் காலடியில் ஒரு துப்பாக்கியின் மண்நிறக் கைப்பிடியும் அதன் துப்பாக்கி விசையிழுப்பும் காணப்படுகிறது.
பதினேழாம் நூற்றாண்டில் தாய்நாடான நெதர்லாந்தை எதிரிகளிடமிருந்து ஆயுதம் தாங்கிப் போராடிப் பாதுகாப்பது ஒரு டச்சுப் பிரஜையின் கௌரவமிக்க செயலாகக் கருதப்பட்டது. குடிமைசார் இராணுவ அம்சம் அக்கால டச்சு சமூகத்தில் முக்கிய அம்சமாகும்.
பால்டேயஸ் இலங்கையில் யாழ்ப்பாண ராஜ்யத்தில் பல வருடங்கள் மலபார், கோரமண்டல் கரையோரப்பகுதிகளில் மதபோதகராகப் பல பணிமனைகளில் பணியாற்றி வந்ததோடு மட்டுமல்ல, டச்சுக்காரரின் பல்வேறுபட்ட போர் நடவடிக்கைகளிலும் நேரே பங்கேற்றிருக்கிறார். டச்சு சமுதாயத்தின் உயர்குழாத்தைச் சார்ந்தவராக பால்டேயஸ் தன்னை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. டச்சு உயர்பிரதானிகள் துப்பாக்கிகள் சகிதம் காட்சிதரும் வண்ண ஓவியங்களை இக்காலகட்ட நெதர்லாந்தில் காணலாம்.
பண்டத்தரிப்பு தேவாலயம்
ஜோஹான் வரைந்த இந்த ஓவியத்தின் இடது பக்க மேல்மூலையைச் சார்ந்து காணப்படும் கட்டட அமைப்பு பண்டத்தரிப்பு கிறிஸ்தவ தேவாலயமும் அதனை அண்டிய இல்லமுமாகும். பால்டேயஸ் தனது நூலில் பண்டத்தரிப்பு தேவாலயத்தின் அமைப்பை வரைபடத்தில் தருகிறார். இந்த எண்ணெய் வர்ண ஓவியத்திலும் சிவந்த கூரைகள் கொண்டதாய், உயர்ந்த கோபுர வடிவிலான முகப்பினைக் கொண்டு தேவாலயமும் அதன் பின்புறத்தில் தேவாலயத்தோடு இணைந்ததாய் இரண்டு உயர்கூரைகள் கொண்ட இல்லமும் காணப்படுகின்றன. இதுவே இந்த ஓவியத்திற்குப் பண்டத்தரிப்பு முத்திரையைக் கொடுக்கிறது.
முரண்
உயர்ந்த மலைத்தொடர்களும் பெருங்கற்பாறைகளும் பண்டத்தரிப்பின் நில அமைவைச் சுட்டுவனவல்ல. ஆங்காங்கே பனைமரங்கள் மலைத்தொடரின் பின்னணியில் தெரிகின்றன. இலங்கை உயர்மலைகளும் குன்றுகளும் பாறைகளும் கொண்ட நாடு என்பதைப் பொதுவில் குறிப்பதற்கு இங்கு மலைத்தொடர்கள் தீட்டப்பட்டனவோ என்று ஊகிக்க வேண்டியுள்ளது. மலைகள் எவையுமில்லாத நெதர்லாந்துக்கு இந்த ஓவியம் கவர்ச்சியைத் தந்திருக்கக்கூடும்.
தனது யாழ்ப்பாண வாழ்வை நினைவுகூர்ந்து, அந்தத் தேசத்திலே கால் பதிக்காத ஒரு டச்சு ஓவியனைக்கொண்டு, ஓர் இலங்கையனையும் இணைத்து பால்டேயஸ் முனைந்து வெளிப்படுத்திய இந்த எண்ணெய் வர்ண ஓவியம் யாழ்ப்பாண ஓவிய வரலாற்றில் தனி முக்கியத்துவம் பெறுகிறது.